Saturday, May 20, 2023

‘க்ரியா’ 50!

 


ஆசை

தமிழின் மிகச் சிறந்த முன்னோடிப் பதிப்பகங்களில் ஒன்றான ‘க்ரியா’வின் 50-ம் ஆண்டு இன்று தொடங்குகிறது. பத்தாண்டு காலம் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் அவர்களுடன் பக்கத்தில் இருந்து பணிபுரிந்தும், அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகள், பிந்தைய பத்தாண்டுகள் எல்லாம் சேர்த்து 22 ஆண்டுகாலம் அவருடைய நட்பில் இருந்தும் நான் கற்றதும் பெற்றதும் ஏராளம். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’, ‘டாக்டர் இல்லாத இடத்தில்’, தமிழின் தொன்மையை நிறுவுவதற்கு உதவும் நூல்களுள் ஒன்றான ஐராவதம் மகாதேவன் அவர்களின் ‘Early Tamil Epigraphy' (க்ரியாவின் இணை பதிப்பாளர் ஹார்வர்டு பல்கலைக்கழகம்) போன்ற நூல்களும் இலக்கிய நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவையும் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் ‘க்ரியா’வின் பெரும் பங்களிப்புகள். புத்தக உருவாக்கம், கண்ணில் ஒற்றிக்கொள்ளக்கூடிய நேர்த்தி, எடிட்டிங் போன்றவற்றில் உலகத் தரத்தைக் கொண்டுவந்தவர் க்ரியா ராமகிருஷ்ணன். தனக்கு முன்னோடியாகத் தமிழில் வாசகர் வட்டம் லெட்சுமி கிருஷ்ணமூர்த்தியை க்ரியா ராமகிருஷ்ணன் கூறுவார்.

பதிப்பு மட்டுமல்லாமல் கூத்துப்பட்டறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், மொழி அறக்கட்டளை போன்றவற்றின் உருவாக்கத்திலும் ராமகிருஷ்ணனுக்கும் க்ரியாவுக்கும் பெரும் பங்குண்டு. புரிசை கண்ணப்ப தம்பிரானின் தெருக்கூத்துக் குழுவின் சென்னை முகவரியாகவும் க்ரியா சில காலம் இருந்திருக்கிறது. ராயப்பேட்டையில் க்ரியா இருந்த காலங்களில் தமிழ் நவீன ஓவிய இயக்கத்துக்கு முக்கியப் பங்களித்திருக்கிறது.  ஓவியர்கள் ஆதிமூலம்,  ஆர்.பி.பாஸ்கரன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோருடன் க்ரியா இணைந்து செயல்பட்டிருக்கிறது. அநேகமாக ட்ராட்ஸ்கி மருதுவின் முதல் ஓவியக் கண்காட்சி க்ரியாவில் நடந்தது என்று நினைக்கிறேன். ஜோசப் ஜேம்ஸ், ஆர்.பி. பாஸ்கரன் உள்ளிட்டோரின் உதவியுடன் நவீன ஓவியங்கள் பற்றிய அறிமுகத்தை க்ரியா பல கல்லூரிகளுக்கும் எடுத்துச் சென்றது. மேலும், அச்சுதன் கூடலூர், எஸ்.என். வெங்கட்ராமன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஓவியர்களும் கலைஞர்களும் க்ரியாவுடன் நெருக்கமாகச் செயல்பட்டிருக்கிறார்கள். 

1974-ல் க்ரியா ராமகிருஷ்ணனும் அவரது நண்பர் ஜெயாவும் பெருங்கனவுடன்  க்ரியா பதிப்பகத்தைத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில், இடைக்காலத்தில், பின்னாளில், அல்லது நெடுங்காலம் என்று வெவ்வேறு வகையில் கவிஞர் சி.மணி, சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், பேராசிரியர் சிவராமன், ரமணி, சங்கரலிங்கம், கி.அ. சச்சிதானந்தம், இ.அண்ணாமலை, அ. தாமோதரன், தங்க. ஜெயராமன், பா.ரா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்குதாரர்களாகவோ பக்கபலமாகவோ இருந்திருக்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்களான பத்மநாப ஐயர், மு.நித்தியானந்தன் உள்ளிட்டோரும், டேவிட் ஷுல்மன் போன்ற சர்வதேச அறிஞர்களும் க்ரியாவின் முக்கியமான நண்பர்கள். சா. கந்தசாமி, ந.முத்துசாமி, சுந்தர ராமசாமி, ந.பிச்சமூர்த்தி, மௌனி, ஜி.நாகராஜன், அசோகமித்திரன், சார்வாகன் உள்ளிட்ட ஆளுமைகளில் தொடங்கி சமகால இலக்கியத்திலும் அறிவுத் துறையிலும் பெரும் பங்களிப்பு செய்துவரும் எஸ்.வி.ராஜதுரை, தியடோர் பாஸ்கரன், பூமணி, இராசேந்திர சோழன், திலீப் குமார், இமையம் உட்பட பலருடைய எழுத்தியக்கத்துக்கும் க்ரியா உறுதுணையாக இருந்திருக்கிறது.  

