Wednesday, September 30, 2015

காந்தி தாத்தாவின் செல்லக் குட்டிகள்


ஆசை

(காந்தி ஜெயந்தி வாரத்தை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர் இணைப்பிதழில் 30-09-2015 அன்று வெளியான கட்டுரை)

குழந்தைகளே, உங்களுக்கெல்லாம் காந்தி தாத்தாவை ரொம்பப் பிடிக்கும்தானே! காந்தி தாத்தாவுக்கும் உங்களையெல்லாம் ரொம்பப் பிடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், அவரது ஆசிரமத்தில் எவ்வளவு குழந்தைகள் இருந்தார்கள் தெரியுமா? எல்லோரும் காந்தி தாத்தாவின் செல்லங்கள். அது மட்டுமல்லாமல், அவர் போகும் இடங்களிலெல்லாம் குழந்தைகளையும் சிறுவர்களையும் கொஞ்சி மகிழ்வதும் அவர்களுடன் விளையாடுவதும் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். பெரிய பெரிய தலைவர்களுடன் விவாதம் நடத்திக்கொண்டிருக்கும்போதுகூட அவர் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருப்பார்.

நீங்கள் ‘காந்தி’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள் அல்லவா! அதில் ஒரு காட்சியில் நேரு, படேல் போன்ற தலைவர்களுடன் காந்தி ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார். அப்போது ஒரு சிறுவன் ஆட்டுக்குட்டியுடன் வருவான். “பாபு, இந்த ஆட்டுக்குட்டிக்குக் கால் உடைந்துவிட்டது. இதை நாம் சரிப்படுத்துவோம்” என்று சொல்லிவிட்டு முன்னே செல்வான். உடனே, காந்தி அந்தத் தலைவர்களிடம் இப்படிச் சொல்வார்: “என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு வருகிறேன்.”
தலைவர்கள் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்க காந்தி அந்தச் சிறுவனைப் பின்தொடர்ந்து செல்வார். தேச விடுதலையைப் போலவே குழந்தைகளுக்கும் அவர் முக்கிய இடம் கொடுத்திருக்கிறார் பாருங்கள்.

சுதந்திரப் போரில் ஈடுபட்டு காந்தி தாத்தா பலமுறை சிறை சென்றிருக்கிறார். அப்படிச் சிறையில் இருக்கும்போது அவர் பெரும் தலைவர்களுக்கெல்லாம் கடிதம் எழுதுவார். அது மட்டுமல்ல, தனது ஆசிரமத்திலுள்ள குழந்தைகளுக்கும் கடிதம் எழுதுவார். அந்தக் கடிதங்களில் ஒன்று இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. படித்துப்பார்த்து, காந்தி உங்களையெல்லாம் எப்படி நேசித்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

சின்னஞ்சிறு குருவிகளுக்கு…
சின்னஞ்சிறு குருவிகளே, சாதாரணக் குருவிகள் சிறகு இல்லாமல் பறக்க முடியாது. சிறகு இருந்தால்தான் எல்லோருமே பறக்கலாமே. ஆனால், சிறகு இல்லாமலே பறப்பது எப்படி என்று நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது உங்கள் தொல்லைகளெல்லாம் நீங்கிவிடும். அப்படிப் பறக்க நான் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன்.
இங்கே பாருங்கள், எனக்குச் சிறகு இல்லை; என்றாலும் எண்ணத்திலே ஒவ்வொரு நாளும் உங்களிடம் நான் பறந்துவருகிறேன். அடடா! இதோ இருக்கிறாள் விமலாக்குட்டி; இதோ வருகிறான் ஹரி. இதோ இருக்கிறான் தர்மகுமார். நீங்களும்கூட எண்ணத்திலே என்னிடம் பறந்துவர முடியும்…
உங்களிலே யார் பிரபு பாயின் மாலைப் பிரார்த்தனையின்போது ஒழுங்காய்ப் பிரார்த்தனை செய்துவராதவர்? அதை எனக்குத் தெரிவியுங்கள்.
எல்லோரும் கையெழுத்திட்டு எனக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள். கையெழுத்திடத் தெரியாதவர். கடிதத்தில் ஒரு சிலுவைக் குறி போட்டால் போதும்.
-ஆசிர்வாதங்களுடன் பாபு (காந்தி)
(குறிப்பு: இந்த கடிதம் - லூயி ஃபிஷரின் ‘காந்தி வாழ்க்கை’ நூலிலிருந்து எடுக்கப்பட்டது; மொழிபெயர்ப்பு: தி.ஜ.ர. வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்.)

