Wednesday, October 28, 2015

வரலாற்றின் மிகச் சிறந்த இந்துவின் இந்து மதமா, மிக மோசமான இந்துவின் இந்து மதமா? (அல்லது) இந்துபாகிஸ்தான் ஜிந்தாபாத்!


ஆசை

இந்து மதத்தின் வரலாற்றில் மிகவும் மோசமான காலகட்டம், சவாலான காலகட்டம் எது?
புத்த மதமும் சமணமும் தோன்றி இந்து மதத்துக்கு சவால் விடுத்த காலகட்டமா? இஸ்லாமியப் படையெடுப்புகள் நிகழ்ந்து அதற்குப் பிறகு முகலாயர் ஆட்சி அமைந்த மூன்றரை நூற்றாண்டு காலமா?
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த மூன்று நூற்றாண்டு காலமா?
இந்து மதத்துக்குள்ளிருந்துகொண்டே சனாதனத்தின் மீது காந்தி தாக்குதல் நிகழ்த்திய காலகட்டமா? இந்து மதத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னும் வெளியேறியும் அதன் மீது கடுமையாக அம்பேத்கர் தாக்குதல் நிகழ்த்திய காலகட்டமா?

இவற்றில் எதுவும் இல்லை. இந்து மதத்துக்கு மிகவும் மோசமானதும், சவால்கள் நிறைந்ததும் தற்போதைய காலகட்டம்தான். ‘என்ன? இந்து மதத்தின் பழைய மகத்துவத்தையும் சக்தியையும் மீட்டுக்கொண்டு வரும் வகையில் நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு சர்வ அதிகாரமிக்க ஒரு இந்து அரசு அமைந்திருக்கும் இந்தக் காலம்தான் இந்து மதத்துக்குச் சவால் நிறைந்த, மோசமான காலமா? என்ன விளையாடுகிறீர்களா? பொற்காலத்தின் தொடக்கம் என்று சொல்லுங்கள்’ என்று பலரும் மறுத்துப் பேசலாம். இல்லையில்லை, இதுதான் இந்து மதத்துக்கு மிகவும் சவாலான காலகட்டம். சவால் விடுப்பவர்கள் முஸ்லிம்களோ கிறித்தவர்களோ இல்லை. இந்துத்துவர்கள்தான். அவர்கள் விடுக்கும் சவாலை இந்துக்கள் உட்பட அனைவரும் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதில்தான் இந்து மதம் இனி வரும் நூற்றாண்டுகளில் என்னவாக இருக்கப்போகிறது என்பது தீர்மானிக்கப்படும்.

பலவீனம்தான் பலம்
இந்தியா என்றால் ஒரு காலத்தில் சாமியார்கள் நாடு, பாம்பாட்டிகள் நிறைந்த நாடு, ஏழைகள் நிறைந்த நாடு என்ற பிம்பம்தான் இருந்தது. அந்த பிம்பத்தை மாற்றியது இந்திய சுதந்திரப் போராட்டமும் அதைத் தலைமையேற்றி நடத்திய காந்தியும்தான். மிகப் பெரிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எந்த ஆயுதமுமில்லாமல் ஒரு கிழவர் எப்படிப் பணியவைத்தார் என்பது உலகெங்கும் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது. இந்தியர்களின் ஆன்ம வல்லமை வியந்துநோக்கப்பட்டது. இந்தியர்களின் ஆன்ம வல்லமையை மீறியும் பிரிவினை ஏற்படுத்திய வடு இந்தியாவுக்குப் புதிதாகக் கிடைத்த சுதந்திரத்தையும் புதிய பிம்பத்தையும் சிதைப்பதாக இருந்தது. கிட்டத்தட்ட பாகிஸ்தான் மக்கள்தொகை அளவுக்கு இந்தியாவிலும் முஸ்லிம்கள் எஞ்சியிருந்தனர். கிறிஸ்தவர்களும் கணிசமாக இருந்தனர். அது மட்டுமல்லாமல், ஏராளமான மொழிகள், இனங்கள் என்று பிளவுகளுக்கும் வேறுபாடுகளுக்கும் பஞ்சமே இல்லை. ஆகவே, சுதந்திரம் அடைந்த சில ஆண்டுகளிலேயே இந்தியா சுக்குநூறாக உடைந்துவிடும் என்றே மேலை நாடுகள் ஆரூடம் சொன்னார்கள். ஒவ்வொரு பத்தாண்டுக்கும் அந்த ஆரூடத்தை அவர்கள் மறுபடியும் புதுப்பித்துக்கொண்டே இருந்தார்கள். ஆனாலும் இந்தியா அப்படியேத்தான் இருக்கிறது. சிலபல மோசமான பிரச்சினைகள் நீடித்தபோதும் இந்தியா சிதைந்துபோகவில்லை. என்ன காரணம்? அதுதான் இந்தியாவின் பன்மைத்தன்மை. எவற்றைப் பிளவுகளாக மேலை உலகமும் இந்தியாவின் அழிவை எதிர்பார்த்தவர்களும் கருதினார்களோ அவற்றைப் பிளவுகளாகக் கருதாமல் இந்தியாவின் ஒருங்கிணைக்கும் நூலிழையாகச் சரியாகக் கண்டுகொண்டவர் காந்தி. ‘பன்மைத்தன்மை’ என்ற அந்த நூலிழையை வலுவான துணியாக நெய்தவர் காந்தி. எவ்வளவோ பிரச்சினைகளுக்குப் பிறகும் இந்தியா சிதையாமல் இருப்பதற்குக் காரணம் இந்தப் பன்மைத்துவத்தை அது தனது பலமாக நினைப்பதால்தான். அதன் ஆன்ம வல்லமையின் ஊற்று அதுதான். இதனால்தான் அன்றைய மீரா பென்னிலிருந்து நேற்றைய ஸ்டீவ் ஜோப்ஸ் வரை இந்தியாவைத் தேடி வந்தார்கள்.

