Wednesday, August 24, 2022

இமையத்தின் ‘சாரதா’ கதையும் மகிழ்ச்சிக்கு எதிரான இந்திய சமூகமும்


ஆசை

இமையத்தின் நாவல்கள் அளவுக்கு அவருடைய பல சிறுகதைகள் முக்கியமானவை. சாதியத்தின் நுண்ணடுக்குகள், பசி, ஏழ்மை, ஏழ்மையின் மீது நவீன வாழ்க்கை நடத்தும் தாக்குதல்கள், பெண்களின் – குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் – உலகம், அரசியல், காதல் என்று பல பேசுபொருள்களில் அமைந்தவை இமையத்தின் கதைகள். இவையெல்லாம் தனித்தனியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்திருப்பதுதான் இமையத்தின் கதைகளின் தனிச் சிறப்பு. இந்தியச் சமூகமும் அப்படித்தானே.


இமையத்தின் ‘சாரதா’ கதை 2019-ல் எழுதப்பட்டது. 55 வயது மதிக்கத்தக்க தனவேலுவும் அதே வயதுடைய சாரதாவும் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ரயிலில் சந்தித்துக்கொள்வதுதான் கதை. வழக்கமான அர்த்தத்தில் காதல் கதை என்றோ, பிரிந்த காதலர்கள் முதுமைக் காலத்தில் எதேச்சையாக சந்திப்பதைப் பற்றிய கதை என்றோ, சாத்தியமாகாத காதல் குறித்த நினைவேக்கக் கதை என்றோ இதைக் குறுக்கிவிட முடியாது. ஆனாலும், இது ஒரு காதல் கதைதான். காதல் தொடங்குவதற்கு முன்பே முடிந்துபோன, அல்லது 34 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பரஸ்பரம் தொடங்கிய காதல். இந்தக் காதல் சாத்தியப்படாமல் போனதற்கு அல்லது சிறு அளவிலேனும் முறையான பகிர்தல் 34 ஆண்டுகளுக்குப் பிறகு சாத்தியப்பட்டதற்கு என்னென்ன காரணங்கள் என்று நம்மை யோசிக்க வைக்கும் தளங்களில்தான் இந்தக் கதை மிகச் சிறந்த கதையாகிறது.  


அங்கன்வாடிக்கு மாற்று ஆசிரியராகத் தற்காலிகமாக 1985-ல் தனது ஊருக்கு வரும் சாரதாவைத் தூரத்தில் கண்ட உடனே காதலிக்க ஆரம்பித்துவிடும், முதலாம் ஆண்டு பிஎஸ்சி மாணவர் தனவேலு கவிதையாக எழுதித் தள்ளுகிறார். ‘வெயிலில் நிற்பவனுக்கு வியர்த்து ஒழுகுவதுபோல அவருக்குக் கவிதை வந்தது’   என்று அழகாகச் சொல்கிறார் இமையம். ஒரு வாரத்துக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, காதல் கடிதம் எழுதி, அங்கன்வாடிக்குச் சென்று சாரதாவிடம்கூட கொடுக்காமல் மேசையில் வைத்துவிட்டு ஓடிவந்துவிடுகிறார். அடுத்தடுத்துக் கடிதங்களை அப்படியே வைத்துவிட்டு, சாரதா தரப்பின் எதிர்வினையைப் பற்றி அறிந்துகொள்ளாமல் ஓடிவந்துவிடுகிறார். அந்தக் கடிதங்களின் எதிர்வினைதான் சாரதாவின் கடந்த 34 ஆண்டு வாழ்க்கை என்பதை ரயில் பயணத்தின்போதுதான் தனவேலு (அதிர்ச்சியுடன்) அறிந்துகொள்கிறார். தனவேலு கடிதம் எழுதியதில், சாரதாவின் அழகு தவிர, அவளுக்கு எந்தப் பங்கும் இல்லாமலேயே, அவளுக்கு ஒரு பையனிடமிருந்து காதல் கடிதங்கள் வந்ததாலேயே அவள் தண்டிக்கப்படுகிறாள். 19 வயதிலேயே கல்யாணம். வேலைக்குப் போகாத, பரம்பரைச் சொத்தினைக் குடித்தே அழிக்கும் கணவன். அதனால் சாரதாவின் வாழ்க்கையும் நரகமாகிவிடுகிறது; அவளுடைய பெண்களின் வாழ்க்கையும் அவ்வளவாகச் சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை.  