கோபி கிருஷ்ணன், திலீப் குமார், சி.மோகன், பிரபஞ்சன், வண்ணநிலவன் உள்ளிட்ட முக்கியமான எழுத்தாளர்களும் க்ரியாவில் பணியாற்றியிருக்கிறார்கள். ஈழத் தமிழர்களின் நூல்களை தமிழ்நாட்டில் முதலில் வெளியிட்ட பதிப்பகங்களுள் க்ரியாவும் ஒன்று. வெ.ஸ்ரீராம், ஏ.வி. தனுஷ்கோடி உள்ளிட்டோரின் மொழிபெயர்ப்பில் பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலிருந்து க்ரியா வெளியிட்ட நேரடி மொழிபெயர்ப்புகள் அசாத்திய உழைப்பினாலும் அக்கறையினாலும் திறமையினாலும் உருவானவை என்பதை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். இலக்கியம், அகராதி, கல்வெட்டியல், சுற்றுச்சூழல், மருத்துவம், விவசாயம், தத்துவம், மார்க்சியம், வரலாறு உள்ளிட்ட பரந்துபட்ட அளவில் க்ரியாவின் பங்களிப்பு விரிகிறது.  க்ரியா வெளியிட்ட ‘இந்தியாவில் சுற்றுச்சூழல்’ (1986) என்ற நூல் தமிழில் வெளிவந்த முதல் சுற்றுச்சூழல் நூல்களுள் ஒன்று. அணுசக்தியின் ஆபத்து பற்றிப் பேசும் ஜோஷ் வண்டேலுவின் நாவலின் மொழிபெயர்ப்பை 1992-ம் ஆண்டிலேயே ‘அபாயம்’ என்ற தலைப்பில் க்ரியா வெளியிட்டது .

திறன், அறிவு போன்றவற்றைத் தவிர க்ரியாவில் நான் கற்றுக்கொண்டவற்றுள் பிரதானமானது வாழ்க்கை சார்ந்த விழுமியங்கள். கடினம் என்றாலும் அவற்றைப் பின்பற்றுவதற்கு மிகவும் முயன்றுகொண்டிருக்கிறேன். ‘க்ரியா’ 50-வது ஆண்டில் கால் பதிக்கும் இந்நாளில் க்ரியா ராமகிருஷ்ணன் இருந்திருக்க வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது. அவர் என்றும் என்னுடன் இருப்பார் என்ற நினைப்பிலேயே இருந்துவிட்ட எனக்கு அவருடைய மரணம் என் தந்தையின் மரணம் போல பெரும் அதிர்ச்சியையும் வெற்றிடத்தையும் ஏற்படுத்திவிட்டது. வழிகாட்டல் பெறவும், புரிதலுடன் கூடிய அன்பைப் பெறவும், இன்னும் இன்னும் கற்றுக்கொள்ளவும், கருத்துவேறுபாடுகளை முன்னிட்டு நான் சண்டை போடவும் இன்று அவர் இல்லை. வாழ்க்கை அப்படித்தான், அவரிடமிருந்து பெற்றதைச் சிறிதாவது நல்ல முறையில் செலவிடுவதுதான் அவருக்கும் க்ரியாவுக்கும் நான் செலுத்தும் நன்றிக்கடன்.

50 ஆண்டுகளில் சற்றேறக்குறைய 150 புத்தகங்கள்தான் ‘க்ரியா’ வெளியிட்டிருக்கும். அவற்றுள் உள்ளடக்கம், தயாரிப்பு எல்லாவற்றிலும் மிகவும் பிடித்த ஒரே ஒரு புத்தகத்தைச் சொல்லச் சொன்னால் எந்தப் புத்தகத்தைச் சொல்வீர்கள் என்று ஒரு முறை க்ரியா ராமகிருஷ்ணனிடம் கேட்டேன். தயங்காமல் சொன்னார், ‘சி. மணி மொழிபெயர்த்த சீன ஞானி லாவோ ட்சுவின் தாவோ தே  ஜிங்’ என்று. என்னுடைய தெரிவும் அதுவே. நான் படித்த ஞான நூல்களுள் முதல் இடத்தில் அதனையே வைப்பேன்.   

‘க்ரியா’ பதிப்பகத்துக்கும், (இப்போது நம்மிடையே இல்லையென்றாலும்) ‘க்ரியா’ ராமகிருஷ்ணனுக்கும் அவருடன் பங்களிப்பு செய்திருப்பவர்களுக்கும் வாழ்த்துகளும் அன்பும் நன்றியும்! 

1 comment:

  1. க்ரியாவின் பணிகளை செய்து தமிழுலகத்தில் க்ரியாவிற்கான தனித்த இடத்தை அளித்துச் சென்றுள்ளார் ஐயா ராமகிருஷ்ணன் அவர்கள். க்ரியா அகராதியை அரசுப்பள்ளி மாணவர்கள் சிறப்பாகப் பயன்படுத்தவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். க்ரியாவின் பயணம் இன்னும் பல நூற்றாண்டு தொடர் மனமார்ந்த வாழ்த்துகள் 🎉🎉.சிறப்பான கட்டுரையைத் தந்த ஆசை அவர்களுக்கு அன்பு வாழ்த்துகள் 🎉🎉

    ReplyDelete