படித்தீர்கள் அல்லவா, இப்போது நீங்கள் எல்லோரும் காந்தி தாத்தாவுக்குப் பதில் கடிதம் எழுதுங்கள். காந்தி தாத்தாதான் இப்போது உயிருடன் இல்லையே, எப்படி அவருக்குக் கடிதம் எழுதுவது என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது. அதனால் என்ன, கடிதம் எழுதி உங்கள் ஆசிரியரிடமோ அல்லது அம்மா, அப்பாவிடமோ காட்டுங்கள்!
 -  நன்றி: தி இந்து

Tuesday, September 29, 2015

ஃபோக்ஸ்வாகன் காரும் ஏமாற்றும் மென்பொருள்களின் யுகமும்


ஜெய்னெப் டூஃபெக்ஸி

(‘தி இந்து’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் 29-09-2015 அன்று எனது சுருக்கமான மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)

கடந்த ஆறு ஆண்டுகளாக ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தார் ஒரு பொய்யைத் தொடர்ந்து விளம்பரப்படுத்திக்கொண்டிருந்தார்கள்: “உயர்தரமான, சுத்தமான டீசல்” கார்கள். அதுமட்டுமல்லாமல் எரிபொருள் திறன் மிக்க, புகைவெளியீடு அதிகம் இல்லாத கார்கள் என்றெல்லாம் விளம்பரம் வேறு. இப்போதல்லவா தெரிகிறது ஃபோக்ஸ்வாகன் கார்களெல்லாம் எந்த அளவுக்குச் சுத்தமான டீசல் கார்கள் என்று! நம்மையெல்லாம் ஏமாற்றியிருக்கிறார்கள். மாசுக்கட்டுப்பாட்டு ஆய்வுகளில் மட்டும் யோக்கியமாக நடந்துகொள்வதைப் போன்ற ஒரு மென்பொருளை அவர்கள் கார்களில் பொருத்தியிருக்கிறார்கள்.
ஆனால், ஆய்வுக்குட்படுத்தப்படும் நேரங்களைத் தவிர மற்ற நேரத்தில் அளவுக்கு அதிகமான புகையை வெளியிட்டு இந்தக் கார்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. எந்த அளவுக்கு என்றால், அனுமதிக்கப்பட்ட அளவை விட 40 மடங்கு அதிகம் நைட்ரஜன் ஆக்ஸைடை வெளியிடுகின்றன; அதாவது ஆய்வு நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில். சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்கள் என்று இப்படி மாறுவேஷம் போடும் கார்களை வாங்குவதற்காகக் கார்களின் உரிமையாளர்களுக்கு 5 கோடியே 10 லட்சம் டாலர் (ரூ. 337,43,35,950) அளவுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றால் பாருங்களேன்.

Friday, September 25, 2015

எனக்கு மரண தண்டனை கொடுங்கள்!


ஆசை

(‘தமிழ் இன்று’ இணைய இதழில் 2010ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதம். இந்தக் கடிதம் இன்று மோடிக்கு அனுப்பினால் இன்னும் பொருத்தமாக இருக்கும். இந்தக் கடிதங்களால் எந்தப் புண்ணியமும் இல்லைதான். ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டு அந்த கோபத்தில் உடனடியாக எழுதிய கடிதம் இது.)

இந்த நாட்டிலே மிகவும் சக்தியற்றவர்களுள் ஒருவனாகிய நான் என்னை விடவும் சக்தியற்ற பிரதமர் அவர்களுக்கு எழுதும் கடிதம். 'மதிப்புக்குரிய பாரதப் பிரதமர்' அவர்களுக்கு, 'மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு' என்றெல்லாம்தான் இந்தக் கடிதத்தை நான் துவங்க விரும்பினேன். ஆனால், உங்களுக்கு மதிப்போ மாண்போ உண்மையில் இருப்பதாக நீங்களே நினைக்க மாட்டீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

Wednesday, September 23, 2015

தட்டானுக்குள் வானம்


ஆசை

 (‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர்கள் இணைப்பிதழில் 23-09-2015 அன்று வெளியான கதை)

வாண்டுகளின் குட்டி இளவரசி ஆனந்தியைப் பற்றிப் போன வாரம் கொஞ்சம் சொல்லியிருந்தேன் அல்லவா!

ஆனந்தி, அழகான குட்டிப் பெண். அவளுக்குக் கண்கள் சிறியதாகவும் அழகாகவும் இருக்கும். அவளைக் கடந்து செல்லும் யாரும் அவளுடைய கண்களைப் பார்த்துவிட்டால், அவர்களுடைய முகம் பெரிதாக மலர்ந்துவிடும்.
ஆனந்திக்கு ஒரு பழக்கம். தினமும் வீட்டுக்கு வெளியில் வந்து விளையாடிக்கொண்டிருப்பாள். அப்போது தெருவில் யார் போனாலும் அவளுடன் பேசிவிட்டுப் போயாக வேண்டும். தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ எல்லோரும் அவளுடன் பேசிவிட்டுத்தான் போக வேண்டும். இல்லையென்றால் அழ ஆரம்பித்துவிடுவாள்.

ஒரு நாள், தரையைப் பார்த்தபடி பூனை மாதிரி பதுங்கிப் பதுங்கிப் போய்க்கொண்டிருந்தாள் ஆனந்தி. என்னவென்று போய்ப் பார்த்தேன். நெருப்பெறும்பு ஒன்று தத்தித் தடுமாறிப் போய்க்கொண்டிருந்தது. ஆனந்தியைப் பார்த்தேன். அவள் கண்களில் நீர்.
‘ஏன்டிச் செல்லம் அழுதுட்டிருக்கிறே?’ என்று கேட்டேன்.

இனப்படுகொலையின் மறுபக்கத்தில் இரண்டு தேன்சிட்டுக்கள்



ஆசை 

வரலாறு என்பது
ஒற்றைத் தாள்தான்

அந்த ஒற்றைத் தாளின்
முதல் பக்கத்தின் பெரும் பரப்பில்
இனப்படுகொலை
நடந்துகொண்டிருக்கிறது
மறுபக்கத்தின் பெரும்பரப்பில்
தேடித் தேடித் தேன் குடிக்கும்
தேன்சிட்டுக்கள் இரண்டு

இனப்படுகொலை
தொலைநோக்குப் பார்வை கொண்டது
எதிரியாகக் கூடும் என்று
சிறுவர்களையும்
எதிரியைத் தன் கருவறையில்
சுமக்கக்கூடும் என்று
சிறுமிகளையும் அழிக்கிறது

தேன்சிட்டுக்கு
முதல் பக்கத்தின் இனப்படுகொலை
தெரியாதது போல்
இனப்படுகொலைக்கும்
மறுபக்கத்தின்
தேன்சிட்டுக்களைத் தெரிவதில்லை

மறுபக்கத்தில்
தேன்சிட்டுக்களாய் இருந்திருக்கக் கூடிய
குழந்தைகளை
அது கொல்கிறது

ஓலத்திற்குப் பதிலாக
ரத்தம் மட்டும் வெளியேறி
முதல் பக்கத்தின் பெரும் பரப்பில்
சொட்டுகிறது

மறுபக்கம்
ரத்தச் சிவப்பில் ஊறிவரும்
புள்ளி ஒன்றைக் கண்டுகொண்ட தேன்சிட்டு
தன் துணையிடம் காட்டுகிறது

தேன் குடிப்பதை விட்டுவிட்டு
ரத்தச் சிவப்பை நோக்கிப்
பறக்கின்றன இரண்டும்
 ... ... ... 
தேன்சிட்டுக்கள்
ரத்தத்தைக் குடிக்கப் பழகுவதற்கு முன்
எரித்தழித்துவிட வேண்டும்
வரலாற்றின்
அந்த ஒற்றைத் தாளை

        - 2012 வாக்கில் நான் எழுதிய கவிதை இது. சமீபத்தில்தான் கண்டெடுத்தேன்.

