Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Saturday, July 12, 2025

பாப்லோ நெருதா கவிதைகள் - பிறந்தநாள் பகிர்வு



1. ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு ஒரு பாடல்

ஃபிடல், ஃபிடல்,
செயலாக மாறிய சொற்களுக்கும்
பாட்டாக ஒலிக்கும் செயல்களுக்கும்
நன்றிகாட்டுகிறார்கள் மக்கள்,
காணாத தூரத்தைக் கடந்து நானொரு கோப்பையில்
என் நாட்டின் மதுவோடு வந்திருப்பதும் அதனால்தான்:
நிலத்தடி மக்களின் உதிரம் அது
இருட்டிலிருந்து புறப்பட்டு உனது தொண்டையை
வந்தடைகிறது,

உறைந்துகிடந்த நிலத்திலிருந்து
நூற்றாண்டுகளாய்த் தீயைப் பிழிந்து
வாழ்ந்த சுரங்கத் தொழிலாளிகள் அவர்கள்.
கடலின் ஆழத்திலும்
நிலக்கரியைத் தேடும் அவர்கள்
பேயுருகொண்டு கரையேறுகிறார்கள்:
முடிவில்லா இரவுக்குப் பழகிக்கொண்டுவிட்டார்கள் அவர்கள்,
பகல் வேளையின் வெளிச்சம் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது,

ஆயினும், இதோ, இந்தக் கோப்பை.
சொல்லொணாத் துயரத்தினதும்,
கண்காணாத தூரத்தினதும் கோப்பை.
இருளும் பிரமைகளும்
பேயாய்ப் பற்றிக்கொண்ட,
சிறைப்பட்ட அந்த மனிதர்களின்
மகிழ்ச்சி அது.

சுரங்கங்களின் உள்ளே இருந்தாலும்
வசந்தத்தின் வரவையும்
அந்த வரவோடு வந்த சுகந்தங்களையும்
உணர்கிறார்கள் அவர்கள்.
தெளிவின் உச்சத்துக்காக மனிதன் போராடுகிறான்-
இதனை அறிந்தவர்களல்லவா அவர்கள்.

தெற்குப் பிரதேசத்தின் சுரங்கத் தொழிலாளிகளும்,
பரந்த புல்வெளிப் பிரதேசத்தில் தனியர்களாய் இருக்கும் மைந்தர்களும்,
படகோனியாவின் குளிரில் வாடும் மேய்ப்பர்களும்,
தகரத்துக்கும் வெள்ளிக்கும் பிறப்பளிக்கும் தகப்பன்களும்,
காதில்யெரா மலைத் தொடர்களுக்கு வாழ்க்கைப்பட்டு
சூகீக்கெமாதெ சுரங்கங்களிலிருந்து செம்புத் தாதுவை அகழ்பவர்களும்,
பேருந்துகளின் கூட்டமும்,
நேற்றைய நினைவிலேயே நிலைத்துவிட்ட நெரிசலும்,
வயல்கள் பட்டறைகளில் உழைக்கும் பெண்களும்,
குழந்தைப் பருவத்தை அழுதே கழித்த குழந்தைகளும்,
க்யூபாவைப் பார்க்கிறார்கள்:

இதுதான் அந்தக் கோப்பை, எடுத்துக்கொள் ஃபிடல்.
அவ்வளவு நம்பிக்கையால் நிறைந்திருக்கும் கோப்பை இது!
அருந்தும்போது நீயறிவாய்
ஒருவரால் அல்ல, பலராலும்
ஒரு திராட்சையால் அல்ல, பல தாவரங்களாலும் உருவான,
எனது தேசத்தின்
பழம் மதுவைப் போன்றது உனது வெற்றி என்பதை.

ஒரேயொரு துளியல்ல; பல நதிகள்:
ஒரேயொரு படைத்தலைவன் அல்ல, பற்பல போர்கள்.
நீண்ட, நெடிய போராட்டம் நம்முடையது,
அதன் ஒட்டுமொத்த மகத்துவத்தின் முழு உருவம் நீ.
அதனால்தான் அவர்களின் ஆதரவெல்லாம் உனக்கு.

க்யூபா வீழுமென்றால் நாங்களும் வீழ்வோம்,
அவளைக் கைதூக்கிவிட நாங்கள் வருவோம்,
அவள் பூத்துச் சொரிந்தால்
நாம் வென்றெடுத்த தேன்கொண்டு செழித்திடுவாள்.
உன் கைகளால் கட்டவிழ்ந்த
க்யூபாவின் நெற்றியை யாராவது தொடத் துணிவார்களென்றால்,
மக்களின் முஷ்டிதான் அவர்களுக்கு பதிலளிக்கும்,
புதைந்திருக்கும் நமது ஆயுதங்களைக் கைக்கொள்வோம்:

எங்கள் நேசத்துக்குரிய க்யூபாவைப் பாதுகாக்க
எங்களுக்குத் துணையாய் வரும்
உதிரமும் மாண்பும்!


2. தேனீக்களுக்கு ஒரு பாடல்

மொய்க்கும் தேனீக்கூட்டமே
உலகின் மென்மைக்கும் மென்மையான
சிவப்பு, நீலம், மஞ்சளின் உள்ளே
புகுந்தும் புறப்பட்டும்
தொழிலுக்காகப்
பூவிதழின் அடுக்கினுள்
கவிழ்ந்து விழுந்து, மீண்டு,
பொன்மயமான உடையும்,
கணக்கில்லா மஞ்சள் காலணிகளும்.
கச்சிதமான இடை, கரும்பட்டைக் கோடிட்ட கீழ்வயிறு
துருதுருக்கும் சின்னஞ்சிறிய தலை
புத்தம்புதிய நீராலான இறக்கைகள் ---
மணங்கமழும் ஜன்னல்கள் எல்லாம் நுழைந்து,
பட்டுக் கதவுகளைத் திறந்து,
இணையில்லா மணம் வீசும் காதலின் மணவறையில் நுழைந்து,
வைரப் பொட்டாகப் பனித்துளியைக் கண்டெடுக்கிறீர்கள்.

சென்றுவரும் வீடெல்லாம்
தேன் என்னும் புதிரை, வளத்தை, கட்டமுதை
அள்ளிச்செல்கிறீர்கள்
அது அடர் மணம், ஓடையாய் ஒளிரும் திரவம்.

கூடிவாழும் கூடத்துக்கு மீண்டுவந்து
அதன் கைப்பிடிச் சுவரில்
பூவின், விண்வெளிப் பாய்ச்சலின்
விளைச்சலான அந்த
கந்தர்வ ரசத்தை, மணநாளின் ரகசியச் சூரியனை,
தேனை, சேமித்து வைத்து
மொய்க்கும் தேனீக்களே,
ஒற்றுமையின் புனித முகடே,
ரீங்கரிக்கும் கல்விக்கூடமே.

ரீங்கார ஆரவாரத்தில்
பூவின் மதுவைப் பக்குவமாக்க
அமுதத் துளிகளைப் பரிமாறி
பசுமை படர்ந்த
ஒசர்னோ எரிமலையின் ஏகாந்த வெளியில்
வெய்யில்காலப் பிற்பகலின் கண்ணயர்வு--
உச்சி சூரியன்
ஈட்டிக் கிரணங்களைப் பனிமீது பாய்ச்ச,
எரிமலைகள் ஒளிர
கடலாக நிலம் விரிகிறது.

நீல வெளியின் ஏதோவொரு நடுக்கம்.
கனன்றுவரும் கோடையின் இதயம்,
தேனினிக்கும் இதயங்கள் பெருகின
ரீங்கரிக்கும் தேனீ
நொறுங்கிச் சடசடக்கும் தேன்கூடு
பொன்வண்ணம், சிறகின் படபடப்பு!
தேனீக்களே,
களங்கமில்லா உழைப்பாளிகளே, ஊன்பெருக்காத கூன் உடல்
தொழிலாளர்களே ஒளிவீசும் தொழிலாள வர்க்கமே!

தன்னையே மாய்த்துவிடும் கொடுக்கோடு கொட்டிச் சாடும்
குறையில்லா தீரப் போர்ப்படையே
இரைச்சலிடுங்கள், புவியின் கொடைகளின்மேல்
பொன்வண்ணக் குடும்பமே,
காற்றின் மந்தையே
பூக்களின் தீயை,
மகரந்தக் கேசரத்தின் தவிப்பை,
நாசியைத் துளைக்கும் நறுமண நூலை,
நாட்களை இணைத்துத் தைக்கும் நூலை,
அந்தத் தேனை விசிறித் தெளியுங்கள்
வெம்மையான கண்டங்களைக் கடந்து
மேலை வானின் தொலைதூரத் தீவுகளுக்கும்.

ஆம்,
பசுமைச் சிலைகளை
தேன் மெழுகு உருவாக்கட்டும்!
எண்ணில்லா நாவில் தேன் சிதறட்டும்,
தேன்கூடாய் ஆகட்டும் அந்தப் பெருங்கடல்
புவியே பூக்களாலான கோபுரமாய், அங்கியாய் மாறட்டும்!
உலகமே ஓர் அருவியாகட்டும்
எரிகல்லின் ஒளிரும் வாலாக
தேன்கூடுகளின் முடிவில்லாச் செல்வமாய் ஆகட்டுமே!


3.

உனது உடலின் வரைபடத்தை
நெருப்பின் குறியீடுகளால் 
குறித்துக்கொண்டு செல்கிறேன்எனது இதழ்கள்
உன் உடல் முழுதும் செல்கிறது
ஒளிந்துகொள்ள முயலும் சிலந்தியாய்.
உனக்குள், உன் பின்னே, கோழையாய்,
தாகத்தால் விரட்டப்பட்டு.

மாலையின் கரையில்
உனக்குச் சொல்வதற்கு 
கதைகளுண்டு நிறைய,
சோகவயப்பட்ட நளினமான பொம்மையே,
எனவே நீ துக்கமடைய மாட்டாய்.
ஒரு அன்னம், ஒரு மரம்,
தூரத்திலிருக்கும் மகிழ்ச்சியான ஏதோ ஒன்று.
திராட்சைகளின் பருவம், முதிர்ந்த, நிறைந்த பழங்களின் பருவம்.

எங்கு உன்னைக் காதலித்தேனோ 
அந்த துறைமுகத்தில் வாழ்ந்த நான்.
கனவாலும், அமைதியாலும் 
குறுக்கிடப்பட்ட அந்தத் தனிமை.
கடலுக்கும் துயரத்துக்கும் மத்தியில்
அடைக்கப்பட்டு.

