Thursday, February 27, 2025

நாளை காப்பாற்றலாம்



மனம் சிதறுண்டு
ஒருவன்
உட்கார்ந்திருக்கிறான்
அவன்
தனது கழிவிரக்கத்தைச்
சிற்பமாகச் செய்து
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை
சிதறலின் இடைவெளிக்கு அப்பால்
கொஞ்சமே கொஞ்சம் தெரியும்
மிச்ச வாழ்க்கை
தன்னைப் போல் இருக்கிறதா
என்று மட்டும் பார்த்துக்கொண்டே
இருக்கிறான்
உங்களுக்கு அவன்
தன் சிதறலுக்கு
மாடலாய்
உட்கார்ந்திருப்பதாகத்
தோன்றலாம்
இந்தக் கிறுக்குத்தனத்திலிருந்து
எப்படியாவது
அவனைக் காப்பாற்ற வேண்டும்
என்று நீங்கள் துடிதுடிக்கலாம்
உங்களிடம்
அவனைக் காப்பாற்றுவதற்கான
எல்லா உபாயங்களும்
ஆயுதங்களும்
கருவிகளும்
இருக்கலாம்
இது அவனுக்கும்
பரிபூரணமாகத் தெரியும்
ஆனால்
உங்கள் அன்பையும் அக்கறையையும்
சிதறல்களை ஒட்டும் பசையையும்
சிதறலின் வேர்களைக்
கண்டுபிடிக்கும் கருவிகளையும்
நாளைக்குக் கொண்டுவாருங்கள் என்றும்
வெளியேறும் வெற்றிடத்தின்
ஓசையை
சிறிது நேரம்
கேட்டுக்கொண்டிருக்க மட்டும்
அவனை அனுமதியுங்கள்
என்றும்
அவன் சொல்லத் தெரியாமல்தான்
உங்கள் முன் சீறி வெடிக்கிறான்
என்பதை
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்
அவனை
நாளையோ
நாளை மறுதினமோ
நிச்சயம்
நீங்கள் காப்பாற்றிவிடுவீர்கள்

            -ஆசை

Wednesday, February 26, 2025

பசி, பட்டினியைத் தமிழகம் விரட்டியடித்த வரலாறு முக்கியமானது! - பொருளியலாளர் ஜெயரஞ்சன் பேட்டி


 

ஆசை


பொருளாதாரம் எப்படி நம் அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கிறது, அரசின் பொருளாதார முடிவுகளெல்லாம் எப்படிக் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் தாக்கமும் பாதிப்பும் ஏற்படுத்துகிறது என்பதையெல்லாம் எல்லோருக்கும் புரியும் விதத்தில் எழுதுவதில் வல்லவர் பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன். பணமதிப்பு நீக்கத்தின்போது இவர் எழுதிய ‘கருப்புப் பணமும் செல்லாத நோட்டும்’ நூல் பெரும் புகழ்பெற்றது. தற்போது ‘தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை’ என்ற இவரின் புதிய புத்தகம் வெளியாகியிருக்கும் சூழலில் அவருடன் உரையாடியதிலிருந்து...

தமிழில் பொருளாதாரம் சார்ந்த எழுத்துகளின் நிலை எப்படி இருக்கிறது?

ரொம்பவும் குறைவுதான். நான் படிக்கும்போது தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தமிழ் வழிக்கல்விக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்தது. முக்கியமான பொருளாதாரப் புத்தகங்களை ஒருசில நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்திருந்தார்கள். அதற்குப் பிறகு படிக்கவே முடியாத அளவுக்கு மோசமான மொழிபெயர்ப்புகள் வர ஆரம்பித்தன. அதற்குப் பிறகு பொருளாதாரம் சார்ந்த எழுத்துகள் இரண்டு வகையாக இருந்தன. முதல் வகை நிதி ஆலோசகர்களின் எழுத்து. பங்குச் சந்தையில் எப்படிப் பணம் போடுவது, தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்பது போன்று எழுதுபவர்கள் அதிகம். அதை விட்டால் இரண்டாவதாக, இடதுசாரி சிந்தனையாளர்களின் எழுத்து. இதைத் தாண்டி, பொருளாதாரத்தைத் தமிழில் விரிவாக விளக்கி எழுதியதுபோல் எனக்கு யாரும் நினைவில் இல்லை.