பன்மைத்தன்மையின் அற்புதம் குறித்து ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நான் குடியிருந்தது பெரும்பான்மையாக கிறித்தவர்கள் வசிக்கும் தெருவில். கார்கில் போர் முடிந்த சமயத்தில் நானும் எனது நண்பர்களும் களிமண்ணில் ‘கார்கில் பிள்ளையார்’ செய்து தேர்போல இழுத்துக்கொண்டு நாங்கள் குடியிருந்த பெரிய கிறித்தவத் தெரு வழியாகப் போனோம். வழிநெடுகவும் இரு பக்கமும் கிறித்தவர்கள் அந்தப் பிள்ளையாரை வழிபட்டு, சிலர் திருநீற்றை எடுத்துக்கொண்டதுடன் எங்கள் உண்டியலில் காசும் போட்டனர். 99% கிறித்தவர்கள் இருக்கும் அந்தத் தெருவில் பிரச்சினை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் பிள்ளையாரை இழுத்துச்சென்றோம். காலம்காலமாக எங்களுடன் வாழ்ந்துவரும் அந்த கிறித்தவ நண்பர்கள், தாய்மார்கள் எங்கள் எண்ணத்தில் கரியைப் பூசி அவர்கள் நெற்றியில் திருநீற்றை இட்டுக்கொண்டார்கள். பங்குத்தந்தை கூட அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்தான். ஆனால், தெருவாசிகள் அப்படித்தான். அந்தக் கிறித்தவக் குடும்பங்களுடன் 50 கி.மீ. நடந்து எங்கள் அம்மா 20 ஆண்டுகளாக வேளாங்கண்ணி சென்றுவந்தார். நான் கூட கோயிலுக்குப் போக மாட்டேன். ஆனால், எங்கள் அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்த கிறித்தவர்கள் எங்கள் அம்மாவுடன் முத்துமாரியம்மன் கோயிலுக்குச் செல்வார்கள். இதெல்லாம் கதை இல்லை என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், கார்கில் பிள்ளையாரை இப்போது அந்த கிறித்தவத் தெருவில் என்னால் இழுத்துச்செல்ல முடியுமா? எவ்வளவு அற்புதமான பந்தத்தை நாம் இப்படிச் சிதைத்துவிட்டோம். அதுவும் இந்து மதத்தின் பெயரால்.

காந்தியின் இந்து மதம்
காந்தி தன்னை இந்துவாகவே கருதினார். இந்து மதத்தை மற்ற சனாதன இந்துக்கள் பார்த்தது போல் அவர் பார்க்கவில்லை. இந்து மதத்திலும் இந்து மத வேதங்களிலும் தனக்குப் பிடித்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, பிடிக்காத கருத்துக்களை விட்டுவிட்டு அதை அற்புதமான நடைமுறை வடிவத்துக்குக் கொண்டுவந்தார். இதையே இந்து மதத்தின் வலிமை என்று சொல்லவும் செய்தார்.

காந்தியின் இந்து மதம் என்ற கருத்தாக்கம் அற்புதமானது. பெரியாருக்கும் காந்திக்கும் இடையிலான உரையாடல் ஒன்று இதை மேலும் தெளிவாக்கும். அந்த உரையாடலில், இந்து மதம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று வாதிடுகிறார் பெரியார். கோட்பாட்டளவில் அப்படி இருந்தாலும் நடைமுறையில் இந்து மதம் என்ற ஒன்று இருக்கத்தானே செய்கிறது என்கிறார் காந்தி. மற்ற மதங்களில் அருளப்பட்ட வேதம், மையம் என்ற ஒன்று இருக்கிறது; இந்து மதத்தில் அப்படி இல்லையே என்கிறார் பெரியார். இது நல்ல விஷயம்தானே. மற்ற மதங்களின் வேதங்களில் ஒரு வரியை மாற்றினாலும் தொலைத்துக்கட்டிவிடுவார்கள். இந்து மதத்தில் மையமாக ஏதும் இல்லை என்பதால் நம் காலப்போக்குக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து, எல்லாவற்றையும் அரவணைத்துத் தழுவிக்கொண்டு போகலாம். இது ஜனநாயகரீதியில் அற்புதமான விஷயம் அல்லவா என்று காந்தி கேட்டிருக்கிறார். 

இந்து மதத்தைத் தனக்குப் பிடித்த வகையில், ஆக்கபூர்வமான வழியில் எடுத்துக்கொண்டார் காந்தி. இன்னும் சொல்லப்போனால் விமர்சனபூர்வமாகவும் இந்து மதத்தை காந்தி அணுகினார். இந்துத்துவர்களோ அதை எதிர்மறையான வழியில் மட்டுமே தங்களுக்கு உகந்த விதத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். இறுகிப்போனவர்களால் தங்கள் கோட்பாடுகளை விமர்சனபூர்வமாகப் பார்க்கவே முடியாது.

இஸ்லாமிய வெறுப்பு
இஸ்லாமிய-கிறித்தவ வெறுப்பு. இதில் இஸ்லாமியர்களைத்தான் பெரும் எதிரிகளாக இந்துத்துவர்கள் கருதுகிறார்கள். இந்துத்துவ வெறியர்களைக் கேட்டால் இஸ்லாமியர்களை அழித்தொழிக்க வேண்டும் அல்லது அவர்களை பாகிஸ்தானுக்குத் துரத்த வேண்டும் என்பார்கள். மிதமான இந்துத்துவர்களைக் கேட்டால் ‘அவர்கள் இங்கேயே இருக்க வேண்டுமென்றால் வாலை சுருட்டிக்கொண்டு நமக்குப் பணிந்து அமைதியாக இருக்க வேண்டும்’ என்பார்கள். இந்த இரண்டு தரப்பிலிருந்தும் நமக்குத் தெளிவாகப் புலப்படும் விஷயங்கள் இவை: 1. அடுத்தவர் என்பவர் (அதாவது இந்து அல்லாதவர்) நம்மை விடக் கீழானவர். நாம்தான் உலகிலேயே மேல் என்னும் பாசிசக் கருத்து. 2. இஸ்லாமியர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. 3. மற்ற மதங்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அவற்றிடம் சகோதரத்துவத்தை போதிக்கும் வல்லமையும் தேவையும் (தங்கள்) இந்து மதத்துக்கு இல்லை.
இதை அப்படியே காந்தியின் கீழ்க்கண்ட கருத்துக்களுக்குப் பொருத்திப் பாருங்கள்.            

“சமய உறவுகளில் ‘சகிப்புத்தன்மை’ (tolerance) என்கிற சொல் எனக்குப் பிடித்ததல்ல. ‘சமரசம்’ (compromise) என்கிற சொல்லிலும் ஒருவரின் மதத்தைவிட மற்றவரின் மதம் தாழ்வானது என்கிற பொருள் வந்துவிடுகிறது. மாறாக நமது சமயத்தின்பால் நமக்குள்ள நன்மதிப்பை மற்ற மதங்களின்மீதும் காட்ட வேண்டும் என்று என் அஹிம்சைக் கோட்பாடு வற்புறுத்துகிறது. இந்த நோக்கில் நம் சமயத்திலுள்ள குறைபாடுகளையும் நாம் ஏற்க வேண்டும். எல்லா மதங்களும் சமமானவை என ஏற்பது சமயங்களுக்கிடையே வித்தியாசங்களை நீக்குவது அல்ல.”

இவற்றை இந்துத்துவர்களால் துளியும் ஏற்றுக்கொள்ள முடியுமா? அவர்களுக்குத்தான் இந்து மதத்தின் வல்லமை மீதும், சமத்துவ சகவாழ்வு மீதும் நம்பிக்கையே இல்லையே. பேருந்தில் நமக்குப் பக்கத்து இருக்கையில் அமர்கிறவரையே ஆக்கிரமிப்பாளராகக் கருதி, எதிரியாக நினைத்துக் கைப்பிடியைக் கைவசப்படுத்தப் போராடுபவர்கள் நாம். பேருந்தை இந்தியாவாகக் கருதினால் இந்துத்துவர்களைக் கைப்பிடிக்காகப் போராடுபவர்கள் என்றுதான் கருத வேண்டும். காந்தியோ கைப்பிடியை மற்றவரிடம் விட்டுக்கொடுப்பதன் மூலம் நீங்கள் எதையும் இழந்துவிட மாட்டீர்கள்; ஆனால், அன்பை சம்பாதிப்பீர்கள் என்றிருப்பார்.

வாஜ்பாய் உள்ளிட்ட சில இந்துத்துவர்களும் முஸ்லிம்களை ஏற்றுக்கொள்வதைப் பற்றிப் பேசுகிறார்கள். நல்ல விஷயம்தானே! ஆனால், எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் தெரியுமா? அவர்களின் தனித்துவ அடையாளங்களை அழித்துவிட்டு ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். அதாவது நம் வீட்டுக்கு வரும் விருந்தாளி, தான் டீ குடிப்பது மட்டுமே வழக்கம், காப்பி குடிப்பதில்லை என்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நாமோ டீ குடிப்பதில்லை, காபிதான் குடிப்போம். நல்ல விருந்தோம்புநர் என்ன செய்வார்? தனக்கு டீ பிடிக்காது என்றாலும் விருந்தினருக்கு டீ தயாரித்து, அல்லது வாங்கி வந்து கொடுப்பார். அல்லது தங்கள் வீட்டில் டீ தயாரிப்பதில்லை, மன்னித்துவிடுங்கள் என்றாவது சொல்லிவிடுவார். ஆனால், விருந்தினரிடம் வலுக்கட்டாயமாக காபியைக் கொடுத்துக் குடிக்கச் சொல்வாரா? இந்துத்துவர்கள் அப்படி சொல்கிறார்கள்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும் கிறித்தவர்களும் விருந்தாளிகள் இல்லை. நம் சகோதரர்கள். நம் வீட்டில் நமக்கு இருக்கும் உரிமை அவர்களுக்கும் இருக்கிறது. நம் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, தாங்கள் ஒதுக்கப்படுவதாக, வஞ்சிக்கப்படுவதாக அவர்கள் உணரும்போது அவர்களில் வெகுசிலர் தங்கள் உணர்வை மிக மோசமான வழிமுறைகளில் வெளிப்படுத்தியிருக்கலாம், இந்துக்களில் சிலரும் அப்படி மோசமான வழிமுறைகளை மேற்கொள்வதுபோல. முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் மீது பயங்கரவாதச் செயல்களைக் கட்டவிழ்த்துவிடும் ஒருசில இந்துத்துவவாதிகளுக்கும் பெருபான்மையான அமைதியான இந்துக்களுக்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ அதே போல பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் ஒருசில முஸ்லிம்களுக்கும் அமைதியாக வாழ விரும்பும் பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.