நிசப்தமாக, பீடிக்கப்பட்டு, 
அசைவற்ற இரு படகோட்டிகளுக்கு மத்தியில்.
உதடுகளுக்கும் குரலுக்கும் இடையே
மங்கிக்கொண்டு வருகிறது
ஏதோ ஒன்று.
பறவையின் சிறகுகளுடன் ஏதோ ஒன்று,
வலியுடன், சுயநினைவற்று,
ஏதோ ஒன்று.
வலையால் தண்ணீரைப் 
பிடித்துவைத்திருக்க முடியாததைப் போல.
என் விளையாட்டுப் பொம்மையே,
ஓரிரு துளிகள் மட்டும் 
தனித்து நடுங்கிக்கொண்டிருக்கின்றன.

அப்படியும், ஏதோ ஒன்று பாடுகிறது,
நிலையற்ற இந்த சொற்களால்.
ஏதோ ஒன்று பாடுகிறது, 
எனது பசிகொண்ட வாயில்
பற்றி ஏறுகிறது.
ஓ! பரவசத்தின் அனைத்துச் சொற்களாலும் 
கொண்டாட முடிகிறது
உன்னை.

பாடு, எரி, பற, 
ஒரு பைத்தியக்காரனின் கையில் 
அகப்பட்ட கோயில் மணியைப் போல.
என் சோகவயப்பட்ட கனிவே,
உன்னை சட்டென்று ஆட்கொள்வது எது?
மிகவும் கிளர்ந்திழுக்கும்
குளிர்ச் சிகரத்தை எட்டி முடித்ததும்
என் இதயம் மூடிக்கொள்கிறது
ஒரு இரவு நேர மலரைப்போல.


4.

உன் முலைகள் 
என் இதயத்திற்குப் போதுமானவை
என் சிறகுகள் 
உன் விடுதலைக்கு.
உனது இதயத்தின் மேல் உறங்கிக்கொண்டிருப்பது
என் உதடுகளின் வழியாக வானத்தை நோக்கி
உயரும்.

உனக்குள் ஒவ்வொரு நாளின் 
மாயத்தோற்றம்.
விரிந்த மலர்களில் வீழும் 
பனித்துளிகளைப் போல் வருகிறாய் நீ. 

தொடுவானத்தை மங்கச் செய்கிறாய் நீ
உனது பிரிவால்.
அலைகளைப் போன்று 
முடிவில்லாமல் பறந்துகொண்டிருக்கிறாய்.
ஊசியிலை மரங்களைப் போல
பாய்மரங்களைப் போல
நீ காற்றில் பாடுகிறாய் என்று 
சொல்லியிருக்கிறேன் நான்.
அவற்றைப்போல நீயும் உயரமாக, 
பேசாமடந்தையாக
மேலும் சட்டென்று சோகமாக, 
ஒரு கடற்பயணத்தைப்போல.

பொருட்களை திரட்டிக்கொள்கிறாய் உன்னிடத்தில்
ஒரு பழைய சாலையைப்போல.
எதிரொலிகளாலும்
பழைய நினைவுகளின் குரல்களாலும்  
நிறைந்திருக்கிறாய்.

நான் எழுகிறேன்
சில சமயங்களில் 
பறந்துசெல்கின்றன, இடம்பெயர்கின்றன
உன் இதயத்தில் உறங்கிக்கொண்டிருந்த பறவைகள்.


5.

பெண்ணுடல், வெள்ளை மலைகள், வெண்ணிறத் தொடைகள்,
உனது சரணாகதித் தோற்றத்தில் இந்த உலகைப் போன்று தோன்றுகிறாய் நீ.
எனது கொடிய முரட்டுத்தனமான உடல் உன்னில்  தோண்டி
துள்ளியெழச்செய்கிறது குழந்தையைப் புவியின் ஆழத்திலிருந்து.

நான் தனியாகச் சென்றேன் ஒரு வளையைப்போல. பறவைகள் பறந்துசென்றன என்னிடமிருந்து, மற்றும் இரவு தனது வலிமையால் ஊடுருவியது என்னில்.
நான் பிழைத்திருப்பதற்காக உன்னைத் தட்டிதட்டி செய்தேன் ஒரு ஆயுதமாக,
எனது வில்லில் அம்பாக, எனது கவணில் கல்லாக.

ஆனால் பழிவாங்கும் தருணம் வந்துவிட்டது, அதனால் உன்னை நான் நேசிக்கிறேன்.தோலின், பாசியின், விடாயின், நிதானமான பால்.
ஓ முலைகளின் கோப்பைகளே! பிரசன்னமின்மையின் விழிகளே!அடிவயிற்றின் ரோஜாக்களே! ஓ உனது மெல்லிய, துயரமான குரலே!

பெண்ணுடலே, நான் உனது மகிமையால் நிலைத்திருப்பேன்.
எனது விடாய், எனது கட்டற்ற ஏக்கம், எனது குழப்பமான பாதை!முடிவற்ற தாகங்கள் பாய்ந்துசெல்லும்,
களைப்பு பாய்ந்துசெல்லும், எல்லையற்ற சோகம் பாய்ந்துசெல்லும் கருநிற நதிப்படுகைகள்.


 

Saturday, April 5, 2025

உன் அருளின் ஒரு துளி

ஓவியம்: லியானார்தோ டா வின்சி


நேரில் பழக்கமில்லை
முகப் புத்தகத்தில்
நண்பர்கள்
ஆயினும்
ஒருவருக்கொருவர்
விருப்பக்குறி
இட்டதில்லை
ஒரு நொடி
நிறுத்தும்
கருத்தோ
படமோ
அவர் சுவரில்
கண்டதில்லை
அவருக்கும் நான்
அப்படியே
இருந்திருக்கலாம்
ஏதோ வெறுப்பு
சட்டென்று
கடந்துவிடுவேன்
இன்றறிகிறேன்
அவர்
உன் தெருக்காரர் என்று
என்தவம்
என்னிறைஞ்சுதல் போல்
ஏதுமின்றி
அவர் குரல் உன்செவி
உன்குரல் அவர்செவி
அவருரு உன்விழி
உன்னுரு அவர்விழி
அடைதலை
எத்தனை முறை
வாய்க்கப்பெற்றிருப்பார்
உன் மாபெரும்
அருள் வற்றி
ஒருசிறு
துளியாவது
எஞ்சியிராதா
அவருள்
அச்சிறு துளி
ஆர்ப்பரித்துச் சூழ்ந்துகொள்கிறது
என்னை
கடலளவு நேசம் அவர்மேல்
பிறப்பிக்கச் சொல்லி
ஏதோ
உன்விழி
உன்குரல்
எட்டியவர்களையெல்லாம்
நேசித்தால்
உன்னை
எட்டிவிடலாம் என்பது போல
கிறுக்குத்தனம்தான்
ஆனால்
அதுவொன்றே
என்னைக் கிறுகிறுத்து
ஆட்டிவைக்கிறது
-ஆசை

Friday, April 4, 2025

உன் பதினெட்டு வயதின் பட்டம்


உன் பதினெட்டு வயதை விட்டு
வெகு தொலைவில் போய்விட்டாய்
அது ஒரு பட்டமாய்
இன்னும் அங்கேதான்
பறந்து கொண்டிருக்கிறது
அதன் மேல்தான்
நானும் மிதக்கிறேன்
நூலறுந்து போயிருந்தாலும்
என்னை
கீழே தள்ளி விடாமல்
காப்பாற்றி
ஏந்தியிருக்கிறது
உன் பதினெட்டு வயதின் பட்டம்
சற்றே நழுவினாலும்
உன் 42ன் மீதோ
என் 43ன் மீதோ
விழுந்துவிடுவேன்
அந்தரம்
பதினெட்டு
ஏறிச்செல்லும்
ஒருவழிப் படிக்கட்டு
அதில்
தனியாக நான்
ஏறிச்சென்றதால்தான்
உனக்கே இனி
வாய்க்காத
உன் பதினெட்டின் அருகாமை
எனக்கெப்போதும்
வாய்க்கிறது
உன் பதினெட்டின் மேல்
என்றும் மலர்ந்திருக்கும்
என் பதினெட்டைப் பார்க்கவே
நீங்காமல்
அங்கிருப்பேன்
இப்போதுன்
பிறந்தநாளுக்கு
நான் பூத்தூவுவது
அங்கிருந்துதான்
என்ன பூ வென்று
எடுத்துப் பார்த்துத் திகைக்காதே
அது உன் பதினெட்டு
உனக்கனுப்பும்
இறவாமைத் திறவுகோல்
- ஆசை

Monday, March 24, 2025

குவாண்டம் செல்ஃபி


ரகசியமே கிடையாது
உனக்கு
கைபேசி கேமராவுக்கு முன்னால்
அதனால்தான்
நீ எடுக்காத தருணங்களிலும்
எடுத்திருக்கப்படக்கூடிய
ஆனால்
எடுக்காமல் விடப்பட்டிருக்கக்கூடிய
அல்லது
எடுக்கப்பட்டிருக்க வேண்டிய
எல்லாப் படங்களும்
எடுத்ததில்
வந்து குவிகின்றன
ஆகவேதான் சொல்கிறேன்
உன் தற்படம் ஒவ்வொன்றும்
தற்கணத்தின் படம் மட்டுமல்ல
முற்கணத்தின்
பிற்கணத்தின் படமும்கூட
இப்படியாக
ஒரு க்ளிக்கின் வழி
உன்னொவ்வொரு உறைபடமும்
அசைபடமாகிறது
நீ எடுத்துக்கொண்ட இடம்
என்னவாகுமோ
கணம் என்னவாகுமோ
கைபேசி என்னவாகுமோ
உன் சிரிப்பு
எங்கே போகுமோ
மென்தலை சாய்த்தல்
ஏதாய் மாறுமோ
என்ற எல்லாமும்
சேர்ந்துதான் க்ளிக்கிக்கொள்கின்றன
நீயாய் எடுக்காத கணத்தில்
உன்னை எடுக்க
வாய்க்கப்பெற்ற
கைகள்
அமுத்தும் அமுத்து
பிரிய மனமில்லாத
பட்டுப்பூச்சிகளாய் மாறி
உன் சிவப்புப் பட்டுப்புடவைமேல்
படிந்துகொள்கிறது
எப்பேர்ப்பட்ட உன்னையும்
புள்ளியாய்ப் படித்துப்
புள்ளியாய் உறைய வைத்து
காணாக் கணத்தில்
அலையாய் வைத்திருந்து
காணும் கணத்தில் மட்டும்
நீயாய் அறிவிக்கிறது
குவாண்டம் செல்ஃபி
ஷ்ரோடிங்கரின் பூனையே*
உன் செல்ஃபியிலிருந்து
வெளியே வா
வெளியே
உன் உயிருள்ள நீ
காத்திருக்கிறாய்
அதனிடம் மூக்குரசி
கால்குலுக்கி
ஒரு ஹாய் சொல்லிவிட்டுப் போ
-ஆசை, ‘குவாண்டம் செல்ஃபி’ (2021) கவிதைத் தொகுப்பிலிருந்து...
*நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் எர்வின் ஷ்ரோடிங்கரின் (Erwin Schrödinger) புகழ்பெற்ற சிந்தனைப் பரிசோதனையில் இடம்பெற்ற பூனை

Tuesday, March 11, 2025

வார்ஸன் ஷைர்: வீடென்பது சுறா மீனின் வாயானால்...