Tuesday, February 25, 2025

மன்னார்குடி உங்களை வரவேற்கிறது ஞானக்கூத்தன்! - மாயக்குடமுருட்டி காவியத்திலிருந்து...


ஆசை

வணக்கம் ஞானக்கூத்தன்
மன்னார்குடி உங்களை வரவேற்கிறது

நீங்கள் பிறந்த திருஇந்தளூர் சென்றுவிட்டு
கும்பகோணம் வழியே
மன்னார்குடி வந்திருக்கிறீர்கள்
நன்றி

பாரம்பரிய மிக்க ஊர் இது

Monday, February 24, 2025

அதிகம் நம்மைக் கொல்லும்!


ஆசை

முதன்முதலில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்தபோது என்னை மலைக்கவைத்த, பயமுறுத்திய விஷயம் என்ன தெரியுமா? மக்கள் கூட்டம், வாகனங்கள், கட்டிடங்கள், கடைகள், கடைகளில் உள்ள பொருட்கள் என்று எதையெடுத்தாலும் மிதமிஞ்சிக் காணப்பட்ட நிலைதான். முதன்முதலில் சென்னைக்கு வந்து சட்டை, பேண்ட் எடுக்கப்போனபோது சரவணா ஸ்டோரைப் பார்த்து எனக்கு மயக்கமே வந்துவிட்டது. என்னுடைய அளவுக்கு நல்ல பேண்ட் வேண்டும் என்று கேட்டபோது வகைவகையாக என்னென்னவோ எடுத்துப் போட்டார்கள். ஊரில் இருந்தவரை எனக்குத் தெரிந்தது இரண்டுதான், ஒன்று சாதா பேண்ட். இன்னொன்று ஜீன்ஸ் பேண்ட். ஒரு பேண்ட் கேட்டதற்கு என் முன்னால் மலைபோல் குவித்துப் போட்டதும் எனக்கு எதை எடுப்பது என்று தெரியாமல் சங்கடத்துடன் நின்றேன்.

Saturday, February 22, 2025

பாவென்று அழையுங்களேன் பாபுஜி! - கஸ்தூர்பா காந்தி நினைவுநாள் கவிதை


இன்று கஸ்தூர்பா காந்தியின் நினைவு நாள். எனது ‘ஹே... ராவண்!’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற ‘பாவென்று அழையுங்களேன் பாபுஜி’ கவிதையை இத்துடன் பகிர்ந்துகொள்கிறேன்.

**
பாவென்று அழையுங்களேன் பாபுஜி
**
உடன் இருந்தபோது
இப்படி
என்றாவது
பாவைப்
பார்த்துக்கொண்டே
இருந்ததுண்டா பாபுஜி
உங்கள் பார்வை கண்டு
பா அஞ்சிய
காலம் உண்டு
பிறகு
பாவின் பார்வைக்கு
அஞ்ச ஆரம்பித்தீர்கள்
நீங்கள்
இன்று இரண்டுமில்லை
ஒருவழிப் பார்வை
மட்டுமே
பாவின் விழிகள்
இறுதியாய் வெறித்த
ஆகா கான் மாளிகையின்
உட்கூரை உச்சியாய்
அப்போது இருக்க
ஆசைப்பட்டீர்களா பாபுஜி
ஒரு மகாத்மா ஆவதற்கு
நிரம்பக் கல்நெஞ்சம்
வேண்டுமென்று
உடனிருந்து கண்டவர்
இன்று அதில் உங்களைத்
தோல்வியடையச் செய்துவிட்டுப்
போய்விட்டாரா பாபுஜி
எப்போதும்
ஏந்திப் பொறுத்துக்கொண்ட
பாவின் அகிம்சை முன்
உங்கள் உன்னத அகிம்சை
மேலும் தோற்றுப்போய்
அதனால்
துவண்டுபோய்
அமர்ந்திருக்கிறீர்களா பாபுஜி
பா என்று அழையுங்களேன்
பாபுஜி
அவர் விருட்டென்றெழுந்து
உங்களுக்கு
ஆட்டுப்பாலும் பேரீச்சையும்
கொண்டுவரப் போய்விடுவார்
பா என்று அழையுங்களேன்
பாபுஜி
அவர் சட்டென்றெழுந்து
உங்களுடன்
கேரம் விளையாட
உட்கார்ந்துவிடுவார்
ஆனால்
நீங்கள் மாட்டீர்கள்
கல்நெஞ்சக்காரர்
கேட்டால்
பாவுக்கு
அவள் துயர்களிலிருந்தும்
என்னிடமிருந்தும்
விடுதலை கிடைத்திருக்கிறது
என்று சாக்கு சொல்வீர்கள்
கூட
ஒரு துயரச் சிரிப்புடன்
- ஆசை

