Saturday, July 26, 2025

கமல், ஸ்டேன்லி கூப்ரிக்கை என்ன செய்தீர்கள்? - ஸ்டேன்லி கூப்ரிக் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு


ஆசை

(இப்படைப்பு முழுவதும் கற்பனையே. ஆனால் யாருடைய கற்பனை என்பது தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்தான் இந்தப் படைப்பு தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறது. இறுதியில் படைப்பும் அதன் பார்வையாளர்களும் சேர்ந்து இது யாருடைய கற்பனை என்று கண்டுபிடித்தால் மகிழ்ச்சியே. கமல், சத்யராஜ், வாகை சந்திரசேகர், நிக்கி கல்ரானி, ஜெய் மற்றும் ஸ்டேன்லி கூப்ரிக் ஆகியோரின் ரசிகர்கள் மனம் புண்படும் என்றால் அவர்களிடம் இந்தப் படைப்பு, மனமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.)

**
நடிப்பு: பத்மஸ்ரீ கமல்ஹாசன் (அப்போது உலக நாயகன் பட்டம் தரப்படவில்லை), சத்யராஜ், வாகை சந்திரசேகர், ஜெய், நிக்கி கல்ரானி இவர்களுடன் நானும் நீங்களும்.

கதை-திரைக்கதை-வசனம்: ஸ்டேன்லி கூப்ரிக், கமல்ஹாசன், நானும் நீங்களும்

இயக்கம் – முதல் அத்தியாயத்தின் முடிவில் தெரிந்துகொள்வீர்கள்   

குறிப்பு: இத்திரைப்படம் மன்னார்குடி சத்யா திரையரங்கில் மட்டுமே தினமும் இரவு ஒரு மணிக்குத் திரையிடப்படும்

**

1.

சைக்கிளை விட்டு இறங்காமல் ஒற்றைக்காலை ஊன்றிக்கொண்டு  “கோபாலகிருஷ்ணன்” என்றான் பிரகாஷ்.

நானும் “கோபாலகிருஷ்ணன்” என்றேன். சங்கேதம் ஒப்புக்கொள்ளப்பட்டது.

“ஆனா இன்னைக்கு ரொம்ப ரொம்ப வேற விஷயம் அப்படின்னாரு சண்முகம் அண்ணே” என்றான். 

அவ்வளவு தூரம் சைக்கிள் மிதித்து வந்ததில் இன்னும் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது அவனுக்கு.

“சரி நீ போ. நான் வந்துடுறேன்.”

Friday, July 25, 2025

மக்களிடம்தான் சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டும்! - இயக்குநர் மகேந்திரன் பிறந்தநாள் மீள்பகிர்வு


ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான இயக்குநர் மகேந்திரன் நேர்காணலின் முழு வடிவம் இது. இந்த நேர்காணலின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அச்சில் வெளியாகியிருக்கிறது. முழுமையான, விரிவான நேர்காணல் எனது வலைப்பதிவில் பிரத்யேகமாக இங்கே...)

ஐம்பது ஆண்டுகள் ஆகப்போகின்றன மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ இரண்டு படங்களும் வெளியாகி. ஆனாலும், சலிக்கவே சலிக்காமல் தமிழ்த் திரையுலகமும் ரசிகர்களும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் இன்னமும். இன்று அவரது 86-வது பிறந்தநாள். அதனை முன்னிட்டு அவரது நேர்காணலின் மீள்பகிர்வு இங்கே...

இன்று புதிதாக வரும் இயக்குநர்களும் உங்களை ஆதர்சமாகக்கொண்டிருக்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எனக்கு எல்லாமே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. நான் வேண்டுமென்றே எந்த உத்தியையும் பின்பற்றி அந்தப் படத்தை எடுக்கவில்லை. எனக்குத் தெரிந்த சினிமாவை நான் எடுத்தேன். ஆனால், மக்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் நிறைய எழுதுகிறார்கள் அதைப் பற்றி. அதற்கு என்ன காரணம் என்பதை உங்களைப் போன்ற பத்திரிகைகாரர்கள்தான் ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

