Friday, December 22, 2023

உடல்காடு



திருவனந்தபுரத்தின்
விலங்கியல் பூங்கா

தன் உடலைவிட
சில மடங்குகளே 
பெரியதொரு கூண்டில்
ஒரு புலி

சொல்லிச் சொல்லிச் சலித்த
அம்மண்ணின்
நினைவில் காடுள்ள மிருகம் வரியே
நினைவுக்கு வந்தது

குறுக்கும் நெடுக்குமாய்
மடக்கி மடக்கி உலவுவதையும்
அசைவற்றுக் கிடப்பதையும்
பார்த்தபோது
நினைவிலல்ல 
புலியின் உடலில்தான் காடு என்பது
உரக்கப் புரிந்தது

பூங்காவை விட்டு
வெளியே போகும்போது
உடல்தான் நினைவு என்று
உரக்கக் கத்த வேண்டுமென
அப்போதே
தீர்மானித்துக்கொண்டேன்
        - ஆசை 

No comments:

Post a Comment