Friday, February 21, 2025

ஆக்டேவியோ பாஸ் கவிதைகள்

 


இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற ஆக்டேவியா பாஸின் ஆறு கவிதைகள்

1. விடியற்பொழுது

குளிர்ந்த விரைவான கரங்கள்
உருவிக்கொள்கின்றன 
இருளின் கட்டுத்துணியை
ஒவ்வொன்றாக

நான் கண் திறந்து பார்க்கிறேன்
  இப்போதும் 
நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
இன்னமும் புதிதாக இருக்கும் 
ஒரு காயத்தின் மத்தியில்

Thursday, February 20, 2025

மலேசியா வாசுதேவன் நினைவாக ஒரு கவிதை


இன்று மலேசியா வாசுதேவனின் நினைவு நாள். எனக்குப் பிடித்த பாடகர்களில் ஒருவர். எனது ‘குவாண்டம் செல்ஃபி’ கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதையை அவரது ‘வா வா வசந்தமே’ என்ற பாடலுக்குச் சமர்ப்பித்திருக்கிறேன். அந்தப் பாடலில் வரும் ‘தேவமின்னல்’ என்ற சொல்லால் உந்தப்பட்டு எழுதிய கவிதை அது. அந்தக் கவிதை இங்கே:

**
தேவமின்னல்
**
தீய்ந்து கருகிய வானின்
தேவமின்னல் நீ
கீழிருந்தே எழும்
சரமழை நீ
என்ன நினைக்குமந்த
வானம்
இத்தனை கத்திகள்
படையெடுத்து வந்தால்
குறுக்கே பறக்கும்
கொக்கே
வானம் தவிர்த்து
தரை தவிர்த்து
நேரே போய்க் கொத்தி
நுழைகிறாய்
முடிவின்மையில்
-ஆசை
புதுக்கவிதை படத்தில் இடம்பெற்ற ‘வா வா வசந்தமே’ பாடலுக்கு...

Wednesday, February 19, 2025

அமைதி மரம்


அமைதியின் மீது பறவை வந்தமரும்போதுதான் மரம் உண்டாகிறது மனம் உண்டாகிறது

-ஆசை

(தேவதேவனுக்கு)