அந்தக் கடிதங்களை மட்டும் தனவேலு கொடுக்காமல் இருந்திருந்தால் தன் வாழ்க்கையே மாறியிருக்கும் என்கிறாள் சாரதா. “ரெண்டு மூணு வருசம் கழிச்சியிருந்தா நானும் ஒரு வேலையில உள்ள மாப்ளயக் கட்டியிருப்பனில்ல?” என்பதுதான் அவளுடைய ஆதங்கம். அப்படியென்றால் தனவேலு கடிதம் கொடுத்தது தப்பா? தனக்கு ஈர்ப்பு ஏற்பட்ட பெண்ணிடம் தன் காதலை அவர் வெளிப்படுத்த அப்படியொரு வழிமுறையை வெளிப்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்? அவரும் பயந்துபோய்தான் கடிதங்களை வைத்துவிட்டு ஓடிவருகிறார். சாரதாவுக்கும் தொடை வியர்த்துவிடுகிறது. ஒரு ஆண் தனக்கு விருப்பமான பெண்ணிடம் தன் விருப்பத்தைத் தெரிவிப்பதற்கும் அந்த விருப்பத்தை அந்தப் பெண் பெறுவதற்கும் (அவள் ஏற்றுக்கொள்கிறாளோ இல்லையோ) இடையில் எத்தனை கட்டுப்பாடுகள், தடைகள், நியதிகள்? இவை அத்தனையும் பாரம்பரியத்தின் பேரிலும் மதங்கள், சாதிகள் பேரிலும்தான் நம் சமூகம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகள், தடைகள், நியதிகளெல்லாம் அடிப்படையில் மனித மகிழ்ச்சிக்கும் சுதந்திரத்துக்கும் எதிரானவை. தனிநபரின் நியாயமான மகிழ்ச்சிக்கும் சுதந்திரத்துக்கும் முட்டுக்கட்டை போடுவதிலிருந்தே சாதி, இன, நிற பேதங்கள் பிறக்கின்றன என்று கூறலாம். இதன் பலிகடாக்கள் பெண்கள் என்று மட்டுமல்ல, அனைவரும்தான். நம் சமூகத்தில் எந்த ஆண்தான் மகிழ்ச்சியானவனாகவும் சுதந்திரமானவனாகவும் இருந்திருக்கிறான். ஆனால், பிறரின் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் சுதந்திரம் மட்டும் அவனுக்கு இயல்பாக இருக்கிறது.


இந்தியச் சமூகம் முழுவதுமே மகிழ்ச்சிக்கு எதிரானது. கணினி மொழியில் சொல்ல வேண்டுமென்றால் நாம் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருப்பதற்கு புரோகிராம் செய்யப்படாதவர்கள்; பிறரையும் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருப்பதற்கு அனுமதிக்க புரோகிராம் செய்யப்படாதார்கள். இன்னும் சொல்லப்போனால் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் கண்டு அஞ்சி ஒடுங்குபவர்கள். இல்லையென்றால் ஏன் இவ்வளவு சாதிய வன்மம், ஆணவக் கொலைகள், காதலுக்கு முட்டுக்கட்டைகள்?


ஒரு பெண், தனது உடன்பாடு இல்லாமல் திடீரென்று ஒரு ஆணால் காதல் கடிதம் கொடுக்கப்பட்டதால், என்ன ஏதென்று அவள் உணர்ந்துகொள்வதற்குள், எதையும் முடிவெடுக்கப் பக்குவம் இல்லாத வயதில் அவளுக்கு மாபெரும் தண்டனை அளிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட, இப்போது சிறையிலிருந்து வெளிவந்திருக்கும் பேரறிவாளனுக்கு நடந்ததைப் போலதான் சாரதாவுக்கும், அதே 19 வயதில் நடந்திருக்கிறது. பேரறிவாளனுக்கென்று அவரும் அவரது அன்னையும் ஒட்டுமொத்த சமூகமே போராடினார்கள். ஆனால், சாரதாக்கள் போராடுவதில்லை, போராட முடியாத நிலையை எட்டி அதற்குள் உழன்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களால் முடிந்தது அப்பாவி தனவேலுகளை சிறிய குற்றவுணர்வுக்குள் ஆளாக்கியோ, அல்லது சின்னதாக அவர்களைக் காதல் செய்ய முயல்வதோதான். இந்த இரண்டையும் சாரதா இந்தக் கதையில் செய்துவிடுகிறார். மேலும், காதல் என்பது பரஸ்பர உணர்வு, அதை ஒருதலையாகவே வைத்து மூடிவிட்டுப்போன தனவேலுவை இறுதியில் திக்குமுக்காடச் செய்துவிட்டும் போகிறாள்.


