Wednesday, August 23, 2017

வட சென்னை: சென்னை இங்கேதான் தொடங்கியது!


தீபா அலெக்ஸாண்டர்

(சென்னை பிறந்த வாரத்தை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழில் என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)

ஜார்ஜ் டவுனின் இப்ராஹிம் சாஹிப் தெரு. நவீன வாழ்க்கையின் நெரிசல்களுக்கிடையிலும் பழைய காலத்தின் வசீகரத்தைத் தக்கவைத்திருக்கும் சாலை அது. இரைச்சலுடன் விரையும் பேருந்துகள், பிரம்மாண்டமான ஸ்டான்லி மருத்துவமனையை மொய்த்திருக்கும் மக்கள் கூட்டம், பாரதி மகளிர் கல்லூரிக்கு வெளியில் காணப்படும் மாணவர் குழாம், இவை எல்லாவற்றுக்கும் அப்பால் நிற்கிறது அந்தச் சுவர் - வரலாற்றின் உறுதியான, தொட்டுணரக்கூடிய எச்சமாக. அந்த வீதியை ஒட்டிச்செல்லும் அந்தச் சுவரின் பல்வேறு வாயில்களும் கோட்டைக் கொத்தளங்களும் - முன்பொரு காலத்தில் கோட்டைச் சுவர்களால் தடுப்பிடப்பட்டிருந்த - மெட்ராஸ் என்ற நகரத்தின் வடக்கு எல்லையைக் குறிக்கின்றன.

1722-ல் கட்டப்பட்ட கோட்டைக் கொத்தளங்களின் ஒருசில அடையாளங்கள்தான் இப்போது எஞ்சியுள்ளன. ஆயினும், கோட்டைச் சுவர் என்பது நீடித்து நிற்கும் வேறொரு அம்சத்தின் அடையாளச் சின்னமாக நிற்கிறது. சென்னையின் மீள்தன்மை எனும் இயல்புதான் அந்த அம்சம்.

‘ஃபர்ஸ்ட் லைன் பீச்’சின் முடிவில் (தற்போது ராஜாஜி சாலை) இருக்கும் மேம்பாலத்தில் நீங்கள் ஏறினீர்கள் என்றால் விக்டோரிய - கோதிக், இந்தோ-சார்சனிக் கட்டிடக் கலை மரபுகளின் பெருமையைப் பறைசாற்றும் கட்டிடங்களின் வரிசைகளை மட்டுமல்ல; ஒருசில நிறுத்தங்களில் நின்றுவிட்டு விரையும் ரயில்கள், கல்நார்க் கூரைகளைக் கொண்ட (முன்பு பர்மாவிலிருந்து திரும்பிவந்தவர்களால் நடத்தப்பட்ட) கடைகள், வங்காள விரிகுடாக் கடலின் மினுக்கம், 17-ம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனியின் ஃப்ரான்ஸிஸ் டேயை இந்தக் கடற்கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தது போன்ற கட்டுமரங்கள் எல்லாம் துறைமுகத்தின் கிரேன்களைத் தாண்டி உங்கள் கண்களைப் பறிக்கும்.

புனித ஜார்ஜ் கோட்டை

புவியியல்ரீதியாக, கூவத்தின் வடக்குப் பகுதியாகிய வடக்கு மெட்ராஸ் முன்பு மீனவக் குப்பங்களின் தொகுப்பாக இருந்தது. குத்தகைக்குப் பெற்ற ஒரு துண்டு நிலத்தில் ‘புனித ஜார்ஜ் கோட்டை’யை பிரிட்டிஷ்காரர்கள் கட்டியபோது, இந்தக் குப்பங்களின் தொகுப்பு நகரியமாக வளர்ந்தது. கோட்டை கட்டுவதற்காக உள்ளூர் அரசர் ஒருவரிடமிருந்து ஆகஸ்ட் 22, 1639 அன்றுதான் பிரிட்டிஷார் குத்தகைக்கு வாங்கினார்கள்.

“மெட்ராஸின் பிறந்த நாள் என்பதைத் தாண்டியும் இந்தத் தேதிக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது; இந்தியா என்ற கருத்தாக்கத்துக்கு மகத்தான பங்களிப்பைச் செய்திருக்கும், நவீன இந்தியாவின் முதல் நகரத்தை இந்தத் தேதி கொண்டாடுகிறது” என்கிறார் சென்னையின் வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா. “உண்மையில், சென்னை நகரம் தொடங்கிய இடம் வடக்கு மெட்ராஸ்தான். மெட்ராஸின் குடிமக்கள் என்ற நமது அடையாளத்தின் பின்னணியில் வைத்து ஆய்வுசெய்து பார்க்க வேண்டிய முழுமையான பிராந்தியம் இது” என்கிறார் முத்தையா.

