Friday, February 21, 2025

ஆக்டேவியோ பாஸ் கவிதைகள்

 


இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற ஆக்டேவியா பாஸின் ஆறு கவிதைகள்

1. விடியற்பொழுது

குளிர்ந்த விரைவான கரங்கள்
உருவிக்கொள்கின்றன 
இருளின் கட்டுத்துணியை
ஒவ்வொன்றாக

நான் கண் திறந்து பார்க்கிறேன்
  இப்போதும் 
நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
இன்னமும் புதிதாக இருக்கும் 
ஒரு காயத்தின் மத்தியில்

Thursday, February 20, 2025

மலேசியா வாசுதேவன் நினைவாக ஒரு கவிதை


இன்று மலேசியா வாசுதேவனின் நினைவு நாள். எனக்குப் பிடித்த பாடகர்களில் ஒருவர். எனது ‘குவாண்டம் செல்ஃபி’ கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதையை அவரது ‘வா வா வசந்தமே’ என்ற பாடலுக்குச் சமர்ப்பித்திருக்கிறேன். அந்தப் பாடலில் வரும் ‘தேவமின்னல்’ என்ற சொல்லால் உந்தப்பட்டு எழுதிய கவிதை அது. அந்தக் கவிதை இங்கே:

**
தேவமின்னல்
**
தீய்ந்து கருகிய வானின்
தேவமின்னல் நீ
கீழிருந்தே எழும்
சரமழை நீ
என்ன நினைக்குமந்த
வானம்
இத்தனை கத்திகள்
படையெடுத்து வந்தால்
குறுக்கே பறக்கும்
கொக்கே
வானம் தவிர்த்து
தரை தவிர்த்து
நேரே போய்க் கொத்தி
நுழைகிறாய்
முடிவின்மையில்
-ஆசை
புதுக்கவிதை படத்தில் இடம்பெற்ற ‘வா வா வசந்தமே’ பாடலுக்கு...

Wednesday, February 19, 2025

அமைதி மரம்


அமைதியின் மீது பறவை வந்தமரும்போதுதான் மரம் உண்டாகிறது மனம் உண்டாகிறது

-ஆசை

(தேவதேவனுக்கு)

Tuesday, February 18, 2025

பேஸிவ் ஸ்மோக்கிங் நாய்கள்


பேஸிவ் ஸ்மோக்கிங் நாய்களைப் பற்றி
முதன்முறையாகக்
கவலை கொண்டபோது
சம்பந்தமே இல்லாமல்
ஆன்மா பற்றிய
நினைப்பு
அவனுக்கு
தன் முன்னே கிடக்கும்
பேஸிவ் ஸ்மோக்கிங் நாய்க்கும்
தனக்கும் இடையிலான
எட்ட முடியாத ஒரு தொலைவு
ஆன்மாவுக்கும் தனக்கும்
இருப்பதால்
அப்படி நினைப்பு
ஆனால்
நாய் இருக்கிறது
ஆன்மா இருக்கிறதா இல்லையா
என்பது தெரியாது
அவனுக்கு
அப்படியென்றால்
இல்லாத இடத்திலிருந்து
இருக்கும் இடம் வரையிலான
தொலைவை
அளப்பது போன்றுதான்
இந்த ஒப்பீடே
அர்த்தமற்ற
இந்தத் தொடர் அளத்தலில்
அவன் அலுத்தும் களைத்தும்
போய்விட்டான்
ஆன்மா இருக்கிறதா
இல்லையா என்பதை
அறிந்தாக வேண்டும்
அதற்காகத்தான்
எலிவளைக்குள் செலுத்துவதுபோல்
இவ்வளவு புகை
ஆன்மா இருந்தால்
மூச்சுத் திணறி
வெளியே வந்து
ஓடட்டும்
வரமுடியாது போனால்
உள்ளேயே செத்து
அழுகிக் கிடந்து நாறட்டும்
ஆன்மா
இல்லவே இல்லை என்றால்கூட
பரவாயில்லை
வெற்றிடத்தைப் புகைபோட்டுப்
பழுக்க வைத்தவன் என்ற பெயர்
தனக்குக் கிட்டட்டும் என்று
தொடர்ந்து
புகைபோடுகிறான்
*புகைப்பிடித்தல் மனிதர்க்கும் நாய்க்கும் கேடு
தரும் (ஆன்மாவுக்கு என்ன தரும் என்று
தெரியாது)
-ஆசை

Monday, February 17, 2025

கொஞ்சமாய் ஏமாந்துதான் பாரேன்


’அன்னை ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து
வருகிறோம் சார்’
என்று ஒரு சிறு கண்ணாடிப் பெட்டியை
உன்னிடம் நீட்டுகிறார்கள்
இரண்டு பெண்கள்
அதில் இரண்டு மூன்று பத்து ரூபாய்த் தாள்கள்
ஒரு ஐம்பது ரூபாய் நோட்டு
சில பல சில்லறைகள்
இந்தக் காசெல்லாம் உண்மையில்
ஆதரவற்றோருக்குப் போய்ச்சேருமா
இல்லை அவர்கள் பேரில்
நடக்கும் ஒரு தொழிலா
என்று ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்
உனக்குள் பூவா தலையா
போட்டுப் பார்த்து நீயே விரும்பித்
தலையைத் தேர்ந்தெடுக்கிறாய்
இதெல்லாம் சில நொடிகளுக்குள்
பிறகு
’இல்லைம்மா’
என்று அனுப்பிவிடுகிறாய்
ஆனாலும்
நீ நிம்மதியாய் இல்லை
நீ கொஞ்சம் ஏமாறுவதற்காகக்
காத்திருக்கின்றன
எத்தனையோ பசித்த வயிறுகள்
கட்டிங்குக்காகத் தவிக்கும் வயிறுகள்
அவற்றின் மேல்
உன் பத்து ரூபாயை
நடக்க விட்டுத்தான் பாரேன்
எத்தனை பூ பூக்கும் என்று
பெரிதுபெரிதாய் ஏமாந்துபோவதால்
சிறிய ஏமாற்றுகளை
வஞ்சம் தீர்க்காதே
கொஞ்சம் ஏமாறுவதில் ஒன்றும்
குறைந்துபோய்விட மாட்டாய்
மேலும்
கொஞ்சம் ஏமாறுவதென்பது
21-ம் நூற்றாண்டின் இனிய ஆன்மிகம்
கொஞ்சம் ஏமாந்துதான் பாரேன்
அது
கொஞ்சம் உடம்புக்கும் நல்லது
-ஆசை

Saturday, February 15, 2025

இருவேறு உலகத்து ஒரே மலர்


மலர்களுக்குக் கண்கள் உண்டு
அவை நம் கண்கள் இல்லை
மலர்களுக்குக் கண்ணீர் உண்டு
அவை நம் கண்ணீர் இல்லை
மலர்களுக்கு மனம் உண்டு
அது நம் மனம் இல்லை
மலர்களுக்கு வலி உண்டு
அது நம் வலி இல்லை
மலர்கள்
நமக்காக மலர்பவை இல்லை
ஆனால் நமக்காக
வைக்கப்படுபவை
அப்படி நமக்கு வைக்கப்படும்போது
இனி இந்த உலகத்தோடு
நாம் பேசுவதற்கான
நம் ஒரே வாயாக
ஆகிவிடுபவை
அப்படி நமக்கு வைக்கப்படும்போது
எல்லோரும் நம்மிடம் பேசுவதை
நாம் கேட்பதற்கான
ஒரே காதாகவும்
ஆகிவிடுபவை
நாம் இருக்கப் போகும் வெறுமைக்கும்
எங்கிருந்து அங்கு சென்றோமோ
அந்த வெறுமைக்கும் இடையே
அதன்பின்
ஒரே ஒரு மலர் மட்டுமே
இருக்கும்
இருவேறு உலகத்தின்
இயற்கைக்கும்
மணம் பரப்பியபடி
- ஆசை

Thursday, February 13, 2025

காதலர் தினத்தை முன்னிட்டுப் பாதி விலையில் எனது மூன்று கவிதை நூல்கள்!

 


அன்புள்ள நண்பர்களுக்குக்கும், வாசகர்களுக்கும் வணக்கம்!
காதலர் தினத்தை முன்னிட்டு எனது ‘அண்டங்காளி’, ’குவாண்டம் செல்ஃபி’, ‘கொண்டலாத்தி’ ஆகிய மூன்று கவிதை நூல்களும் பாதி விலையில் கிடைக்கும். இந்தச் சிறப்பு விலை இந்த மாத இறுதிவரை உண்டு. மேலும் விவரங்களுக்கு மேலே உள்ள படத்தைப் பார்க்கவும். நண்பர்கள் இந்தப் பதிவைப் பகிர்ந்து உதவ வேண்டுகிறேன்.

Thursday, February 6, 2025

பெண்குஞ்சு


ஒன்றாய்க் குளித்துவிட்டு அம்மணங்குண்டியாக ஓடி வருகிறார்கள் அண்ணனும் தங்கையும் ‘அப்பா’ என்று கூவியபடி

ஓடிவந்த வேகத்தில்
ஆடும்
அண்ணன்காரனின் குஞ்சாமணியை உருவி
என் கைக்கு
முத்தமிட்டுக்கொள்கிறேன்
‘அப்பா என் குஞ்சுக்கும் முத்தா தா’
என்று சிணுங்குகிறாள் தங்கை
அவ்விடத்தை எக்கிக் காட்டி
அங்கே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
திசைகாட்டும் சிறுகோடு
என் திசையழிக்கத்
திடுக்கிட்டுச் சமைந்தேன்
’குடுப்பா’
என்று அதட்டிவிட்டு
என் கையைப் பிடித்துத்
தன் குஞ்சின் மேல் வைக்கிறாள்
நல்ல தொடுகை
கெட்ட தொடுகை அண்டாதொரு
கருவறைக்குள்
முழுதாய்க் குளித்துவிட்டு
வந்தவள்
ஒட்டுமொத்த பிரபஞ்சமும்
அவ்விடத்தில்
கொண்டுவந்து சேர்க்கப்போகும்
மர்மமும் புனிதமும்
அவள் அதட்டலில்
நடுங்கி உதிர்கின்றன
அனிச்சையாய் உருவிக்
குவிந்த என் கைக்கு
முத்தம் கொடுக்கிறது
என் வாய்
பொம்மையாய்
மாறிச் சிரிக்கிறது
என் பெண்குஞ்சு
-ஆசை

Tuesday, February 4, 2025

சூரியன் எதைச் சுற்றுகிறது?


ஆசை

சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பெலா டார் எடுத்த அற்புதமான திரைப்படம் ‘வெர்க்மைஸ்டர் ஹார்மனீஸ்’. இதன் தொடக்கக் காட்சி ஒரு மது விடுதியில் இடம்பெற்றிருக்கிறது.

 படத்தின் இளம் நாயகனான யானோஸ் வலுஸ்கா தனது மூன்று நண்பர்களை வைத்து சூரியன், பூமி, நிலவு நடனத்தை நிகழ்த்துவார். சூரியன் போன்று ஒருவர் நடுவில் நிற்க இன்னொருவர் பூமியின் வேடத்தில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுவார்.

Monday, February 3, 2025

முதலறியான்


மறுபடியும் தீயை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் சக்கரம் செய்வதை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் வெடிமருந்தை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் அமெரிக்காவை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் ஹேம்லட்டை
முதல் ஆளாக எழுதத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் பியானோவை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் ஈர்ப்புவிசையை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் டகேரியோடைப் கேமராவை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் மின்சாரத்தை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் முதல் ஆளாக
பீகிள்ஸ் கடற்பயணத்தை மேற்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் ஒளியின் துகள் வடிவை
முதல் ஆளாக நிரூபிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் நிலவுக்கு
முதல் ஆளாகப் போகத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் கடவுள்துகளை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் கடவுளை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கவும்
முதல் ஆளாகக் கைகழுவவும்
வேண்டியிருக்கிறது
கவிஞனாய்
இருப்பதற்கு
இவ்வளவும்
செய்ய வேண்டியிருக்கிறது
வாழ்வதற்கோ
இவ்வளவு சிரமப்பட
வேண்டியதில்லை
நாம் முதல் இல்லை என்ற
எளிய அறிவு
ஒன்றே போதும்
-ஆசை

Saturday, February 1, 2025

கன்னடத்தில் என் கவிதை



எனது ‘ஹே... ராவண்!’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘பாவென்று அழையுங்களேன் பாபுஜி’ கவிதையை நண்பரும் எழுத்தாளருமான தூயனின் தந்தையும் தூயனின் மனைவி பவித்ராவும் இணைந்து கன்னடத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு அன்பும் நன்றியும். கீழே தமிழ் மூலமும் கன்னட மொழிபெயர்ப்பும் கொடுத்திருக்கிறேன்.

**
பாவென்று அழையுங்களேன் பாபுஜி
உடன் இருந்தபோது
இப்படி
என்றாவது
பாவைப்
பார்த்துக்கொண்டே
இருந்ததுண்டா பாபுஜி
உங்கள் பார்வை கண்டு
பா அஞ்சிய
காலம் உண்டு
பிறகு
பாவின் பார்வைக்கு
அஞ்ச ஆரம்பித்தீர்கள்
நீங்கள்
இன்று இரண்டுமில்லை
ஒருவழிப் பார்வை
மட்டுமே
பாவின் விழிகள்
இறுதியாய் வெறித்த
ஆகா கான் மாளிகையின்
உட்கூரை உச்சியாய்
அப்போது இருக்க
ஆசைப்பட்டீர்களா பாபுஜி
ஒரு மகாத்மா ஆவதற்கு
நிரம்பக் கல்நெஞ்சம்
வேண்டுமென்று
உடனிருந்து கண்டவர்
இன்று அதில் உங்களைத்
தோல்வியடையச் செய்துவிட்டுப்
போய்விட்டாரா பாபுஜி
எப்போதும்
ஏந்திப் பொறுத்துக்கொண்ட
பாவின் அகிம்சை முன்
உங்கள் உன்னத அகிம்சை
மேலும் தோற்றுப்போய்
அதனால்
துவண்டுபோய்
அமர்ந்திருக்கிறீர்களா பாபுஜி
பா என்று அழையுங்களேன்
பாபுஜி
அவர் விருட்டென்றெழுந்து
உங்களுக்கு
ஆட்டுப்பாலும் பேரீச்சையும்
கொண்டுவரப் போய்விடுவார்
பா என்று அழையுங்களேன்
பாபுஜி
அவர் சட்டென்றெழுந்து
உங்களுடன்
கேரம் விளையாட
உட்கார்ந்துவிடுவார்
ஆனால்
நீங்கள் மாட்டீர்கள்
கல்நெஞ்சக்காரர்
கேட்டால்
பாவுக்கு
அவள் துயர்களிலிருந்தும்
என்னிடமிருந்தும்
விடுதலை கிடைத்திருக்கிறது
என்று சாக்கு சொல்வீர்கள்
கூட
ஒரு துயரச் சிரிப்புடன்
-ஆசை

கன்னடம்:
ಭಾ ಎಂದು ಕರೆಯಿರಿ….. ಬಾಪೂಜಿ
ಜೊತೆ ಇದ್ದಾಗ
ಹೀಗೆ
ಎಂದಾದರೂ ಭಾ ವನ್ನು
ನೋಡಿಕೊಂಡಿರುವಡು ಉಂಟ ಬಾಪೂಜಿ
ನಿನ್ನ ನೋಟ ನೋಡಿ ಭಾ
ಭಯಪಡುತ್ತಿದ್ದ ಕಾಲವೊಂದಿತ್ತು.
ನಂತರ
ಭಾ ವಿನ್ ನೋಟಗಿ
ಭಯಪಡಲು ಪ್ರಾರಂಭಿಸಿದ್ದೀರಿ
ನೀವು!
ಇವತ್ತೂ ಎರಡೂ ಇಲ್ಲ.
ಒಂದೇ ದಾರಿಯ ನೋಟ
ಮತರವೆ
ಭಾ ವೆನ ಕಣ್ಣುಗಳು
ಅಂತಿಮದಳ್ಳಿ ದಿಟ್ಟಿಸಿಧ
ಆಗಾ ಖಾನ್ ಅರಮನೆಯ
ಒಳಮೇಲಿನ ಭಾಗವಾಗಿ
ನೀನಾಗಿರಬೇಕೆಂದು ಬಯಸಿದ್ದೀಯಾ ಬಾಪೂಜಿ?
2
ಒಂಧು ಮಹಾತ್ಮನಾಗಲು
ತುಂಬಾ ಕಲ್ಲು ಹೃದಯ
ಬೇಕೆಂದು
ಜೋಧಯಳ್ಳಿ ಇಧ್ಧ ಅರ್ಥಮಾಡಿ ಕೊಂಡವರು
ಇಂದು ಅದರಲ್ಲಿ ನಿನ್ನನ್ನು
ಸೋಲಿಸಿ ಬಿಟ್ಟು
ಹೋಗಿ ಬಿಟ್ಟಾರಾಯೆ ಬಾಪೂಜಿ
ಯಾವಾಗಲು ಸ್ವಕರಿಸಿ
ಸಹಿಸಿಕೊಂಡ
ಬಾ ವಿನ ಅಹಿಂಸೆ ಮುಂದೆ
ನಿಮ್ಮ ಉನ್ನತಾಧ ಅಹಿಂಸೆ
ಮತ್ತೆ ಸೋದಾಗಿ ಹೋಗುವುದೆ ನೋಡಿ
ಮುರಿದ ಹೃದಯಹೊಂದಿಗೆ
ಕುಳಿತು ಕುಳ್ಳತ್ತೇರಿಯೇ ||ಬಾಪೂಜಿ
ಬಾ ಎಂದು ಕರಿಯಿರಿ ……
ಬಾಪೂಜಿ
ಅವರು ಕೊಡಲೇ ಎಧ್ದು
ನಿಮಗಾಗಿ
ಹಾಲು ಮತ್ತು ಖರ್ಜೂರದ ಹಣ್ಣುಗಳು
ತರಲು ಹೋಗಿಪಿಡುವರು
3
ಬಾ ಎಂದು ಕರೆಯಿರಿ ………
ಅವರು ವೇಗವಾಗ ಎಧ್ದು
ನಿಮ್ಮೊಂದಿಗೆ ಕೆರಂ ಆಡಲು
ಕುಳಿದು ಕೊಳ್ಳಿಬಿಡುವರು
ಆದರೇ
ನೀನು ಮಾಡಲಿಲ್ಲ
ಕಲ್ಲು ಮನಸುಗರು
ಕೇಳಿದರೇ
ಅವಳಿಗೆ
ಸಂಕಟಗಳಿಂದ ಮತ್ತು ನನ್ನಿಂದಲೂ
ವಿಮೋಚನ ಸಿಕ್ಕಿತು ಎಂದ
ಅರ್ಧಹೀನ ಕಾರಣ ಕೇಳುವೀರೆ
ಸಹಾ ...ಒಂದು
ದುಃಖದ ನಗುವಿನೊಂದಿಗೆ
ತಮಿಳಿನಲ್ಲಿ: ಆಸೈ ಬರಹಗಾರ ಕನ್ನಡ : ಕುಯೇಲಿ ಮುನುಸಾಮಿ

Friday, January 31, 2025

கிழவன்

 


(எனது முதல் கவிதைத் தொகுப்பான ‘சித்து’ 2006-இல் க்ரியா வெளியீடாக வெளியானது. அதிலிருந்து ஒரு கவிதை.)
**
கிழவன்
**
எப்போதும் என்னைப் பின்தொடர்கிறான்
ஒரு கிழவன்
நான் செல்லும் பேருந்தில்
அவனும் வருகிறான்
நான் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு
அருகிலேயே நிற்கிறான்
என்னை வெறித்தவாறே
அவனை உட்காரவைப்பதுதான்
நியாயம் என்றாலும்
எனக்கு விருப்பமில்லை
இடம் கேட்டுவிடுவான் என்று
வெளியில் ஓடும் சுவரொட்டிகள்
எதையும் பார்க்காமல்
எல்லாவற்றையும் பார்க்கிறேன்
எனக்குத் தெரியும்
அவனொன்றும் அவ்வளவு
பொறுமைசாலி அல்லவென்று
நான் எழும் தருணமும்
அவன் உட்காரும் தருணமும்
எப்படி
காண முடியாதவாறு
ஒன்றாகப்போகிறது என்பதை
நினைத்துப்பார்க்கிறேன் எப்போதும்
மிரட்சியுடன்
-ஆசை

Monday, January 27, 2025

இந்தப் பிரபஞ்சத்தின் மையம் தேடி ஒரு வேள்வி



என்றாவது யோசித்ததுண்டா நீங்கள்
உங்கள் மூளை ஏன்
இன்னொருவர் தலையில் இல்லை என்று
உங்கள் தலைக்குள் இருப்பது
இன்னொருவர் மூளையோ என்று
உங்கள் மூளைக்குள் இருப்பது
இன்னொருவர் மனமோ என்று
உங்கள் உடலில் இருப்பது
இன்னொருவர் கைகளோ என்று
உங்கள் புலன்களில் இருப்பது
இன்னொருவர் உணர்வுகளோ என்று
நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று
யாராவது கேட்டால்
என் மூளையை பார்க்கச்
சென்றுகொண்டிருக்கிறேன்
என்று சொன்னதுண்டா
எங்கோ என் மனதை வைத்துவிட்டேன் என்று
நீங்கள் தேடியது உண்டா
உண்மையில் எதுவும்
அதனதன் இடத்தில் இல்லை
அதனால்தான்
தலைக்கு மேல் மயிரிலிருந்து
தலைக்கு உள்ளே மூளையிலிருந்து
அதற்கு உள்ளே மனதிலிருந்து
இன்னும் புலன்கள் உணர்வுகள்
குறி குறிமயிர்
கால்கள்
அனைத்துமே
இந்த நீட்டம் நீட்டுகின்றன
இந்த அலைச்சல் அலைகின்றன
அங்கொன்றும் இங்கொன்றுமாகத்
தட்டுப்படுவதையெல்லாம்
எடுத்து வைத்துக்கொண்டு
தடவித் தடவி
ஆறுதல் கொள்கின்றன
உங்கள் பிரச்சினை
என்னவென்றால்
இதையும் நம்பிவிடுவீர்கள்
அவ்வளவு
சர்வநிச்சயம்
தேவைப்படுகிறது
நான்
அப்படியெல்லாம்
இருக்க மாட்டேன்
அதோ அங்கே போகிறாரே
அவரிடம் உள்ள என் கையைப்
பிடித்து
இதோ இங்கே இருக்கிறானே
இவன் கன்னத்தில்
மாறி மாறி அறையப் போகிறேன்
இந்த உலகம்
எவ்வளவு சிக்கலானது
என்பதைப் பிறர்க்கோ
எனக்கோ நிரூபிக்க
இங்கிருந்தே
தொடங்க வேண்டும்
ஆனால்
அதற்கு முன்னரே
'இங்கு'வையும் 'இதோ'வையும்
சந்தேகிக்க ஆரம்பித்துவிட்டேனே
இங்கிருந்தோ
எங்கிருந்தோ
இவ்வளவு
குழப்பத்துடன்
ஒரு பிரபஞ்சமும் கவிதையும் தேவையா 
-ஆசை

Tuesday, December 31, 2024

காந்தி, ராமனை எண்ணுதல், எழுதுதல்: ஆசையின் கவிதைகள் - பேரா. ராஜன் குறை


(எனது புதிய கவிதைத் தொகுப்பான ‘ஹே ராவண்’ நூலுக்குப் பேரா. ராஜன் குறை வழங்கிய அணிந்துரை)

தமிழில் எண்ணிப் பார்ப்பது என்றால் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவதையும் குறிக்கும்; சிந்தித்துப் பார்ப்பதையும் குறிக்கும். 

       எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 

       கண்ணென்ப வாழும் உயிர்க்கு  

என்பது குறள். இங்கே எண் என்பது ஆங்கிலத்தில் நம்பர் எனப்பட்டாலும், டிஜிட் என்றும் கூறலாம். எண்ணை முதலில் சொல்லி, எழுத்தை அடுத்து சொல்லியிருப்பது மிகவும் கருதத்தக்கது. இப்போது நான் கணினியில் தட்டச்சு செய்வது டிஜிட்டலாகத்தான் எழுத்தாக மாறுகிறது என்பதைக் கருதாமல் இருக்க முடியவில்லை. வள்ளுவருக்கு டிஜிட்டல் யுகம் பற்றிய முன்னறிதல் இருந்தது என்று பொருளல்ல. ஆனால் ‘எண்ணி’ப்  ‘பார்ப்பது’ என்பதில் எண்ணும், கண்ணும் இணைந்திருப்பதும் அதுவே எழுத்தாவதும் தமிழ் சிந்தனை மரபில் பதிவாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

Saturday, December 28, 2024

சென்னை புத்தகக் காட்சியில் மகிழ் ஆதனின் கவிதை நூல்கள்

படம்: கோபி

சென்னை புத்தகக் காட்சியில் எங்கள் மகன் மகிழ் ஆதனின் கவிதை நூல்கள் கிடைக்கும் அரங்குகள் பற்றிய விவரங்கள்  இங்கே:

நூல்வனம் (வானம்) அரங்கு எண்: 438

*நான்தான் உலகத்தை வரைந்தேன்

(கவிதைகள்)

விலை: ரூ.50

எதிர் வெளியீடு அரங்கு எண்: F-43

*காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்
(காலத்தைப் பற்றிய கவிதைகள்)

இந்த நூல்கள்  க்ரியா பதிப்பகம் அரங்கு எண் 611-612லும் கிடைக்கும்

இந்தப் புத்தகங்களை வாங்கி குட்டிக் கவிஞனுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்!





Friday, December 27, 2024

சென்னை புத்தகக் காட்சியில் என் புத்தகங்கள்


சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி வெளிவரும் மூன்று புதிய நூல்கள் உட்பட இதுவரை 12 நூல்கள் வெளியிட்டிருக்கிறேன். இவற்றுள் 6 கவிதை நூல்கள் (ஒரு காவியம் உட்பட), மூன்று உரைநடை நூல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் அடங்கும். இவற்றுள் என் முதல் கவிதைத் தொகுப்பான ‘சித்து’ அச்சில் இல்லை. இவை தவிர கிட்டத்தட்ட 20 சிறார் நூல்களை Tulika பதிப்பகத்துக்காக மொழிபெயர்த்திருக்கிறேன். என் நூல்களின் விவரங்களையும் அவை இந்தப் புத்தகக் காட்சியில் கிடைக்கும் அரங்குகள் விவரங்களையும் இங்கே தருகிறேன்.

எதிர் வெளியீடு அரங்கு எண் F-43

*மாயக்குடமுருட்டி

(காவியம்)

விலை: ரூ.350

*ஹே ராவண்!

(கவிதைகள்)

விலை ரூ.200

*உயரத்தில் ஒரு கழுவன்

(சிறுகதைத் தொகுப்பு)

விலை: ரூ.220

க்ரியா பதிப்பக அரங்கு எண்: 611-612

*கொண்டலாத்தி

(பறவைக் கவிதைகள், வண்ணப் படங்களுடன்)

விலை: ரூ.180

ருபாயியத் -ஒமர் கய்யாம்

(மொழிபெயர்ப்புக் கவிதைகள், பேரா.தங்க.ஜெயராமனுடன் இணைந்து)

விலை: ரூ.125

பறவைகள்: அறிமுகக் கையேடு

(ப.ஜெகநாதனுடன் இணைந்து)

அமைதி என்பது நாமே - திக் நியட் ஹான்

(பௌத்த மொழிபெயர்ப்பு நூல்)

விலை: ரூ.180

இந்து தமிழ் திசை அரங்கு எண்கள்: 55-56, 668-669

*என்றும் காந்தி

விலை: ரூ.280

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் அரங்கு எண்கள்:  F-4, 75-76

அண்டங்காளி

(கவிதைகள்)

விலை: ரூ.100

குவாண்டம் செல்ஃபி

(கவிதைகள்)

விலை: ரூ.160

இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்

(கலை, இலக்கியக் கட்டுரைகள்)

விலை: ரூ.330

Tulika - 426

என் சிறார் இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள்

Friday, November 22, 2024

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்: அபத்தத்தைக் கொண்டு அர்த்தத்தை அளவிடும் படைப்பாளி (பிறந்தநாள் மீள்பகிர்வு)


பாலசுப்ரமணியன் பொன்ராஜ் இதுவரை, ‘கனவு மிருகம்’ (பாதரசம் வெளியீடு), ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ (யாவரும் பப்ளிஷர்ஸ்) ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கிறார்.

பாலசுப்ரமணியனின் சிறுகதைகள் பல வகைகளிலும் உற்சாகப்படுத்துகின்றன. கூடவே, நம் மனஅடுக்கின் இயல்பான அமைப்பில் இடையூறும் ஏற்படுத்துகின்றன. உற்சாகப்படுத்துவதற்கு முதன்மையான காரணம், பாலசுப்ரமணியனிடம் வெளிப்படும் சிந்தனை வீச்சு. தத்துவம், அரசியல், உலக இலக்கியம், இசை, அறிவியல் என்ற பல துறைப் பரிச்சயத்தையும் சரியாக உள்வாங்கித் தனது படைப்புகளில் ஆழமான சுயவெளிப்பாடுகளாக வெளியிட்டிருக்கிறார். இதற்கு உதாரணமாக ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பல்’ தொகுப்பில் பல இடங்களையும் காட்ட முடியும்.

Sunday, November 17, 2024

க்ரியா ராமகிருஷ்ணன்: தமிழில் முன்னுதாரணமில்லாத ஒரு எடிட்டர்: நினைவுநாள் பகிர்வு


ஆசை

தமிழில் புத்தகக் கலாச்சாரம் என்பது இல்லை என்பது க்ரியா ராமகிருஷ்ணன் அடிக்கடி வெளிப்படுத்தும் வருத்தங்களுள் ஒன்று. புத்தகக் கலாச்சாரம் என்பது புத்தகங்கள் அதிகம் வெளியாகும் சூழல் அல்ல, புத்தகங்களுக்கு நம் வாழ்க்கையில் நாம் முக்கிய இடம் கொடுப்பதே புத்தகக் கலாச்சாரம். அப்படிப்பட்ட கலாச்சாரம் இல்லாமல் போனதன் விளைவுகளுள் ஒன்றுதான் தமிழில் எடிட்டர்களும்கிட்டத்தட்டஇல்லாமல் போனது. அந்தக் குறையைப் போக்க வந்த முக்கியமான இருவர் – ‘க்ரியாராமகிருஷ்ணன் (2020), நஞ்சுண்டன் (2019) – சமீப ஆண்டுகளில் காலமானது தமிழுக்கும் தமிழ்ப் பதிப்புத் துறைக்கும் பேரிழப்பு.

எடிட்டிங்கை க்ரியா ராமகிருஷ்ணன் எப்படி அணுகினார் என்பதைப் பார்ப்பதற்கு முன்புஎடிட்டிங்என்பதைப் பற்றித் தமிழ்ச் சூழல் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.