Sunday, March 17, 2024

அபிராமிக்காக என் ‘அண்டங்காளி’ கவிதைகள்...



எனது ‘அண்டங்காளி’ (2021, டிஸ்கவரி வெளியீடு) கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் இங்கே. குணா திரைப்படத்தின் அபிராமி நினைவாக...

1.
அம்பாளுக்கு வயது
எப்போதுமே
பதினாறுதான்
அவளைக் காதலால்தான்
கும்பிட முடியும் 

2.
காளியவள் களிநடனம்
காட்டி விட்டாள்

ஆழிதனை ஊஞ்சலென
ஆட்டி விட்டாள்

ஊழிமனக் காட்சிதனை
நாட்டி விட்டாள்

பாழிருளைப் படம்பிடித்து
மாட்டி விட்டாள்

3.
ஏ பேயே பேயே பேயே
பேய்க்கெல்லாம்
பெரும் பேயே
பேய்ப்பெருங் காற்றே
பேய்ச்சுனையூற்றே
பேயிருள் தீயே
பேய்மனத் தேனே
ஏ பேயே பேயே பேயே
பேய்க்கெல்லாம்
பெரும் பேயே
ஏ தாயே தாயே தாயே
என் தனிப்பெரும் நோயே

4.
ஆத்தாளை
புவியடங்கக் காத்தாளை
ஓங்காரத்தின்
மூத்தாளை
பேரனைத்தும்
பேத்தாளை
கொண்டுபோய்
எல்லாம் தன்களியில்
சேத்தாளை
சேத்த கதியிலிருந்து
செல்வதுயாதும்
பாத்தாளை
பாத்தநொடியின் பரவசத்தை
என்றும் முகத்தில்
காத்தாளை
என்
ஆத்தாளை

5.
உனக்கேன்
இந்த வேலை
உதட்டுச்சாயமும்
கண்ணப்பிய மையும்
கடைவிரித்த நகையும்

கணக்கற்ற முறை
சொல்லியாயிற்று
காளிவேடம்
வேண்டாமென்று

ஒன்றுக்கும்
உதவாதிந்த ஒப்பனை

பார்
ஒப்பனையற்ற பெருவெளியில்
உலவுபவள்
உனை நடிக்கத்
தொடங்கிவிட்டாள்

காளியைக் கெடுத்த
கடுங்காளி நீ


6.

நீ

நான்
பார்க்குமிடெமெல்லாம்
தன்னடனம் நான் பார்க்க 
காளி வைத்த
கண்ணாடி

நேரே பார்த்தால்
எரிந்துவிடுவேனோ
என்று
காளி காட்டிய
கருணை

காலத்தைத்
தூக்கிச் சுமப்பது
போதாதென்று
இப்போது
கண்ணாடித்
தூக்கிச் சுமக்கிறாள்
வேலையில்லா
வெட்டிவினைக்காரி


7.
பார் சிவனே
மீனாளின் குங்குமத்தைத்
தானாள வேண்டுமென்று
ஏன் விரும்பினான் கண்ணதாசன்
தானும் சிவனாகும்
ஆசையினாலா

இடம்பெயர்ந்த
உன் நெற்றிக்கண்ணின்
குளிர்சிவப்பைப்
பார்த்து
அவனுக்கும்
ஆசை விடவில்லை

உன் நெற்றிக்கண்ணை
ஒரு பொய்கையாக்கி
அதில் குளித்து விளையாடிக்
கரைமீண்ட மீனாள்
தன் நெற்றியில் துளியாய்த் தங்கிவிட்ட
உன் தகிப்பை
எப்படித்
தன் குங்குமமாக மாற்றிவிட்டாள்
பார்

உன் நெற்றியிலிருந்து
அவள் நெற்றிக்குப்
பயணிக்கும் துடிப்பில்
குளிரைத் துரத்தும்
வெம்மையும்
வெம்மையில் குளிக்கும்
குளிரையும்
உள்ளடக்கிய
தீராத விளையாட்டு
திரைபோட்டு
நடக்கிறது

அதுதான்
நீயாடும் அம்பலம்
அவளாடும்
தன்பலம்

சிவனாகும் ஆசையில்
கண்ணதாசனும்
ஆட முயல்கின்றான்
மீனாளின்
குங்குமப் பரப்பென்ற
குளிர்சிவப்பு
மேடையில்

அம்மை தன்
மேடையெறிந்து
அதைச் சூரியனாக்கிவிடுவாள்
தாங்க மாட்டான்
கண்ணதாசன்

அவள் குங்குமமென்பது
நீ ஒட்டிக்கொண்ட
நெற்றிக்கண்ணோடு
ஆடும் பரப்பல்ல

உன்னைப் போல
வெம்மையை வீசிக்கொண்டு
யாரும் அணுக முடியாத
நெற்றிக்கண் வாசல்
கொண்டதுமல்ல
அவளுடையது

கண்ணதாசா
உற்றுப்பார் உள்ளே
அது அவள்
இதயத்துக்குப்
போகும் வழி

அவள் இதயத்துக்குப்
போகும் வழிக்கு
உன் இதழால்தான்
ஆட்டமிட வேண்டும்

ஆட்டம் தொடங்கியும்கூட
எத்தனையெத்தனை
இதழ்களை எரித்த
குளிர்சிவப்புக்
குங்குமம் அது

தமிழால் ஆடுகின்றான் சிவனே
கண்ணதாசன்
தாங்குவானா

நான் பார்க்க வேண்டும்
ஆடட்டும் அவன்
     -ஆசை (‘அண்டங்காளி’, 2021, டிஸ்கவரி வெளியீடு)
        நன்றி: ‘ஆகாயப் பந்தலிலே’ பாடலின் ‘மீனாளின் குங்குமத்தை   
        நானாள வேண்டுமம்மா’ வரிகள்

No comments:

Post a Comment