சுதந்திரம் பெற்றதற்குப் பிந்தைய இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்துக்கு மோசமான காலகட்டங்களாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று, நெருக்கடி நிலை காலகட்டம், இன்னொன்று தற்போதைய காலகட்டம். கடந்த 70 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், பாஜக உள்ளிட்ட வலதுசாரிக் கட்சிகள் என்று எதுவுமே கருத்து சுதந்திரப் பரிசோதனையில் மிஞ்சாது. சல்மான் ருஷ்தியின் ‘சாத்தானின் பாடல்கள்’ (The Satanic Verses) நாவலை காங்கிரஸ் அரசு தடைசெய்தது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ அரசு ஆண்டபோது தஸ்லிமா நஸ்ரினின் நாவலைத் தடைசெய்தது. ‘தி டாவின்சி கோட்’ திரைப்படத்தை திமுக அரசு தடைசெய்தது. பாஜக கட்சியும் சரி அரசுகளும் சரி அந்தக் கட்சி சார்பான அமைப்புகளும்சரி பல்வேறு புத்தகங்களுக்கும் பல்வேறு கலைஞர்களுக்கும் முட்டுக்கட்டை போட்டிருக்கின்றன. எம்.எஃப். ஹுசைன், சிவாஜியைப் பற்றிய ஜேம்ஸ் லைனின் புத்தகம் தொடங்கி பெருமாள் முருகன் வரை ஏராளமான உதாரணங்களைக் காட்டலாம்.
Thursday, October 9, 2025
Sunday, October 5, 2025
காவிரி தந்த மல்லாரி வேந்தர்! - நாதஸ்வரக் கலைஞர் ஆச்சாள்புரம் சின்னத்தம்பிக்கு அஞ்சலி!
பிரபல நாதஸ்வரக் கலைஞர் ஆச்சாள்புரம் சின்னத்தம்பி (பிறப்பு: 14-04-1930) இன்று காலமானார். அவருக்கு வயது 95. அவரைப் பற்றி எனது ‘நீரோடிய காலம்’ தொடரில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய அத்தியாயத்தை இங்கே பகிர்கிறேன்:
கொள்ளிடம் கடலுடன் கலக்கும் பழையாறில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்டதும் என் மனதில் ஓடிய ஊரின் பெயர் ‘ஆச்சாள்புரம்’தான்.
ஆச்சாள்புரம் சின்னத்தம்பியின் மல்லாரிகளை சி.டி. வடிவில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கேட்க ஆரம்பித்தேன். மல்லாரி என்பது சுவாமி புறப்பாட்டின்போது நாதஸ்வரத்தின் வாசிக்கப்படும் ஒரு இசைவடிவம். எனக்கு ஆச்சாள்புரம் சின்னத்தம்பியின் மல்லாரிகளை அறிமுகப்படுத்திய நண்பர் “பீத்தோவனின் ஐந்தாவது சிம்பனிக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை” என்று கூறியபோது மிகைப்படுத்திச் சொல்கிறாரோ என்றுதான் நினைத்தேன். ஆனால், கம்பீர நாட்டையில் அமைந்த கம்பீரமான சின்னத்தம்பியின் மல்லாரிகளைக் கேட்டு முடித்தபோது நண்பரின் கூற்றில் எந்த மிகையும் இல்லை என்பதை உணர்ந்தேன்.
Thursday, October 2, 2025
காந்தி பிறந்தநாள் சிறப்புக் கவிதைகள்!
காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு எனது ‘ஹே... ராவண்!’ (2025, எதிர் வெளியீடு) கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்:
Monday, September 29, 2025
கரூர் துயரம்: தொண்டர்களைத் தயார்ப்படுத்தாத அரசியலின் விளைவு!
கரூரில் கூடிய யாரும் அரசியல்வாதி விஜய் பேசுவதைக் கேட்க வந்த தொண்டர்கள் இல்லை. நடிகர் விஜயைப் பார்க்க வந்த ரசிக வெறியர்கள். பெண்கள் உட்பட பலரும் முதல் நாள் இரவே அந்த இடத்தில் வந்து படுத்துக்கொண்டனர். 12 மணி நேரத்துக்கு மேலாக சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல் ஒன்றுக்குப் போகாமல் விஜய்க்காகக் காத்திருக்கிறார்கள். அதுதான் மயங்கி விழுந்திருக்கிறார்கள். நெரிசலில் மூச்சுத் திணறி இறந்திருக்கிறார்கள். விஜய் நேரத்துக்கு வந்திருந்தால் இவ்வளவு அசம்பாவிதம் நடந்திருக்காது. நடந்ததற்கு விஜய்தான் முழுமுதல் காரணம்.
எம்.ஜி.ஆர். தன் படங்களின் வழியே பொறுப்பான பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தார். திரையில் மது அருந்த மாட்டார், புகைப்பிடிக்க மாட்டார், ரவுடியிசத்தில் ஈடுபட மாட்டார். அவரது ரசிகர்களும் அவரைப் பின்பற்றினார்கள். எனக்குத் தெரிந்து என் நண்பரின் தந்தை ஒரு எம்.ஜி.ஆர். ரசிகர். இன்றுவரை மதுப் பழக்கம், புகைப்பழக்கம் கிடையாது. கேட்டால் தலைவர்தான் காரணம் என்பார். ஆனால், விஜய் இதற்கு நேரெதிர். தன் ரசிகர்களைத் தன் திரைப் பிம்பத்தைப் போலவே தற்குறிகளாக ஆக்கிவிட்டிருக்கிறார். அதுதான் இதற்கு காரணம். தன் ரசிகர்களை எந்த விதத்திலும் தயார்படுத்தாமல் அரசியலில் குதித்திருக்கிறார்.
சௌரிசௌரா வன்முறை (1922) நடைபெற்றபோது காந்தி வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருந்த ஒத்துழையாமையை, மக்கள் இன்னும் தயாராக ஆகவில்லை என்று கருதி நிறுத்திவிட்டார். இதற்காக அவர் இன்னும் விமர்சிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அந்தப் போராட்டம் தொடர்ந்திருந்தால் மேலும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கும்; அது மக்களுக்குத்தான் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்று காந்தி நன்கு அறிந்திருந்தார். அதற்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்தே உப்பு சத்தியாகிரகம் (1930) என்ற பெரிய போராட்டத்தை காந்தி முன்னெடுத்தார். அப்போது தொண்டர்கள் ஒரு பெரிய போராட்டத்துக்குத் தயாராக அரசியல்மயப்பட்டிருந்தார்கள்.
அதுமட்டுமல்ல காந்தி எந்தப் பகுதியில் போராட்டம் நடத்தச் சென்றாலும் அங்கே முதல் காரியமாக அங்குள்ள மக்களுக்கு போராட்டத்துக்கு அடிப்படையான கல்வியைப் புகட்டினார். சுத்தம், சுகாதாரம், ஒழுங்கு ஆகியவற்றைப் பேணுதல், எல்லோரும் ஒன்றாக சமைத்து உண்ணுதல், எல்லா வேலைகளையும் எல்லோரும் செய்தல் (கழிப்பறைகளைச் சுத்தம் செய்தல் உட்பட), கல்வி கற்பித்தல், தீண்டாமையைப் பின்பற்றாமல் இருத்தல் என்று அவர் மேற்கொண்டநடவடிக்கைகளில் மக்கள் அரசியல்மயமானார்கள். அதனால்தான் அவருடைய போராட்டங்கள் கட்டுக்கோப்பாக நடைபெற்றன. அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தாலும் போராட்டம் கட்டுக்கோப்பாக நடக்கும். அந்த அளவுக்குத் தனக்குக் கீழே அடுத்த கட்ட தலைவர்களைத் தயார்செய்திருந்தார்.
அதுபோன்று தலைமைகளுக்குத் தன் தொண்டர்கள் மீது கட்டுப்பாடு வேண்டும். எம்.ஜி.ஆருக்கு கூடாத கூட்டமா? ஆனால், விஜய்க்காகக் கூடியவர்களெல்லாம் தற்குறிகள். அவ்வளவு ஏன் விஜயகாந்த் கூட்டத்தில் யாராவது ஏதாவது செய்தால் விஜயகாந்த் மேடையில் இருந்தே மிரட்டுவதைப் பார்க்கலாம். விஜய் அப்படி எதுவும் செய்யவில்லை. மரங்களில் ஏறுதல், அத்துமீறி பிறர் வீடுகளின் பால்கனியில் ஏறுதல், மின்சார கம்பங்களில் ஏறுதல், பிறருடைய சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் என்று தன் ரசிகர்கள் செய்த எதையும் அவர் கண்டிக்க வில்லை. அவர் இதையெல்லாம் ரசிக்கவே செய்தார்
திமுக, அதிமுக தொண்டர்களெல்லாம் ஒழுக்கமானவர்கள் என்று சொல்வதற்கில்லைதான். ஆனால் கட்டுக்கோப்பானவர்கள். வார்டு மெம்பர், வட்டச் செயலாளர் தொடங்கி மாவட்டச் செயலாளர் வரை அவர்களைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்வார்கள். இங்கே விஜய், புஸ்ஸி ஆனந்த் தவிர இரண்டாம் கட்ட மூன்றாம் கட்டத் தலைவர்கள் என்று எவரும் இல்லை. இறந்துபோனவர்களையும் காயம்பட்டவர்களையும் பார்க்க விஜயில் தொடங்கி எந்தக் கட்ட நிர்வாகிகளும் வரவில்லை என்பது கட்சி நிர்வாகம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அங்கே விஜய் மட்டும்தான் முகம், தலைவர், கடவுள். எம்.ஜி.ஆருக்கும் ஓரளவு அப்படித்தான் என்றாலும் அவருக்கு வலுவான மாவட்டச் செயலாளர்கள் இருந்தார்கள். திமுகவை பின்பற்றிய கட்டமைப்பு இருந்தது. த.வெ.கவில் ஒவ்வொரு உள்ளூர் பகுதியிலும் யார் வட்டச் செயலாளர் என்று பார்த்தால் 25 வயது அரைவேக்காடாக, ரசிகத் தற்குறியாக இருக்கும்.
தன் தொண்டர்களைத் தயார்ப்படுத்தவும் அரசியமயப்படுத்தவும் எம்.ஜி.ஆர். திரைப்படங்களைப் பயன்படுத்திக்கொண்டார். அதற்குக் குறிப்பிட்ட காலம் எடுத்துக்கொண்டார். ஆனால், விஜய் தன் பிம்பத்தைக் கட்டமைக்க, வெறியர்கள் கூட்டத்தை உருவாக்க மட்டுமே திரைப்படங்களைப் பயன்படுத்திக்கொண்டார். அவரும் அரசியலுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளவில்லை. அவருடைய தொண்டர்களையும் அவர் தயார்ப்படுத்தவில்லை. அதன் விளைவுதான் கரூர் மரணங்கள். இந்தத் துயரம் இதற்கு முன்பே வேறு விஜய் பேரணிகளிலோ மாநாடுகளிலோ ஏற்பட்டிருக்கலாம். வெடிக்கக் காத்திருந்த அணுகுண்டு போல் இப்போது வெடித்துவிட்டது. இனி முன்பைப் போல அரசியல் செய்ய முடியாது என்பதை ராஜா வீட்டுக் கன்றுக்குட்டியான விஜய் உணர்ந்திருப்பார்.
- ஆசை
Monday, September 22, 2025
காந்தியின் ஆடை அரசியல் - காந்தி அரையாடைக்கு மாறிய நாளின் சிறப்புப் பகிர்வு
(இன்று காந்தி அரையாடைக்கு மாறிய 104-ஆம் ஆண்டு)
ஆடை என்பது பெரும்பாலானோருக்கு உடலை மறைப்பதற்கும், குளிர், வெப்பம் போன்றவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்கும், தங்களை மேலும் அழகாகக் காட்டிக்கொள்வதற்குமான விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால், ஆடையையே தங்கள் அடையாளமாக, தங்கள் அரசியலாக, தங்கள் போராட்டமாக மாற்றியவர்கள் வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். ஏழை எளியோர் இடுப்பில் அரையாடையுடன் இருக்கத் தனக்கு மட்டும் பாதத்திலிருந்து தலைப்பாகை வரை ஏன் இத்தனை ஆடம்பரம் என்று அரையாடைக்கு மாறியது காந்தியின் ஆடை அரசியல் என்றால் கௌரவமான ஆடை அணிய அனுமதிக்கப்படாத சமூகத்தைச் சேர்ந்த அம்பேத்கர் கோட்டும் சூட்டும் அணிந்தது ஒடுக்கப்பட்டோருக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கான ஆடை அரசியல். பெரியாரின் கறுப்புச் சட்டை சனாதனத்துக்கு எதிரான ஆடை அரசியல். ஆண்டைகளுக்கு முன்னால் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டிருந்த நிலையை மாற்றி எல்லோரும் தோளில் துண்டு போட்டுக்கொள்ளலாம் என்ற துணிவைத் தந்தது திராவிட இயக்கத்தின் ஆடை அரசியல். அதேபோல் சிவப்புத் துண்டு உழைக்கும் வர்க்கத்தின் ஆடை அரசியல்.
பொது வாழ்க்கையில் மிகவும் எளிமையாக இருப்பவர்களை மக்கள் தம்மில் ஒருவராக அடையாளம் காண்பது வழக்கம். காந்தியில் ஆரம்பித்து காமராஜர், அண்ணா, கக்கன் இன்று நல்லக்கண்ணு வரை பலரும் அதில் அடங்குவார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சாதாரண இருசக்கர வாகனங்களில் செல்வது பத்திரிகைச் செய்தியாகும் அளவுக்கு எளிமைக்கும் அரசியலுக்கும் தூரம் என்றாகிவிட்ட காலம் இது. இந்த உளவியலை எல்லோருக்கும் முன்பு நன்கு புரிந்துகொண்டவர் காந்தி. அன்றாட வாழ்க்கையில் தான் பார்த்த ஏழ்மையுடன் இயல்பாகவே சமண மதப் பற்றின் காரணமாக ஏற்பட்ட துறவு மனப்பான்மையும் காந்தியைத் தன் ஆடை விஷயத்திலும் ஒரு துறவி போன்ற முடிவை எடுக்கச் செய்தது. காந்தியை எதிர்த்துக்கொண்டிருந்த, எதிர்த்துக்கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் பலரிடமும் காந்தி ஆடை, வாழ்க்கை முறை போன்ற விஷயத்தில் பெரும் தாக்கத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படுத்தியிருக்கிறார் (காந்தியை விரும்பிய/ விரும்பும் கம்யூனிஸ்ட்டுகளிடமும்தான்). அவரைப் போல அரையாடைக்கு மாறவில்லை என்றாலும் எளிமையான ஆடையுடன்தான் கணிசமான மூத்த கம்யூனிஸ்ட்டுகள் காணப்படுவார்கள்.
காந்தியின் ஆடையானது அவரது உடலிலிருந்து வேறுபட்டதல்ல. தன் வாழ்க்கையைப் போல தன் உடலையும் ஒரு செய்தியாக காந்தி உலகத்தாருக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் காட்டியதில் அவரது ஆடைக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. ஆடை விஷயத்தில் காந்தி அடித்தது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள். நான் உங்களில் ஒருவன் என்ற செய்தியை மக்களுக்கு உணர்த்தி அதன் மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் பின்னால் மக்களைத் திரளச் செய்தது ஒன்று. இன்னொன்று, கதரை மக்களிடம் பிரபலப்படுத்தி ஒரே நேரத்தில் பொருளாதாரரீதியில் இந்திய மக்களைத் தற்சார்பு கொண்டவர்களாக ஆக்கி பிரிட்டிஷ்காரர்களின் சுரண்டல் பொருளாதாரத்தைத் தடுமாறச் செய்தது. காந்தியின் ஆடை அரசியல் காரணமாக இங்கிலாந்தில் உள்ள ஆலைகள் பலவும் மூடப்பட்டன. அதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். 1931-ல் வட்டமேஜை மாநாட்டுக்காக இங்கிலாந்து சென்ற காந்தி அங்குள்ள ஆலைத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் வேலை இழப்புக்குத் தான் காரணமாக இருந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்தியாவின் தரப்பு நியாயத்தை அவர்களிடம் எடுத்துக்கூறி அவர்களுக்குப் புரியவைத்தார். எதிரியின் நாட்டு மக்கள் வேலை இழந்தால் நமக்கென்ன என்று எண்ணாமல் தங்களை நாடி வந்த காந்தியை அவர்கள் அன்புடன் உபசரித்துச் சிரித்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
எதிலும் தீவிரத்துடன் செயல்பட்ட காந்தியைப் பின்பற்றுவது மிகவும் அரிது. ஆனாலும், அவரது செயல்பாடுகள் அவரைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கைமுறையில் குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தின. காந்தியின் தொண்டர்களாகவும் அன்பர்களாகவும் இருந்த நேரு, படேல் உள்ளிட்ட பலரும் எளிமையான கதர் ஆடைகளுக்கு மாறினார்கள். அவர்களைப் பின்பற்றிப் பெரும்பாலான இந்தியர்களும் கதர் ஆடைகளுக்கு மாறினார்கள். ஆடையில் சுதேசியம், எளிமையான ஆடை அணிதல் என்ற ஒரு மனிதரின் முடிவுகள் எப்படி ஒரு தேசத்தின் தலையெழுத்தை மாற்றி ஒரு ஏகாதிபத்தியத்தை அசைத்துப்போட்டன என்ற வரலாற்றை நாம் அறிவோம்.
காந்தியிடம் எப்போதும் ஒரு சுயவதை இருந்தது. எல்லா மாற்றங்களுக்கும் பரிசோதனைக் களனாக, இலக்காகத் தன் உடலையும் மனதையுமே ஆக்கினார். புதுப்புதுப் பரிசோதனைகளில் அவற்றைப் புடம்போட்டார். ஒரு பரிசோதனை முடிந்தவுடன் தான் இலக்கை அடைந்துவிட்டதாக அவர் நின்றுவிடுவதில்லை. மேலும் புதுப் புதுப் பரிசோதனைகளை அவர் கண்டடைந்துகொண்டே இருந்தார். அவற்றில் அவர் பெறும் வெற்றியோ தோல்வியோ நாட்டின் மீது ஏதாவது ஒரு விதத்தில் தாக்கம் செலுத்தியது. ஆடை குறித்து அவர் எடுத்த முடிவும் அப்படிப்பட்டதொரு பரிசோதனைதான். 1921-ல் எடுத்த முடிவின்படி அவர் 1948-ல் படுகொலை செய்யப்படும் தருணம்வரை அவர் இம்மியளவும் பிசகாமல் நடந்துகொண்டார். அவரின் மிகவும் வெற்றிகரமான பரிசோதனைகளுள் ஒன்று அவரது ஆடை அரசியல்.
ஆடை விஷயத்தில் காந்தி எடுத்த முடிவின் காரணமாக அவரது மார்பு திறந்தே இருந்தது. எல்லோரையும் அரவணைக்கும் மார்பு அது. எல்லோர் அன்புக்கும் இலக்கான மார்பு அது. கூடவே, தீய சித்தாந்தத்தின் பிரதிநிதி ஒருவனின் 3 தோட்டாக்களுக்கும் இலக்கானது. அந்தத் தோட்டாக்களை வெற்று மார்பில் தான் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அதன் மூலம் தன் மரணமும் ஒரு செய்தியாக ஆக வேண்டும் என்பதற்காகவும்தானோ அதற்கும் 27 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி இந்த முடிவு எடுத்தார்?
- ஆசை, நன்றி: ‘இந்து தமிழ் திசை’
Sunday, September 21, 2025
மாயக்குடமுருட்டி - அப்பாவின் பிறந்தநாள் பகிர்வு
காலம்சென்ற எங்கள் அப்பாவு தேசிகாமணிக்கு இன்று 83-வது பிறந்தநாள். அப்பாவைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நான் எழுதிய ‘மாயக்குடமுருட்டி’ (எதிர் வெளியீடு, 2025) காவியத்தின் முதல் படலத்தை இத்துடன் பகிர்ந்துகொள்கிறேன்.