Thursday, September 17, 2015

பூதாகரமாகும் அகதிகளின் துயரம்


(‘தி இந்து’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் 15.09.2015 அன்று என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)

உலகம் திடீரென்று கண்விழித்துக் கொண்டதுபோல் இருக்கிறது. ஆம், குழந்தை ஆலன் குர்தி கரையொதுங்கிய புகைப்படம்தான் உலகத்தைக் கண் திறக்கச் செய்திருக்கிறது. அகதிகள், புலப்பெயர்வு, மரணம் இந்தச் சொற்களையெல்லாம் உலகெங்கும் உச்சரிப்பதற்கு ஒரு குழந்தை கரையொதுங்க வேண்டியிருந்திருக்கிறது. அகதிகள் பிரச்சினை பூதாகரமாகியிருக்கிறது. இது புலப்பெயர்வு பிரச்சினை என்றே உலகம் சொல்லிக்கொண்டிருக்கிறது. அப்படிச் சொல்வது பிரச்சினையின் தீவிரத்தைக் குறைப்பதே. உண்மையில் இது அகதிகள் பிரச்சினைதான்.
செப்டம்பர் முதல் வாரம் வரை, ஐரோப்பாவில் தஞ்சம் புக முயன்று பலியானவர்களின் எண்ணிக்கை 2,760 என்கிறது ஒரு கணக்கு. இதனால், 2014-ஐ விட 2015 மிகவும் கொடுமையான ஆண்டாகியுள்ளது. 2014-ம் மோசமான ஆண்டுதான். இதுபோன்ற விபத்துகளில் கடந்த ஆண்டு பலியானோரின் எண்ணிக்கை 3,000-க்கும் அதிகம்.

Wednesday, September 16, 2015

பெரிய்ய்ய்ய பெரிய்ய்ய்ய வானம்…

                             ஓவியம்: ராஜே
ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர் இணைப்பிதழில் 16.09.2015 அன்று வெளியான கதை)

