Friday, November 10, 2023

நான் வெறுங்கையால் பறப்பது உங்களுக்கு வியப்பில்லையா



ஏரிக் கரை மீதமர்ந்த சாலைக்கு
இணையாக
விசைப் படகு செலுத்தினான்
அவன்

அவனைப் பார்த்து
எழுந்து இரு கைகளையும் அசைத்துப்
பறக்க ஆரம்பித்து
அந்தரம் சென்று
அதன் பின் 
தரைமனிதர்களை
மனம்நிறை செருக்குடன்
ஒரு நோட்டம் விட்டேன்

யாரும் கண்டுகொள்ளவில்லை
என்னை

ஒரு மனிதன்
வெறுங்கைகள் வீசிப் பறப்பதொன்றும்
வியப்புக்குரிய நிகழ்வில்லையா
என்பதுதான்
எனக்கு வியப்பு

அவன் 
அப்படியில்லை
படகு செலுத்திக்கொண்டே
தலைநிமிர்த்தி
ஆம் தலைநிமிர்த்தி
என்னைப் பார்த்தான்
அவன் புன்னகை 
இவ்வளவு உயரத்திலிருந்தும் 
தெரிகிறது

நான் பறப்பது தெரிகிறதா
என்று கூவிக் கேட்டேன்
தலையாட்டினான்

எனக்காக ஒன்று செய்ய முடியுமா
நான் பறப்பது 
இவர்களுக்குத் தெரியவில்லை

இன்னும் சொல்லப்போனால்
இவர்களுக்குத் தெரியாததாலோ
அல்லது
இவர்கள் பொருட்படுத்தாதாலோ
நான் பறக்கிறேன்
என்பது குறித்து
எனக்கே ஐயம் ஏற்படுகிறது

உன் கைபேசியில்
என் பறத்தலைப்
படம் பிடிக்கிறாயா
என்று கேட்டதற்கு
மறுப்பேதும் பேசாமல்
புன்னகை மாறாமல்
ஒரு கையால் படகு செலுத்திக்கொண்டு
இன்னொரு கையால் 
கைபேசியில்
படமெடுக்க ஆரம்பித்தான்

அவன் படமெடுக்கிறான் என்ற
மகிழ்ச்சியே
மிச்ச தொலைவின் பறத்தலுக்குக்
கையசைக்கும் தேவையை
இல்லாமலாக்கியது

ஆழ்போலிக் காலத்தில்
இப்படத்தை 
என் பறத்தலை 
யார் வேண்டுமானாலும் மறுக்கலாம்
ஆனால் என்னால் இனி 
மறுக்க முடியாது
அதற்குத்தான் இந்தப் படம்

அவனுக்கு முன்பே ஏரியைத் 
தாண்டிவிட்டேன்

மகிழ்ச்சியிடமிருந்து
என்னை விடுவித்துக்கொண்டு
என் பறத்தலை
அதில் மட்டும் இருக்கும்
என் இருத்தலை
மெய்ப்பிக்க மட்டும் காத்திருக்கும்
தரைக்கு வந்த பிறகு
அவன் என்னிடம் வந்து
கைபேசி தந்தான்

படத்தை ஓட விட்டபோது
தொடக்கத்தில்
கோணச் சமனின்மையில்
ஆடிய காட்சிகள்
பிறகு நிலைபெற்றன
ஒரு தவக்களையின் மீது

தரையில் உள்ள
தவக்களையின் மீது

அது தவ்வித் தவ்வி
ஒரே இடத்தில்
குதித்துக்கொண்டிருந்தது

அதன் பின்
முழுப் படமும் அதேதான்

நான்
நான்
நான் எங்கே

நாக்குழறி
தடுமாறித் தடுமாறிக் கேட்டேன்
அவனிடம்

நீதான்
அது என்றான் அவன்

நான் தவக்களை அல்லவே
மேலும்
நான் பறந்தேனே
நீயும் ஒப்புக்கொண்டாயே
என்று கேட்டதற்கு

ஆமாம் நீ தவக்களை அல்லதான்
மேலும்
நீ பறந்தாய்தான்
நானும் ஒப்புக்கொண்டேன்தான்
என்றான்

அப்படியென்றால்
இதில்
இதில்
இதில்
தவக்களையல்லவா
இருக்கிறது
விடாமல் தவ்வித் தவ்விக் குதிக்கிறது
என்று கேட்டதற்கு

நீ உன்னை நம்புகிறாயா
என்னை நம்புகிறாயா
இந்தத் தவக்களையை நம்புகிறாயா
என்று திருப்பிக் கேட்டான்
           - ஆசை
           - நன்றி: ‘காலா பாணி’ வலைத்தொடருக்கு  

No comments:

Post a Comment