Saturday, March 8, 2025

மகளிர் தினத்தில் காந்தியையும் ஏன் நினைவுகூர வேண்டும்?



ஆசை

பகுதி-1

இன்று 'உலக மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது. வரலாறு படைத்த பெண்கள், வரலாற்றால் மறைக்கப்பட்ட பெண்கள் போன்றோரை இன்று நினைவுகூர்வது வழக்கம். பெண்ணுரிமை வரலாற்றில் பெண்களின் பங்கை முதன்மையாகச் சொல்ல வேண்டியது முக்கியம். அதே நேரத்தில் பெண் முன்னேற்றத்துக்காக ஒரு வகையிலோ பல வகைகளிலோ போராடிய ஆண்களையும் நினைவுகூர்வது அவசியம். இந்திய வரலாற்றில் புத்தரில் தொடங்கி பிற்காலத்தில் ராஜாராம் மோகன்ராய், ஜோதிராவ் பூலே, காந்தி, அம்பேத்கர், பெரியார் முதலான பல ஆண் தலைவர்கள் பெண்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். பெண்கள் முன்னேற்றத்துக்கு காந்தி ஆற்றிய பணிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

Friday, March 7, 2025

ஒரு பொம்மலாட்டம் நடக்குது! - ஒட்டுண்ணிகளின் மர்மக் கதை


ஆசை

ஒருநாள் உங்கள் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு ஒருவர் உள்ளே நுழைகிறார். “ஏன் கதவை உடைத்தாய்?” என்று அவரைக் கேட்பதற்குள் அவர் உங்களை காபி கொண்டுவரச் சொல்கிறார். ஒய்யாரமாக உங்கள் வீட்டு சோபாவில் உட்கார்ந்துகொள்கிறார். உங்களை ஓடிப்போய் சரவணபவனில் நானும் பனீர் பட்டர் மசாலாவும் வாங்கிவரச் சொல்கிறார். நீங்களும் அவர் சொன்னதையெல்லாம் அப்படியே செய்கிறீர்கள். அது எல்லா விஷயங்களிலும் தொடர்கிறது. உங்கள் சம்பளப் பணத்தை அப்படியே அவரிடம் தந்துவிடுகிறீர்கள். உங்கள் வீட்டை அவர் பேருக்கு எழுதித் தந்துவிடுகிறீர்கள். கடைசியில் அந்த வீட்டை அவரிடம் ஒப்படைத்துவிட்டு நீங்களே வெளியேறிவிடுகிறீர்கள். இப்படியெல்லாம் நமக்கு நடந்தால் எப்படி இருக்கும்!

Thursday, March 6, 2025

தான்தான் கடவுள்



தன் வாழ்நாள் முழுவதும்
சிரமப்பட்டு
இந்த ஒரே ஒரு தேன்சிட்டைப்
படைத்தார் கடவுள்
பிறகு தேன்சிட்டுக்கென்று
தேனையும்
தேனுக்கென்று பூவையும்
பூவுக்கென்று செடியையும்
செடியிருக்கத் தரையையும்
தரைக்கென பூமியையும்
பூமிக்காக வானம்
நட்சத்திரங்களென்று
யாவற்றையும் படைத்தார் கடவுள்
எல்லாம் தனக்காகப்
படைக்கப்பட்டிருந்தாலும்
எதைப் பற்றியும்
கவலைகொள்வதில்லை
இந்தத் தேன்சிட்டு
பிரபஞ்சத்தின் எந்த விதிகளையும்
மதிப்பதில்லை
கடவுள் இருக்கிறாரா
இல்லையா என்றுகூட
எண்ணிப் பார்ப்பதில்லை
பாருங்கள்
போகிறபோக்கில்
காலத்தின் உள்ளங்கையில்
எப்படி அது எச்சமிட்டுப் போகிறது
என்பதை
என்னவோ தான்தான்
கடவுள் என்பதைப் போல

-ஆசை, கொண்டலாத்தி (2010, க்ரியா) கவிதைத் தொகுப்பிலிருந்து 

Wednesday, March 5, 2025

இந்தப் பிரபஞ்சத்தின் மையம் எது?

  


டெனிஸ் ஓவர்பை

இந்தப் பிரபஞ்சம் ஏதோ ஒரு இடத்தில் தொடங்கியது என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையல்ல. பிரபஞ்சத்தின் பிறப்புக்குக் காரணமான பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்தது இடத்தில் அல்ல, காலத்தில்.

பெருவெடிப்பு நிகழ்ந்தது எங்கேஎன்று என்னிடம் பலரும் அடிக்கடி கேட்பதுண்டு. கையெறி குண்டு ஒன்று வெடிப்பதைப் போன்று பிரபஞ்சம் விரிவதையும், அந்தக் கையெறிகுண்டின் சிதறல்கள் பறப்பதுபோல் சூரிய குடும்பத்தையும், பால்வெளியையும் கற்பனை செய்துகொண்டு இது போன்ற கேள்வியைக் கேட்கிறார்கள்

Tuesday, March 4, 2025

ஆன்மா என்பது உடலின் சிறை


நீ என்மேல்
படரும்போது
முதன்முறையாக
என்மேல்
தோல் போர்த்தியதுபோல்
இருக்கும்
உன் தொடுதலின்
பரப்பில் எதிர்பட்ட
என் உடலின் பரப்பெல்லாம்
புலனெல்லாம்
தத்தமது உணவுக்கான
ஒளிச்சேர்க்கையை
நடத்திக்கொள்ளும்
உன் உடல்
என்னுடலில்
தனக்கான
இன்பத்தின் கனிகளைக்
கொய்து
எனக்கான கனிகளைக்
கொட்டிவிட்டுச்செல்லும்
அதில் எடுத்து
நான் கொறிக்கும்
கனியொன்று
யோனிக்கருப்பில்
கனிந்திருக்கும்
இன்னொன்று
முலைத்திரட்சியில்
திரண்டிருக்கும்
மற்றொன்று
உதட்டுச் சிவப்பில்
சிவந்திருக்கும்
நாம் நீக்கமற
ஒருவரையொருவர்
புசித்துக்கொள்வதற்கான இடமே
இவ்வுடல்கள்
என்றறி
நீ உண்ணும் கனி
எனக்கான கனியாய்
மாறும் விளையாட்டு
இது என்றறி
ஒவ்வொரு அங்குலமாக
என் உடலில் நீ ஏறும்போது
அவ்வவ்விடங்களின்
ஆன்மாவைத் தேடாதே
ஆன்மா என்பது
உடலின் சிறையென்றறி*
ஆன்மாவிலிருந்து
உடலை விடுவிக்கவே
நம்
ஒட்டுமொத்த இன்பத்தையும்
கொண்டு
தாக்குதல் செய்துகொள்கிறோம்
ஏதோ எப்போதோ
உடலின் ரூபத்தை
ஆன்மா எடுத்துக்கொண்டுவிட்டது
அதனிடம் நீ உடலில்லை எனவும்
உடலிடம் நீதான் உடல்
உடல்தான் இறுதி எனவும்
சொல்ல நாம்
கடமைப்பட்டுள்ளோம்
நம் ஒவ்வொரு
அங்குலத்துக்கும்
நாவிருக்கிறது
அதைக் கொண்டு
ஒரு இடம் விடாமல்
சுவைப்போம்
நம் ஒவ்வொரு அங்குலத்துக்கும்
குறியுண்டு
அதைக் கொண்டு
ஒரு இடம் விடாமல்
புணர்வோம்
ஆன்மாவைத்
துரத்திவிட்டு
அந்த இடத்தில்
குடிபுகும்போது
நாம் இருவரும்
குறிகளாய் மட்டும்
எஞ்சுவது
எவ்வளவு பேரானந்தம்
நம் குறிகள்
பிரபஞ்சத்தின்
இரட்டை விண்மீன்களாய்
பதிந்துவிட
வீழ்ந்த தேவதையான
ஆன்மா தூரத்திலிருந்து
தன் கப்பல் திசைக்கு
நம்மை விண்மீன் பார்ப்பது கண்டு
ஒருவரையொருவர் பார்த்து
நாம் சிரித்துக்கொள்வோம்
-ஆசை, குவாண்டம் செல்ஃபி (2021) தொகுப்பில் இடம்பெற்ற கவிதை
*ஆன்மா என்பது உடலின் சிறை: மிஷேல் ஃபூக்கோ