Tuesday, May 27, 2025

நேரு என்ற மாபெரும் சாகசக்காரர்


ஆசை


நேருவின் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தை ராமச்சந்திர குஹா தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.

அது 1942-ம் ஆண்டு. காந்தி தனது ஆசிரமத்தில் காங்கிரஸ் கூட்டமொன்றை நடத்துகிறார். அந்தக் கூட்டம் முடிந்தவுடன் அலகாபாத் செல்வதற்காக ரயிலைப் பிடிக்க வேண்டிய அவசரத்தில் நேரு கிளம்புகிறார். ‘சீக்கிரமாகப் போய் ரயிலைப் பிடிப்பதற்குக் கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக’ என்று கஸ்தூர் பா, நேருவை ஆசிர்வதித்திருக்கிறார். அந்த அவசரத்திலும் நேருவுக்குக் கோபம் தலைக்கேறுகிறது. ‘காட்டுமிராண்டித்தனமான போர்களை அனுமதிப்பவர்தான் கடவுளா? விஷவாயு கொண்டு யூதர்கள் படுகொலை செய்யப்படுவதை அனுமதிப்பவர்தான் கடவுளா? ஏகாதிபத்தியமும் காலனியாதிக்கமும் வேட்டையாட அனுமதிப்பவர்தான் கடவுளா?’ என்ற ரீதியில் நேரு பொரிந்துதள்ளியிருக்கிறார். சுற்றிலும் அப்படியொரு அமைதி. கஸ்தூர் பாவை எதிர்த்துப் பேசும் தைரியம் காந்திக்குக்கூட கிடையாது. சங்கடமான இந்தச் சூழலில் காந்தி நுழைகிறார், “பா, ஜவாஹர்லால் என்ன சொல்லியிருந்தாலும் நம்மையெல்லாம் விட கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவர் அவர்தான்” என்கிறார்.

Thursday, May 8, 2025

பழிக்குப் பழி (பாலஸ்தீனக் கவிதை)

 

