Thursday, September 17, 2020

நினைவில் வாழ்வீர் கல்யாண்!

கேமராவிலிருந்து முதலாவதாக கல்யாண், அடுத்து தஞ்சாவூர் கவிராயர், என் மகன் மகிழ் ஆதன், நான், என் மனைவி, கீழே கவிராயர் பேரன்

ஆசை

காலையில் ஜீவசுந்தரி மேடத்தின் பதிவைப் பார்த்து அதிர்ச்சியுற்றேன். நண்பர் கல்யாண் (ஆர். கல்யாணசுந்தரம்) இன்று அதிகாலை மரணமடைந்திருக்கிறார். அவருக்கு வயது 38. ஃபேஸ்புக்கில் அசடன் பாலாஜி என்ற பெயரில் இயங்கிவந்தார். ஒரு வாசகராக எனக்கு அறிமுகமாகி உலகத் திரைப்படங்கள் பலவற்றையும் அறிமுகப்படுத்தியவர் அவர். ஸ்டேன்லி கூப்ரிக்கின் படங்கள் அவர் புண்ணியத்தால்தான் எனக்கு அறிமுகமாயின. முற்போக்குச் சிந்தனைகள் நிரம்பியவர். நாங்கள் இருவரும் புத்தகங்களும் திரைப்படங்களும் பரிமாறிக்கொள்வோம். எங்கள் வீட்டுக்கு அவரும் அவர் வீட்டுக்கு நானும் சென்றிருக்கிறோம். திருவான்மியூரில் நாங்கள் இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். இடியாப்பம் விரும்பிச் சாப்பிட்டார். இடையில் சில காலம் அவர் தொடர்பே இல்லாமல் இருந்தது. கைபேசி மாற்றியதால் அவர் எண் தொலைந்துபோய்விட்டிருந்தது. அப்புறம் எப்படியோ கண்டுபிடித்து அழைத்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துபோய்விட்டன. அதனால்  டயாலிஸிஸில்தான் தனது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது என்று துயரம் நிறைந்த குரலில் என்னிடம் பேசினார். நேரில் போய் பார்த்தபோது இன்னும் அதிர்ச்சி. பாதியாய் இளைத்து, குச்சி ஊன்றிக்கொண்டு நடந்தார். இத்தனைக்கும் மதுப் பழக்கம், புகைப்பழக்கம் என்று ஏதுமில்லாதவர். ஏதோ மரபுக் காரணம் போல. வாழ்க்கை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்குப் பிறகும் எங்கள் பகிர்தல் தொடர்ந்துகொண்டிருந்தது. சென்னைத் திரைப்பட விழாவில் சில படங்களைப்  பார்க்க வேண்டும் என்று விரும்பினார். என்னிடம் இருந்த நுழைவுச் சீட்டை அவருக்குத் தந்து ஒரு படத்துக்கும் அழைத்துச் சென்றேன். குச்சி ஊன்றியபடிதான் வந்தார். வாரத்தில் இரண்டு தடவையாவது டயாலிஸிஸ் செய்தாக வேண்டிய அவருக்கு சென்னை பெருமழை வெள்ளத்தின்போது மிகுந்த சிரமம் ஏற்பட்டுவிட்டது. எனினும் வாழ்வின் மீதான பிடிப்பில் அதையும் தாண்டி வந்தார். 

நாங்கள் கூடுவாஞ்சேரிக்கு இடம்பெயர்ந்தபோதும் அதே உடல்நிலையுடன் ஜனவரி 1, அன்று புத்தாண்டு மட்டுமல்லாமல் என் மனைவி பிறந்த நாள்கூட, எங்கள் வீட்டுக்கு வந்தார். நாங்கள் கேக் வெட்டி, உணவு சமைத்து, படங்கள் எடுத்து அந்நாளைக் கொண்டாடினோம். கல்யாண் ஒரு செல்ஃபி எடுத்தார். அதற்கு முன்னோ அதற்குப் பின்னோ கல்யாணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதில்லை, கல்யாண் இவ்வளவு விரைவில் நம்மை விட்டுப் போவார் என்று யார் நினைத்துப் பார்த்தது? ஒரு கட்டத்தில் அவருடைய தாயாரின் சிறுநீரகத்தைக் கொண்டு அவருக்கு சீறுநீர் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அதனால் மாதம்தோறும் சுமார் ரூ. 10 ஆயிரத்துக்கு மருந்து சாப்பிட வேண்டிய நிலை. நல்லவேளை அவருடைய திறமை காரணமாக அவருடைய நிறுவனம் (விப்ரோ) அவரைத் தொடர்ந்து வேலையில் நீடிக்க வைத்திருந்தது. வீட்டிலிருந்து வேலை பார்க்கவும் அனுமதித்தது. கரோனா பெருந்தொற்றால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபின் அவருக்கு மாத்திரை, சிகிச்சை எல்லாம் என்னவாகுமோ என்று கவலை கொண்டு அவரை அழைத்துப் பேசினேன். மாத்திரை அவ்வளவு பிரச்சினை இல்லை. மாதந்தோறும் செக்அப்புக்குச் சென்றாக வேண்டும். அதுதான் பிரச்சினை என்றார். அதன் பிறகு, கல்யாண் பற்றி நான் கேள்விப்பட்டது இன்று காலை ஜீவசுந்தரியின் பதிவில்தான். கல்யாண் எண் தவிர அவருடைய உறவினர்கள் எண் ஏதும் என்னிடம் இல்லை என்பதால் மிகவும் துடித்துப்போனேன். என் மனைவியும் மிகுந்த துயருற்றார். ‘அந்த அண்ணன் இடியாப்பத்தை ரசித்து சாப்பிட்டார்’ என்று குறிப்பிட்டார். ஜீவசுந்தரி மேடத்தைக் கைபேசியில் அழைத்துப் பேசியபோது கல்யாண் மீது தனக்கும் அப்பண்ணசாமிக்கும் இருக்கும் பந்தத்தையும் கல்யாண் இழப்பால் ஏற்பட்ட வலியையும் பகிர்ந்துகொண்டார். அவர் மிகுந்த துயரத்தில் இருந்தார். பேசிக்கொண்டிருக்கும்போதே பலமுறை அழுதார். இதையெல்லாம் பார்க்கும்போது கல்யாணுக்கு இறப்பில்லை, எங்கள் எண்ணங்களில் எப்போதும் வாழ்வார் என்றே தோன்றியது. பிறப்பால் பிராமணர் என்றாலும் பெரியார் மீதும் இடதுசாரி இயக்கங்கள் மீதும் மிகுந்த ஈர்ப்பு கொண்டவர். அப்படிப்பட்ட கல்யாண் பெரியாரின் பிறந்த நாள் அன்று காலமாகியிருக்கிறார்! என் பிறந்த நாளுக்கு முதல் நாள் இறந்திருக்கிறார்.  இனி நினைவில் வாழ்வீர் கல்யாண்!

3 comments:

  1. அறிவுப்பகிரல் உள்ள நண்பர்கள் கிடைப்பது அரிது. அத்துடன் இவ்வாறாக நட்புடன் இருப்போர் இன்னும் அரிது. ஒரு நல்ல நட்பினைப் பகிர்ந்து உரிய முறையில் அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள்.
    அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  2. இதை படித்தபோதுதான் ஞாபகம் வந்தது.. கல்யானுடன் நான் ஒரு போட்டொ கூட எடுத்துக்கொள்லவில்லை.... very untimely death.. realistic registration.

    ReplyDelete