Wednesday, November 1, 2023

நீ பார்த்த பார்வையின் குடல் (கேசட்டுக் கடை கவிதைகள்)

  


என் பிள்ளைகளைப்
பொறுத்தவரை
கொடுத்துவச்சவன் நான்
அப்பா கேசட்டுக் கடை வைக்கப்போறேன்னு
சொன்னதும்
ங்கொப்பன் ஒங்களையெல்லாம்
நடுத்தெருவுல நிக்கவைக்கிறதுக்குத்தான்
இந்தக் கங்காச்சில்லாம் பண்ணப்போறான்’னு
அவனுங்க ஆத்தா வச்ச ஒப்பாரியையெல்லாம்
காதுல வாங்காம
ஐய்யா ஜாலி ஐய்யா ஜாலி”ன்னு
ஆர்ப்பாட்டம் பண்ணிக் குதிச்சது
அவனுங்கதான்
கேசட்டுகளோட அருமை தெரிஞ்சது
அவனுங்கதான்
கடைசியா
ஹேராம் குடலை உருவி
வெளிய போட்டதும்
அவனுங்கதான்
வெளியில கிடந்தது
நீ பார்த்த பார்வையா
இசையில் தொடங்குதம்மாவான்னு
தெரியல
ரெண்டு சைடுங்கிறதால
ஒரே நேரத்துல ரெண்டோட
குடலாகவும் இருக்கலாம்
கடை வச்சா
எல்லா கேசட்டையும்
போணி பண்ணப்போறதும்
இவனுங்களாத்தான் இருக்கும்
கமலஹாசன் வெரலால
பியானோ கட்டையில நடந்து
வாசிக்கிறத
இவனுங்க
நாடாவை உருவி
வெளியில வரவைச்சி
வாசிப்பானுங்க
அது ஒரு தனி அழகுதான்
அதுக்காகவே
எத்தனை கடைவேணா
வைக்கலாம்தான்
     - ஆசை

No comments:

Post a Comment