தாஹா முகம்மது அலி

(போர் ஆதரவாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய கவிதை)
**
சில சமயங்களில்… நான் ஆசைப்படுவதுண்டு…
என் அப்பாவைக் கொன்று
எங்கள் வீட்டைத் தரைமட்டமாக்கி
குறுகலானதொரு நிலத்துக்குள் என்னை விரட்டிய
அந்த மனிதனை ஒரு துவந்த யுத்தத்தில் நேருக்கு நேர் சந்திக்க வேண்டுமென்று
சில நேரங்களில் நான் ஆசைப்படுவதுண்டு.
அந்தச் சண்டையில் அவன் என்னைக் கொன்றுவிடுவான் எனில்
நான் ஒருவழியாக நிரந்தர அமைதியில் ஆழ்ந்துவிடுவேன்…
இல்லையெனில், அவனைப் பழிவாங்கத் தயாராகிவிடுவேன்.
•ஆனால்,
துவந்த யுத்தத்தில் என்னுடைய எதிரியை எதிர்கொள்ளும்போது
அவனுக்காக வீட்டில் அவனுடைய அம்மா காத்துக்கொண்டிருப்பாள் என்பதோ,
குறித்த நேரத்தில் வராமல்
கால்மணி நேரம் தாமதித்தாலும்,
தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கும்
தந்தை ஒருவர் இருப்பார் என்பதோ
எனக்குப் புலப்பட்டால்
நான் நிச்சயம் அவனைக் கொல்ல மாட்டேன்,
என்னால் முடிந்தால்கூட.
• அதேபோல்… அவனுக்குத் தம்பிகளும் தங்கைகளும் இருப்பார்கள் என்பதையோ
அவன்மேல் மிகுந்த அன்பைக் கொண்டிருக்கும் அவர்கள்
அவனுக்காக ஏங்குவார்கள் என்பதோ
எனக்குத் தெரிய வந்தாலும்
அவனை நான் கொல்ல மாட்டேன்.
அவன் வீடு திரும்பும்போது அவனை வரவேற்க மனைவியொருத்தி இருந்தாலோ
அவனது பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத,
அவன் அளிக்கும் பரிசுகளால் குதூகலமடையும் குழந்தைகள் இருந்தாலோ
நான் அவனைக் கொல்ல மாட்டேன்.
அல்லது
அவனுக்கு நண்பர்களோ சகாக்களோ
தெரிந்த அண்டை வீட்டுக்காரர்களோ
சிறையில் மருத்துவமனையில் பரிச்சயமான கூட்டாளிகளோ
பள்ளித் தோழர்களோ இருந்தால்…
அவனைப் பற்றி விசாரிக்கக் கூடியவர்களோ,
அவனுக்கு வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பக் கூடியவர்களோ இருப்பார்கள் என்றால்
நான் அவனைக் கொல்ல மாட்டேன்.
• ஆனால்,
அவனுக்கு யாருமே இல்லை என்றாலோ
-அதாவது மரத்திலிருந்து துண்டிக்கப்பட்ட கிளையைப் போல அவன் இருப்பான் என்றாலோ-
அம்மா, அப்பா இல்லாமல்,
தம்பி, தங்கைகள் இல்லாமல்
மனைவி இல்லாமல், குழந்தைகள் இல்லாமல் அவன் இருந்தாலோ
உற்றார் உறவினரோ அண்டை அயலாரோ
நண்பர்களோ சகாக்களோ கூட்டாளிகளோ
இல்லாதவன் என்றாலோ
ஏற்கெனவே தனிமையில் வாடும் அவனுக்கு
மேலும் வேதனையை ஏற்படுத்த மாட்டேன்.
மரணமெனும் அவஸ்தையை,
இறந்துபோவதன் துக்கத்தைத் தர மாட்டேன்,
அதற்குப் பதிலாக,
தெருவில் அவனைக் கடந்துசெல்லும்போது
அவனைப் பொருட்படுத்தாமல் செல்வதையே விரும்புவேன்,
அவனைக் கண்டுகொள்ளாமல் விடுவதும்கூட
ஒரு வகையில் வஞ்சம் தீர்ப்பதுதான்
என்று எனக்குள் திருப்திப்பட்டுக்கொள்வேன் நான்.
-(நாசரேத், ஏப்ரல் 15, 2006) -தாஹா முகம்மது அலி (1931-2011), பாலஸ்தீனக் கவிஞர்,
-ஆங்கிலத்தில்: பீட்டர் கோல், தமிழில்: ஆசை

Monday, May 5, 2025

21-ம் நூற்றாண்டுக்கு மார்க்ஸ் என்ன சொல்கிறார்? மார்க்ஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை


 

யானிஸ் வரூஃபக்கீஸ்

(தமிழில்: ஆசை)

ஒரு அரசியல் அறிக்கை வெற்றிபெற வேண்டுமென்றால் அது ஒரு கவிதையைப் போல நம் இதயத்துடன் பேச வேண்டும். அதே நேரத்தில் நம் மனதில் அசாதாரணமான புதிய படிமங்களையும் கருத்துக்களையும் விதைக்க வேண்டும். நம்மைச் சுற்றி நிகழும் குழப்பம் நிறைந்த, வருத்தமளிக்கக்கூடிய, பரவசமான மாற்றங்களின் உண்மைக் காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளும் வகையில் நம் கண்களை அது திறக்க வேண்டும்.

கூடவே, நம் தற்போதைய சூழல் தன்னுள் கருக்கொண்டிருக்கும் சாத்தியங்களையும் அது வெளிக்காட்ட வேண்டும். இந்த உண்மைகளை நாமே அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போய்விட்டதே என்று நம் இயலாமையை நினைத்து நம்மை வருத்தப்பட வைக்க வேண்டும். மிகவும் பிற்போக்கான கடந்த காலத்தையே திரும்பத் திரும்ப உற்பத்திசெய்வதில் நாமும் கொஞ்சம் உடந்தையாகத்தான் இருந்திருக்கிறோம் என்ற சங்கடமான உண்மையை நாம் உணர்வதற்குத் தடையாக இருக்கும் திரையை அது அகற்ற வேண்டும்.