Friday, November 3, 2023

நாயகனுக்குக் கண்டிப்பா ஆஸ்கார் கொடுத்திருக்கணுங்க (கேசட்டுக் கடை கவிதைகள்)



மழையில நனைஞ்சுகிட்டே
நானும் சித்தியும்
தஞ்சாவூர் விஜயா தியேட்டர்ல
நுழைஞ்சப்போ
சரியா
நான் அடிச்சா நீ செத்துருவே’ன்னு
பிரதீப் சக்திகிட்ட கமல்
வசனம் பேசுற சீனு
அது என்னைப் பாத்து
சொன்ன மாதிரி இருந்ததால
ரொம்பவே பயந்துட்டேன்
அதுனாலதான்
இன்னை வரைக்கும் கமலை
நேரில பார்க்கவே இல்லை
ஒருதடவ கூப்புட்டு அனுப்புனாரு
இலக்கியவாதிய சினிமாக்காரங்கதான்
வந்து சந்திக்கணும்’னு
தெனாவட்டா சொல்லிட்டேன்
அப்புறம் அதை எல்லாருக்கும் சொல்லிட்டேன்
அவரை சந்திக்கக் கூடாதுன்னுலாம்
எந்த வைராக்கியமும் இல்லீங்க
ரஜினி விஜய் கூப்புட்டா
ஓடோடிப் போய் நிப்பேன்
ஆனா
கமல் பேசுன அந்த வசனம்தான்
இன்னைக்கு வரைக்கும்
என்னைத் தடுக்குது
அது இருக்கட்டும்
கமல் ரசிகனா
எனக்குப் பெரிய வருத்தம் என்னன்னா
நாயகனுக்கு
ஆஸ்கார் குடுக்கலங்குறதுதான்
போலீஸ்காரரான பிரதீப் சக்தி
செத்த பிறகு அவரோட துப்பாக்கியை
காவல் துறை வாங்கியிருக்கும்னும்
அந்தத் துப்பாக்கியை வைச்சுப்
பின்னாடி அவரோட பையன் டினு ஆனந்த்
கமலை சுடுற மாதிரி காமிச்சதால
லாஜிக்கல் மிஸ்டேக்குன்னு சொல்லி
ஆஸ்கார் கொடுக்கலன்னும்
எங்க தெரு பாலா அண்ணன்
சொன்னாங்க
அப்புறம் தேவர் மகன்ல
வயல்ல செருப்பு போட்டு நடக்குற மாதிரி
ஒரு சீனு வச்சதால
அதுக்கும் கெடைக்கலன்னு
அந்த அண்ணன் சொன்னாங்க
இப்படி வாழ்க்கையில்
எத்தனையோ கமல் படங்கள் வர்றப்பல்லாம்
அடுத்த வருஷம்
ஆஸ்கார் வாங்கும் ஆஸ்கார் வாங்கும்னு
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாந்திருக்கேன்
ஹே ராம் படத்துல
ராணி முகர்ஜி புட்டத்தை
கமல் கடிக்கிற சீனப் பாத்து
உறுதியா நம்புனேன்
அடுத்த வருஷம்
ஹே ராமுக்குத்தான் ஆஸ்காருன்னு
அப்பவும் கிடைக்கல
என்ன பண்ணுனாதான்
கொடுப்பாய்ங்கன்னு தெரியலை
ஒருநாள் இல்லன்னா ஒருநாள் பாருங்கடா
கமல் தன்னோட புட்டத்த
தானே கடிக்கிற மாதிரி ஒரு சீனு எடுப்பாரு
அந்தப் படத்துக்கு
நீங்க கண்டிப்பா
ஆஸ்கார் கொடுக்கத்தான் போறீங்க
அப்போ மேடையில ஏறி
ஐயாம் த கிங் ஆஃப் த வேர்ல்டு
எல்லாப் புகழும் இறைவனுக்கே’ங்கிற மாதிரி
கமலும்நான் அடிச்சா நீங்கல்லாம்
செத்துடுவீங்கடா’ன்னு
வசனம் பேசணும்
அதான் என்னோட ஆசை

          -ஆசை

1 comment: