Saturday, February 11, 2017

சீகாரப் பூங்குருவி



மேலே வெயில் வானம்

கருப்பிலிருந்து
கருநீலத்துக்குப்
பறக்கிறது
ஒரு பறவை

மேற்கு மலைத்தொடரின்
பறக்கும் சிகரமொன்றில்
வழியும் கருநீலத்தின்
அருவி அது

வெயிலின் குழந்தையந்தக்
கருநீலம்
கருமையாய் சுருண்டு கிடக்கிறது
வெயில் தொடும்வரை

வெயில் தொடத் தொடக்
குழைகிறது நாய்க்குட்டியாய்

அந்தக் கருநீலம்
செல்லுமிடமெல்லாம்
செல்கிறது
உள்ளுக்குள்
ஒரு கருநீலத் தனிமை

ஓரிடம் நிற்கிறது
அந்தப் பறவை
ஒரு நொடி தாமதிக்கிறது

உடலின் கருநீலத்திலிருந்து
குரலின் கருநீலம் நோக்கி
இப்போது பறக்கிறது
ஒரு பறவை

1 comment:

  1. இக்கவிதையைப் படிக்கும்போது குழந்தையாகிப்போன உணர்வு.

    ReplyDelete