Wednesday, June 21, 2023

ஒளியான சொல்


சொற்களெல்லாம்

இடைவிடாமல்

பொருள் குறித்துக் கொண்டிருக்க

பொருளெல்லாம்

இடைவிடாமல்

நோய்ப்புற்றாய்க் கிளைத்துக்கொண்டிருக்க

பொருளறியப் புலனெல்லாம்

கிளைதோறும்

தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்க

பொருள்வெடிப்பின்

ஒருமைநிலை

எட்டிவிட


சாபமிட்டேன்


எல்லாச் சொல்லும் 

பொருள் குறிக்காமல்

போகுக


இட்டது கேட்டேன்

விட்டது அறிந்தேன்


வெறிச் 

என்ற சொல்லும்

வெறிச்சோடியதுபோல்

ஆனது உலகு


அப்போது

மேகத்தைக் கடல் நீர்

வேடிக்கை பார்ப்பது போல்

சொற்களை

அண்ணாந்து வேடிக்கை பார்க்க

ஆரம்பித்தன

பொருள்கள்

(அங்கிருந்து சொற்களும்

அப்படிப் பார்த்துக்கொண்டிருக்கலாம்

யாருக்குத் தெரியும்

நானோ பொருள்களின்

உலகினன்)


எங்கோ பார்த்ததுபோல்

இருக்கின்றதே

என்று வியப்பு கொண்டன


தன் மகனென்று தெரியாமல்

ஒருவனைப் பார்க்கும்

திரைப்படத் தாய்போல்

அவற்றுக்கு

அடிவயிறு பிசைகிறது


வேண்டாம் வேண்டாம்

உன் பிள்ளைகள் பொல்லாதவர்கள்

காலந்திருப்பிகள்

மீண்டும் சுருங்கிச் சுருங்கி

நுண்மையாகி வந்து

உன்னுள் சூல்கொண்டுவிடுவார்கள்

என்று எச்சரித்தேனோ இல்லையோ

அவையெல்லாம் கேட்டதோ இல்லையோ


சொல்லிழந்த நிலையில்

பொருளெல்லை மறைந்து

ஒரே பொருளாகி

ஒரே பொருளின்

உள்ளே

மகாகருவறை

அதனுள்ளே நான்


அப்போது

அப்போது

இருட்துணையாக

இருளச்சம் போக்க

இருட்குளிர்காய

உச்சரிக்கிறேன்


என்னைப் போலவே இருக்கும்

ஒரு சொல்லை


அது தீ

கொண்டுவருமா

வென்றெண்ணி


பின்

அறிகிறேன்

அது எல்லாவற்றுக்கும் முதல் சொல்

என்று


அறிகிறேன்

இருப்பது

அந்த ஒரே சொல்லென்று


அச்சொல்

என்னை ஒளியாக்

கென்றது


அப்படியே

ஆகுக என்றேன்


ஒளியான சொல்தான்

ஓரிடம் நில்லாதே


கருவறை

வெளிவாசல் விலக்கி

தனக்கென்றொரு விரைவு சூடி

இனி காலமெல்லாம்

அவ்விரைவளக்கும்

கணக்கு தேடி

தலைகொள்ளாமல் தெறித்தோட


அலகிலா திசைகளில்

ஒரு சொல்லின்

தற்படம்

     - ஆசை

No comments:

Post a Comment