Sunday, January 14, 2024

தட்டொளி உடைந்த மார்கழி

 

மார்கழியின்
கடைசி நாளன்று
மன்னார்குடி வந்திருக்கிறேன்
பிராயத்தில்
தவறவிட்ட
மார்கழிப் பெண்டிரை
அவர்தம்
கோலப்பொடி கையுடனும்
தாவணிகளுடனும்
காலடிவிரி
கோலங்களுடனும்
காண வந்திருக்கிறேன்
ராஜகோபாலசுவாமியின்
திருவில்லம்சூழ்
நான்கு திருவீதிகளிலும்
தெப்பக்குளத்தின்
நான்கு கரைகளிலும்
அக்கிரகாரங்கள்
ஆவிகளாய்த்
திரிந்துகொண்டிருக்கும்
அனைத்து வீதிகளிலும்
அலைந்து திரிந்து
பார்த்துவிட்டேன்
திரைமூடிய
மார்கழித் தரையில்
புள்ளிகளாய்
முன்பு தோன்றிய
கோதைகள்
எங்கே
அவர்தம்
பூசணிப்பூம் பாதமெங்கே
பூசணிப்பூக்களைச்
சூழ்ந்து கோலமாக்கும்
மார்கழியின் கூவுகுயில்கள்
எங்கே
பங்குனியில் நின்றுகொண்டு
இன்னும் மார்கழியில்
கோலம் போடும்
பேரிளம்பெண்டிரே
நான் இப்போது
மாசியில் நிற்கிறேன்
மன்னார்குடி
அங்கேதான் இருக்கிறது
திருவீதிகளும்
அங்கேதான்
இருக்கின்றன
மார்கழிப் பெண்டிரும்
அங்கேதான்
இருக்கிறார்கள்
மார்கழியும்
அங்கேதான்
இருக்கிறது
ஆனால்
அது எப்போதும்
ஒரே மார்கழியாக
இருப்பதில்லை
அதுதான்
அவர்களைப்
பங்குனியிலும்
என்னை மாசியிலும்
கொண்டுவந்து நிறுத்தி
அதனை வேடிக்கை
பார்க்க வைத்திருக்கிறது.
-ஆசை

No comments:

Post a Comment