நம் தலைக்கு மேல் இவ்வளவு பெரிய பாரம்பரியமும் வரலாறும் தொன்மையும் மதங்களும் சாதிகளும் வர்க்கங்களும் இல்லையென்றால் ஒருவேளை தனவேலு சாரதாவிடம் சென்று “எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. இவையெல்லாம் நான் உன்னை நினைத்து எழுதிய கவிதைகள்” என்று தயங்காமல் சொல்லியிருக்கலாம். அவள் அதை இயல்பாக ஏற்கவோ மறுக்கவோ செய்திருக்கலாம். ஏற்றிருந்தால் அடுத்த நாளே அவர்களுக்குள் உடலுறவுகூட நடந்திருக்கலாம். அதற்கடுத்த நாள் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்து பிரிந்துகூட இருக்கலாம். காதலோ திருமணமே ஆயுள்வரை நீடிக்க வேண்டுமா என்ன?


மேற்கத்திய நாடுகளில் தங்கள் பிள்ளைகள் உடல்ரீதியாக இனப்பெருக்கத் தகுதியை அடையும் பருவத்தில் அவர்களுக்கு ஆணுறைகளும் கர்ப்பத்தடை மாத்திரைகளும் வாங்கித்தருகிறார்கள். அதனால், அவர்களில் பலரும் இளம் வயது கர்ப்பம் என்ற அச்சமின்றி இயல்பாகக் காதலையும் காமத்தையும் அனுபவிக்கிறார்கள் (இவற்றை அனுபவிப்பதில் என்ன தவறு?). ஆனால், இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் அங்கே புலம்பெயர்த்து வாழ்பவர்கள் கூடவே கலாச்சாரம், கௌரவம் போன்றவற்றைத் தூக்கிச்செல்கிறார்கள் அல்லவா, அதனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆணுறைகளும் கர்ப்பத்தடை மாத்திரைகளும் வாங்கித்தரத் தயங்குகின்றனர். இதன் விளைவு அதிகரிக்கும் இளம் வயது கர்ப்பங்கள்.


ஒப்பீட்டளவில் தனவேலுவை விட சாரதா சுதந்திரமானவளாகவும் மகிழ்ச்சிக்கு ஏங்குபவளாகவும் இருக்கிறாள். ஆனால், அவளும் கூட முழுமையாக நம் சமூகத் தளைகளிலிருந்து விடுபட முடியாதவள் என்பதைத்தான், “இந்தக் காலமா இருந்தா மாப்ள என்னா படிச்சிருக்காரு, என்ன வேல பாக்குறாரு, தனியாரா, கவர்மன்டா, சம்பளத்தோட பேங்க் ஸ்டேட்மன்ட் கொடுங்கன்னு கேக்க முடியும். மேட்ரிமோனியல்ல பதிவுசெஞ்சிவச்சி துணிக்கடயில துணிய செலக்ட் பண்ற மாதிரி மாப்ள, பொண்ண செலக்ட் பண்ண முடியும். அந்தக் காலத்தில அப்பா அம்மா சொல்றதுதான? நிலம் எம்மாம் இருக்குன்னு பாத்துதான பொண்ணு கொடுத்தாங்க?” என்ற கூற்றின் மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது. அப்பா பார்க்கும் மாப்பிள்ளைக்குப் பதிலாக மேட்ரிமோனியல் மாப்பிள்ளை. அவ்வளவுதான் வித்தியாசம். அங்கே, காதல் திருமணம் ஒரு தெரிவாக இருக்கவில்லை. தான் அனுபவித்துவரும் வேதனையைப் பொறுத்தவரை அவளுக்குத் தேவையாக இருந்தது காதல் அல்ல, ‘ஒரு லட்ச ரூபாய் சம்பளம்’ வாங்கக்கூடிய அரசு வேலை பார்க்கும் மாப்பிள்ளை. ஏனெனில், அது சாத்தியமாகாததால் அவளுடைய பெண்கள் வரை கஷ்டப்படுகின்றனர். ஆண்கள் பலரும் காதல் அல்லது திருமணம் என்று நின்றுவிட, பெண்களோ தங்கள் அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து கவலைப்பட வேண்டியவர்களாக இருக்கும் சூழலில் காதல் என்பது பெரிதும் தெரிவாக இருப்பதில்லை. இதையெல்லாம் தாண்டியும் மீறலில் முன்னிற்பவர்களாகவும் அவர்களே இருக்கிறார்கள்.