எனக்குப் பள்ளி நாட்களிலேயே தமிழ்த் திரைப்படங்கள் மீது ஒரு ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது. மேடை நாடகங்கள் போலவும் வானொலி நாடகங்கள் போலவும் தமிழ்த் திரைப்படங்கள் இருப்பதாக நான் உணர்ந்தேன். சினிமா ஒரு காட்சி ஊடகமாக இருக்க வேண்டும். காட்சிகளால் நகர வேண்டும் என்று நினைத்தேன். எனக்குத் தமிழ்த் திரைப்படங்கள் மீது என்னென்ன ஒவ்வாமைகளெல்லாம் இருந்தனவோ அதையெல்லாம் நீக்கிவிட்டு எடுத்த படம்தான் ‘உதிரிப்பூக்கள்’.

Saturday, July 12, 2025

பாப்லோ நெருதா கவிதைகள் - பிறந்தநாள் பகிர்வு



1. ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு ஒரு பாடல்

ஃபிடல், ஃபிடல்,
செயலாக மாறிய சொற்களுக்கும்
பாட்டாக ஒலிக்கும் செயல்களுக்கும்
நன்றிகாட்டுகிறார்கள் மக்கள்,
காணாத தூரத்தைக் கடந்து நானொரு கோப்பையில்
என் நாட்டின் மதுவோடு வந்திருப்பதும் அதனால்தான்:
நிலத்தடி மக்களின் உதிரம் அது
இருட்டிலிருந்து புறப்பட்டு உனது தொண்டையை
வந்தடைகிறது,

உறைந்துகிடந்த நிலத்திலிருந்து
நூற்றாண்டுகளாய்த் தீயைப் பிழிந்து
வாழ்ந்த சுரங்கத் தொழிலாளிகள் அவர்கள்.
கடலின் ஆழத்திலும்
நிலக்கரியைத் தேடும் அவர்கள்
பேயுருகொண்டு கரையேறுகிறார்கள்:
முடிவில்லா இரவுக்குப் பழகிக்கொண்டுவிட்டார்கள் அவர்கள்,
பகல் வேளையின் வெளிச்சம் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது,

ஆயினும், இதோ, இந்தக் கோப்பை.
சொல்லொணாத் துயரத்தினதும்,
கண்காணாத தூரத்தினதும் கோப்பை.
இருளும் பிரமைகளும்
பேயாய்ப் பற்றிக்கொண்ட,
சிறைப்பட்ட அந்த மனிதர்களின்
மகிழ்ச்சி அது.

சுரங்கங்களின் உள்ளே இருந்தாலும்
வசந்தத்தின் வரவையும்
அந்த வரவோடு வந்த சுகந்தங்களையும்
உணர்கிறார்கள் அவர்கள்.
தெளிவின் உச்சத்துக்காக மனிதன் போராடுகிறான்-
இதனை அறிந்தவர்களல்லவா அவர்கள்.

தெற்குப் பிரதேசத்தின் சுரங்கத் தொழிலாளிகளும்,
பரந்த புல்வெளிப் பிரதேசத்தில் தனியர்களாய் இருக்கும் மைந்தர்களும்,
படகோனியாவின் குளிரில் வாடும் மேய்ப்பர்களும்,
தகரத்துக்கும் வெள்ளிக்கும் பிறப்பளிக்கும் தகப்பன்களும்,
காதில்யெரா மலைத் தொடர்களுக்கு வாழ்க்கைப்பட்டு
சூகீக்கெமாதெ சுரங்கங்களிலிருந்து செம்புத் தாதுவை அகழ்பவர்களும்,
பேருந்துகளின் கூட்டமும்,
நேற்றைய நினைவிலேயே நிலைத்துவிட்ட நெரிசலும்,
வயல்கள் பட்டறைகளில் உழைக்கும் பெண்களும்,
குழந்தைப் பருவத்தை அழுதே கழித்த குழந்தைகளும்,
க்யூபாவைப் பார்க்கிறார்கள்:

இதுதான் அந்தக் கோப்பை, எடுத்துக்கொள் ஃபிடல்.
அவ்வளவு நம்பிக்கையால் நிறைந்திருக்கும் கோப்பை இது!
அருந்தும்போது நீயறிவாய்
ஒருவரால் அல்ல, பலராலும்
ஒரு திராட்சையால் அல்ல, பல தாவரங்களாலும் உருவான,
எனது தேசத்தின்
பழம் மதுவைப் போன்றது உனது வெற்றி என்பதை.