வார்ஸன் ஷைர்

ஆசை
(அறிமுகமும் கவிதைகளின் மொழிபெயர்ப்பும்)


சம காலத்தின் முக்கியமான இளம் பெண்கவிஞர்களுள் ஒருவர் வார்ஸன் ஷைர் (Warsan Shire). சோமாலியப் பெற்றோருக்கு கென்யாவில் 1988-ல் பிறந்தவர் வார்ஸன் ஷைர். சிறு வயதிலேயே இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்த வார்ஸன் ஷைர் லண்டன்வாசியானார். பிரிட்டனைத் தாயகமாக்கிக்கொண்டாலும் அங்கே ஒரு அந்நியராகவே வார்ஸன் ஷைர் தன்னை உணர்கிறார்.

தனது பூர்வீக நாடான சோமாலியாவுக்கு வார்ஸன் ஷைர் போனதே இல்லை என்றாலும் தனது எழுத்துகளின் வாயிலாக ஆப்பிரிக்கக் கலாச்சாரம், ஆப்பிரிக்கர்களின் வலி, அகதி வாழ்க்கையின் துயரம், குறிப்பாக அகதிப் பெண்களின் துயரம் போன்றவற்றை வார்ஸன் ஷைர் தொடர்ந்து பதிவுசெய்கிறார். தன் பூர்வீக நாட்டவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் குரலில் அவர்கள் தேசத் தொல்கதைகளை வார்ஸன் ஷைர் பதிவுசெய்துகொள்கிறார். பிறகு, அவற்றுக்குத் தன் கவிதைகளில், இன்ன பிற எழுத்துகளில் உரு கொடுக்கிறார்.

Monday, March 10, 2025

இமையத்தின் ‘சாரதா’ கதையும் மகிழ்ச்சிக்கு எதிரான இந்திய சமூகமும்

இமையம்


ஆசை

(இன்று இமையத்தின் பிறந்த நாள்)

இமையத்தின் நாவல்கள் அளவுக்கு அவருடைய பல சிறுகதைகள் முக்கியமானவை. சாதியத்தின் நுண்ணடுக்குகள், பசி, ஏழ்மை, ஏழ்மையின் மீது நவீன வாழ்க்கை நடத்தும் தாக்குதல்கள், பெண்களின் – குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் – உலகம், அரசியல், காதல் என்று பல பேசுபொருள்களில் அமைந்தவை இமையத்தின் கதைகள். இவையெல்லாம் தனித்தனியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்திருப்பதுதான் இமையத்தின் கதைகளின் தனிச் சிறப்பு. இந்தியச் சமூகமும் அப்படித்தானே.

Monday, March 11, 2024

வார்ஸன் ஷைர்: வீடென்பது சுறாமீனின் வாயானால்...



ஆசை
(அறிமுகமும் கவிதைகளின் மொழிபெயர்ப்பும்)

சம காலத்தின் முக்கியமான இளம் பெண்கவிஞர்களுள் ஒருவர் வார்ஸன் ஷைர் (Warsan Shire). சோமாலியப் பெற்றோருக்கு கென்யாவில் 1988-ல் பிறந்தவர் வார்ஸன் ஷைர். சிறு வயதிலேயே இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்த வார்ஸன் ஷைர் லண்டன்வாசியானார். பிரிட்டனைத் தாயகமாக்கிக்கொண்டாலும் அங்கே ஒரு அந்நியராகவே வார்ஸன் ஷைர் தன்னை உணர்கிறார்.

தனது பூர்வீக நாடான சோமாலியாவுக்கு வார்ஸன் ஷைர் போனதே இல்லை என்றாலும் தனது எழுத்துகளின் வாயிலாக ஆப்பிரிக்கக் கலாச்சாரம், ஆப்பிரிக்கர்களின் வலி, அகதி வாழ்க்கையின் துயரம், குறிப்பாக அகதிப் பெண்களின் துயரம் போன்றவற்றை வார்ஸன் ஷைர் தொடர்ந்து பதிவுசெய்கிறார்.

Friday, February 16, 2024

125 மணி நேரத்தில் 200 கவிதைகள்!

நண்பர்களுக்கு வணக்கம்! அடுத்த மைல்கல்! 200-வது கவிதையை இப்போதுதான் எழுதி முடித்தேன். கடந்த 125 மணி நேரத்தில் 200 கவிதைகள். 200வது கவிதை கீழே

*

அம்மையின்
சுற்றும் முலைதான்
இவ்வண்டம்

அது சுற்றிய
சுற்றில்
அதுவும் எல்லாமும்
இரண்டிரண்டாய்த் தெரியும்

அம்மை முலைப்
பால்சுனைவாழ்
மீன்குஞ்சு நான் 
இம்முலைக்குள்ளும்
அம்முலைக்குள்ளும்
இரண்டாய்த் தெரிவது
அப்படித்தான்

        -ஆசை

Wednesday, February 14, 2024

காதல் மாதத்தில் ஓர் அறிவிப்பு! - என் கவிதை நூல்கள் 50% சிறப்பு விலையில்


காதலர் தினத்தை முன்னிட்டும் என்னுடைய ‘அண்டங்காளி’, ‘குவாண்டம் செல்ஃபி’ தொகுப்புகள் வெளியாகி இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும் ஒரு சிறப்பு அறிவிப்பு! காதலின் பித்து நிலையை இந்த அளவுக்குக் கொண்டாடிய கவிதைத் தொகுப்புகள் தமிழ் நவீனக் கவிதையில் மிகச் சிலவே. ஆகவே, காதலர் தினத்தன்றும் காதல் மாதத்திலும் எப்போதும் படிக்கச் சிறந்த காதல் நூல்கள் இவை என்று உறுதியாகச் சொல்வேன். காதலர் தினத்தை முன்னிட்டு இந்த நூல்களும் என்னுடைய ‘கொண்டலாத்தி’ (பறவைக் காதல்) நூலும் 50% சிறப்பு விலையில் கிடைக்கும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்தச் சலுகை இந்த மாதம் இறுதி வரை. வாருங்கள் காதலை இந்த நூல்களுடன் கொண்டாடலாம். ஆதரவு தாருங்கள். நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படத்தில்... 

Thursday, June 29, 2023

அல்-ஃபட்டாஹ்

 


எல்லா மகத்துவத்தையும்
விஞ்சி நிற்கிறது
உன் மகத்துவம்

எல்லா அணுத்துவத்தையும்
சென்று நிறைப்பதே
உன் மகத்துவம்

அணுத்துவம் திறக்க
மகத்துவம்
ஒன்றே சாவி

மகத்துவம் திறக்க
உன் பேரருளே
சாவி

பிறப்பிலிருந்து
திறப்புக்கும்
திறப்பிலிருந்து
பெருந்திறப்புக்கும்
இட்டுச்செல்லும் நீரே
பெருந்திறப்பாளர்
            -ஆசை

(அல்லாவுக்கு  99 திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பெயரும் பேரழகு மிக்க கவிதை. அல்லாவுக்கு நூறாவது பெயரும் ஒன்று உண்டு என்ற புனைவை அடிப்படையாகக் கொண்டு அமீன் மாலூஃப் 'Balthasar's Odyssey' என்ற நாவலை பிரெஞ்சில் எழுதியிருக்கிறார். அல்லாவின் ஒவ்வொரு திருப்பெயரும் 'தோள் கண்டார் தோளே கண்டார்' என்று தன்னைத் தாண்டிச் செல்ல விடாது. எனக்கு அல்-ஃபட்டாஹ் (Al-Fatah) அப்படி.  அல்-ஃபட்டாஹ் என்றால் திறப்பாளர் என்று பொருள்.) 

Tuesday, April 4, 2023

உன் பதினெட்டு வயதின் பட்டம்

உன் பதினெட்டு வயதை விட்டு
வெகு தொலைவில் போய்விட்டாய்

அது ஒரு பட்டமாய்
இன்னும் அங்கேதான்
பறந்து கொண்டிருக்கிறது
அதன் மேல்தான்
நானும் மிதக்கிறேன்

நூலறுந்து போயிருந்தாலும்
என்னை
கீழே தள்ளி விடாமல்
காப்பாற்றி
ஏந்தியிருக்கிறது
உன் பதினெட்டு வயதின் பட்டம்

சற்றே நழுவினாலும்
உன் 42ன் மீதோ
என் 43ன் மீதோ
விழுந்துவிடுவேன்

அந்தரம்
பதினெட்டு
ஏறிச்செல்லும்
ஒருவழிப் படிக்கட்டு

அதில்
தனியாக நான்
ஏறிச்சென்றதால்தான்
உனக்கே இனி
வாய்க்காத
உன் பதினெட்டின் அருகாமை
எனக்கெப்போதும்
வாய்க்கிறது

உன் பதினெட்டின் மேல்
என்றும் மலர்ந்திருக்கும்
என் பதினெட்டைப் பார்க்கவே
நீங்காமல்
அங்கிருப்பேன்

இப்போதுன்
பிறந்தநாளுக்கு
நான் பூத்தூவுவது
அங்கிருந்துதான்

என்ன பூ வென்று
எடுத்துப் பார்த்துத் திகைக்காதே
அது உன் பதினெட்டு
உனக்கனுப்பும்
இறவாமை திறவுகோல்
- ஆசை

Wednesday, August 24, 2022

இமையத்தின் ‘சாரதா’ கதையும் மகிழ்ச்சிக்கு எதிரான இந்திய சமூகமும்


ஆசை

இமையத்தின் நாவல்கள் அளவுக்கு அவருடைய பல சிறுகதைகள் முக்கியமானவை. சாதியத்தின் நுண்ணடுக்குகள், பசி, ஏழ்மை, ஏழ்மையின் மீது நவீன வாழ்க்கை நடத்தும் தாக்குதல்கள், பெண்களின் – குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் – உலகம், அரசியல், காதல் என்று பல பேசுபொருள்களில் அமைந்தவை இமையத்தின் கதைகள். இவையெல்லாம் தனித்தனியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்திருப்பதுதான் இமையத்தின் கதைகளின் தனிச் சிறப்பு. இந்தியச் சமூகமும் அப்படித்தானே.


இமையத்தின் ‘சாரதா’ கதை 2019-ல் எழுதப்பட்டது. 55 வயது மதிக்கத்தக்க தனவேலுவும் அதே வயதுடைய சாரதாவும் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ரயிலில் சந்தித்துக்கொள்வதுதான் கதை. வழக்கமான அர்த்தத்தில் காதல் கதை என்றோ, பிரிந்த காதலர்கள் முதுமைக் காலத்தில் எதேச்சையாக சந்திப்பதைப் பற்றிய கதை என்றோ, சாத்தியமாகாத காதல் குறித்த நினைவேக்கக் கதை என்றோ இதைக் குறுக்கிவிட முடியாது. ஆனாலும், இது ஒரு காதல் கதைதான். காதல் தொடங்குவதற்கு முன்பே முடிந்துபோன, அல்லது 34 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பரஸ்பரம் தொடங்கிய காதல். இந்தக் காதல் சாத்தியப்படாமல் போனதற்கு அல்லது சிறு அளவிலேனும் முறையான பகிர்தல் 34 ஆண்டுகளுக்குப் பிறகு சாத்தியப்பட்டதற்கு என்னென்ன காரணங்கள் என்று நம்மை யோசிக்க வைக்கும் தளங்களில்தான் இந்தக் கதை மிகச் சிறந்த கதையாகிறது.  


அங்கன்வாடிக்கு மாற்று ஆசிரியராகத் தற்காலிகமாக 1985-ல் தனது ஊருக்கு வரும் சாரதாவைத் தூரத்தில் கண்ட உடனே காதலிக்க ஆரம்பித்துவிடும், முதலாம் ஆண்டு பிஎஸ்சி மாணவர் தனவேலு கவிதையாக எழுதித் தள்ளுகிறார். ‘வெயிலில் நிற்பவனுக்கு வியர்த்து ஒழுகுவதுபோல அவருக்குக் கவிதை வந்தது’   என்று அழகாகச் சொல்கிறார் இமையம். ஒரு வாரத்துக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, காதல் கடிதம் எழுதி, அங்கன்வாடிக்குச் சென்று சாரதாவிடம்கூட கொடுக்காமல் மேசையில் வைத்துவிட்டு ஓடிவந்துவிடுகிறார். அடுத்தடுத்துக் கடிதங்களை அப்படியே வைத்துவிட்டு, சாரதா தரப்பின் எதிர்வினையைப் பற்றி அறிந்துகொள்ளாமல் ஓடிவந்துவிடுகிறார். அந்தக் கடிதங்களின் எதிர்வினைதான் சாரதாவின் கடந்த 34 ஆண்டு வாழ்க்கை என்பதை ரயில் பயணத்தின்போதுதான் தனவேலு (அதிர்ச்சியுடன்) அறிந்துகொள்கிறார். தனவேலு கடிதம் எழுதியதில், சாரதாவின் அழகு தவிர, அவளுக்கு எந்தப் பங்கும் இல்லாமலேயே, அவளுக்கு ஒரு பையனிடமிருந்து காதல் கடிதங்கள் வந்ததாலேயே அவள் தண்டிக்கப்படுகிறாள். 19 வயதிலேயே கல்யாணம். வேலைக்குப் போகாத, பரம்பரைச் சொத்தினைக் குடித்தே அழிக்கும் கணவன். அதனால் சாரதாவின் வாழ்க்கையும் நரகமாகிவிடுகிறது; அவளுடைய பெண்களின் வாழ்க்கையும் அவ்வளவாகச் சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை.  


அந்தக் கடிதங்களை மட்டும் தனவேலு கொடுக்காமல் இருந்திருந்தால் தன் வாழ்க்கையே மாறியிருக்கும் என்கிறாள் சாரதா. “ரெண்டு மூணு வருசம் கழிச்சியிருந்தா நானும் ஒரு வேலையில உள்ள மாப்ளயக் கட்டியிருப்பனில்ல?” என்பதுதான் அவளுடைய ஆதங்கம். அப்படியென்றால் தனவேலு கடிதம் கொடுத்தது தப்பா? தனக்கு ஈர்ப்பு ஏற்பட்ட பெண்ணிடம் தன் காதலை அவர் வெளிப்படுத்த அப்படியொரு வழிமுறையை வெளிப்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்? அவரும் பயந்துபோய்தான் கடிதங்களை வைத்துவிட்டு ஓடிவருகிறார். சாரதாவுக்கும் தொடை வியர்த்துவிடுகிறது. ஒரு ஆண் தனக்கு விருப்பமான பெண்ணிடம் தன் விருப்பத்தைத் தெரிவிப்பதற்கும் அந்த விருப்பத்தை அந்தப் பெண் பெறுவதற்கும் (அவள் ஏற்றுக்கொள்கிறாளோ இல்லையோ) இடையில் எத்தனை கட்டுப்பாடுகள், தடைகள், நியதிகள்? இவை அத்தனையும் பாரம்பரியத்தின் பேரிலும் மதங்கள், சாதிகள் பேரிலும்தான் நம் சமூகம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகள், தடைகள், நியதிகளெல்லாம் அடிப்படையில் மனித மகிழ்ச்சிக்கும் சுதந்திரத்துக்கும் எதிரானவை. தனிநபரின் நியாயமான மகிழ்ச்சிக்கும் சுதந்திரத்துக்கும் முட்டுக்கட்டை போடுவதிலிருந்தே சாதி, இன, நிற பேதங்கள் பிறக்கின்றன என்று கூறலாம். இதன் பலிகடாக்கள் பெண்கள் என்று மட்டுமல்ல, அனைவரும்தான். நம் சமூகத்தில் எந்த ஆண்தான் மகிழ்ச்சியானவனாகவும் சுதந்திரமானவனாகவும் இருந்திருக்கிறான். ஆனால், பிறரின் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் சுதந்திரம் மட்டும் அவனுக்கு இயல்பாக இருக்கிறது.


இந்தியச் சமூகம் முழுவதுமே மகிழ்ச்சிக்கு எதிரானது. கணினி மொழியில் சொல்ல வேண்டுமென்றால் நாம் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருப்பதற்கு புரோகிராம் செய்யப்படாதவர்கள்; பிறரையும் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருப்பதற்கு அனுமதிக்க புரோகிராம் செய்யப்படாதார்கள். இன்னும் சொல்லப்போனால் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் கண்டு அஞ்சி ஒடுங்குபவர்கள். இல்லையென்றால் ஏன் இவ்வளவு சாதிய வன்மம், ஆணவக் கொலைகள், காதலுக்கு முட்டுக்கட்டைகள்?


ஒரு பெண், தனது உடன்பாடு இல்லாமல் திடீரென்று ஒரு ஆணால் காதல் கடிதம் கொடுக்கப்பட்டதால், என்ன ஏதென்று அவள் உணர்ந்துகொள்வதற்குள், எதையும் முடிவெடுக்கப் பக்குவம் இல்லாத வயதில் அவளுக்கு மாபெரும் தண்டனை அளிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட, இப்போது சிறையிலிருந்து வெளிவந்திருக்கும் பேரறிவாளனுக்கு நடந்ததைப் போலதான் சாரதாவுக்கும், அதே 19 வயதில் நடந்திருக்கிறது. பேரறிவாளனுக்கென்று அவரும் அவரது அன்னையும் ஒட்டுமொத்த சமூகமே போராடினார்கள். ஆனால், சாரதாக்கள் போராடுவதில்லை, போராட முடியாத நிலையை எட்டி அதற்குள் உழன்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களால் முடிந்தது அப்பாவி தனவேலுகளை சிறிய குற்றவுணர்வுக்குள் ஆளாக்கியோ, அல்லது சின்னதாக அவர்களைக் காதல் செய்ய முயல்வதோதான். இந்த இரண்டையும் சாரதா இந்தக் கதையில் செய்துவிடுகிறார். மேலும், காதல் என்பது பரஸ்பர உணர்வு, அதை ஒருதலையாகவே வைத்து மூடிவிட்டுப்போன தனவேலுவை இறுதியில் திக்குமுக்காடச் செய்துவிட்டும் போகிறாள்.


நம் தலைக்கு மேல் இவ்வளவு பெரிய பாரம்பரியமும் வரலாறும் தொன்மையும் மதங்களும் சாதிகளும் வர்க்கங்களும் இல்லையென்றால் ஒருவேளை தனவேலு சாரதாவிடம் சென்று “எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. இவையெல்லாம் நான் உன்னை நினைத்து எழுதிய கவிதைகள்” என்று தயங்காமல் சொல்லியிருக்கலாம். அவள் அதை இயல்பாக ஏற்கவோ மறுக்கவோ செய்திருக்கலாம். ஏற்றிருந்தால் அடுத்த நாளே அவர்களுக்குள் உடலுறவுகூட நடந்திருக்கலாம். அதற்கடுத்த நாள் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்து பிரிந்துகூட இருக்கலாம். காதலோ திருமணமே ஆயுள்வரை நீடிக்க வேண்டுமா என்ன?


மேற்கத்திய நாடுகளில் தங்கள் பிள்ளைகள் உடல்ரீதியாக இனப்பெருக்கத் தகுதியை அடையும் பருவத்தில் அவர்களுக்கு ஆணுறைகளும் கர்ப்பத்தடை மாத்திரைகளும் வாங்கித்தருகிறார்கள். அதனால், அவர்களில் பலரும் இளம் வயது கர்ப்பம் என்ற அச்சமின்றி இயல்பாகக் காதலையும் காமத்தையும் அனுபவிக்கிறார்கள் (இவற்றை அனுபவிப்பதில் என்ன தவறு?). ஆனால், இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் அங்கே புலம்பெயர்த்து வாழ்பவர்கள் கூடவே கலாச்சாரம், கௌரவம் போன்றவற்றைத் தூக்கிச்செல்கிறார்கள் அல்லவா, அதனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆணுறைகளும் கர்ப்பத்தடை மாத்திரைகளும் வாங்கித்தரத் தயங்குகின்றனர். இதன் விளைவு அதிகரிக்கும் இளம் வயது கர்ப்பங்கள்.