சிறுபான்மையினரும் பெரும்பான்மையினரும் கலந்து வசிக்கும் எல்லா தேசங்களிலும் நடப்பதுபோலத்தான் இந்தியாவிலும் நடக்கிறது. பெரும்பான்மையினர் தங்களைச் சூழ்ந்திருப்பதே சிறுபான்மையினரின் அச்சத்துக்கு முதல் காரணமாகிறது. அடுத்ததாக, பெரும்பான்மையினரின் ஆதிக்கம் சிறுபான்மையினரில் சிலரை வன்முறைப் பாதையில் ஈடுபடத் தூண்டுகிறது. யாரோ சிலர் அப்படி ஈடுபடும்போது சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கான வாய்ப்பாக அதைப்  பயன்படுத்திக்கொண்டு பெரும்பான்மையினர் மூர்க்கமாகச் செயல்பட பிரச்சினை பூதாகரமாகிறது. விளைவு இரண்டு தரப்பிலும் அமைதியின்மை. சமூகப் பிளவு. தீவிரம் அதிகரித்தால் இன அழிப்பு. வேறு எங்கும் போக வேண்டாம். இலங்கையைப் பாருங்கள். விடுதலைப்புலிகள் மிகவும் மோசமான வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள்; மன்னிக்கவே முடியாதுதான். ஆயினும் அவர்களை அந்த நிலைக்குத் தள்ளியது அங்குள்ள பெரும்பான்மைச் சமூகத்தின் மூர்க்கமான ஆதிக்கப் போக்குதான் இல்லையா!

ஆனால், காந்தி இதற்கெல்லாம் அற்புதமான ஒரு மாற்று மருந்தை நமக்களித்திருந்தார். அகிம்சை வழியில் சமாதானமான சகவாழ்வு. அந்த வழியில் போய் சிறுபான்மையினரைத் தழுவிக்கொள்ளும் இந்து மதம் உயர்ந்ததா? சிறுபான்மையினரை எதிரியாகக் கருதி அழித்தொழிக்கவோ, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவோ நினைக்கும் இந்து மதம் உயர்ந்ததா?

முஸ்லிம்களுக்கு காந்தி ரொம்பவும் இடம்கொடுத்துவிட்டார்; அவர்கள் செய்யும் தவறை அவர் தட்டிக்கேட்டதேயில்லை என்று இந்து அடிப்படைவாதிகள் அன்றிலிருந்து இன்றுவரை குற்றம்சாட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சிறுபான்மை-பெரும்பான்மை விஷயத்தில் காந்தி சொன்ன இந்த வார்த்தைகளை ஒவ்வொரு இந்தியரும் தங்கள் வீட்டில் எழுதித் தொங்கவிட வேண்டும்: “நான் எப்போதுமே சிறுபான்மையினர் தரப்புடன் இருக்கவே விரும்புவேன். ஏனென்றால் சிறுபான்மையினர் தவறிழைக்க வாய்ப்பில்லை. அப்படியே தவறிழைத்தாலும் அதைத் திருத்திக்கொள்ள முடியும். ஆனால், பெரும்பான்மையினரைப் பொறுத்தவரை அதிகாரபோதை, ஆதிக்க போதை அவர்களின் தலைக்கேறுமென்றால் என்றால் அதைத் திருத்துவது மிகமிகக் கடினம்.” காந்தி எச்சரித்த தருணம் இன்று உருவாகியிருக்கிறது. இந்தத் தருணம் இந்து மதத்தின் கிளையில் உட்கார்ந்துகொண்டு அதன் அடிமரத்தை இந்துத்துவம் வெட்டும் தருணம்.

நம் மீது கோபம் வரவில்லையே?
நம்மை அடக்கியாண்ட முஸ்லிம் மன்னர்கள், கிறித்தவர்களான ஆங்கிலேயர்கள் ஆகியோரின் மீதுள்ள கோபத்தை இன்றுள்ள முஸ்லிம்கள் மீதும் கிறித்தவர்கள் காட்டுகிறோம். உண்மையில் அவர்களில் பெரும்பாலானோர் சில தலைமுறைகளுக்கு முன்பு இந்துக்களாக இருந்தவர்களே. அவர்களுக்கும் முஸ்லிம் மன்னர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் என்ன சம்பந்தம்? நம் பூர்வ சகோதரர்கள் அல்லவா அவர்கள்!