ஒரேயொரு துளியல்ல; பல நதிகள்:
ஒரேயொரு படைத்தலைவன் அல்ல, பற்பல போர்கள்.
நீண்ட, நெடிய போராட்டம் நம்முடையது,
அதன் ஒட்டுமொத்த மகத்துவத்தின் முழு உருவம் நீ.
அதனால்தான் அவர்களின் ஆதரவெல்லாம் உனக்கு.

க்யூபா வீழுமென்றால் நாங்களும் வீழ்வோம்,
அவளைக் கைதூக்கிவிட நாங்கள் வருவோம்,
அவள் பூத்துச் சொரிந்தால்
நாம் வென்றெடுத்த தேன்கொண்டு செழித்திடுவாள்.
உன் கைகளால் கட்டவிழ்ந்த
க்யூபாவின் நெற்றியை யாராவது தொடத் துணிவார்களென்றால்,
மக்களின் முஷ்டிதான் அவர்களுக்கு பதிலளிக்கும்,
புதைந்திருக்கும் நமது ஆயுதங்களைக் கைக்கொள்வோம்:

எங்கள் நேசத்துக்குரிய க்யூபாவைப் பாதுகாக்க
எங்களுக்குத் துணையாய் வரும்
உதிரமும் மாண்பும்!


2. தேனீக்களுக்கு ஒரு பாடல்

மொய்க்கும் தேனீக்கூட்டமே
உலகின் மென்மைக்கும் மென்மையான
சிவப்பு, நீலம், மஞ்சளின் உள்ளே
புகுந்தும் புறப்பட்டும்
தொழிலுக்காகப்
பூவிதழின் அடுக்கினுள்
கவிழ்ந்து விழுந்து, மீண்டு,
பொன்மயமான உடையும்,
கணக்கில்லா மஞ்சள் காலணிகளும்.
கச்சிதமான இடை, கரும்பட்டைக் கோடிட்ட கீழ்வயிறு
துருதுருக்கும் சின்னஞ்சிறிய தலை
புத்தம்புதிய நீராலான இறக்கைகள் ---
மணங்கமழும் ஜன்னல்கள் எல்லாம் நுழைந்து,
பட்டுக் கதவுகளைத் திறந்து,
இணையில்லா மணம் வீசும் காதலின் மணவறையில் நுழைந்து,
வைரப் பொட்டாகப் பனித்துளியைக் கண்டெடுக்கிறீர்கள்.

சென்றுவரும் வீடெல்லாம்
தேன் என்னும் புதிரை, வளத்தை, கட்டமுதை
அள்ளிச்செல்கிறீர்கள்
அது அடர் மணம், ஓடையாய் ஒளிரும் திரவம்.

கூடிவாழும் கூடத்துக்கு மீண்டுவந்து
அதன் கைப்பிடிச் சுவரில்
பூவின், விண்வெளிப் பாய்ச்சலின்
விளைச்சலான அந்த
கந்தர்வ ரசத்தை, மணநாளின் ரகசியச் சூரியனை,
தேனை, சேமித்து வைத்து
மொய்க்கும் தேனீக்களே,
ஒற்றுமையின் புனித முகடே,
ரீங்கரிக்கும் கல்விக்கூடமே.

ரீங்கார ஆரவாரத்தில்
பூவின் மதுவைப் பக்குவமாக்க
அமுதத் துளிகளைப் பரிமாறி
பசுமை படர்ந்த
ஒசர்னோ எரிமலையின் ஏகாந்த வெளியில்
வெய்யில்காலப் பிற்பகலின் கண்ணயர்வு--
உச்சி சூரியன்
ஈட்டிக் கிரணங்களைப் பனிமீது பாய்ச்ச,
எரிமலைகள் ஒளிர
கடலாக நிலம் விரிகிறது.