ஒப்பீட்டளவில் தனவேலுவை விட சாரதா சுதந்திரமானவளாகவும் மகிழ்ச்சிக்கு ஏங்குபவளாகவும் இருக்கிறாள். ஆனால், அவளும் கூட முழுமையாக நம் சமூகத் தளைகளிலிருந்து விடுபட முடியாதவள் என்பதைத்தான், “இந்தக் காலமா இருந்தா மாப்ள என்னா படிச்சிருக்காரு, என்ன வேல பாக்குறாரு, தனியாரா, கவர்மன்டா, சம்பளத்தோட பேங்க் ஸ்டேட்மன்ட் கொடுங்கன்னு கேக்க முடியும். மேட்ரிமோனியல்ல பதிவுசெஞ்சிவச்சி துணிக்கடயில துணிய செலக்ட் பண்ற மாதிரி மாப்ள, பொண்ண செலக்ட் பண்ண முடியும். அந்தக் காலத்தில அப்பா அம்மா சொல்றதுதான? நிலம் எம்மாம் இருக்குன்னு பாத்துதான பொண்ணு கொடுத்தாங்க?” என்ற கூற்றின் மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது. அப்பா பார்க்கும் மாப்பிள்ளைக்குப் பதிலாக மேட்ரிமோனியல் மாப்பிள்ளை. அவ்வளவுதான் வித்தியாசம். அங்கே, காதல் திருமணம் ஒரு தெரிவாக இருக்கவில்லை. தான் அனுபவித்துவரும் வேதனையைப் பொறுத்தவரை அவளுக்குத் தேவையாக இருந்தது காதல் அல்ல, ‘ஒரு லட்ச ரூபாய் சம்பளம்’ வாங்கக்கூடிய அரசு வேலை பார்க்கும் மாப்பிள்ளை. ஏனெனில், அது சாத்தியமாகாததால் அவளுடைய பெண்கள் வரை கஷ்டப்படுகின்றனர். ஆண்கள் பலரும் காதல் அல்லது திருமணம் என்று நின்றுவிட, பெண்களோ தங்கள் அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து கவலைப்பட வேண்டியவர்களாக இருக்கும் சூழலில் காதல் என்பது பெரிதும் தெரிவாக இருப்பதில்லை. இதையெல்லாம் தாண்டியும் மீறலில் முன்னிற்பவர்களாகவும் அவர்களே இருக்கிறார்கள்.


இந்தத் தளங்களுக்கு அப்பாலும் இதை ஒரு அழகான காதல் கதையாக மட்டும் படிக்க முடியும். தனவேலு கொடுத்துப்போன கடிதங்களை சாரதா இதுவரை படித்துப் பார்க்காதது மட்டுமல்ல, கடந்த 34 ஆண்டுகளாக அவற்றைத் தூக்கியெறியாமலும் வைத்திருக்கிறாள். தன்னுடைய இத்தனை ஆண்டு கஷ்டத்துக்குக் காரணமானவை என்பது மட்டுமல்ல, தனக்குக் கொடுக்கப்பட்ட முதலும் கடைசியுமான கடிதங்கள் அவை என்பதும் காரணம். படித்திருந்தால் கிழித்துப்போட்டிருப்பாள். “நான் சாவுறவரைக்கும் கிழிக்கவும் மாட்டன். படிக்கவும் மாட்டன். என்னோட வாழ்க்கய நாசமாக்குன சீட்டுவோதான? நான் சாவுறவரைக்கும் அப்படியே இருக்கட்டும். என்னோட சந்தோஷம் அந்த சீட்டுவோதான். என்னோட நரகமும் அந்த சீட்டுவோதான்” என்பதுதான் அந்தக் கடிதங்களின் இருப்புக்குக்  காரணம்.

‘கல்யாணமாயிட்டா பாக்கக் கூடாதின்னு சட்டமா?’ என்று கேட்டு தனவேலுவை அதிர வைக்கிறாள் சாரதா. ஆம், இங்கே எல்லாவற்றுக்கும் சட்டம் இருக்கிறது. மேலும், ‘நான் எங்க இருக்கன்னாவது விசாரிச்சிருக்கலாம். ஒங்க ஊருக்கும் எங்க ஊருக்கும் இருபது கிலோமீட்டர் தூரம்கூட இருக்காது’ என்கிறாள் சாரதா.


ஒரு சிறிய, துயரமான, கூடவே குதூகலமூட்டும் இந்தக் கதையில் எத்தனையோ அழகான தருணங்களையும் வரிகளையும் இமையம் உருவாக்கிவிடுகிறார். பெரும்பாலான அழகிய கூற்றுகள் சாரதாவுடையதாகவே இருக்கின்றன: ‘”காது, மூக்கு, வாய் மாதிரி மனசும் இருந்தா எந்தத் தொந்தரவும் இருக்காது. மனசுக்கு மட்டும்தான திருப்பி நெனச்சிப்பாக்குற புத்தி இருக்கு” என்று சொன்னாள்’ என்ற வரிகளும் ’“ஒங்களப் பாத்ததில ஒரு கடல் அளவுக்கு சந்தோஷமின்னா, ரெண்டு கடல் அளவுக்குக் கஷ்டம்”’ என்ற வரிகளும் இதற்கு எடுத்துக்காட்டுகள்.

சாரதாவை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று கேட்கும் தனவேலுவிடம் சாரதா இப்படிச் சொல்கிறாள்:

“எதுக்குப் பாக்கணும்? இப்பியே ஏன்டாப்பா பாத்தமின்னுதான் இருக்கு. இதுவே கனவா இருந்தா நல்லா இருந்திருக்கும்.”

***

தனவேல் கைபேசி எண் கேட்கும்போது சாரதா இப்படிச் சொல்கிறாள்:

“ஒங்க சுடுகாடு ஒங்களுக்காகக் காத்திருக்குது. என்னோட சுடுகாடு எனக்காகக் காத்திருக்குது. சட்டியா பானயா மாத்திக்கிறதுக்கு?”

***

இன்னொரு இடத்தில்:

‘அழுது முடித்து ஓய்ந்த மாதிரி முகத்தைத் துடைத்துகொண்ட சாரதா “கூப்பிட்டீங்களா?” என்று கேட்டாள்.

“இல்ல.”

“கூப்பிட்ட மாதிரி இருந்துச்சி.”

அவளுக்கு உண்மையில் வாழ்க்கை முழுவதும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும், யாரோ கூப்பிட்டதுபோல். தனவேலு முதன்முதலில் கூப்பிட்டது (அதாவது, கடிதங்கள் கொடுத்தது) கூப்பிட்டது மாதிரியும் கூப்பிடாதது மாதிரியும்தானே இருந்தது. இறுதிவரை தனவேலு அப்படித்தான். ஆனால், அங்கிருந்து தொடர நினைக்கிறது தனவேலுவின் புத்தி. கைபேசி எண்ணைக் கேட்கிறான். சாரதா தர மறுத்துவிடுகிறாள். அவளைப் பொறுத்தவரை இத்தனை ஆண்டு குமுறலைக் கொட்டுவதற்கு வாய்ப்போ, பழிவாங்கலோ, அல்லது காதலோ எதற்கும் நீடித்த மதிப்பில்லை. அந்தத் தற்காலிகமே போதும்.


காதலையும் அதன் சூழலையும் அனைத்துத் தளங்களிலும் ‘ரொமான்டிக்’ தன்மைகளை உரித்தெடுத்து (Deromanticization) அங்கிருந்து ‘ரொமான்டிக்’கான உணர்வை ஏற்படுத்துகிறார். மலையாளப் படங்களிலே கௌதம் வாசுதேவ் படங்களிலோ வருவதுபோலல்லாமல் நெரிசலான ரயில், தரையில் உட்காரக்கூட இடமில்லாமல் நின்றுகொண்டிருக்கும் சூழல். வெக்கை, வியர்வை வேறு. ரயில் கழிப்பறைக்குப் பக்கத்தில் இருவரும் நிற்கிறார்கள். இருவருக்கும் வயது 50-களில். 34 ஆண்டுகளுக்கு முன்பு ஒல்லியாக இருந்த சாரதா இப்போது பேத்திகள் எடுத்துப் பல மடங்கு பெருத்துவிட்டாள். தனவேலுக்குத் தலையில் முடியை எண்ணிவிடலாம். இருவரும் கடந்த கால வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களைப் பற்றிப் பேசவில்லை. பிளாஷ்பேக்கும் சிறு அளவுக்குத்தான் வருகிறது. ஆனாலும், இந்தக் கதையில் வாசகருக்கு ரொமான்டிக் மனநிலை கிடைக்கிறது. இந்தியச் சமூகமே நெரிசல் சமூகம்தானே. அந்தக் காலத்தில் பத்துப் பிள்ளைகள் நெருக்கியடித்துக்கொண்டு இருக்கும் வீட்டில் முதல் பிள்ளைக்குக் கல்யாணம் ஆனால் அவனுக்கும் பத்துப் பிள்ளைகள் அதே வீட்டில்தானே பிறக்கும். தனிப்பட்ட வெளி (private space) என்பதை அப்படிப்பட்ட நெருக்கியடிக்கும் வீட்டில் மட்டுமல்ல விசாலமான வீடுகள், பொதுவெளிகள் எங்கும் நாம் உருவாக்குவதில்லை. அப்படிப்பட்ட சூழலிலிருந்து ஒரு அழகிய ‘ரொமான்டிக்’ கதையை இமையம் தந்திருக்கிறார்.


தாம்பரத்திலிருந்து கைபேசியில் டைப் செய்துகொண்டிருக்கும் பெண்ணுக்கும் 34 ஆண்டுகளுக்கு முந்தைய சாரதாவுக்கும் எந்த அளவுக்கு வேறுபாடு இருக்கிறது! ஏன் அந்தப் பெண்ணுக்கும் தனவேலுக்குமே எந்த அளவுக்கு வேறுபாடு! இப்படிப்பட்ட நுட்பமான பல இடங்களை இமையம் இந்தக் கதைக்குள் அள்ளித்தருகிறார். தமிழின் மகத்தான காதல் கதைகளில் இதுவும் ஒன்று என்று சந்தேகத்துக்கு இடமின்றிக் கூறிவிடலாம். இன்னும் சொல்லப்போனால் இது ‘காதலைத் தோன்ற விடாத ஒரு சமூகத்தின் கதை’ என்றும் சொல்லிவிடலாம்.

