Saturday, August 21, 2021

நகுலன் ஊர்ந்து வருகிறார் - நகுலன் நூற்றாண்டு நினைவுக் கவிதை


புணர்ச்சிக்கு நடுவே நினைவுக்கு வருகிறது இன்று நகுலனின் நூறாவது பிறந்த நாள் என்று

தனக்கு யாருமில்லை
தான்
‘கூட’
என்று சொன்ன
அந்த வாழ்நாள் ஒண்டிக்கட்டைக்குச்
செய்யும் அவமதிப்பில்லையா இது
என்று கேட்கலாம்
நகுலன் இல்லாத இடத்தில்
எல்லாம்தானே
நடந்துகொண்டிருக்கும்
உண்மையில்
ஒரு நூற்றாண்டென்பது
வெகு தொலைவு
இவ்வளவு தூரம்
ஊர்ந்து ஊர்ந்து
வந்திருக்கிறார்
நகுலன்
இடையில் மரணம் வேறு
அதற்கு முன்பு
சுசீலா வேறு
ஆமாம்
நகுலன் போன பிறகு
எந்தக் கதவைத்
தட்டிக்கொண்டிருக்கிறாள்
சுசீலா
அவள் கேட்டால்
திறப்பவர் எவரோ
அவர் சொல்லிவிடுங்கள்
நகுலன் தன்னைத் தானே
துரத்திக்கொண்டு
சென்றிருக்கிறார் என
உண்மையில்
ஒரு நூற்றாண்டு
என்பது
வெகு தொலைவுதான்
ஏனெனில்
திரும்பிப் பார்க்கும்போது
நகுலனே
ஒரு இடமாகக் காட்சியளிக்கிறார்
சூரல் நாற்காலியின் மீது
நகுலனின் பிறப்புக்கு முந்தைய வெயில்
இறப்புக்குப் பிந்தைய வெயிலுடன் சேர்ந்து
அடித்துக்கொண்டிருக்கிறது
அதில் வண்ணாத்திப் பூச்சிகள்
பறந்து கொண்டிருக்கின்றன
உண்மையில் ஒரு
நூற்றாண்டு என்பது
வெகு தொலைவுதான்
தன் இறப்புக்குப் பிறகும்
ஊர்ந்து ஊர்ந்து
வந்துகொண்டிருக்கிறார்
நகுலன்
பார்க்க பயமாக இருக்கிறது பார்க்காமலும் இருக்க முடியவில்லை 

No comments:

Post a Comment