நீல வெளியின் ஏதோவொரு நடுக்கம்.
கனன்றுவரும் கோடையின் இதயம்,
தேனினிக்கும் இதயங்கள் பெருகின
ரீங்கரிக்கும் தேனீ
நொறுங்கிச் சடசடக்கும் தேன்கூடு
பொன்வண்ணம், சிறகின் படபடப்பு!
தேனீக்களே,
களங்கமில்லா உழைப்பாளிகளே, ஊன்பெருக்காத கூன் உடல்
தொழிலாளர்களே ஒளிவீசும் தொழிலாள வர்க்கமே!

தன்னையே மாய்த்துவிடும் கொடுக்கோடு கொட்டிச் சாடும்
குறையில்லா தீரப் போர்ப்படையே
இரைச்சலிடுங்கள், புவியின் கொடைகளின்மேல்
பொன்வண்ணக் குடும்பமே,
காற்றின் மந்தையே
பூக்களின் தீயை,
மகரந்தக் கேசரத்தின் தவிப்பை,
நாசியைத் துளைக்கும் நறுமண நூலை,
நாட்களை இணைத்துத் தைக்கும் நூலை,
அந்தத் தேனை விசிறித் தெளியுங்கள்
வெம்மையான கண்டங்களைக் கடந்து
மேலை வானின் தொலைதூரத் தீவுகளுக்கும்.

ஆம்,
பசுமைச் சிலைகளை
தேன் மெழுகு உருவாக்கட்டும்!
எண்ணில்லா நாவில் தேன் சிதறட்டும்,
தேன்கூடாய் ஆகட்டும் அந்தப் பெருங்கடல்
புவியே பூக்களாலான கோபுரமாய், அங்கியாய் மாறட்டும்!
உலகமே ஓர் அருவியாகட்டும்
எரிகல்லின் ஒளிரும் வாலாக
தேன்கூடுகளின் முடிவில்லாச் செல்வமாய் ஆகட்டுமே!


3.

உனது உடலின் வரைபடத்தை
நெருப்பின் குறியீடுகளால் 
குறித்துக்கொண்டு செல்கிறேன்எனது இதழ்கள்
உன் உடல் முழுதும் செல்கிறது
ஒளிந்துகொள்ள முயலும் சிலந்தியாய்.
உனக்குள், உன் பின்னே, கோழையாய்,
தாகத்தால் விரட்டப்பட்டு.

மாலையின் கரையில்
உனக்குச் சொல்வதற்கு 
கதைகளுண்டு நிறைய,
சோகவயப்பட்ட நளினமான பொம்மையே,
எனவே நீ துக்கமடைய மாட்டாய்.
ஒரு அன்னம், ஒரு மரம்,
தூரத்திலிருக்கும் மகிழ்ச்சியான ஏதோ ஒன்று.
திராட்சைகளின் பருவம், முதிர்ந்த, நிறைந்த பழங்களின் பருவம்.

எங்கு உன்னைக் காதலித்தேனோ 
அந்த துறைமுகத்தில் வாழ்ந்த நான்.
கனவாலும், அமைதியாலும் 
குறுக்கிடப்பட்ட அந்தத் தனிமை.
கடலுக்கும் துயரத்துக்கும் மத்தியில்
அடைக்கப்பட்டு.

நிசப்தமாக, பீடிக்கப்பட்டு, 
அசைவற்ற இரு படகோட்டிகளுக்கு மத்தியில்.
உதடுகளுக்கும் குரலுக்கும் இடையே
மங்கிக்கொண்டு வருகிறது
ஏதோ ஒன்று.
பறவையின் சிறகுகளுடன் ஏதோ ஒன்று,
வலியுடன், சுயநினைவற்று,
ஏதோ ஒன்று.
வலையால் தண்ணீரைப் 
பிடித்துவைத்திருக்க முடியாததைப் போல.
என் விளையாட்டுப் பொம்மையே,
ஓரிரு துளிகள் மட்டும் 
தனித்து நடுங்கிக்கொண்டிருக்கின்றன.

அப்படியும், ஏதோ ஒன்று பாடுகிறது,
நிலையற்ற இந்த சொற்களால்.
ஏதோ ஒன்று பாடுகிறது, 
எனது பசிகொண்ட வாயில்
பற்றி ஏறுகிறது.
ஓ! பரவசத்தின் அனைத்துச் சொற்களாலும் 
கொண்டாட முடிகிறது
உன்னை.

