Monday, January 15, 2024

ஒளிசெய் கோ


ஓவியம்: வான்கா

குடும்பத் தலைவனுக்கு முதல் வணக்கத்துடன் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துகள்!
**

ஒளிசெய் கோவே
ஒளிசெய் கோவே
நீ வடித்த ஒளி
குடித்த விழி
உனைப் பொற்கலமாக்கும்

விழிசெய் கோவே
விழிசெய் கோவே
உன் பொற்கலமிட்டு
தகிப்புச் சுடர்
கலந்தினிக்குமொரு
மதுவாக்கு எனை
எனையருந்தியொரு
மொழி பிறக்கட்டும்

மொழிசெய் கோவே 
மொழிசெய் கோவே
நாவிலிட்ட தீத்துண்டமுனைத்
தாளாமல் நா தத்தளிக்க
அத்தத்தளிப்பில்
நீ தாவித் தாளமிட
தோன்றுமொரு 
மொழி தா என் கவிக்கு

கவிசெய் கோவே
கவிசெய் கோவே
உன்செஞ்சுடர்
தடவிக்கொடுக்க
ஆசையுற்று
தணல்கொண்டு
தடுமாறித் தலைவிரித்தாடும்
செம்மேகமாக்கு என்கவியை
எரியும் அம்மேகத்திடையிருந்தே
எப்போதும்
எட்டிப்பார்
என்கவியில்
       -ஆசை, குவாண்டம் செல்ஃபி (2021) கவிதைத் தொகுப்பிலிருந்து...

No comments:

Post a Comment