Friday, February 14, 2020

மறைந்துகிடக்கும் யாழ்



ரூமி

இவ்வுலகின் யாழையெல்லாம்
நீ உடைத்தாலுமென்ன மௌலா?
வேறுவேறு யாழுண்டு
ஆயிரமாயிரமாய் இங்கே.

காதல் யாழின் பிடிக்குள் விழுந்த நமக்கு
என்ன கவலை, நமது யாழும் குழலும் தொலைந்தால்.

இவ்வுலகின் யாழும் துந்தனாவும் எரிந்துபோனாலும்
மறைந்துகிடக்கும் யாழுண்டு பல, நண்பா.

செவிடுகளின் காதை எட்டவில்லையென்றாலும்
மீட்டொலியும் டங்காரமும் விண்ணைத் தொடும்.
இவ்வுலகின் விளக்குகளும் மெழுகுவர்த்திகளும்
அணைந்துபோகட்டுமே,
சிக்கிமுக்கிக் கல்லும் இரும்பும்
இங்கே இருக்கும் வரை என்ன கவலை?

கீதங்கள் யாவும் கடலின் சருமத்தில் நுரைத்துளிகளே
முத்துக்கள் மிதப்பதில்லை கடலின் சருமத்தில்.
ஆயினுமறிவாய் நுரைத்துளிகளின் வனப்பு
முத்துக்களிடமிருந்து வந்ததென்பதை,

அவனது ஜொலிப்பின் பிரதிபிம்பத்தின் பிரதிபிம்பம் நம் மீது.
கூடல் ஏக்கத்தின் கிளைகளே பாடல்கள் யாவும்
எனினும் வேருக்குக் கிளை என்றும் நிகராகுமோ?

உதடுகள் மூடி இதயத்தின் ஜன்னல் திற
ஆன்மாக்களுடன் பேச அதுதான் வழி.
(தமிழில்: ஆசை)

No comments:

Post a Comment