முஸ்லிம்களும் ஆங்கிலேயரும் சேர்ந்து கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக நம்மை அடக்கியாண்டு பெருங்கொடுமைக்குள்ளாக்கிவிட்டார்கள் என்பதுதான் இன்று அவர்கள் மீது இந்துத்துவர்களுக்கு இவ்வளவு கோபம் எழுவதற்குக் காரணம். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளாக நம் இந்து மக்களிலேயே பெரும் பிரிவினரைச் சூத்திரர்களென்றும், அதைவிடக் கொடுமையாக இன்னும் பலரை பஞ்சமர்கள் என்றும் இந்து மதத்தின் பெயரால் கொடுமைப்படுத்திவருகிறோமே, அதற்கு யார் மீது கோபப்படுவது? முஸ்லிம்களையும் கிறித்தவர்களையும் எதிரிகளாக அடையாளம் காண்பதற்குப் பதில் நம்மிடம் உள்ள சாதியத்தையல்லவா நமது பெரும் எதிரியாக நாம் கருதியிருக்க வேண்டும். நம்மைச் சேர்ந்தவர்களையே கீழான இழிநிலைக்கு ஆளாக்கிவிட்டு முஸ்லிம்கள் மீது மட்டும் கோபம் கொள்வதில் சிறிதும் தார்மிக உரிமை நமக்கு இல்லை. இன்றைக்கு சாதியாவது ஒன்றாவது என்று கேட்பவர்களைப் பார்த்து கயர்லாஞ்சியும் தர்மபுரியும் யுவராஜும் கெக்கொலிகொட்டிச் சிரிக்கவில்லையா? சாதியின் பெயரால் நம்மவர்களுக்கு நாம் இழைத்துவரும் கொடுமையைவிடவா பிறர் நமக்கு இழைத்துவிட முடியும்?

இந்து பாகிஸ்தான்
இந்தியப் பிரிவினையையொட்டி நிகழ்ந்த கலவரங்களின்போது தனிநபர் ராணுவமாக நவகாளிக்குச் சென்று முஸ்லிம்களிடமிருந்து இந்துக்களையும் பிஹாருக்குச் சென்று இந்துக்களிடமிருந்து முஸ்லிம்களையும் காப்பாற்றினார். இது நடக்கும்போது அவருக்கு 78 வயது. எந்தவொரு முஸ்லிமையும் விட அதிக அளவிலான முஸ்லிம்களை அவர் காப்பாற்றியிருக்கிறார். எந்த ஒரு இந்துத்துவரை விடவும் அதிக அளவிலான இந்துக்களை அவர் காப்பாற்றியிருக்கிறார். அவரை விட யாரும் இந்து மதத்துக்கு உரிமை கோரிவிட முடியாது. ‘இந்தியாவை இந்து பாகிஸ்தான் ஆக்கிவிடாதீர்கள்’ என்று திரும்பத் திரும்பக் கதறினார் அந்த மனிதர். அவர் சொன்னது இந்துத்துவவாதிகளின் காதில் விழவே இல்லை. அவர்களின் காதுகேளாமையால்தான் உயிரிழந்தார் காந்தி. இந்து மதத்துக்குக் கருணையுள்ள, பரிசுத்தமான முகத்தைக் கொடுக்க நினைத்ததால் கொல்லப்பட்டார். அதனால்தான் அவர் வரலாற்றிலேயே சிறந்த இந்து. அதனால்தான் அவரைக் கொன்றவன் வரலாற்றிலேயே மோசமான இந்து.

கருணையில், அன்பில், விருந்தோம்பலில், நட்பில், பன்மைத்தன்மையில் தலைசிறந்த நாடாக உலகமே இந்தியாவை வியந்து பார்த்திருக்கிறது. லட்சக் கணக்கான மேற்கத்தியர்கள் இந்தியாவுக்கு வருவது உலகுக்கே ஞானத்தையும் அன்பையும் போதித்த நாடு என்பதனால்தான். அந்தப் பண்பை அழித்துவிட்டு இந்தியாவையோ இந்து மதத்தையோ உலக அரங்கில் தலை நிமிரச் செய்துவிட முடியும் என்றும், அப்படிச் செய்வதன் மூலம் உலகின் ஆதிக்க சக்தியாக இந்தியாவைத் தலையெடுக்கச் செய்துவிட முடியும் என்றும் இந்துத்துவர்கள் உறுதியாக நம்புவது விசித்திரம்தான்.

காந்தி படுகொலையில் இந்துத்துவர்கள் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை! அவரது ரத்தம் சில பத்தாண்டுகள் அவர்களின் செயல்திட்டத்தை அடித்துக்கொண்டு போய்ப் பின்னுக்குத் தள்ளியதை அவர்கள் உணரவே இல்லை. இந்த முறை காந்தி இல்லை, நம் செயல்திட்டம் எளிதில் நிறைவேறிவிடும் என்று அவர்கள் நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்காது. இந்தியா முழுதும் அவரது ரத்தம் படர்ந்திருக்கிறது. அது மீண்டும் மீண்டும் அவர்களை வீழ்த்திக்கொண்டே இருக்கும், அவர்கள் எவ்வளவு பலத்துடன் இருந்தாலும்.


இப்போது இந்துத்துவர்கள் செய்ய வேண்டியது ஒன்று இருக்கிறது. அவர்கள் உண்மையாக இந்து மதத்தை நேசிப்பவர்களாக இருந்தால், அதைக் காப்பாற்ற நினைப்பவர்களாக இருந்தால் வரலாற்றிலேயே சிறந்த இந்து ஒருவரின் இந்து மதத்தைப் பின்பற்றியே ஆக வேண்டும். அவரது இந்து மதம் மற்ற எல்லா மதங்களையும் அவர்களுடைய அடையாளங்களுடனேயே ஏற்றுக்கொள்வது, சமமாக பாவிப்பது, ஏற்றத்தாழ்வு அற்றது.  உண்மையில் இந்த இயல்புதான் இந்து மதத்தை இவ்வளவு நாட்களாகக் காப்பாற்றிவந்திருக்கிறது. இல்லை, வரலாற்றிலேயே மிகச் சிறந்த இந்துவைச் சுட்டுக்கொன்ற மிக மோசமான இந்துவைத்தான் பின்பற்றுவோம் என்று பிடிவாதமாக இருந்தால் இந்து மதம் இந்துத்துவர்கள் கையாலேயே அழிவதை யாராலும் தடுக்க முடியாது.

6 comments:

  1. மதத்தின் பெயரால் மதம் கொண்டு திரிவதை அருமையாக அலசியுள்ளீர்கள். வரலாற்று நூல்களில் இக் காலகட்டம் இவ்வாறான குறிப்புடன் இடம் பெறப்போவது குறித்து நாம் வெட்கப்படவேண்டும். ஒரு வகையில் நாம் அனைவருமே பொறுப்பு என்பது இன்னும் வேதனை தரும் செய்தியே.

    ReplyDelete
  2. https://youtu.be/DfZZy4J_vUQ காந்திய உருவில் மற்றும் கொள்கையில் ஒர மனிதர்

    ReplyDelete
  3. நமது சமயத்தின்பால் நமக்குள்ள நன்மதிப்பை மற்ற மதங்களின்மீதும் காட்ட வேண்டும் என்று என் அஹிம்சைக் கோட்பாடு வற்புறுத்துகிறது. இந்த நோக்கில் நம் சமயத்திலுள்ள குறைபாடுகளையும் நாம் ஏற்க வேண்டும்


    நாம் அனைவரும் உணரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக நண்பரே!

      Delete
  4. இன்றைக்கு பெயரளவில் மட்டும் பெரும்பான்மையினர் என்று அறியப்படும் ஹிந்துக்களுக்கு சிறுபான்மையினருக்கு இருக்க வேண்டிய அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறதென்றால் அதற்கு காரணம் வோட்டு வங்கி அரசியல், இந்துமதத்தை மட்டும் குறி வைத்து தாக்கி கொச்சை படுத்திய ராமசாமி நாயக்கர் அடிப்பொடிகள், வறுமையையும் வளர்ச்சியினமையும் சாக்காக வைத்துக் கொண்டு அடிப்படை அமைப்பையே தகர்க்க முற்படும் தேச விரோத இடது சாரி குழுக்கள், ஆசை போன்ற அரை குறை அறிவுஜீவிகள் இவர்கள்தான். ஹிந்துத்துவாவை தடுத்து நிறுத்த இன்றுதான் காந்தியம் கண்ணில் தென்பட்டிருக்கிறது இவர்களுக்கு! இந்த மாதிரி எழுத்துக்கள் நீங்கள் அடிக்கடி கரிசனத்தோடு சுட்டிக்காட்டும் சாதீய சிந்தனைகளை தகர்த்து இந்து ஒற்றுமையாக உருவாகிட பெருமளவில் உதவும் என்பதால் வரவேற்கிறேன். நிறைய எழுதுங்கள் ஆசைத்தம்பி

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள அந்தணன் அவர்களுக்கு,

      வழக்கமான இந்துத்துவர்களை விட உங்களிடம் ஒரு குறைந்தபட்சக் கண்ணியத்தைக் காண்கிறேன். மகிழ்ச்சி! இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு காட்டமாக எழுதியிருந்த ஒரு இந்துத்துவ அன்பருக்கு நான் அளித்த பதிலை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்:

      அன்புள்ள நண்பருக்கு வணக்கம்!

