Monday, June 21, 2021

காலம்: மகிழின் மூன்று கவிதைகள்

 


நான் இரண்டு நாட்களுக்கு முன்பு கிண்டிலில் Carlo Rovelliயின் The Order of Time புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது மகிழ் என்னிடம் அது எதைப் பற்றியது என்று கேட்டான். காலத்தைப் பற்றியது என்று சொன்னேன். காலம் என்றால் என்ன என்று கேட்டான். நான் ‘நேற்று, இன்று, நாளை’ என்றரீதியில் காலத்தைப் பற்றி விளக்க முயன்றேன். முடியவில்லை. எவ்வளவுதான் காலத்தைப் பற்றிப் படித்தாலும் அதை விளக்குவது ரொம்பவும் கடினம் என்பதை உணர்ந்தேன். நீயே உனக்குப் பிடித்த மாதிரி விளக்கிக்கொள் என்று சொல்லிவிட்டேன். உன் கவிதை வழியாக அதைச் செய்யலாம் என்றேன்.  அதை அடுத்து அவன் எழுதிய மூன்று கவிதைகள். 


காலம்-1


நான் காலத்தில் மிதந்தேன்

காலத்தை
என் கண்ணுக்குள் தெரிய வைத்தேன்

காலம் என் கனவைத் தூக்கிக்
கடலில் போட்டது

நேற்று இருந்த காலம்
இன்னைக்கு இருக்குமா

இருக்கும்
காலம் என்னிடம் சொன்னது

காலம் என்னைக்
காலத்தின் முடிவுக்குக்
கூட்டிட்டுப் போனது


அங்கே
வானத்தின் முடிவு
கீழே இறங்கியது

--


காலம்-2

காலம் என்றால் என்ன

அது ஒரு பூ

அந்தப் பூவுக்குள்
ஒரு உலகம் இருக்கிறது

--


காலம்-3

காலத்தை என் கை மூலம்
நான் நிறுத்திவைத்தேன்

காலம் என்னிடம்
பூமியின் கனவைச் சொன்னது

நான் காலத்தை
இல்லாமல் ஆக்கினேன்

நான் காலத்தின் சிலையைக்
கட்டினேன்

நான் காலத்தைத்
திருப்பி ஓடவைத்தேன்

---

இது அவனது தொகுப்பில் இடம்பெற்ற காலக் கவிதை:

காலம்: 0

காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்
காலத்தில் பறப்பான்
காலத்தை நேரில் பார்ப்பான்
காலத்தைக் கற்பனை பண்ணிப்பான்

 


No comments:

Post a Comment