Tuesday, February 18, 2025

பேஸிவ் ஸ்மோக்கிங் நாய்கள்


பேஸிவ் ஸ்மோக்கிங் நாய்களைப் பற்றி
முதன்முறையாகக்
கவலை கொண்டபோது
சம்பந்தமே இல்லாமல்
ஆன்மா பற்றிய
நினைப்பு
அவனுக்கு
தன் முன்னே கிடக்கும்
பேஸிவ் ஸ்மோக்கிங் நாய்க்கும்
தனக்கும் இடையிலான
எட்ட முடியாத ஒரு தொலைவு
ஆன்மாவுக்கும் தனக்கும்
இருப்பதால்
அப்படி நினைப்பு
ஆனால்
நாய் இருக்கிறது
ஆன்மா இருக்கிறதா இல்லையா
என்பது தெரியாது
அவனுக்கு
அப்படியென்றால்
இல்லாத இடத்திலிருந்து
இருக்கும் இடம் வரையிலான
தொலைவை
அளப்பது போன்றுதான்
இந்த ஒப்பீடே
அர்த்தமற்ற
இந்தத் தொடர் அளத்தலில்
அவன் அலுத்தும் களைத்தும்
போய்விட்டான்
ஆன்மா இருக்கிறதா
இல்லையா என்பதை
அறிந்தாக வேண்டும்
அதற்காகத்தான்
எலிவளைக்குள் செலுத்துவதுபோல்
இவ்வளவு புகை
ஆன்மா இருந்தால்
மூச்சுத் திணறி
வெளியே வந்து
ஓடட்டும்
வரமுடியாது போனால்
உள்ளேயே செத்து
அழுகிக் கிடந்து நாறட்டும்
ஆன்மா
இல்லவே இல்லை என்றால்கூட
பரவாயில்லை
வெற்றிடத்தைப் புகைபோட்டுப்
பழுக்க வைத்தவன் என்ற பெயர்
தனக்குக் கிட்டட்டும் என்று
தொடர்ந்து
புகைபோடுகிறான்
*புகைப்பிடித்தல் மனிதர்க்கும் நாய்க்கும் கேடு
தரும் (ஆன்மாவுக்கு என்ன தரும் என்று
தெரியாது)
-ஆசை

Monday, February 17, 2025

கொஞ்சமாய் ஏமாந்துதான் பாரேன்


’அன்னை ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து
வருகிறோம் சார்’
என்று ஒரு சிறு கண்ணாடிப் பெட்டியை
உன்னிடம் நீட்டுகிறார்கள்
இரண்டு பெண்கள்
அதில் இரண்டு மூன்று பத்து ரூபாய்த் தாள்கள்
ஒரு ஐம்பது ரூபாய் நோட்டு
சில பல சில்லறைகள்
இந்தக் காசெல்லாம் உண்மையில்
ஆதரவற்றோருக்குப் போய்ச்சேருமா
இல்லை அவர்கள் பேரில்
நடக்கும் ஒரு தொழிலா
என்று ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்
உனக்குள் பூவா தலையா
போட்டுப் பார்த்து நீயே விரும்பித்
தலையைத் தேர்ந்தெடுக்கிறாய்
இதெல்லாம் சில நொடிகளுக்குள்
பிறகு
’இல்லைம்மா’
என்று அனுப்பிவிடுகிறாய்
ஆனாலும்
நீ நிம்மதியாய் இல்லை
நீ கொஞ்சம் ஏமாறுவதற்காகக்
காத்திருக்கின்றன
எத்தனையோ பசித்த வயிறுகள்
கட்டிங்குக்காகத் தவிக்கும் வயிறுகள்
அவற்றின் மேல்
உன் பத்து ரூபாயை
நடக்க விட்டுத்தான் பாரேன்
எத்தனை பூ பூக்கும் என்று
பெரிதுபெரிதாய் ஏமாந்துபோவதால்
சிறிய ஏமாற்றுகளை
வஞ்சம் தீர்க்காதே
கொஞ்சம் ஏமாறுவதில் ஒன்றும்
குறைந்துபோய்விட மாட்டாய்
மேலும்
கொஞ்சம் ஏமாறுவதென்பது
21-ம் நூற்றாண்டின் இனிய ஆன்மிகம்
கொஞ்சம் ஏமாந்துதான் பாரேன்
அது
கொஞ்சம் உடம்புக்கும் நல்லது
-ஆசை

Saturday, February 15, 2025

இருவேறு உலகத்து ஒரே மலர்


மலர்களுக்குக் கண்கள் உண்டு
அவை நம் கண்கள் இல்லை
மலர்களுக்குக் கண்ணீர் உண்டு
அவை நம் கண்ணீர் இல்லை
மலர்களுக்கு மனம் உண்டு
அது நம் மனம் இல்லை
மலர்களுக்கு வலி உண்டு
அது நம் வலி இல்லை
மலர்கள்
நமக்காக மலர்பவை இல்லை
ஆனால் நமக்காக
வைக்கப்படுபவை
அப்படி நமக்கு வைக்கப்படும்போது
இனி இந்த உலகத்தோடு
நாம் பேசுவதற்கான
நம் ஒரே வாயாக
ஆகிவிடுபவை
அப்படி நமக்கு வைக்கப்படும்போது
எல்லோரும் நம்மிடம் பேசுவதை
நாம் கேட்பதற்கான
ஒரே காதாகவும்
ஆகிவிடுபவை
நாம் இருக்கப் போகும் வெறுமைக்கும்
எங்கிருந்து அங்கு சென்றோமோ
அந்த வெறுமைக்கும் இடையே
அதன்பின்
ஒரே ஒரு மலர் மட்டுமே
இருக்கும்
இருவேறு உலகத்தின்
இயற்கைக்கும்
மணம் பரப்பியபடி
- ஆசை

Thursday, February 13, 2025

காதலர் தினத்தை முன்னிட்டுப் பாதி விலையில் எனது மூன்று கவிதை நூல்கள்!

 


அன்புள்ள நண்பர்களுக்குக்கும், வாசகர்களுக்கும் வணக்கம்!
காதலர் தினத்தை முன்னிட்டு எனது ‘அண்டங்காளி’, ’குவாண்டம் செல்ஃபி’, ‘கொண்டலாத்தி’ ஆகிய மூன்று கவிதை நூல்களும் பாதி விலையில் கிடைக்கும். இந்தச் சிறப்பு விலை இந்த மாத இறுதிவரை உண்டு. மேலும் விவரங்களுக்கு மேலே உள்ள படத்தைப் பார்க்கவும். நண்பர்கள் இந்தப் பதிவைப் பகிர்ந்து உதவ வேண்டுகிறேன்.

Thursday, February 6, 2025

பெண்குஞ்சு


ஒன்றாய்க் குளித்துவிட்டு அம்மணங்குண்டியாக ஓடி வருகிறார்கள் அண்ணனும் தங்கையும் ‘அப்பா’ என்று கூவியபடி

ஓடிவந்த வேகத்தில்
ஆடும்
அண்ணன்காரனின் குஞ்சாமணியை உருவி
என் கைக்கு
முத்தமிட்டுக்கொள்கிறேன்
‘அப்பா என் குஞ்சுக்கும் முத்தா தா’
என்று சிணுங்குகிறாள் தங்கை
அவ்விடத்தை எக்கிக் காட்டி
அங்கே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
திசைகாட்டும் சிறுகோடு
என் திசையழிக்கத்
திடுக்கிட்டுச் சமைந்தேன்
’குடுப்பா’
என்று அதட்டிவிட்டு
என் கையைப் பிடித்துத்
தன் குஞ்சின் மேல் வைக்கிறாள்
நல்ல தொடுகை
கெட்ட தொடுகை அண்டாதொரு
கருவறைக்குள்
முழுதாய்க் குளித்துவிட்டு
வந்தவள்
ஒட்டுமொத்த பிரபஞ்சமும்
அவ்விடத்தில்
கொண்டுவந்து சேர்க்கப்போகும்
மர்மமும் புனிதமும்
அவள் அதட்டலில்
நடுங்கி உதிர்கின்றன
அனிச்சையாய் உருவிக்
குவிந்த என் கைக்கு
முத்தம் கொடுக்கிறது
என் வாய்
பொம்மையாய்
மாறிச் சிரிக்கிறது
என் பெண்குஞ்சு
-ஆசை

Tuesday, February 4, 2025

சூரியன் எதைச் சுற்றுகிறது?


ஆசை

சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பெலா டார் எடுத்த அற்புதமான திரைப்படம் ‘வெர்க்மைஸ்டர் ஹார்மனீஸ்’. இதன் தொடக்கக் காட்சி ஒரு மது விடுதியில் இடம்பெற்றிருக்கிறது.

 படத்தின் இளம் நாயகனான யானோஸ் வலுஸ்கா தனது மூன்று நண்பர்களை வைத்து சூரியன், பூமி, நிலவு நடனத்தை நிகழ்த்துவார். சூரியன் போன்று ஒருவர் நடுவில் நிற்க இன்னொருவர் பூமியின் வேடத்தில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுவார்.

Monday, February 3, 2025

முதலறியான்


மறுபடியும் தீயை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் சக்கரம் செய்வதை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் வெடிமருந்தை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் அமெரிக்காவை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் ஹேம்லட்டை
முதல் ஆளாக எழுதத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் பியானோவை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் ஈர்ப்புவிசையை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் டகேரியோடைப் கேமராவை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் மின்சாரத்தை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் முதல் ஆளாக
பீகிள்ஸ் கடற்பயணத்தை மேற்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் ஒளியின் துகள் வடிவை
முதல் ஆளாக நிரூபிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் நிலவுக்கு
முதல் ஆளாகப் போகத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் கடவுள்துகளை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் கடவுளை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கவும்
முதல் ஆளாகக் கைகழுவவும்
வேண்டியிருக்கிறது
கவிஞனாய்
இருப்பதற்கு
இவ்வளவும்
செய்ய வேண்டியிருக்கிறது
வாழ்வதற்கோ
இவ்வளவு சிரமப்பட
வேண்டியதில்லை
நாம் முதல் இல்லை என்ற
எளிய அறிவு
ஒன்றே போதும்
-ஆசை

Saturday, February 1, 2025

கன்னடத்தில் என் கவிதை



எனது ‘ஹே... ராவண்!’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘பாவென்று அழையுங்களேன் பாபுஜி’ கவிதையை நண்பரும் எழுத்தாளருமான தூயனின் தந்தையும் தூயனின் மனைவி பவித்ராவும் இணைந்து கன்னடத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு அன்பும் நன்றியும். கீழே தமிழ் மூலமும் கன்னட மொழிபெயர்ப்பும் கொடுத்திருக்கிறேன்.

**
பாவென்று அழையுங்களேன் பாபுஜி
உடன் இருந்தபோது
இப்படி
என்றாவது
பாவைப்
பார்த்துக்கொண்டே
இருந்ததுண்டா பாபுஜி
உங்கள் பார்வை கண்டு
பா அஞ்சிய
காலம் உண்டு
பிறகு
பாவின் பார்வைக்கு
அஞ்ச ஆரம்பித்தீர்கள்
நீங்கள்
இன்று இரண்டுமில்லை
ஒருவழிப் பார்வை
மட்டுமே
பாவின் விழிகள்
இறுதியாய் வெறித்த
ஆகா கான் மாளிகையின்
உட்கூரை உச்சியாய்
அப்போது இருக்க
ஆசைப்பட்டீர்களா பாபுஜி
ஒரு மகாத்மா ஆவதற்கு
நிரம்பக் கல்நெஞ்சம்
வேண்டுமென்று
உடனிருந்து கண்டவர்
இன்று அதில் உங்களைத்
தோல்வியடையச் செய்துவிட்டுப்
போய்விட்டாரா பாபுஜி
எப்போதும்
ஏந்திப் பொறுத்துக்கொண்ட
பாவின் அகிம்சை முன்
உங்கள் உன்னத அகிம்சை
மேலும் தோற்றுப்போய்
அதனால்
துவண்டுபோய்
அமர்ந்திருக்கிறீர்களா பாபுஜி
பா என்று அழையுங்களேன்
பாபுஜி
அவர் விருட்டென்றெழுந்து
உங்களுக்கு
ஆட்டுப்பாலும் பேரீச்சையும்
கொண்டுவரப் போய்விடுவார்
பா என்று அழையுங்களேன்
பாபுஜி
அவர் சட்டென்றெழுந்து
உங்களுடன்
கேரம் விளையாட
உட்கார்ந்துவிடுவார்
ஆனால்
நீங்கள் மாட்டீர்கள்
கல்நெஞ்சக்காரர்
கேட்டால்
பாவுக்கு
அவள் துயர்களிலிருந்தும்
என்னிடமிருந்தும்
விடுதலை கிடைத்திருக்கிறது
என்று சாக்கு சொல்வீர்கள்
கூட
ஒரு துயரச் சிரிப்புடன்
-ஆசை

கன்னடம்:
ಭಾ ಎಂದು ಕರೆಯಿರಿ….. ಬಾಪೂಜಿ
ಜೊತೆ ಇದ್ದಾಗ
ಹೀಗೆ
ಎಂದಾದರೂ ಭಾ ವನ್ನು
ನೋಡಿಕೊಂಡಿರುವಡು ಉಂಟ ಬಾಪೂಜಿ
ನಿನ್ನ ನೋಟ ನೋಡಿ ಭಾ
ಭಯಪಡುತ್ತಿದ್ದ ಕಾಲವೊಂದಿತ್ತು.
ನಂತರ
ಭಾ ವಿನ್ ನೋಟಗಿ
ಭಯಪಡಲು ಪ್ರಾರಂಭಿಸಿದ್ದೀರಿ
ನೀವು!
ಇವತ್ತೂ ಎರಡೂ ಇಲ್ಲ.
ಒಂದೇ ದಾರಿಯ ನೋಟ
ಮತರವೆ
ಭಾ ವೆನ ಕಣ್ಣುಗಳು
ಅಂತಿಮದಳ್ಳಿ ದಿಟ್ಟಿಸಿಧ
ಆಗಾ ಖಾನ್ ಅರಮನೆಯ
ಒಳಮೇಲಿನ ಭಾಗವಾಗಿ
ನೀನಾಗಿರಬೇಕೆಂದು ಬಯಸಿದ್ದೀಯಾ ಬಾಪೂಜಿ?
2
ಒಂಧು ಮಹಾತ್ಮನಾಗಲು
ತುಂಬಾ ಕಲ್ಲು ಹೃದಯ
ಬೇಕೆಂದು
ಜೋಧಯಳ್ಳಿ ಇಧ್ಧ ಅರ್ಥಮಾಡಿ ಕೊಂಡವರು
ಇಂದು ಅದರಲ್ಲಿ ನಿನ್ನನ್ನು
ಸೋಲಿಸಿ ಬಿಟ್ಟು
ಹೋಗಿ ಬಿಟ್ಟಾರಾಯೆ ಬಾಪೂಜಿ
ಯಾವಾಗಲು ಸ್ವಕರಿಸಿ
ಸಹಿಸಿಕೊಂಡ
ಬಾ ವಿನ ಅಹಿಂಸೆ ಮುಂದೆ
ನಿಮ್ಮ ಉನ್ನತಾಧ ಅಹಿಂಸೆ
ಮತ್ತೆ ಸೋದಾಗಿ ಹೋಗುವುದೆ ನೋಡಿ
ಮುರಿದ ಹೃದಯಹೊಂದಿಗೆ
ಕುಳಿತು ಕುಳ್ಳತ್ತೇರಿಯೇ ||ಬಾಪೂಜಿ
ಬಾ ಎಂದು ಕರಿಯಿರಿ ……
ಬಾಪೂಜಿ
ಅವರು ಕೊಡಲೇ ಎಧ್ದು
ನಿಮಗಾಗಿ
ಹಾಲು ಮತ್ತು ಖರ್ಜೂರದ ಹಣ್ಣುಗಳು
ತರಲು ಹೋಗಿಪಿಡುವರು
3
ಬಾ ಎಂದು ಕರೆಯಿರಿ ………
ಅವರು ವೇಗವಾಗ ಎಧ್ದು
ನಿಮ್ಮೊಂದಿಗೆ ಕೆರಂ ಆಡಲು
ಕುಳಿದು ಕೊಳ್ಳಿಬಿಡುವರು
ಆದರೇ
ನೀನು ಮಾಡಲಿಲ್ಲ
ಕಲ್ಲು ಮನಸುಗರು
ಕೇಳಿದರೇ
ಅವಳಿಗೆ
ಸಂಕಟಗಳಿಂದ ಮತ್ತು ನನ್ನಿಂದಲೂ
ವಿಮೋಚನ ಸಿಕ್ಕಿತು ಎಂದ
ಅರ್ಧಹೀನ ಕಾರಣ ಕೇಳುವೀರೆ
ಸಹಾ ...ಒಂದು
ದುಃಖದ ನಗುವಿನೊಂದಿಗೆ
ತಮಿಳಿನಲ್ಲಿ: ಆಸೈ ಬರಹಗಾರ ಕನ್ನಡ : ಕುಯೇಲಿ ಮುನುಸಾಮಿ