      இந்தப் பக்கம் இடதுசாரிகள் என்னவென்றால் ‘இந்துத்துவவாதி, ஏகாதிபத்திய கைக்கூலி, பார்ப்பனிய அடிவருடி, மோடி அடிவருடி’ என்றெல்லாம் முத்திரை குத்துகிறார்கள்.

      அந்தப் பக்கம் உங்களைப் போல வலதுசாரிகளெல்லாம் ‘போலி அறிவுஜீவி’, ‘சன்மானத்துக்காகக் குலைக்கும் நாய்’, ‘Presstitute', ‘Anti-indian' என்றெல்லாம் முத்திரை குத்துகிறார்கள்.

      நான் எங்கு போய் ஒளிந்துகொள்வது?😁


      பிற மனிதர்களை நன்னம்பிக்கையுடனே (good faith) அணுக வேண்டும் என்று நாம் நம்பும் சித்தாந்தமும் மதமும் நமக்குக் கற்றுக்கொடுக்கவில்லையென்றால்

      அல்லது

      அவற்றிடமிருந்து நம்மால் கற்றுக்கொள்ள முடியவில்லையென்றால்

      அல்லது

      மதங்கள், கோட்பாடுகள் போன்றவற்றைவிட மனிதர்களும் இயற்கையுமே முக்கியம் என்று நாம் நம்பும் சித்தாந்தமும் மதமும் நமக்குக் கற்றுக்கொடுக்கவில்லையென்றால்

      அல்லது

      அவற்றிடமிருந்து நம்மால் கற்றுக்கொள்ள முடியவில்லையென்றால்

      அவர் இடதுசாரியோ வலது சாரியோ இருவருமே மனிதத்துக்கு எதிரானவர்கள் என்று கருதுகிறேன்.

      உங்களுக்கு இரண்டு தகவல்கள்: நீங்கள் படித்த கட்டுரை எந்தப் பத்திரிகையிலும் வெளியாகாதது. என் வலைப்பூவில் மட்டுமே வெளியானது. இதற்கென்று எந்த ஆண்டி-இந்தியர்களிடமும் நான் சன்மானம் பெறவில்லை. அப்படிச் சொன்னாலும் நீங்கள் நம்புவதில்லை. ஏனெனில், இந்தியா, இந்துத்துவா, மோடி மீதெல்லாம் விமர்சனம் வைப்பவர்கள் எல்லோரும் ‘ஆண்டி-இந்தியர்கள்’ என்றே நீங்கள் கருதுகிறீர்கள். உங்கள் நம்பிக்கை உங்களுக்கு! என் நம்பிக்கை எனக்கு.

      இரண்டாவதாக, கம்யூனிஸ்டுகளை விமர்சித்து ஃபேஸ்புக்கிலும் பத்திரிகையிலும் எழுதுவதற்காக நானும் என் நண்பர்களும் தொடர்ந்து இடதுசாரிகளால் அவதூறு செய்யப்படுவதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.

      தீவிரமாகப் போனால் ‘இடதும் வலதும் ஒண்ணு! இதை அறியாதவர் வாயில் மண்ணு’ என்பதை நீங்கள் எல்லோரும் நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

      நீங்கள் கோட்ஸேவுக்குச் சொல்லும் சாக்குப்போக்கைத்தான் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். காந்தியைக் கொல்வதற்குப் பதிலாக வெள்ளையர்களை எதிர்த்து பகத் சிங் போலவாவது கோட்ஸே ஏதாவது செய்திருந்தால் (நமக்கு வன்முறையில் உடன்பாடு இல்லை என்றாலும்) அவரை ஒரு தேசபக்தர் என்று கொண்டாடியிருக்கலாம். தேசத்தந்தையைக் கொன்றுவிட்டு என்ன ‘தேசபக்தி’ பட்டம் வேண்டிக்கிடக்கிறது?


      எனக்கு இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், கம்யூனிஸம், காந்தியம் எல்லாவற்றையும் விட முக்கியமானது மனிதமும் என் மனசாட்சியும். இவற்றுக்கு உதவி செய்யும் வகையில் மதங்களிலும் கோட்பாடுகளிலும் எந்தப் பகுதிகள் இருக்கின்றனவோ அந்தப் பகுதிகளை மட்டுமே என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்!

      என் கருத்துகள் தங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

      அன்புடன்
      ஆசைத்தம்பி

      Delete