Saturday, June 15, 2024

மாயக்குடமுருட்டிக்கு ஒரு வயது!

முதலில் வெளியான போஸ்டர்

எனது ‘காவிரியம்’ நெடுங்காவியத்தின் முதல் நூலான ‘மாயக்குடமுருட்டி’யை எழுதத் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. நாவலாக எழுத நினைத்து, குறுங்காவியமாக எழுதி ‘அருஞ்சொல்’ மின்னிதழில் வெளியிட்டேன். எழுதி முடித்ததும் அது காவியமாக வளரும் என்று நெருக்கமான நண்பர்கள் கூறினார்கள். அப்படியே விரித்தெடுத்து காவியமாக 13 அத்தியாயங்கள் அருஞ்சொல்லில் 13 வாரங்கள் வெளியானது. ‘மாயக்குடமுருட்டி’ எழுதி முடித்த தருணத்தில் இது காவியமாகவும் நிறைவடையாது என்றும் தோன்றியது. ஆகவே, அதனை ‘காவிரியம்’ என்ற பொதுத் தலைப்பில் விரித்தெடுத்து முதல் நூலுக்கு ‘மாயக்குடமுருட்டி’ என்ற தலைப்பைத் தக்கவைத்துக்கொண்டேன். 

எழுதி வெளியிடும் முன்னே தமிழின் தலைசிறந்த காவியங்களுள் ஒன்றாக இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டேன். மாயக்குடமுருட்டி நிறைவடையும்போது அதனை மூத்த எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள், வாசகர்கள் பலரும் உறுதிப்படுத்தினார்கள். மாயக்குடமுருட்டியின் முதல் அத்தியாயம் வெளியான அன்று மட்டும் கிட்டத்தட்ட 2,000 பேர் அருஞ்சொல் மின்னிதழில் அதனைப் படித்திருக்கிறார்கள். கவிதையை அதுவும் நெடுங்கவிதையைப் பொறுத்தவரை அது பெரும் சாதனை. என் நெடுங்காவியத்துக்கு ஆதரவளித்த எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள், பேராசிரியர் தங்க. ஜெயராமன், தினமணி சிவக்குமார், பெரு. விஷ்ணுகுமார், அருஞ்சொல் மின்னிதழின் சமஸ், தம்பி சிவசங்கர், ஓவியர்கள் ஜோ.விஜயகுமார், இரா. தியானேஷ்வரன் உள்ளிட்டோருக்கு மிக்க நன்றி. தொடரின் விளம்பர போஸ்டருக்காகத் தங்கள் கருத்துகளைக் கொடுத்துதவிய கவிஞர் அபி, தியடோர் பாஸ்கரன், பேரா.டேவிட் ஷுல்மன் ஆகியோருக்கு நன்றி! பலரின் கருத்துகளையும் அறிந்துகொள்ள இந்தக் காவியத்தைக் கொடுத்திருந்தேன். பெருந்தேவி, ஆனந்த், கண்டராதித்தன், தூயன், பொன்முகலி, வே.நி.சூர்யா, முத்துராசா குமார் உள்ளிட்டோர் முழுவதும் படித்துவிட்டுப் பிரதியை மேம்படுத்தும் விதத்தில் தங்கள் கருத்துகளைக் கூறியிருந்தார்கள். பிரதியின் மீதான என் நம்பிக்கையையும் இவர்கள் உறுதிப்படுத்தினார்கள். அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

எழுதத் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறும் இந்நாளில் எடிட்டிங்குக்காக ‘மாயக்குடமுருட்டி’யை மறுபடியும் தொடுகிறேன். இந்த இடைவெளியில் என் கவிதைகள் வேறு வேறு திசையில் சென்று பெரும் ஆட்டம் ஆடிவிட்டன. இந்த இடைவெளி ஒரு பிரதிக்குத் தேவையும் கூட. கூடிய விரைவில் ‘மாயக்குடமுருட்டி’யை புத்தகமாக உங்கள் கண்முன் கொண்டுவருகிறேன். 2,500 ஆண்டுகால தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு ஆற்றை இந்த அளவுக்குக் கொண்டாடும் இன்னொரு கவிதைப் படைப்பு இல்லை என்பதை மீண்டும் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். அதைத்தான் நண்பர்கள், வாசகர்கள் பலரும் என்னிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

‘காவிரியம்’ நெடுங்காவியத்தின் முதல் பகுதியான ‘மாயக்குடமுருட்டி’யின் அனைத்து அத்தியாயங்களும் ஓரிடத்தில், ‘அருஞ்சொல்’ மின்னிதழில்:

https://www.arunchol.com/asai-poem-maya-kudamurutti-all-links

No comments:

Post a Comment