இந்தத் தளங்களுக்கு அப்பாலும் இதை ஒரு அழகான காதல் கதையாக மட்டும் படிக்க முடியும். தனவேலு கொடுத்துப்போன கடிதங்களை சாரதா இதுவரை படித்துப் பார்க்காதது மட்டுமல்ல, கடந்த 34 ஆண்டுகளாக அவற்றைத் தூக்கியெறியாமலும் வைத்திருக்கிறாள். தன்னுடைய இத்தனை ஆண்டு கஷ்டத்துக்குக் காரணமானவை என்பது மட்டுமல்ல, தனக்குக் கொடுக்கப்பட்ட முதலும் கடைசியுமான கடிதங்கள் அவை என்பதும் காரணம். படித்திருந்தால் கிழித்துப்போட்டிருப்பாள். “நான் சாவுறவரைக்கும் கிழிக்கவும் மாட்டன். படிக்கவும் மாட்டன். என்னோட வாழ்க்கய நாசமாக்குன சீட்டுவோதான? நான் சாவுறவரைக்கும் அப்படியே இருக்கட்டும். என்னோட சந்தோஷம் அந்த சீட்டுவோதான். என்னோட நரகமும் அந்த சீட்டுவோதான்” என்பதுதான் அந்தக் கடிதங்களின் இருப்புக்குக்  காரணம்.

‘கல்யாணமாயிட்டா பாக்கக் கூடாதின்னு சட்டமா?’ என்று கேட்டு தனவேலுவை அதிர வைக்கிறாள் சாரதா. ஆம், இங்கே எல்லாவற்றுக்கும் சட்டம் இருக்கிறது. மேலும், ‘நான் எங்க இருக்கன்னாவது விசாரிச்சிருக்கலாம். ஒங்க ஊருக்கும் எங்க ஊருக்கும் இருபது கிலோமீட்டர் தூரம்கூட இருக்காது’ என்கிறாள் சாரதா.


ஒரு சிறிய, துயரமான, கூடவே குதூகலமூட்டும் இந்தக் கதையில் எத்தனையோ அழகான தருணங்களையும் வரிகளையும் இமையம் உருவாக்கிவிடுகிறார். பெரும்பாலான அழகிய கூற்றுகள் சாரதாவுடையதாகவே இருக்கின்றன: ‘”காது, மூக்கு, வாய் மாதிரி மனசும் இருந்தா எந்தத் தொந்தரவும் இருக்காது. மனசுக்கு மட்டும்தான திருப்பி நெனச்சிப்பாக்குற புத்தி இருக்கு” என்று சொன்னாள்’ என்ற வரிகளும் ’“ஒங்களப் பாத்ததில ஒரு கடல் அளவுக்கு சந்தோஷமின்னா, ரெண்டு கடல் அளவுக்குக் கஷ்டம்”’ என்ற வரிகளும் இதற்கு எடுத்துக்காட்டுகள்.

சாரதாவை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று கேட்கும் தனவேலுவிடம் சாரதா இப்படிச் சொல்கிறாள்:

“எதுக்குப் பாக்கணும்? இப்பியே ஏன்டாப்பா பாத்தமின்னுதான் இருக்கு. இதுவே கனவா இருந்தா நல்லா இருந்திருக்கும்.”

***

தனவேல் கைபேசி எண் கேட்கும்போது சாரதா இப்படிச் சொல்கிறாள்:

“ஒங்க சுடுகாடு ஒங்களுக்காகக் காத்திருக்குது. என்னோட சுடுகாடு எனக்காகக் காத்திருக்குது. சட்டியா பானயா மாத்திக்கிறதுக்கு?”

***

இன்னொரு இடத்தில்:

‘அழுது முடித்து ஓய்ந்த மாதிரி முகத்தைத் துடைத்துகொண்ட சாரதா “கூப்பிட்டீங்களா?” என்று கேட்டாள்.

“இல்ல.”