- நன்றி: ‘தலித்’ இதழ் 


Thursday, March 4, 2021

அண்டங்காளி: சன்னதம் கொண்ட கவிதைகள்


 

ஜி.குப்புசாமி

கவிதை பிறப்பது பெரும்பாலும் உளத்தூண்டலாலும், மனவெழுச்சியாலும் என்பதால் கவிஞனின் மனதில் அது உருவாகும் கணத்தைத் துல்லியமான சொற்களால் விவரிக்கமுடிவதில்லை. தூண்டல், எழுச்சி இவற்றோடு பீடித்தலும் கவிதையைக் கொண்டுவரும் என்பதற்கு சமீபத்தைய சான்று ஆசையின் ‘அண்டங்காளி’ தொகுப்பின் கவிதைகள்.

தனக்கு சிறுவயதிலிருந்தே கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை என்று முன்னுரையில் குறிப்பிடும் ஆசை, காளியின் உக்கிரத்துக்கு ஆட்பட்டு, அருள்வயப்பட்ட நிலையில் இக்கவிதைகளை எழுதி முடித்தபின்பும் கடவுள் நம்பிக்கை வரவில்லை என்றே சொல்கிறார். காளியைப் போலவே கண்ணனும். தெய்வ உருக்கள் என்பதைமீறி   cultish phenomenon களே. அவர்களால் பீடிக்கப்படுவதற்கு கடவுள் நம்பிக்கை வேண்டுமென்பதில்லை. இத்தாலியின் ராபர்டோ கலாஸ்ஸோவும் ஜெர்மனியின் குந்தர் கிராஸும் உதாரணங்கள்.

தமிழின் மகத்தான கவிஞன் ஒருவனையும் இதற்கு முன்பு காளி ஆக்கிரமித்திருக்கிறாள். ‘யாதுமாகி நின்றாய் காளீ… பூதமைந்தும் ஆனாய்….போதமாகி நின்றாய்…இன்பமாகி நின்றாய்… என்னுள்ளே புகுந்தாய்…பின்பு நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ காளீ..’ என்று தனக்குள் வியாபித்திருக்கும் ஒரு பெரும் சக்தியை உன்மத்தநிலையில் பாரதி உபாசிக்கிறான்.  மந்தமாருதத்தில் கரையும்போதும், வானத்தை நோக்கும்போதும், மலையுச்சியில் நிற்கும்போதும், சிந்தை எங்கெங்கோ செல்லும்போதும் அங்கெல்லாம் அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள் காளி.  இது பக்தி என்ற வகைப்பாட்டில் அடங்குமாவென்று சந்தேகமாக இருக்கிறது. மனம் சாதாரண லௌகீக வாழ்வுநிலையிலிருந்து விடுபட்டு தன்னிச்சையாக ஓர் அதீத உயர்நிலைக்கு சென்றுவிடுவது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. உன்னதமான கவிமனம் கொண்டிருப்பவர்களுக்குத்தான் அது நிகழ்கிறது. ஆசையின் இக்கவிதைகளில் அந்தக் கவிமனம் புலப்படுகிறது.

’வெறி கொண்ட தாய்’ எனும் கவிதையில் பாரதி, ‘பேயவள் காணெங்கள் அன்னை – பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை’ என்று தொடங்கி அடுத்து வரும் வரிகளில் வேதங்கள் பாடுவள் காணீர் – ஓதரருஞ் சாத்திரங்கோடி உணர்ந்தோதி உலகெங்கும் விதைப்பாள் .. பாரதப் போரெனில் எளிதோ – விறல் பார்த்தன் கை வில்லிடை ஒளிர்வாள்‘ என்று அவளை  பாரத தேவியாகவே உருவகிக்கிறார்.

ஆனால் இங்கு ஆசைக்கு காளி அவரை ஆட்டுவிக்கும் கருவியாகவே இருக்கிறாள். தாவும் மனமேறி தாளமிடும் மந்தியாக, சீறும் ஒளி சொடுக்கி சீழ்க்கை அடிப்பவளாக, ஏறும் ஒலி முடக்கி ஏகாந்தம் செய்பவளாக, ஆடும் நிலை விரித்து அண்டமிடும் அற்புதமாக இருக்கிறாள்:

பேயவள்காண் எங்கள் அன்னை

பிறப்பறுக்கும் பெருஊழி

தாவும் மனமேறி

தாளமிடுமொரு மந்தி

ஊறும்சுவை விரட்டி

முன்சென்று நுகர்பவள்

பாயும்நதி மூடும்

பாழ்வெளிப் போர்வையவள்

சீறுமொளி சொடுக்கி

சீழ்க்கை அடிப்பவள்

நாறும்மலர் தெறிக்கும்

நர்த்தனங்கள் காட்டுபவள்

ஏறுமொலி முடக்கி

ஏகாந்தம் செய்பவள்

தூறும்விதி ஒழுகும்

தூமைதரு பேரெழிலாள்

ஆடும்நிலை விரித்து அண்டமிடும் 

அற்புதமே தேடும் விழிகளைத்

தேய்க்கும் ஒளி அருள்வாயே.

(பக். 26)

காளி என்பவள் அசையாமல் சமைந்திருப்பவள் அல்ல. அவளிடம் எப்போதும் துடிப்பும் துடிப்பும் துள்ளலும் குதித்துக் கொண்டிருக்கின்றன.  அந்த குதிப்புக்கேற்றவாறு ஆசையின் சொற்கள் தாளகதியில் வந்து விழுகின்றன.

காலைப் பிடித்திழுத்துச்

சுற்றியேறி குறி படரும் கொடியே

யட்சி யட்சி யட்சி

கொவ்வைக் குறுமுலையின்

குமிழ் வெடிப்பே

யட்சி யட்சி யட்சி…………….

(பக் 27)

குறியடியில் 

உன் ஆட்ட மேடை

போட்டது யார்

அதுவும் வெட்கங் கெட்டு

நீ ஆடும் ஆட்டத்துக்குக் கூட

மண்டை ஆட்டுது

பார்

எந்தத்தாளம்

கேட்டது 

என்ன ஆட்டம்

கண்டது

அதன் நாவில்

எச்சில் ஊறி

படியிறங்கி

ஏன் கோலம்

போட்டது .

(பக்.73)

•••••••••••••••••••••••••••

ஓசை லயம் தேவையற்ற சொற்களைத் தந்துவிடும் என்பது ஒரு நவீன சிந்தனை . யாப்பிலக்கணத்தின் அடிப்படையிலும் ஓசையும் தாளமும் உள்ளன . இன்றைய கவிதைகள் தாள லயத்தைத் துறந்து சொற்சிக்கனத்தோடு வருபவை . ஆனாலும் ஆசையின் இந்த ‘ காளி ‘ கவிதைகள் இப்போது மரபாகியிருக்கும் நவீன கவிதை முறைக்கு அடங்குவதாக இல்லை.  பிரக்ஞை மீறி , அருள்வயப்பட்ட அதீத நிலையில் இக்கவிதைகள் அவரிடமிருந்து வெடித்துக் கொண்டு வருகின்றன . 

இருமுனை முடிவின்மையின் 

நடுவெளி நர்த்தனம் நீ

தொடுஊழி தரையிறக்கும்

தத்தளிப்பு நீ

கடல்புரியும்

தாண்டவத்தின் தெறிப்பும் நீ

எரிஜோதி இடைபறக்கும்

கொடும்பறவை நீ

அனலுமிழும் கனல் மயக்கும்

பேய்சிரிப்பு நீ

நாத்திகனின் கனவில் வரும்

நடனக்காளி நீ

(பக்.38)

என்ற கவிதையை மண்ணில் காலூன்றி ஸ்திரமாக நின்றிருக்கும் போது ஒரு கவிஞனால் எழுதியிருக்க முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது .

காலவரையறைகளைத் தாண்டி முதலும் முடிவுமற்ற அண்டப் பெருவெளியிலிருந்து உருவாகி வந்தவை போல ஒரு eternity இக்கவிதைகளில் இருக்கின்றன. முன்பே சொன்னதைப் போல ஒரு அதீத சக்தியின் பீடிப்பில் கட்டுண்டு இருக்கையில் மட்டுமே இத்தகைய வரிகளைக் கவிஞனால் எழுத முடியும்  என்று தோன்றுகிறது . அப்படிப் பார்க்கும்போது இக்கவிதைகளுக்கு முழு பிரக்ஞையில் இருக்கின்ற ஆசை சொந்தம் கொண்டாட முடியாதென்றும் தோன்றுகிறது .

 நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியரும் , கவிஞரும் , ஓவியருமான குந்தர் கிராஸ் 1960 களில் கல்கத்தா நகருக்கு முதன் முறையாக வருகிறார் . அந்நகரம் அவருக்கு ஒரு மகத்தான மனத்திறப்பை ஏற்படுத்துகிறது . அந்த நகரத்தில் இருக்கும் ஏதோ ஒரு மாயசக்தி அவரை மீண்டும் மீண்டும் வருகை தர வைக்கிறது . உலகின் மிகவும் செல்வச் செழிப்பான நாட்டிலிருந்து வந்தவரான குந்தர் கிராஸுக்கு  கல்கத்தா நகரின் சேரியும், குப்பை மேடுகளும், அழுக்கும் அசூயை அளிப்பதாக இருந்தாலும் அவற்றை எழுத்தில் பதிவு செய்ய முற்படுகிறார் . இவ்வளவு ஏழ்மையிலும் வங்காளிகள் பெரும் கொண்டாட்டத்துடன் வழிபடும் காளி பூஜையைப் பார்த்துவிட்டு வந்தவருக்கு எழுதமுடியாமற் போய்விடுகிறது . எவ்வளவு முயன்றாலும் ஒரு வரிகூட எழுத முடியவில்லை. ஆனால் திடீரென அவர் கை வரையத் தொடங்குகிறது . எழுதவேண்டிய நோட்டுப் புத்தகத்தில் கோட்டுச் சித்திரங்களாக தன்நிலை மறந்து வரைந்து கொண்டேயிருக்கிறார் . பின்னர் அதைப்பற்றிக் குறிப்பிடும்போது  ”நானாக யோசித்து வரையவில்லை .ஏதோ எனக்குள்ளிருந்து என் விரல்கள் மூலமாக வரையவைத்தது” என்கிறார் . வரிசையாக பல சித்திரங்களை வரைந்து முடித்ததும் அவர்  ‘ விடுபடுகிறார் ‘ . எழுத நினைத்த வரிகளை வரைந்திருந்த படங்களின் மீதே எழுதுகிறார் . படங்களோடு அவர் கையெழுத்திலேயே அந்த நூல் வெளிவந்திருக்கிறது . புத்தகத்தின் பெயர் : SHOW YOUR TONGUE.

 எனைப் பாதியிலே 

 கொண்டுவந்து

 பாழ்வெளியில்

 தள்ளிவிட்டாய்

 முட்டித்திறப்பேனோ நான்

 நீ மூடிவிட்ட பெருங்கதவை

     (பக்.28) 

என்ற வரிகள் குந்தர் கிராஸின் ‘நாக்கை நீட்டு’ புத்தக அனுபவத்தைத்தான் நினைவூட்டுகின்றன.

இக்கவிதைகளில் திரும்பத் திரும்ப வருகின்ற காமமும், யோனியும், குறியும் அவற்றின் நேரான பொருளில் குறிப்பிடப்படுவதாக  நினைக்கத் தோன்றவில்லை. இச்சொற்களுக்கு இணையாக – ஏன் அதிகமாகவே , உடலின் மற்ற பாகங்களும் உணர்ச்சிகளும் வந்துகொண்டே இருக்கின்றன. உடலையும் உணர்ச்சிகளையும் முன்னுரையில் சபரிநாதன் குறிப்பிடிவதைப்போல அண்டத்தின் நுண்வடிவ மாதிரிகளாகவே இக்கவிதைகள் முன்வைப்பதாகத் தோன்றுகிறது. உடல் அவயங்கள் சார்ந்த கவிதைகளிலும் அவை கவிஞனுக்குத் தொந்தரவு தருவதாகவே இருக்கின்றன. அது பொறுக்காமல் கவிஞர் காளியிடம் முறையீடு செய்துகொண்டே இருக்கிறார். ஆனால் ஆடும் கூத்தை காளி நிறுத்துவதாகத் தெரியவில்லை. அவஸ்தையின் உச்சத்தில் இதே அவயங்களைக் கொண்டு கவிஞர் காளியை வணங்கவும் செய்கிறார்:

குறியால் நினைக்கிறேன்

உன்னை

குறியால் தொழுகிறேன்

உன்னை

குறியால் உணர்கிறேன்

உன்னை

குறிகோடி படைத்துத்

தறி நெய்பவளே

குறிபிடித்துக் கூட்டிச் செல்லடி

என்னை

உன் குறியாளும்

பெருமேடைக்கு.

(பக்.40)

**********************************************

இந்த உன்மத்த நிலை ஒரு சித்திரவதைதான். அருள்பாலித்த நிலையில் பரவசமும் பரிதவிப்பும் சமமாக வந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையிலிருந்து தன்னை விடுவித்துவிடவும் வேண்டிக்கொள்கிறார். அண்டங்காளி இப்போது அண்டங்களவாணியாகிவிடுகிறார்:

அண்டங்களவாணி

எங்கிருந்து எடுத்து வந்தாய்

என்னை

எடுத்த இடத்தில்

வைத்துவிடடி

என்னை. 

(பக்.79)

கவிஞரை அண்டப் பெருவெளிக்குக் கூட்டிச்சென்று அலைக்கழித்துவந்த அண்டங்காளி இறுதியில் மலையேறிவிடுகிறாள்:

காளியவள் களிநடனம்

காட்டிவிட்டாள்

ஆழிதனை ஊஞ்சலென

ஆட்டிவிட்டாள்

ஊழிமனக் காட்சிதனை

நாட்டிவிட்டாள்

பாழிருளைப் படம்பிடித்து

மாட்டிவிட்டாள்

(பக்.83)

என்று காளியம்மை ஆடிய கூத்து நிறைவடைகிறது.

கொஞ்சம் திகைப்பையும், சற்று சிலிர்ப்பையும், மிகவும் பயத்தையும் ஒரே நேரத்தில் உண்டாக்கி ஓர் அலாதியான வாசிப்பனுபவத்தைத் தந்திருக்கும் காளியம்மைக்கும், அவள் ஆசிபெற்ற ஆசைக்கும் நமஸ்காரங்கள்.

---------------------------------------------------------------

அண்டங்காளி

ஆசை

விலை: ரூ.100

புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070

அமேஸானில் வாங்க: https://amzn.to/3d6QxEb

Tuesday, February 23, 2021

ஆசையின் ‘குவாண்டம் செல்ஃபி’ ஓர் அறிமுகம்



ராஸ்மி 

தனது சக உயிரினங்களை வெற்றிக்கொண்ட மனிதகுலத்தை தற்போது தொழில்நுட்பங்கள் ஆளுகின்றன என்று கூறும் ஹராரி யுகத்தில், ஆசையின் கவிதை உலகம் இப்பேரண்டத்தை தனக்குள் அடக்கி அனைத்துப் படைப்புகளுக்கும் சரிசமமான இடத்தை உறுதி செய்கிறது. எல்லோரையும் எல்லாவற்றையும் அரவணைத்துக்கொள்கிறது. 75 கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பு, கிட்டத்தட்ட இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றைப் பற்றியுமே பேச முற்படுகிறது. இவற்றுக்காக இதற்காகத்தான் இந்த கவிதைகள் என்று வகைமைப்படுத்திட முடியவில்லை. உலக உயிர்களுக்கெல்லாம் இக்கவிதைகளை பொருத்திப் பார்த்தாலும் சாலப் பொருந்திப் போகிறது.

‘குவாண்டம் செல்ஃபி’யின் மொத்தக் கவிதைகளும் இந்த ஒரு கவிதைக்குள் அடங்கிவிடுகின்றன.

 “உடலின் எல்லை எதுவரை

 என்று தெரிந்தாக வேண்டும்

எனக்கு’’ - எனத் தொடங்கி ,

“மரணமென்பது

விரித்தலுக்கெதிரான

எல்லையற்ற சுருங்குதலின்

திடீர் கலகமன்றி

வேறென்ன”  என்று முடியும்.

இந்தக் கவிதையின் முதல் பத்திக்கும் இறுதி பத்திக்கும் இடையில்தான் ‘குவாண்டம் செல்பி’ கவிதை உலகம்  தன்னை சுருக்கி விரித்து நிகழ்த்திக் காட்டுகிறது.

ஒரு கவிதையை அணுகும் பார்வைக்கோணம் நிச்சயம் வாசகனை சார்ந்தது. எனக்கு ‘குவாண்டம் செல்ஃபி’யை வாசிக்கும்போது ஒரு குறு நகரச் சிறுவனின் கண்ணோட்டத்தில் இக்கவிதைகள் அமைந்துள்ளதாக தோன்றியது. புதுமைப்பித்தனின் ‘மகாமசானம்’ என்ற சிறுகதையில், சவாகாசமாய்த் தகரப் பீப்பாயைக் கையில் பிடித்துபடி  செத்துக்கொண்டிருக்கும் கிழவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தையை போன்ற சிறுவன் அவன். நவீன உலகின் எவ்வித உளவியல் கோட்பாடுகளுக்கும் தர்க்கத்துக்கும் உள்ளாகாத சிறுவன் அவன். இத்தகைய தீங்குகளில்லாமல் உலகை தரிசிக்கும் தன்மை இக்கவிதைகளின் ஆன்மாவாக உள்ளது.

" நீ என்

ஆன்ம சகோதரி,

ஆத்மிக அன்னை,

அடிமனதின் காதலி என்

புலன்களின் வேசி. "

இதில் ஒரு பெண் எத்தனை உருவாக, உயிராக விஸ்தரிக்கப்படுகிறாள் என்பதுனூடே அவள் மீதான பிரியம் எப்படி எல்லையற்ற அண்டமாக பரந்து அவளென்ற புள்ளிக்குள் அமிழ்கிறது.

“நான் இருக்கிறேன் என்று பார்க்காதே அம்மா” என்ற கவிதை அனைத்து மகன்களும் தரிசிக்க வேண்டிய ஒன்று. இந்தக் கவிதை உலக கற்பிதங்களால் உண்டாக்கப்பட்ட நம் மனதின் அழுக்கைக் கழுவிவிடுகிறது.

“உன் மதாவிடாய் வலியைத் தன் மேல் பூசிக்கொள்ளத் தெரியவில்லை என்றால் இக்கவிதை உயிரற்றது என்று அர்த்தம்” என்று தொடங்கும் கவிதையில், ஆசையின் ‘குவாண்டம் செல்பி’யின் குறிக்கோள் நிறைவடைகிறது. அது இப்பேரண்டத்தின் அற்புதத் தருணங்களை வெளிச்சமிட்டு அதன் மடியில் நம்மை அணைத்து நம் அத்தனை தீங்கெண்ணங்களையும் வெளியேற்றச் செய்கிறது.

“சுவரை உதைத்து உதைத்து” என்ற சர்ரியல் கவிதையை பல முறை வாசித்தேன். ஒரு பெண்ணாக, ஒரு தேசாந்திரியாக, பூனையாக, செடியாக இன்னபிற உயிராக என்னை  கற்பனை செய்து வாசிக்கும்போது ஒவ்வொரு வாசிப்பிலும் அக்கதாபாத்திரத்திற்குரிய தரிசனத்தை அடையும் சாத்தியத்தை அக்கவிதை எனக்கு வழங்கியது.

ஒட்டுமொத்தமாக,‘குவாண்டம் செல்ஃபி’ வாழ்தலின் ஊடாக மேற்கொள்ளப்படும் பயணம் பற்றிய கதைகளாய் தன்னை பிறப்பித்துக்கொள்கிறது. விலக்கப்பட்ட கனியை உண்டு அறிதலை அடையாமல், அறியாமையின் வழியே ஞானத்தை நோக்கிய பயணமாக அந்தப் பயணம் அமைகிறது.

நூல் விவரம்:

குவாண்டம் செல்ஃபி

(கவிதைகள்)

ஆசை

விலை: ரூ.160

புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070

அமேஸானில் வாங்க: https://amzn.to/3qlMQyu.

Monday, February 22, 2021

மாசியும் ஆசையின் அண்டங்காளியும்

 


கண்டராதித்தன்                                        

     ஏழூர் எல்லையைக் காக்கும் எல்லைக் கோயில் அது, ஒரு பக்கம் ஊர்,மற்றொரு பக்கம் நீர் நிரம்பி வழியும் ஏரி, மற்ற இரண்டு பக்கங்களிலும் அறுவடைக்குத் தயாராகவும், அறுவடை  முடிந்தும் இருக்கும் வயல்கள்  உள்ளே வாசியம்மன். உக்கிர தெய்வம். ஆனால் எல்லையைக் காப்பவள், மனம் பிறழ்ந்தவர்களையும் கதியற்றவர்களைம் திக்கு தெரியாதவர்களையும்  அன்போடு அரவணைத்து இரவும் பகலுமாய்க் காத்து நிற்பவள்,ஏழூர் மக்களும் மனம் விரும்பித் தேடி வரும் அன்னை அவள்.

        கோயில் என்று சொல்ல முடியாத கட்டிடம் அது.  சுண்ணாம்புக் காரை உதிர்ந்தும் எண்ணெய்ப் பிசுக்குடனும் அழுக்குடனும் காணப்படும் வசிப்பிடம்தான் ஆண்டாண்டு காலமாக அன்னைக்கு வாய்த்திருக்கிறது. குனிந்து சென்று சேவிக்கும்படியான நுழைவாயிலின் வழியாக உள்ளே செல்லும்போது சப்த நாடியும் ஒடுங்குவது போலவொரு அமைதி. அன்னை வாசியம்மன் கருத்த பெண்ணின் அகண்ட முதுகைப்போல உள்ள கற்பலகையில் வீற்றிருப்பாள், அங்கிருந்து அன்னையை வணங்கி எங்கள் ஊர் கற்பகம் பாடும் பாடல்கள் பல. என் நினைவில் இருப்பவை இரண்டே இரண்டு. அவற்றுள் ஒன்று இது:

 பல்லது கடித்து மீசை படபடவென்றே துடிக்க

கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி

எல்லினும் கரியமேனி எம்படர் வரினும் என்னை

ஒல்லையில் தாரகாரி ஓம்ஐம் ரீம் வேல் காக்க

எனக்குத் தெரிந்து இந்தப்  பாடல்களை நெக்குருகப் பாடும் கற்பகம் சில சமயம்  அன்னைக்கு எதிரில் நின்று மனம்போன போக்கில் வசைமாரி பொழிந்துவிட்டுத் தரையிலிருந்து மண்ணெடுத்து அப்பிக்கொண்டு செல்வார். புதிதாகப் பார்ப்பவருக்கு அந்தக் கோலம் அச்சுறுத்துவதாக இருக்கும்.

கற்பகம் வீடு,மனைவி, பெற்றோர் என ஏதும், யாரும் அற்றவர். கிடைத்த வேலையைச் செய்து கிடைத்த இடத்தில் உண்டு உறங்குபவர். கற்பகம், வாசியம்மனுடன் தன் வாழ்நாளுக்குமான பிணக்கும் நேசமும் வெறுப்பும் பகையும் ஊடலும் கொண்டிருந்தவர். ஒரு நாள் அங்கிருந்த மணம் வீசும் இலுப்பைத் தோப்பில் இறந்தும் போகிறார். ஊர், வெறியன் இறந்துபோனதாக அவர் வாழ்வை  முடித்துவிடுகிறது.        

       கற்பகம் கற்றவர் அல்ல, உற்றார் உறவுகளற்று மனம் போன போக்கில் வாழ்ந்து மடிந்தவர். அவருக்கிருந்த ஒரே பிடிப்பு காளிசொருபமான அன்னைதான். இங்கு கவிஞர் ஆசைக்கு ‘அண்டங்காளி’ இப்படியான தோற்றத்தில் இருந்திருக்க கூடும் என்றே இத்தொகுப்பை வாசிக்கும்போது தோன்றுகிறது.

     ஒரு நவீன மனதை வைத்துக்கொண்டு இத்தகைய கவிதைகளை எழுத முடியுமா என்பதுதான் எனக்கு முதலில் எழுந்த கேள்வி. சரி எழுதலாம் என்றே வைத்துக்கொள்வோம், ஒன்றிரண்டு கவிதைகள் இதுபோன்று எழுதவும் சாத்தியம்தான். ஆனால்  ஆசை இத்தொகுப்பில் உள்ள மொத்தக் கவிதைகளின் வழியாகவும் உக்கிர மனநிலையுடனும், அடங்க மறுத்தும் அண்டங்காளியுடனான  உறவின் பல்வேறு படிநிலைகளை வெவ்வேறு விதமாகவும் எழுதியிருக்கிறார். இந்த வகையில் இந்தக் கவிதைகள் விசேஷமானவை  என்றே நினைக்கிறேன்.

உதாரணத்துக்கு ’அண்டங்காளி’யின் சில தெறிப்புகள்;

‘எனக்கும் வாய்த்திருக்கிறாளே…’ கவிதையில்

தலைமேல் காலைத் தூக்கி

ஆடும்

தரங்கெட்ட தறுதலையை

பெண்குலத்தின் பேரழுக்கை

தலைமேல் தூக்கிவைத்து

கொண்டாடுகிறாயே

குடும்பத்துக்காகுமாடா

குலம் செழிக்க

வேண்டுமடா

என்றெல்லாம்

என் வீட்டார் சொல்லித்தான்

பார்த்தார்கள்

பக்கம்-38ல் உள்ள கவிதை:

இருமுனை முடிவின்மையின்

நடுவெளி நர்த்தனம் நீ

தொடுஊழி தரையிறக்கும்

தத்தளிப்பு நீ

கடல்புரியும்

தாண்டவத்தின் தெறிப்பும் நீ

எரிஜோதி இடைபறக்கும்

கொடும்பறவை நீ

பக்கம் 37:

நாறத்தலை விரித்து

நாலாத்திசையும்

கண்ணுருட்டி

தான்வேகும்

கொடுங்கனலை

அண்டங்கொதிக்க

அடிப்பற்ற வைத்து

கோரத்தாண்டவம்

கொற்றவை நீ

ஆடித்தெறிக்கும்போது

அஞ்சாமல் நிற்பேனோ

ஆகாசந்திறக்கும்

அன்னை அன்னை அன்னை

என்ன செய்தாய்

என்னை என்னை என்னை

இந்தத் தெறிப்புகள் சில எடுத்துக்காட்டுகள்தான்.

    இத்தொகுப்புகளின் மொத்தக் கவிதைகளையும் வாசிக்கும்போது இவற்றில் இருக்கும்  தாள கதியான நடை இக்கவிதைகளுக்கு அடிநாதமாக நின்றுகொண்டிருக்கிறது என்றே எனக்குப் பட்டது. ஆனாலும் மொத்த கவிதைகளையும் அண்டங்காளி நிரப்பியிருப்பதில் சற்றே மனப்பிசகு இருப்பது போல நினைப்பும் வந்தது.

 ஆசையின் இத்தொகுப்பில் காளியின் வடிவம், அனைத்து விதமான பெண் பாத்திரங்களுக்கும் பொருந்தியிருப்பது சிறப்பு. எனக்கு முதலில் எப்படி இது சாத்தியமாயிற்று என்றுதான் தோன்றியது.இந்த மனநிலையை எட்ட முடிந்திருப்பதே வினோதமானது என்றே கருதினேன். பிறகு அவரது முன்னுரையை வாசிக்கும்போது ஒருவிதமான தெளிவுக்கு வர முடிந்தது.

  கவிதையினால் ஏற்படும் விளைவுகள் என்பது இதுதான். இங்கு காளி எல்லா விதமான சொருபங்களாகவும் கவிஞருக்குத் தென்படுவது அவரது வினோத மனநிலையை தெளிவாக உணர்த்துகிறது. அவள் இந்த விதமான வடிவங்களை ஏறபதற்கானவள் என்றே நானும் கருதுகிறேன், காளியைப் போன்றே அணுக்கமானவளாகவும் காமக்கிழத்தியாகவும் அன்னையாகவும் சகோதரியுமாகவும் தோழியுமாகவும் இருக்க, கதியற்றவனுக்கு வேறு யாருண்டு?.அவளையே பல்வேறு வடிவ நிலைகளுக்கு வரித்துக்கொள்ளவும்,அதை அவ்வாறே எழுதவும் வாய்த்த மனதை கவிஞர் கொண்டிருந்ததும், நான் அறிந்தவரை அதுவொரு ஆட்கொள்ளப்பட்ட மனநிலை. இங்கிருந்து இத்தகைய கவிதைகள் தெளிந்த நீரோடையைப்போல சப்தமெழுப்பியபடிதான் இருக்கும். இது உருவாக்கும் ஓசை ஒரே கதியில்தான் இருக்கும், பல நேரங்களில் சலிப்பாகவும். ஆனால், இத்தகைய இடங்களில் நாம் கண்டிராத பல நூற்றுக்கணக்கான உயிரினங்கள் தன்போக்கில் வாழ்வைக் கொண்டிருக்கும். அதுபோன்ற நிலை ஆசைக்குக் கிட்டியிருக்கிறது. நம்மில் சிலருக்குக் கிட்டியும் அதை உணராமல் இருக்கிறோம் அவ்வளவுதான்.

இன்று மாசி மாதம் இரண்டாம் நாள், மாசி அண்டங்காளி பிறந்த மாதம். இதிலொரு நாளில் தங்களது நேர்த்திக் கடனுக்காகச் சுடுகாட்டிலிருந்து காளி வேடமிட்ட பெண்கள் கபாலத்தையேந்தி அகால இரவில்  ஊர்வலம்  வருகிறார்கள். அதில் நமது அன்னை, காதலி, சகோதரி என அனைவரும் கலந்து ஒன்றுபோல வீதியைக் கடக்கிறார்கள்.

  .

இக்கவிதைகளை எழுதியதன்  வாயிலாக  கவிஞர் ஆசை எந்த இடத்தில் நின்றிருப்பார் அல்லது எதை அடைந்திருப்பார் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன். மிகுந்த ஆயாசம் கொள்ளும் ஒரு கரிய நிழலில் அவர் நிற்பது போலத் தோன்றுகிறது. அவர் அங்கிருந்து வெளியேற வேண்டும்; ஏனெனில் ஒரு கவிஞனாக எனக்கு துக்கமாக இருக்கிறது.

                                         

அண்டங்காளி

(கவிதைகள்)

ஆசை

விலை: ரூ.100

புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070

அமேஸானில் வாங்க: https://amzn.to/3d6QxEb