Friday, November 15, 2013

காகமாதல்

ஆசை 
('தி இந்து' நாளிதழில் 24.09.13 அன்று 'காகமும் நாமும்' என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது )
                                                     படம்: விக்கிபீடியா




ஒரு நாள் அலுவலகத்துக்கு வந்தபோது நான் பார்த்த காட்சி என்னை வியப்பிலும் பொறாமையிலும் ஆழ்த்தியது. அலுவலகத்தின் பால்கனியில் என் அலுவலக சகா ஒருவர் வெளியில் பார்த்து நின்றுகொண்டிருக்க அவர் முகத்துக்கு அருகே உள்ள இரும்பு கிராதியில் ஒரு காகம் அவரைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது. அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பிஸ்கட்டை காகத்துக்குப் பிட்டுக்கொடுக்க அதுவும் அலகால் அதைக் கொத்திக்கொண்டு போய்விட்டது. அவரிடம் மட்டும் வரும் காகம் நம்மிடம் வராதா என்று எனக்குப் பொறாமை ஏற்பட்டது.

நானும் தினமும் காகத்துக்கு பிஸ்கட் வைத்துவிட்டு கொஞ்சம் பக்கத்திலேயே நின்றுகொள்வேன். பிஸ்கட் வைத்த கொஞ்ச நேரத்தில் எங்கெங்கெல்லாமோ இருந்து வந்த காகங்கள் அருகில் வராமல் வெளியில் உள்ள மரத்திலும் கேபிள்களிலும் உட்கார்ந்துகொண்டு பிஸ்கட்டையும் என்னையும் பார்த்தும் பார்க்காததுபோல் இருந்தன. எதுவும் அருகில் வரவே இல்லை. நான் சற்று நகர்ந்து உள்நோக்கிச் சென்று பால்கனியைப் பார்ப்பதற்கு ஏதுவாக மறைந்துகொண்டேன். அடுத்த விநாடியே காகங்கள் அடித்துப் பிடித்துக்கொண்டு வரிசையாகப் பிட்டு வைத்த பிஸ்கட்டைக் கொத்திக்கொண்டு போயின. இப்படியே ஒரு சில நாட்கள் நடந்தது. நான் ஒவ்வொரு நாளும் எனக்கும் பிஸ்கட்டைப் பிட்டுவைத்த இடத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்துக்கொண்டே வந்தேன். காகம் பிஸ்கெட் எடுக்க வருவதற்கு முன் மறைந்துகொண்டிருக்கும் நான் அது எடுக்கும்போது மெதுவாக வெளிப்பட்டு அதை நோக்கி வருவேன். அது எடுக்காமல் பறந்துவிடும். குறித்த நேரத்தில் பிஸ்கட் வைக்கத் தவறிபோதெல்லாம் கிராதியில் வந்து உட்கார்ந்துகொண்டு காகங்கள் கரைய ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் நான் பால்கனியில் இருக்கும்போதும் பயப்படாமல் வந்து பிஸ்கட்டை எடுத்துச்செல்ல ஆரம்பித்தது.
சரி, என் பரிசோதனையையும் காகத்துக்கும் எனக்கும் இருக்கும் உறவையும் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. பிஸ்கெட்டைப் பிட்டுக் கையிலே வைத்துக்கொண்டு காகம் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாய் கையை வெளியில் நீட்டிக்கொண்டிருந்தேன். பிஸ்கெட் சாப்பிட வந்த காகங்கள் என்னைக் கண்டதும் கிராதி அருகே வருவதும் மரத்தை நோக்கிப் போவதுமாக அலமலந்துகொண்டிருந்தன, ஏதோ மனஉளைச்சலில் இருப்பதுபோல. முதல் நாள் அப்படிச் செய்துவிட்டு பிஸ்கெட்டைக் கிராதியில் வைத்துவிட்டேன் சட்டென்று வந்து காகம் ஒன்று வந்து எடுத்துக்கொண்டு போனது. இந்தப் பரிசோதனையை மூன்று நாட்கள் செய்த பிறகு நான்காம் நாள் கிராதியில் வைத்த பிஸ்கட்டை எடுப்பதற்காகக் காகம் கிராதியில் வந்து தொற்றியபடி நின்றபோது பிஸ்கெட்டை எடுத்துக் காகத்திடம் நீட்டினேன். சட்டென்று என் கையிலிருந்தே கொத்திக்கொண்டு போனது. எனக்கு உற்சாகத்துக்கு அளவே இல்லை. அலுவலகத்தில் எல்லோரிடமும் பெருமையடித்துக்கொண்டேன், காகம் என் கைகளில் இருந்து பிஸ்கெட்டை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டதென்று. ஐஸ்வர்யா ராயிடம் ஆட்டோகிராப் வாங்கிய ஒருவர் எப்படி பீற்றிக்கொள்வாரா அப்படிப் பீற்றிக்கொண்டேன். காகம் காகத்திடம் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறது, இதிலென்ன அதிசயம் என்று அலுவலக நண்பர் என்னைக் கிண்டலடித்தார். அதற்குப் பிறகு காகங்கள் தொடர்ந்து என் கையிலிருந்துதான் வாங்கிக்கொண்டு செல்வது வழக்கம்.

காகம் என் கையில் முதன்முறையாக பிஸ்கெட் வாங்கியபோது நான் உண்மையிலேயே என்னை மறந்த பரவச நிலையை அடைந்தேன். காகம் என்னை நம்பி என் கைகளில் வாங்குகிறதே, தன் உலகுக்குள் என்னையும் அனுமதிப்பதால்தானே இந்த நம்பிக்கை வந்தது என்று எனக்குத் தோன்றியது. காகம் நம்மை நோக்கி நெருங்கும் போதெல்லாம் நாமும் காகத்தை நெருங்குகிறோம். நம்மை நம்பி நம் கையில் உணவை வாங்கிக்கொள்ளும் போது அதுவரை காகத்துக்கும் நமக்கும் இடையே இருந்த இடைவெளி கரைந்து நாமும் காகமாகிறோம். நம் கையில் உணவு வாங்கித்தின்பது காகமல்ல நாம்தான். இது ஆனந்தமயமான ஒன்றுபடல். செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு இந்த உணர்வு புதிதல்ல. இது குழந்தையிடம் நமக்குக் கிடைக்கும் உணர்வு போன்றதுதான். எவ்வளவு முரட்டுக் குணமானவராக இருந்தாலும் எவ்வளவு கொடியவராக இருந்தாலும் ஒரு குழந்தையை, குறைந்தபட்சம் அவருடைய குழந்தையை, அவரிடம் கொடுத்தால் அவரும் குழந்தையாக மாறிவிடுவார். அது குழந்தையின் சக்தி. குழந்தையின் களங்கமின்மையில் நம் தீய உணர்வுகள் கரைந்து ஒரு விதப் பரவச நிலையை நாம் உணர்வோம். பிராணிகளிடம் நமக்குக் கிடைப்பதும் அதே உணர்வுதான்.

என் நண்பர் ஒருவர் கவிஞர் தேவதேவனைச் சந்தித்தபோது ஒரு காகம் வந்து தேவதேவனின் தோளில் உட்கார்ந்ததைப் பார்த்ததை என்னுடன் பகிர்ந்துகொண்டார். காகத்துக்கு பிஸ்கெட் கொடுத்ததையே பீற்றிக்கொள்கிறேனே அந்த மனிதர் எப்படி வார்த்தைகளின்றி ஒரு உயிரை இப்படி வசப்படுத்தினார் என்று நான் அடிக்கடி நினைத்துநினைத்து வியந்துபோகிறேன். டேவிட் அட்டன்பரோவும் எந்தப் பறவையையும் சற்று நேரத்தில் வசப்படுத்திவிடுவார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ("காந்தி" திரைப்படத்தின் இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பரோவின் சகோதரர் இவர்). பறவைகளுக்கு தீனி கொடுக்காமலும் அவற்றுடன் தோழமை கொள்ள முடியும். ஆனால் அதற்குப் பறவைகளின் சொற்களற்ற மொழியையும் அவற்றின் பழக்க வழக்கங்களைப் பற்றியும் நாம் தெளிவாகப் படித்திருக்க வேண்டும். இவற்றையெல்லாம் தாண்டியும் ஏதோ ஒரு காந்த சக்தியும் வேண்டும் போலிருக்கிறது. புத்தரின் ஒளிவட்டம் காடு முழுக்கப் பரவியிருந்ததாகவும் அந்த ஒளிவட்டத்துக்குள் சிங்கம் போன்ற விலங்குகளும் சாதுவாக அவருக்கு அருகில் திரிந்ததாகவும் எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது

ஒருமுறை திருவான்மியூர் கடற்கரையில் நடந்துவந்துகொண்டிருந்தபோது  
ஒரு காட்சியைப் பார்த்தேன். ஒரு நபர் மஞ்சள் பையை வைத்துக்கொண்டு அதிலிருந்து மாவு மாதிரி ஏதோ எடுத்து வரிசையாகக் கோலமாவால் கோடு கிழிப்பது மாதிரி போட்டுக்கொண்டே வந்தார். என்னவென்று எனக்குப் புரியவில்லை. பறவைகளுக்குப் போடுவது மாதிரியும் இல்லை. என்னவென்று அவரிடமே கேட்டேன். "கம்பு மாவுங்க, எறும்புகளுக்காகப் போடுறேன்" என்றார். அவருடைய கருணை உணர்வை நினைத்து எனக்குச் சிலிர்த்துவிட்டது. அவ்வளவு சிறிய உயிர்களுக்குக்கூட கருணை காட்ட மனிதர் இருக்கிறார்களா என்பது ஆச்சர்யமாக இருந்தது. எறும்புகளுக்குத் தீனி போடத் தேவையில்லை, அவற்றால் தாமாகவே தேடிக்கொள்ள முடியும் என்றாலும், அவருடைய செயல் கொஞ்சம் முட்டாள்தனமாகத் தோன்றினாலும் இப்படிப்பட்ட கருணை மனிதர்களின் மேல் இன்னும் நம்பிக்கை வைக்கலாம் என்ற ஆறுதலை எனக்கு ஏற்படுத்தியது.
மேற்கண்ட நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்குள் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. வளர்ப்புப் பிராணிகளுக்குத் தீனி வைப்பது சரி. ஆனால் இயற்கையாகத் திரியும் உயிரினங்களுக்கு இப்படித் தீனி வைப்பது சரியா? காகத்துக்கு பிஸ்கட் கொடுப்பது சரியா? இதைப் பற்றி என் நண்பரும் பறவையியலாளருமான ஜெகநாதனிடம் கேட்டேன். இது மாதிரியான செயல்கள் உயிரினங்கள் மேல் நமக்கு இருக்கும் கருணையைக் காட்டினாலும் இதுபோல் தீனி கொடுப்பது அறிவியல்ரீதியாக அவ்வளவாகச் சரியில்லை என்றார். இதுபோல் தீனி வைப்பது உயிரினங்களுக்கிடையே ஒரு விதப் போட்டியை ஏற்படுத்திவிடுவதோடு ஒரு சில உயிரினங்களுக்கு மட்டும் அது சாதகமாகிவிடும் என்றார். மனிதர்கள் இருக்கும் இடங்களில் காகம் உள்ளிட்ட ஒரு சில பறவைகள் மட்டும் எண்ணிக்கையில் அதிகரிப்பது மற்ற பறவைகள் கொஞ்சம்கொஞ்சமாக அந்த இடத்திலிருந்து குறைந்துவிடுவதற்குக் காரணமாகிவிடுகிறது. நமது சமயலறைக் கழிவுகள் போன்றவற்றைக் காகங்கள் உண்கின்றன. நகராட்சியில் சம்பளம் வாங்காமல் வேலைபார்க்கும் ஒரு துப்புரவு தொழிலாளி போல காகங்கள் மனித வாழ்க்கையால் வெளியேற்றப்படும் கழிவுகளை உண்டு சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்துகின்றன. மனிதர்களோடு ஒட்டி உறவாடி, மனிதர்களால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைச் சமாளித்தபடி வாழக் கூடிய திறமை காகம் போன்ற ஒரு சில பறவைகளுக்கு மட்டுமே இருக்கிறது. உணவு கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் காகம் போன்ற பறவைகள் பெருகிவிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட உயிரினம் ஆதிக்கம் செலுத்தினால் மற்ற உயிரினங்கள் ஒடுங்கிவிடும் என்பதற்கு மனித ஆதிக்கமும் காகங்களின் ஆதிக்கமும் ஒரு எடுத்துக்காட்டு. காகங்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் குயில்களும் அதிகமாக இருக்கும். ஏனென்றால் காகங்களுக்குத் தெரியாமல் அவற்றின் கூடுகளில் முட்டையிட்டுதான் குயில்கள் தங்கள் இனத்தை நீடிக்கச் செய்கின்றன. காகங்கள், குயில்கள் ஆகிய இரண்டு இனங்களும் பிற பறவைகளின் முட்டைகளை அவற்றுக்குத் தெரியாமல் இரையாகக் கொள்ளும் வழக்கமுடையவை. இதனால் பிற பறவை இனங்கள் பெருகுவதும் தடையாகிவிடுகிறது.
                நன்றி: 'தி இந்து'
               'தி இந்து' இணையதளத்தில் இந்தக்  படிக்க: காகமும் நாமும்
                               

No comments:

Post a Comment