கருப்பர் நகரம்

300-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு, கோட்டை யின் வடக்கு எல்லையை ஒட்டி கருப்பர் நகரம் உருவானது; கோட்டைக்குள் வசித்த புர்ரா சாஹிப்கள் என்று அழைக்கப்பட்ட வெள்ளையர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ‘கருப்பர்கள்’ என்று அழைக்கப்பட்ட தமிழர்கள் வசிக்கவும், வணிகம் நடப்பதற்குமான பிரதேசம்தான் கருப்பர் நகரம். இன்று, அங்கே ஏராளமான பகுதிகள் இருக்கின்றன. அடிப்படைத் தேவைகள், நெரிசலான சாலைகள், வீழ்ச்சியடைந்த வீட்டுமனைத் தொழில், அதிக அளவிலான குற்றச் சம்பவங்கள், மேட்டுக்குடித் தன்மை இல்லாதது போன்றவற்றுக்காக இந்தப் பகுதிகளைப் பார்த்தாலே பலரும் முகம்சுளிப்பார்கள். ஆனால், சென்னையின் மற்ற பகுதிகளில் இல்லாத, மற்ற பகுதிகள் ஏக்கம்கொள்கிற சில அம்சங்களை இந்தப் பகுதி கொண்டிருக்கிறது: பழங் காலத்தின் வசீகரமும், இந்த நகரத்தின் குணாம்சத்தை வரையறுப்பதில் அடிப்படையாக இருக்கும் வரலாறும்தான் அவை.

புழுங்கி வியர்த்துக்கொட்டும் ஒரு மதியப் பொழுதில் வடக்கு மெட்ராஸைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம். ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பெயர் தாங்கியிருக்கும் பிரதேசம் அது. அந்த ஆரவாரமான பகுதியை இன்னமும் அவரது சிலை ஆட்சி செய்துகொண்டுதான் இருக்கிறது. அவர் நோட்டமிடும் எல்லாவற்றுக்கும் அவர்தான் பேரரசர்; அதாவது, இப்போதோ அப்போதோ என்று விழக் காத்திருக்கும் சாலையோரக் கடைகள், பாதசாரிகள், வாகனங்களுக்கு இடையில் விரையும் மாட்டு வண்டிகள் என்று கண், காது, மூக்கு என்று எல்லாப் புலன்களுக்கும் கலந்துகட்டித் தீனிபோடும் அந்தக் காட்சிப் பரப்பு எல்லாவற்றுக்கும் அவர்தான் பேரரசர்.

அவருக்குப் பின்னால் நிற்பது பூக்கடை காவல் நிலையம்: அசாதாரணமான பழமை கொண்ட, சிவப்புநிறக் கட்டிடம் அது. கைதிகளை அருகேயுள்ள நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு வசதியாக அங்கேயே சிறையைக் கொண்டிருக்கும் காவல் நிலையம் அது. அதன் அருகே வரிசையாகத் தெருக்கள். ஒவ்வொரு தெருவிலும் வரிசையாகக் கடைகள். அந்தத் தெருவுக்குள் ஒவ்வொன்றும் புகைப்படச் சட்டங்கள், ஆபரணங்கள், எழுதுபொருட்கள் என்று ஒரு பொருளுக்கோ அல்லது ஒரு விஷயம் சார்ந்த பல பொருட்களுக்கோ பிரசித்தம். இங்குள்ள காற்று வியர்வை நாற்றமும் சிறுநீர் நாற்றமும் சாலையோரச் சிறுதீனிக் கடையின் சுள்ளென்ற மணமும் கலந்து வீசும்.

திமுக பிறந்த இடம்

“அரசியலையும் கலாச்சாரத்தையும் பொறுத்தவரை வடக்கு மெட்ராஸ் என்பது மிகவும் துடிப்பான பகுதி” என்கிறார் முத்தையா. “திமுக நிறுவப்பட்ட இடமும் தொழிற்சங்க இயக்கம் பிறந்த இடமும் வண்ணாரப்பேட்டைதான்” என்கிறார் அவர். குறைந்தபட்சம் 200 ஆண்டுகளாகப் புலம்பெயர்ந்துகொண்டிருந்த தெலுங்கர்கள், மார்வாடிகள், குஜராத்திகள், தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் போன்றவர்கள் மண்ணடிக்கு அப்பால் உள்ள பகுதியில்தான் தற்போது நிலைகொண்டுள்ளார்கள்.