அய்யய்யோ இந்த ஆதியும் ஆனந்தியும் படுத்தும் பாடு இருக்கிறதே!
கம்ப்யூட்டரின் முன்னால் நான் உட்கார்ந்துகொண்டால் போதும் எங்கிருந்தாலும் ஓடிவந்துவிடுவார்கள். “சித்தப்பா, சித்தப்பா ஏதாவது நல்ல நல்ல ஃபோட்டோவா காட்டு” என்று அரித்தெடுப்பார்கள்.
இதில் பெரியவனும் சின்னவளும் வேறு வேறு மாதிரி.
பெரியவன் ஆதிக்குப் பெரிய பெரிய விஷயங்களாகக் காட்ட வேண்டும். சின்னவள் ஆனந்தியோ சின்ன விஷயங்களையே காட்டச் சொல்லி அடம்பிடிப்பாள்.
ஒரு நாள் கம்ப்யூட்டர் முன் உடகார்ந்திருந்த என்னிடம் ஆதி வந்தான். “பெரிய பெரிய விலங்கா காட்டு சித்தப்பா” என்றான் ஆதி.
முதலில் ஒட்டகத்தைக் காட்டினேன்.
“இன்னும் பெருசா காட்டு சித்தப்பா” என்றான்.
ஒட்டகச்சிவிங்கியைக் காட்டினேன்.
“இன்னும் பெரிசா” என்றான்.
யானையைக் காட்டினேன்.
“அட, இன்னும் பெரிசா” என்றான்.
டைனோசரைக் காட்டினேன்.
“இதுக்கும் மேல பெரிசா” என்றான்.
நீலத் திமிங்கிலத்தைக் காட்டினேன்.
“இதைவிட பெரிசா” என்றான்.
“இதுக்கும் மேலே பெருசா, எந்த விலங்கும் இல்லடா ஆதி” என்றேன்.
“போ சித்தப்பா, பொய் சொல்லாதே. கம்ப்யூட்டர் அளவுதான் இருக்குது; அதைப் போய் பெரிய விலங்குன்னு சொல்றே. இன்னும் ஏதாவது பெரிசா இருக்கும் பாரு” என்றான்.
“எவ்வளவு பெரிய விலங்கா இருந்தாலும், கம்ப்யூட்டர்ல சின்னதாத் தான் தெரியும் ஆதி. உன்னோட படத்தைக் கம்ப்யூட்டர்ல பார்த்தாலும், நீ சின்னதாதான் தெரிவே. ஆனா, நீ கம்ப்யூட்டரவிடப் பெருசாத்தானே இருக்கே” என்று கேட்டு, அவனை மடக்கிவிட்டதாக நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.
இந்தப் பதில் அல்ல, எந்தப் பதிலாலும் அவனைத் திருப்திப்படுத்த முடியாது என்றே தோன்றியது. நான் பொய் சொல்கிறேன் என்றுதான் நினைத்தான் அவன்.
பெரிய பெரிய மனிதன். பெரிய பெரிய பொக்லைன். பெரிய பெரிய சாலை. பெரிய பெரிய கடல். பெரிய பெரிய நாடு. பெரிய பெரிய பெரிய பெரிய…
இப்படி எவ்வளவு ‘பெரிய’தெரியுமா?
சலித்துப்போய் ஒரு தடவை என்னிடம், “பெருசெல்லாம் இவ்வளவு சின்னதாத்தான் இருக்குமா?” என்று கேட்டான்.
ஒருமுறை உயரமான ஈஃபில் கோபுரத்தை கம்ப்யூட்டரில் காட்டினேன். ‘இன்னும் பெரிசா’ என்றான். 102 மாடிகளைக் கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைக் காட்டினாலும் ‘இன்னும் பெரிசா’என்றான். 163 மாடிகளைக் கொண்ட துபாய் புர்ஜ் காலிஃபா கோபுரத்தைக் காட்டினாலும், அப்படியே கேட்டான். மனிதர்கள் கட்டியதில் இதைவிட உயரமானது வேறு ஏதும் இல்லை என்று சொன்னால், அவன் கேட்க மாட்டானே என்பதால் எவெரெஸ்ட் சிகரத்தைக் காட்டினேன்.
அப்போதும், ‘இன்னும் பெருசா’என்றே கேட்டான். கோபத்துடன் அவனை வெளியில் இழுத்துக்கொண்டு வந்தேன். இருட்டாக இருந்தது. வானத்தில் விண்மீன்களெல்லாம் கணக்கே இல்லாமல் கொட்டிக்கிடந்தன. ‘இன்னும் பெருசான்னா, இதுதான் எல்லாத்தையும் விடப் பெருசு”
என்று ஆதியிடம் வானத்தைக் காட்டினேன்.
அப்போதும் திருப்தி அடையவில்லை அவன்.
“வானத்தைவிட பெருசு எது சித்தப்பா?” என்று வெகு சாதாரணமாகக் கேட்டான். எனக்குக் கோபம் போன இடமே தெரியவில்லை. குப்பென்று சிரிப்பு வந்தது.
அவனைத் தூக்கி முத்தமிட்டுவிட்டுச் சொன்னேன்: “எல்லாத்தையும்விடப் பெருசு உன்னோட கண்ணுதான். எவ்வளவு பெரிய விஷயமா இருந்தாலும், அதை உன்னோட கண்ணு சின்னதா மாத்திடுது இல்லையா. எவ்வளவு பெரிய கட்டிடமா, மலையா, வானமா இருந்தாலும், உன்னோட கண்ணுக்குள்ள ஒரு புள்ளியாதானே மாறுது. எவ்வளவு பெரிய விஷயத்தைக் காட்டினாலும் உன்னோட கண்ணுக்கு அது பத்த மாட்டங்குதுல்ல. அதனால, இந்த உலகத்திலேயே பெருசு உன்னோட கண்ணுதான்.”
அப்போதுதான் ஆதி முகத்தில் பெரிய வியப்பு ஏற்பட்டது.
“அப்போ, என் கண்ணுதான் எல்லாத்தையும்விடப் பெரிசா சித்தப்பா?” என்று கேட்டான்.
“ஆமாண்டா என் கண்ணு. உன் கண்ணுக்கு முன்னாடி எல்லாம் சின்னதுதான்” என்றேன்.
ஆதி இப்படியென்றால், ஆனந்தி எப்படித் தெரியுமா? அடுத்த புதன்கிழமை வரை காத்திருங்கள் வாண்டுகளே!
 - நன்றி: ‘தி இந்து’
 ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கதையைப் படிக்க: 

பெரிய்ய்ய்ய பெரிய்ய்ய்ய வானம்…

Tuesday, September 15, 2015

புலப்படாத பறவையின் உடலைத் தேடி...


ஆசை

('தி இந்து’ தமிழ் நாளிதழில் ‘பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி’யின் நிறுவன நாளை முன்னிட்டு 15-09-2015 அன்று வெளியான என் கட்டுரையின் சற்றே விரிவான வடிவம்)

முகப்பில் இருவாச்சிப் பறவையின் சின்னத்துடன் உயர்ந்தெழுந்து நிற்கிறது மும்பை சாலிம் அலி சவுக்கில் உள்ள ‘பாம்பே இயற்கை வரலாற்றுக் கழகம் (பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி). சுருக்கமாக, பி.என்.எச்.எஸ் (BNHS). மும்பையின் முக்கியமான இடங்களுள், நெரிசல் மிகுந்த இடங்களுள் ஒன்றாக இருந்தாலும் அந்தப் பிரதேசத்தில் சமீபத்திய தொன்மையின் வாசனை வீசியது. பி.என்.எச்.எஸ் கட்டிடத்துக்கு எதிரே லயன் கேட் இருக்கிறது. அருகில் விக்டோரியா மியூசியம், ஜஹாங்கிர் ஆர்ட் கேலரி, ஏசியாட்டிக்  நூலகம் போன்ற முக்கியமான கட்டிடங்கள். பெரும்பாலானவை, ஆங்கிலேயர் காலக் கட்டிடங்கள். அங்கிருந்து ஐந்து நிமிட நடையில் தாஜ் ஹோட்டலும் (அஜ்மல் கசாபால் இப்போது மேலும் பிரபலம்), அரபிக் கடலுக்கு வணக்கம் தெரிவிக்கும் இந்தியா கேட்டும்.

பி.என்.எச்.எஸ்-ஸுக்குச் செல்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள். 1, ஜெர்டான்ஸ் கோர்ஸர் என்னும் பறவை. 2, இந்தியாவின் பறவைத் தாத்தா என்று அறியப்படும் சாலிம் அலி (1896-1987) தன் வாழ்நாளின் கணிசமான பகுதியைக் கழித்த இடம் அது.

Monday, September 14, 2015

பாரதியும் சூரியனைச் சுட்டிக்காட்டிய மல்பெரியும்


ஆசை

(‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்கத்தில் பாரதி நினைவு வாரத்தையொட்டி 12.09-2015 அன்று வெளியான கட்டுரை)

பாரதியின் பாடல்களைப் புரட்டிக்கொண்டுவரும்போது ‘இந்த ஆள் எதையோ இடைவிடாது ஏக்கத்துடன் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்’ என்ற உணர்வு ஏற்படுகிறது. விநாயகர் அகவலில் ஆரம்பித்து ‘மனதில் உறுதி வேண்டும்’ வரை எத்தனையோ ‘வேண்டும்’ பாடல்கள். எத்தனை கனவுகள், எத்தனை தவிப்புகள்! ஆனால், இந்தச் சமூகம் அவரது ‘வேண்டும்’ வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கவே இல்லையே. அவரை ‘சீட்டுக்கவி’ எழுத வைக்கிறது. அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாட வைக்கிறது. அவரது வேண்டுகோளுக்கு அவர் வேண்டும் ‘பராசக்தி’யும் செவிசாய்க்கவில்லை. ஒருவேளை இவ்வளவு அழகான வேண்டுகோள்களைக் கேட்கும் வாய்ப்பை இழந்துவிடுவதைப் பற்றிய அச்சத்தில்தான் ‘பராசக்தி’ பாரதியின் ஆசைகளை நிறைவேற்றவில்லையோ?

‘ஒளியும் இருளும்’ என்ற கவிதை பாரதியின் மிகச் சிறந்த கவிதைகளுள் ஒன்று. காதல் தவிர்த்து அவர் எழுதிப் பிரபலமான கவிதைகளெல்லாம் எழுச்சி நிரம்பியவை. வேண்டுகோள் விடுத்தால்கூட அதில் ஒரு கம்பீரம், அதட்டல் இருக்கும், ‘இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ’ என்பதுபோல. ஆனால், இருள் நிரம்பிய நெஞ்சமொன்றின் குமுறலாக இந்தப் பாடல் வெளிப்பட்டிருக்கும்.
‘வான மெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலு மாங்கே
தரையின் மீதுந் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள்மீதும் பரிதியின் சோதி;
மான வன்ற னுளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!’

Tuesday, September 8, 2015

ஒற்றைக் கால் மைனாவும் கரை ஒதுங்கிய குழந்தையும்

                                                              
ஆசை

(‘தி இந்து’ நாளிதழில் 08-09-2015 அன்று வெளியான கட்டுரை)

கரை ஒதுங்கிய பொம்மையைப் போலக் கிடந்த சிரியா குழந்தை அய்லானின் புகைப்படத்தைப் பார்த்தபோது ஒற்றைக் கால் மைனாவின் நினைவு வந்தது.
தெருவொன்றின் திருப்பத்தில் கண்ணில் பட்டது அந்த மைனா. அது தத்தியபோது ஏதோ ஒன்று வித்தியாசமாகத் தெரிந்தது. அதற்கு ஒரே ஒரு கால்தான்! கடந்துசெல்லும்போது இது கண்ணில் பட்டாலும் மனதில் ஓரிரு நொடிகளுக்குப் பிறகுதான் உறைத்தது. அதிர்ந்துபோய், சைக்கிளை நிறுத்திவிட்டுப் பார்த்தால், அந்த மைனா பறந்துபோய்விட்டது. அது நின்ற கோலமும், தத்திய கோலமும் நான்கைந்து நொடிகளுக்கு மேல் பார்வையில் விழுந்திருக்காது எனினும், அசைவுச் சித்திரம்போல் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. ஒரு படச்சுருளைக் கையிலெடுத்துப் பார்ப்பதுபோல் ஒற்றைக்கால் மைனாவின் அந்த நான்கைந்து நொடிகளையும் மனம் எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தது.
வாலில்லாத நாய், காலில்லாத நாய் போன்றவற்றை யெல்லாம் பார்த்ததுண்டு. ஆனால், சுதந்திரமாகச் சுற்றித்திரியும் பறவையொன்று ஒற்றைக் காலுடன் இருப்பதைப் பார்த்தது அதுவே முதல்முறை.
இயற்கையின் மீது தன்னுடைய சோகம் உள்ளிட்ட உணர்வுகளை ஏற்றிச்சொல்லும் அணி ஒன்று யாப்பிலக்கணத்தில் இருக்கிறது. அதுபோன்று, அந்த மைனாவுக்கு இருப்பதாக ஒரு சோகத்தைக் கற்பனை செய்துகொண்ட மனம், அந்த சோகத்தை மைனா மீது ஏற்றிப்பார்த்து வருத்தப்பட ஆரம்பித்தது. உண்மையில் மைனாவுக்குச் சோகம் இருக்குமா இருக்காதா என்று தெரியாவிட்டாலும், அப்படியே மைனா சோகமாக இருந்தால் அதை அறிந்துகொள்ள வழியேதும் இல்லாவிட்டாலும் மைனாவின் நிலையை நினைத்து வருத்தம் மேலிட்டது.
அதற்குப் பிறகு சென்னையில் ஏராளமான ஒற்றைக் கால் காகங்கள் கண்ணில் பட ஆரம்பித்தன.