Wednesday, January 31, 2024

பத்துக் குகைகள்


ராவணேசுவரனுக்கு
மொத்தம்
பத்துக் குகைகள்
போயொளிய
தோதான இடங்கள்

ஒன்றொன்றாயும்
ஒளிந்தான்
அனைத்திலும்
ஒரே சமயம்
ஒளிந்தான்

தேடிவரும் அஸ்திரமெல்லாம்
இன்றுபோய்
நாளை வந்தன

எந்தக் குகை
ராவணக் குகையென்று
அறியவில்லை ஏதும்
எந்த அஸ்திரத்தில்
ராமன் ஒளிந்திருக்கிறான்
என்பதையறிவான்
ராவணேச்வரன்

போக்கெல்லாம்
அதுவரையே
காட்ட முடியும்

எடுத்தான்
விடுத்தான் ராமன்
ஒளிவில்
வெளிப்பட்டுத்
தடுத்தான்
படுத்தான்
ராவணன்

குகையும்
அஸ்திரமும்
பரஸ்பரம்
மிகச் சரியாய்
அறிந்தன

அவ்வறிதலே
பிரம்மாஸ்திரம்
               -ஆசை

No comments:

Post a Comment