1.
போரின் சித்திரத்தைத்
தெளிவாக உருவாக்கக்
குளம்படிகளைத் தவிர
வேறெதுவும் இல்லை
சரித்திரத்தின் அடிமரத்தில்
இதோ
ஆணியாய்ப் படிந்துவிட்ட
குளம்படியை
இறந்துபோன அந்த மன்னன்
--ஆம் அவன்தான்
போரை நிர்மாணித்தவன்--
பிடுங்கியெறிய முயல்கிறான்
பிடிவாதமாய்
அவனுக்குத் தெரியாது
அந்தக் குளம்படியின் வேர்
பூமியின் எல்லையைக் கடந்துவிட்டது
2.
அதோ அந்தக்
குளம்புகளற்ற ஏராளமான
குதிரைகள் ஓடுகின்றன
அவற்றுடன்
தீர்மானிக்கப்பட்ட யாவும் அர்த்தமற்று
தலைதெறிக்க ஓடுகின்றன
எதற்குள்ளும் எதுவும்
பொருந்திப்போக முடியவில்லை
தலையற்ற வீரனைக் கொண்டு
போரின் எல்லைவரை சென்ற
குதிரைக்குத்
தன்மேலுள்ள சுமையாலே
போரைப் பற்றிய முடிவுறாக் கற்பனைகள்
கிளர்ந்தெழுகின்றன
அதன் முதுகிலிருந்து
அந்த வீரன்
சரிந்து விழும்வரை
போர் இன்னமும்
நடந்துகொண்டிருப்பதாகவே
எண்ணிக்கொள்கிறது
இறந்து கிடக்கும் யானைகள்
குதிரைகள் வீரர்கள்
மன்னர்களின் ஊடே
அது அலைந்துகொண்டிருக்கிறது
போர் முடிந்துவிட்ட பிறகும்
தன் வீரனுடன் போர் புரிய
எவருமில்லையா?
குதிரைகளைக் காலம்
பரிகசிக்கிறது
3.
சூரியன் மறைகிறது
குதிரைகளுக்கு விடுதலை
தங்கள் தலைகளைச் சரிபார்த்துப்
பொருத்திக்கொள்கிறார்கள் மன்னர்கள்
இளைப்பாறும் குதிரைகள்
குளம்புகளை நக்கிக்கொள்கின்றன
நடக்கவிருக்கும் எல்லாப் போர்களுக்குமாக
பொழுது விடிகிறது
இன்னுமொரு போர்
4.
குளம்படிகளுக்குள் நிகழ்ந்தவையாகக்
கொள்ளப்படுகின்றன
போர்கள்
குளம்படிகள் புலம்புகின்றன
அவற்றால்கூட முடியவில்லை
தங்களை இப்புவியிலிருந்து
--மற்றும் சரித்திரத்திலிருந்து--
விடுவித்துக்கொள்ள
ஒரு சரித்திர ஆசிரியன்
எழுதுகிறான்
‘...ஆண்டில்
குளம்படிகளுக்கிடையே நடந்த போரில்
குளம்படிகள் வென்றன
குளம்படிகள் தோற்றன’
5.
குதிரைகளெல்லாம் முற்றிலும்
தீர்ந்துபோன ஒரு போர்க்களத்தில்
மண்ணில் கெட்டிப்பட்டுப்போன
குளம்படிகள்
மனிதர்களின் பாதங்களை உள்வாங்கி
அவர்களை மாற்றிவருகின்றன
குதிரைகளாய்
பழைய குதிரைகள்
கடிவாளங்கள் காற்றில் பிய்ந்துசெல்லப்
பிடரியைச் சிறகாய்ப் பொருத்திக்கொண்டு
கால்களுக்கெதிராகப் பறந்துவிட்டன
இலவம்பஞ்சைப் போன்று
மண்ணில் பாவாமல்
மிதந்துகொண்டிருக்கும்
அவற்றின் முடிவற்ற கனவுகளை
மீண்டும் ஒரு மன்னன்
தன் பாதி உறக்கத்தில் கண்டு தெளிந்து
தேடிச்செல்கிறான்
போர்களுக்கான குளம்படிகளை
6.
மனித வாடையற்ற
பனிமலையின் அடியில்
உறைந்துபோன குதிரைகள் குளம்புகளற்றுக்
கண்டுபிடிக்கப்பட
அதற்குள் முடிந்துவிட்டது
எல்லாம்
சரித்திரம் குளம்படிகளால் எழுதப்பட்டுக்
காத்திருக்கிறது
குளம்படிகளால் அழிக்கப்படவும்
01-07-2001 (2006-இல் ‘க்ரியா’ வெளியீடாக வெளியான எனது ‘சித்து’ கவிதைத் தொகுப்பிலிருந்து...)
No comments:
Post a Comment