பாடு, எரி, பற, 
ஒரு பைத்தியக்காரனின் கையில் 
அகப்பட்ட கோயில் மணியைப் போல.
என் சோகவயப்பட்ட கனிவே,
உன்னை சட்டென்று ஆட்கொள்வது எது?
மிகவும் கிளர்ந்திழுக்கும்
குளிர்ச் சிகரத்தை எட்டி முடித்ததும்
என் இதயம் மூடிக்கொள்கிறது
ஒரு இரவு நேர மலரைப்போல.


4.

உன் முலைகள் 
என் இதயத்திற்குப் போதுமானவை
என் சிறகுகள் 
உன் விடுதலைக்கு.
உனது இதயத்தின் மேல் உறங்கிக்கொண்டிருப்பது
என் உதடுகளின் வழியாக வானத்தை நோக்கி
உயரும்.

உனக்குள் ஒவ்வொரு நாளின் 
மாயத்தோற்றம்.
விரிந்த மலர்களில் வீழும் 
பனித்துளிகளைப் போல் வருகிறாய் நீ. 

தொடுவானத்தை மங்கச் செய்கிறாய் நீ
உனது பிரிவால்.
அலைகளைப் போன்று 
முடிவில்லாமல் பறந்துகொண்டிருக்கிறாய்.
ஊசியிலை மரங்களைப் போல
பாய்மரங்களைப் போல
நீ காற்றில் பாடுகிறாய் என்று 
சொல்லியிருக்கிறேன் நான்.
அவற்றைப்போல நீயும் உயரமாக, 
பேசாமடந்தையாக
மேலும் சட்டென்று சோகமாக, 
ஒரு கடற்பயணத்தைப்போல.

பொருட்களை திரட்டிக்கொள்கிறாய் உன்னிடத்தில்
ஒரு பழைய சாலையைப்போல.
எதிரொலிகளாலும்
பழைய நினைவுகளின் குரல்களாலும்  
நிறைந்திருக்கிறாய்.

நான் எழுகிறேன்
சில சமயங்களில் 
பறந்துசெல்கின்றன, இடம்பெயர்கின்றன
உன் இதயத்தில் உறங்கிக்கொண்டிருந்த பறவைகள்.


5.

பெண்ணுடல், வெள்ளை மலைகள், வெண்ணிறத் தொடைகள்,
உனது சரணாகதித் தோற்றத்தில் இந்த உலகைப் போன்று தோன்றுகிறாய் நீ.
எனது கொடிய முரட்டுத்தனமான உடல் உன்னில்  தோண்டி
துள்ளியெழச்செய்கிறது குழந்தையைப் புவியின் ஆழத்திலிருந்து.

நான் தனியாகச் சென்றேன் ஒரு வளையைப்போல. பறவைகள் பறந்துசென்றன என்னிடமிருந்து, மற்றும் இரவு தனது வலிமையால் ஊடுருவியது என்னில்.
நான் பிழைத்திருப்பதற்காக உன்னைத் தட்டிதட்டி செய்தேன் ஒரு ஆயுதமாக,
எனது வில்லில் அம்பாக, எனது கவணில் கல்லாக.

ஆனால் பழிவாங்கும் தருணம் வந்துவிட்டது, அதனால் உன்னை நான் நேசிக்கிறேன்.தோலின், பாசியின், விடாயின், நிதானமான பால்.
ஓ முலைகளின் கோப்பைகளே! பிரசன்னமின்மையின் விழிகளே!அடிவயிற்றின் ரோஜாக்களே! ஓ உனது மெல்லிய, துயரமான குரலே!

பெண்ணுடலே, நான் உனது மகிமையால் நிலைத்திருப்பேன்.
எனது விடாய், எனது கட்டற்ற ஏக்கம், எனது குழப்பமான பாதை!முடிவற்ற தாகங்கள் பாய்ந்துசெல்லும்,
களைப்பு பாய்ந்துசெல்லும், எல்லையற்ற சோகம் பாய்ந்துசெல்லும் கருநிற நதிப்படுகைகள்.