பாரிமுனைதான் போஹ்ரா முஸ்லிம்களுக்குத் தற்போது தாய்வீடு. யேமன் நாட்டின் கடுமையான வாழ்நிலைகளிலிருந்து விடுபட்டு வந்து, இந்த இடத்தை அவர்கள் தாயகமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கில் புலம்பெயர்ந்து வந்த ஆங்கிலோ -இந்தியர்களுக்கும் இந்தப் பகுதி புகலிடமாக இருந்தது; இறுதியில் அவர்கள் விட்டுச் சென்றது ஜார்ஜ் டவுனில் உள்ள பிஷப் கோரி பள்ளிக்கூடம், புனித கேபிரியல்ஸ் பள்ளிக்கூடம் போன்றவற்றின் தரையில் பாவிய கற்களில் தங்களின் பெயர்களை மட்டும்தான். பழமையான கோயில் கள் இருக்கும் இடங்களிலிருந்து ரிக்ஷாவில் சென்றுவிடக்கூடிய தூரத்தில் காலனிய காலத்துத் தேவாலயங்கள் இருக்கின்றன, இரும்புச் சாமான் கடைகளுக்கு இடையில் வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் பொதிந்திருக்கும்.

அங்கிருந்து மேற்கு நோக்கி, மரங்களடர்ந்த ஏழுகிணறு, பேஸின் பிரிட்ஜின் மின்நிலையங்கள், கூடிய விரைவில் சுற்றுச்சுவர் கொண்ட நகரியமாக ஆகவிருக்கும் பின்னி ஆலைகளின் பரந்து விரிந்த மைதானங்கள் போன்றவற்றைத் தாண்டிச் சென்றால் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் நினைவேக்கத்தின் சுவடுகளையும் பழைய ரயில்வே வீடுகளையும் கொண்ட வேப்பேரியும் பெரம்பூரும் நம்மை வரவேற்கும்.

அறியாத தலைமுறை

“நிறைய பணம் சம்பாதிக்கத் தொடங்கியதும் பெரும்பாலானோர் தெற்கு நோக்கிச் சென்றுவிட்டார்கள். ஆகவே, இப்போது இருக்கும் தலைமுறை இன்னொரு மெட்ராஸைப் பற்றி அறிந்திராத தலைமுறை” என்கிறார் முத்தையா. ‘மெட்ராஸ் தின’த்தின்போது ஒருமுறை வடசென்னைக் குழந்தைகள் தென்சென்னைக்கும், தென்சென்னைக் குழந்தைகள் வடசென்னைக்கும் சென்று, தாங்கள் அறியாத நகரத்தின் பன்முகங்களை அறிந்துகொண்டார்கள். அது பற்றிதான் முத்தையா இந்த இடத்தில் குறிப்பிடுகிறார். “மெட்ராஸ் தினம் தொடர்பான எல்லாச் செயல்பாடுகளும் கொண்டாட்டங்களும் தென் சென்னையிலும் மேற்கு சென்னையிலும்தான் நடைபெறுகின்றன. வடசென்னைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். மக்கள் தங்கள் பாரம்பரியம் குறித்து மேலும் பிரக்ஞையுடன் இருக்க வேண்டும் - ஏனெனில், இந்த இடத்தில்தான் சென்னை பிறந்தது” என்கிறார் முத்தையா.

சென்னையின் வரலாறு, பாரம்பரியம் போன்றவற்றை அறிந்துகொள்வதற்கான பயணத்தைத் தொடங்குவதற்கு வடக்கு நோக்கிச் செல்லும் கடற்கரைச் சாலை பொருத்த மான இடம். சரக்குப் பெட்டக முனையங்களையும் பழங்காலக் கல்லறைத் தோட்டங்களையும் தாண்டி... பிழைக்க வழியில்லாத மக்களெல்லாம் எந்தக் கடற்கரையிலிருந்து கொத்தடிமைகளாகக் கடல்கடந்து தோட்டப் பண்ணை களுக்கு அனுப்பப்பட்டார்களோ அந்தக் கடற்கரை தாண்டி, கருப்பாகவும் கலங்கலாகவும் கடல்நீர் இருக்கும் அந்த இடத்தை அதாவது, உலகப் போரின்போது இந்த நகரத் தைத் தரைமட்டமாக ஆக்க ஒரு கப்பல் முயன்றுபார்த்த அந்த இடத்தையும் தாண்டி போய்க்கொண்டே இருங்கள். கடலுக்குள் மூழ்கியிருக்கும் மண்ணரிப்புத் தடுப்புச் சுவர்களூடே நடந்துசெல்லுங்கள்; பிரம்மாண்டமான அரங்கம் ஒன்றிலிருந்து மெட்ராஸின் நிலவிரிவைக் காட்சியுறும் பாக்கியம் பெறுவீர்- நவீன வாழ்க்கையின் சலிப்பூட்டும் அன்றாடத்தன்மைக்கு அந்தக் காலத்திய அருமருந்து அது!

- ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ‘மெட்ரோ ப்ளஸ்’ இணைப்பிதழில் வெளியான கட்டுரை. தமிழில்: ஆசை

2 comments:

  1. வந்தாரை வாழவைக்கும் சென்னையைப் பற்றிய அருமையான பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  2. My earlier life from 1941 started from here; I know every nook and corner of North Madras. Thank you for your fine words. I went to the past

    ReplyDelete