“கூப்பிட்ட மாதிரி இருந்துச்சி.”

அவளுக்கு உண்மையில் வாழ்க்கை முழுவதும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும், யாரோ கூப்பிட்டதுபோல். தனவேலு முதன்முதலில் கூப்பிட்டது (அதாவது, கடிதங்கள் கொடுத்தது) கூப்பிட்டது மாதிரியும் கூப்பிடாதது மாதிரியும்தானே இருந்தது. இறுதிவரை தனவேலு அப்படித்தான். ஆனால், அங்கிருந்து தொடர நினைக்கிறது தனவேலுவின் புத்தி. கைபேசி எண்ணைக் கேட்கிறான். சாரதா தர மறுத்துவிடுகிறாள். அவளைப் பொறுத்தவரை இத்தனை ஆண்டு குமுறலைக் கொட்டுவதற்கு வாய்ப்போ, பழிவாங்கலோ, அல்லது காதலோ எதற்கும் நீடித்த மதிப்பில்லை. அந்தத் தற்காலிகமே போதும்.


காதலையும் அதன் சூழலையும் அனைத்துத் தளங்களிலும் ‘ரொமான்டிக்’ தன்மைகளை உரித்தெடுத்து (Deromanticization) அங்கிருந்து ‘ரொமான்டிக்’கான உணர்வை ஏற்படுத்துகிறார். மலையாளப் படங்களிலே கௌதம் வாசுதேவ் படங்களிலோ வருவதுபோலல்லாமல் நெரிசலான ரயில், தரையில் உட்காரக்கூட இடமில்லாமல் நின்றுகொண்டிருக்கும் சூழல். வெக்கை, வியர்வை வேறு. ரயில் கழிப்பறைக்குப் பக்கத்தில் இருவரும் நிற்கிறார்கள். இருவருக்கும் வயது 50-களில். 34 ஆண்டுகளுக்கு முன்பு ஒல்லியாக இருந்த சாரதா இப்போது பேத்திகள் எடுத்துப் பல மடங்கு பெருத்துவிட்டாள். தனவேலுக்குத் தலையில் முடியை எண்ணிவிடலாம். இருவரும் கடந்த கால வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களைப் பற்றிப் பேசவில்லை. பிளாஷ்பேக்கும் சிறு அளவுக்குத்தான் வருகிறது. ஆனாலும், இந்தக் கதையில் வாசகருக்கு ரொமான்டிக் மனநிலை கிடைக்கிறது. இந்தியச் சமூகமே நெரிசல் சமூகம்தானே. அந்தக் காலத்தில் பத்துப் பிள்ளைகள் நெருக்கியடித்துக்கொண்டு இருக்கும் வீட்டில் முதல் பிள்ளைக்குக் கல்யாணம் ஆனால் அவனுக்கும் பத்துப் பிள்ளைகள் அதே வீட்டில்தானே பிறக்கும். தனிப்பட்ட வெளி (private space) என்பதை அப்படிப்பட்ட நெருக்கியடிக்கும் வீட்டில் மட்டுமல்ல விசாலமான வீடுகள், பொதுவெளிகள் எங்கும் நாம் உருவாக்குவதில்லை. அப்படிப்பட்ட சூழலிலிருந்து ஒரு அழகிய ‘ரொமான்டிக்’ கதையை இமையம் தந்திருக்கிறார்.


தாம்பரத்திலிருந்து கைபேசியில் டைப் செய்துகொண்டிருக்கும் பெண்ணுக்கும் 34 ஆண்டுகளுக்கு முந்தைய சாரதாவுக்கும் எந்த அளவுக்கு வேறுபாடு இருக்கிறது! ஏன் அந்தப் பெண்ணுக்கும் தனவேலுக்குமே எந்த அளவுக்கு வேறுபாடு! இப்படிப்பட்ட நுட்பமான பல இடங்களை இமையம் இந்தக் கதைக்குள் அள்ளித்தருகிறார். தமிழின் மகத்தான காதல் கதைகளில் இதுவும் ஒன்று என்று சந்தேகத்துக்கு இடமின்றிக் கூறிவிடலாம். இன்னும் சொல்லப்போனால் இது ‘காதலைத் தோன்ற விடாத ஒரு சமூகத்தின் கதை’ என்றும் சொல்லிவிடலாம்.

- நன்றி: ‘தலித்’ இதழ் 


1 comment: