Friday, December 18, 2015

உதவி எதிர்பார்க்கிறது காந்தி மையம்!

காயவைக்கப்படும் புதிய நூலின் பிரதிகள்                    வெள்ளம் உண்டாக்கிய சிதிலங்கள்

ஆசை

(‘தி இந்து’ நாளிதழில் 18-12-2015 அன்று வெளியான வேண்டுகோள் கட்டுரை) 

சென்னை வெள்ளம் உயிர்களையும் உடைமைகளையும் மட்டும் சூறையாடிக்கொண்டுச் செல்லவில்லை; ஏராளமான அறிவுச் செல்வங்களையும் கொண்டு சென்றிருக்கிறது. ஈடுசெய்ய முடியாத இந்த இழப்புகளில் காந்தி கல்வி மைய நூல்கள், ஆவணங்கள், உடைமைகள் முக்கியமானவை.
காந்தி கல்வி மையம்!
சென்னையில் மட்டும் அல்ல; தமிழகத்தில் காந்தியர்களின் முக்கியமான அறிவு மையங்களில் ஒன்று காந்தி கல்வி மையம். அரசின் உதவியின்றி காந்திய அன்பர்களின் நன்கொடை உதவியை மட்டுமே கொண்டு செயல்படும் பல்வேறு காந்திய மையங்களில் இதுவும் ஒன்று. காந்தியச் சிந்தனைகளை எல்லோரிடமும் கொண்டுசேர்க்கும் பல்வேறு முயற்சிகளையும் இந்தக் கல்வி மையம் அமைதியாக மேற்கொண்டுவருகிறது.
தமிழகப் பள்ளி மாணவர்களிடையே காந்தியக் கல்வியைக் கொண்டுசெல்வது முதல் முதுநிலை ஆய்வுப் படிப்புகள் வரை இங்கு உண்டு. தமிழகத்தின் முன்னாள் தேர்தல் அதிகாரிகள் நரேஷ் குப்தா, டி.கே. ஓஜா போன்றோர் இங்கே காந்தியச் சிந்தனையில் முதுநிலைப் படிப்பை முடித்தவர்களில் சமீபத்திய முக்கியஸ்தர்கள். மேலும், கணக்கில்லா ஆய்வு மாணவர்கள், ஆய்வாளர்கள் இந்த மையத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மையத்தின் பொக்கிஷம்
சென்னை காந்தி கல்வி மையத்தின் மிகச் சிறப்பான பொக்கிஷம் இங்கிருந்த நூலகம். காந்தி எழுதிய நூல்கள், காந்தியைப் பற்றிய நூல்கள், காந்தியுடன் தொடர்புள்ள நூல்கள் என்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட அரிய களஞ்சியம் அது. சுதந்திரப் போராட்ட வீரர் டி.டி. திருமலை தன்னிடம் இருந்த காந்தி குறித்த புத்தகங்களைக் கொண்டு 1978-ல் தொடங்கிய இந்த மையம், 1986-ல் தி நகர் தக்கர் பாபா வித்யாலயா வளாகத்துக்கு வந்தது. சமீபத்திய வெள்ளம் அதைச் சர்வநாசம் ஆக்கிவிட்டது.
காந்தி அன்பர்கள் தங்களிடம் இருந்த அரிய புத்தகத் தொகுப்புகளையும் ஆவணங்களையும் வழங்க, காந்தி கல்வி மையத்தின் நூலகம் விரிவடைந்தது. நூல்கள் மட்டுமல்ல, காந்தி நடத்திய ‘யங் இந்தியா’ (1919-1932), ‘ஹரிஜன்’ (1933-1948) பத்திரிகைகளின் பிரதிகளும் இந்த மையத்தின் பொக்கிஷ சேகரங்கள். யாவும் அழிந்துவிட்டன. கிருஷ்ணா கிருபளானி, தான் எழுதிய ‘காந்தி: எ லைஃப்’ என்ற நூலின் ஒரு பிரதியைக் கையெழுத்திட்டு ராஜாஜிக்கு வழங்கியிருந்தார்.
இந்த நூலகத்தில் இருந்த அந்தப் பிரதியும் போய்விட்டது. தான் பெற்ற பிள்ளைகளைவிட தனக்கு முக்கியமானவர் என்று காந்தி குறிப்பிட்ட ‘மகாதேவ் தேசாயின் நாட்குறிப்புகளின் தொகுப்பு’நூலும் மழையில் அழிந்தது பெரிய இழப்பு. ராஜாஜிக்கு மவுன்ட்பேட்டனின் பேத்தி கையெழுத்திட்டுக் கொடுத்த புத்தகம், லண்டனில் காந்தி தங்கியிருந்தகிங்ஸ்லி ஹாலின் மூரியல் லெஸ்டர் கையெழுத்திட்டுக் கொடுத்த புத்தகம் என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு புத்தகம்கூட மிஞ்சவில்லை. புத்தகங்கள் மட்டுமல்ல, முக்கியமான ஆவணங்களும் முற்றிலும் நாசமாயின. 1927-ல் திருச்சிக்கு காந்தி வந்திருந்தபோது அங்கே தொடங்கப்பட்ட ‘யங் மென் இந்தியன் அசோசியேஷன்’ (ஒய்.எம்.ஐ.ஏ) என்ற அமைப்பின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டிருந்தார். இந்த வெள்ளத்தில் உயிர்விட்ட அரிய ஆவணங்களில் அதுவும் ஒன்று. காந்தியின் அரிய புகைப்படங்களும் இதில் உள்ளடங்கும். மேலும், பொருளாதாரரீதியாகவும் பெரும் இழப்புகளைச் சந்தித்திருக்கிறது காந்தி கல்வி மையம்.


எப்படி மறுசீரமைப்பது?
பேரழிவுக்குள்ளான காந்தி கல்வி மையத்தை மறுசீரமைப்பதற்கான காந்தியர்களின் ஆலோசனைக் கூட்டம் ஓரிரு நாட்களுக்கு முன் நடந்தது. “நாடு முழுவதும் உள்ள காந்தி தொடர்பான அமைப்புகள், நூலகங்கள் போன்றவற்றிடமிருந்து காந்திய நூல்களைக் கேட்டுப்பெறுவது; காந்திய அன்பர்கள், பொதுமக்கள் போன்றோர் தங்களுடைய புத்தகங்களை மையத்துக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்வது; முக்கியமாக, இனியொரு முறை இதுபோன்ற அழிவு ஏற்படுவதைத் தவிர்க்க பாதுகாப்பான வகையில் புதிய கட்டிடம் ஒன்று கட்டுவது” எனும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
                                  காந்தி கல்வி மையத்தைப் புனருத்தாரணம் செய்வது குறித்து நடைபெற்ற கூட்டம்  
தேவை உதவும் கைகள்!
இப்படியாகப் புதிய கட்டிடம், புத்தகங்கள், அறைக்கலன்கள், நூல்களை மின்நூல்களாக ஆக்கு வதற்கான தொழில்நுட்பப் பணிகள், பணியாளர்கள் போன்றவற்றுக்கான நிதியைத் திரட்டும் பணி அத்தனை எளிதானது அல்ல.
இந்தியாவின் ஒவ்வொரு சந்தோஷத்தின்போதும் ஒவ்வொரு இன்னலின்போதும் காந்தியை நினைவு கூருகிறோம். எப்போதையும்விட இப்போது காந்தி நமக்கு அதிகம் தேவைப்படுகிறார் என்றால், இளைய தலைமுறையிடம் நாம் காந்தியக் கல்வியை எடுத்துச் செல்வது முக்கியம்; அதற்கு இன்னமும் மிச்சமிருக்கும் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய காந்திய அமைப்புகள் தொடர்ந்து உயிரோடிருப்பது முக்கியம். அதற்கு அவை மூச்சுத்திணறும்போதெல்லாம் நாம் அவற்றுக்கு உதவுவது முக்கியம்!
புத்தகங்களையும் நிதியையும் வழங்குவதற்குத் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: ஒருங்கிணைப்பாளர், காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம், 58, வெங்கட் நாராயணா சாலை, தி நகர், சென்னை 17. செல்பேசி: 99529 52686 . நன்கொடை செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு: Gandhi Study Centre, A/C No. : 303501010001140, IFSC : VIJB0003035, MICR : 600029015 (நன் கொடைக்கு 80G வருமான வரி விலக்கு உண்டு).
  -நன்றி: ‘தி இந்து’
-‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/V91Tl7

1 comment:

  1. உரிய நேரத்தில் சரியான வேண்டுகோள். நன்றி. நல்ல முயற்சிக்கு அனைவரும் கைகொடுப்போம்.

    ReplyDelete