Monday, September 29, 2025

கரூர் துயரம்: தொண்டர்களைத் தயார்ப்படுத்தாத அரசியலின் விளைவு!


கரூரில் கூடிய யாரும் அரசியல்வாதி விஜய் பேசுவதைக் கேட்க வந்த தொண்டர்கள் இல்லை. நடிகர் விஜயைப் பார்க்க வந்த ரசிக வெறியர்கள். பெண்கள் உட்பட பலரும் முதல் நாள் இரவே அந்த இடத்தில் வந்து படுத்துக்கொண்டனர். 12 மணி நேரத்துக்கு மேலாக சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல் ஒன்றுக்குப் போகாமல் விஜய்க்காகக் காத்திருக்கிறார்கள். அதுதான் மயங்கி விழுந்திருக்கிறார்கள். நெரிசலில் மூச்சுத் திணறி இறந்திருக்கிறார்கள். விஜய் நேரத்துக்கு வந்திருந்தால் இவ்வளவு அசம்பாவிதம் நடந்திருக்காது. நடந்ததற்கு விஜய்தான் முழுமுதல் காரணம்.

எம்.ஜி.ஆர். தன் படங்களின் வழியே பொறுப்பான பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தார். திரையில் மது அருந்த மாட்டார், புகைப்பிடிக்க மாட்டார், ரவுடியிசத்தில் ஈடுபட மாட்டார். அவரது ரசிகர்களும் அவரைப் பின்பற்றினார்கள். எனக்குத் தெரிந்து என் நண்பரின் தந்தை ஒரு எம்.ஜி.ஆர். ரசிகர். இன்றுவரை மதுப் பழக்கம், புகைப்பழக்கம் கிடையாது. கேட்டால் தலைவர்தான் காரணம் என்பார். ஆனால், விஜய் இதற்கு நேரெதிர். தன் ரசிகர்களைத் தன் திரைப் பிம்பத்தைப் போலவே தற்குறிகளாக ஆக்கிவிட்டிருக்கிறார். அதுதான் இதற்கு காரணம். தன் ரசிகர்களை எந்த விதத்திலும் தயார்படுத்தாமல் அரசியலில் குதித்திருக்கிறார். 

சௌரிசௌரா வன்முறை (1922) நடைபெற்றபோது காந்தி வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருந்த ஒத்துழையாமையை, மக்கள் இன்னும் தயாராக ஆகவில்லை என்று கருதி நிறுத்திவிட்டார். இதற்காக அவர் இன்னும் விமர்சிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அந்தப் போராட்டம் தொடர்ந்திருந்தால் மேலும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கும்; அது மக்களுக்குத்தான் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்று காந்தி நன்கு அறிந்திருந்தார். அதற்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்தே உப்பு சத்தியாகிரகம் (1930) என்ற பெரிய போராட்டத்தை காந்தி முன்னெடுத்தார். அப்போது தொண்டர்கள் ஒரு பெரிய போராட்டத்துக்குத் தயாராக அரசியல்மயப்பட்டிருந்தார்கள். 

அதுமட்டுமல்ல காந்தி எந்தப் பகுதியில் போராட்டம் நடத்தச் சென்றாலும் அங்கே முதல் காரியமாக அங்குள்ள மக்களுக்கு போராட்டத்துக்கு அடிப்படையான கல்வியைப் புகட்டினார். சுத்தம், சுகாதாரம், ஒழுங்கு ஆகியவற்றைப் பேணுதல், எல்லோரும் ஒன்றாக சமைத்து உண்ணுதல், எல்லா வேலைகளையும் எல்லோரும் செய்தல் (கழிப்பறைகளைச் சுத்தம் செய்தல் உட்பட), கல்வி கற்பித்தல், தீண்டாமையைப் பின்பற்றாமல் இருத்தல் என்று அவர் மேற்கொண்டநடவடிக்கைகளில் மக்கள் அரசியல்மயமானார்கள். அதனால்தான் அவருடைய போராட்டங்கள் கட்டுக்கோப்பாக நடைபெற்றன. அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தாலும் போராட்டம் கட்டுக்கோப்பாக நடக்கும். அந்த அளவுக்குத் தனக்குக் கீழே அடுத்த கட்ட தலைவர்களைத் தயார்செய்திருந்தார். 

அதுபோன்று தலைமைகளுக்குத் தன் தொண்டர்கள் மீது கட்டுப்பாடு வேண்டும். எம்.ஜி.ஆருக்கு கூடாத கூட்டமா? ஆனால், விஜய்க்காகக் கூடியவர்களெல்லாம் தற்குறிகள். அவ்வளவு ஏன் விஜயகாந்த் கூட்டத்தில் யாராவது ஏதாவது செய்தால் விஜயகாந்த் மேடையில் இருந்தே மிரட்டுவதைப் பார்க்கலாம். விஜய் அப்படி எதுவும் செய்யவில்லை. மரங்களில் ஏறுதல், அத்துமீறி பிறர் வீடுகளின் பால்கனியில் ஏறுதல், மின்சார கம்பங்களில் ஏறுதல், பிறருடைய சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் என்று தன் ரசிகர்கள் செய்த எதையும் அவர் கண்டிக்க வில்லை. அவர் இதையெல்லாம் ரசிக்கவே செய்தார்

திமுக, அதிமுக தொண்டர்களெல்லாம் ஒழுக்கமானவர்கள் என்று சொல்வதற்கில்லைதான். ஆனால் கட்டுக்கோப்பானவர்கள்.  வார்டு மெம்பர், வட்டச் செயலாளர் தொடங்கி மாவட்டச் செயலாளர் வரை அவர்களைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்வார்கள். இங்கே விஜய், புஸ்ஸி ஆனந்த் தவிர இரண்டாம் கட்ட மூன்றாம் கட்டத் தலைவர்கள் என்று எவரும் இல்லை. இறந்துபோனவர்களையும் காயம்பட்டவர்களையும் பார்க்க விஜயில் தொடங்கி எந்தக் கட்ட நிர்வாகிகளும் வரவில்லை என்பது கட்சி நிர்வாகம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அங்கே விஜய் மட்டும்தான் முகம், தலைவர், கடவுள். எம்.ஜி.ஆருக்கும் ஓரளவு அப்படித்தான் என்றாலும் அவருக்கு வலுவான மாவட்டச் செயலாளர்கள் இருந்தார்கள். திமுகவை பின்பற்றிய கட்டமைப்பு இருந்தது. த.வெ.கவில் ஒவ்வொரு உள்ளூர் பகுதியிலும் யார் வட்டச் செயலாளர் என்று பார்த்தால் 25 வயது அரைவேக்காடாக, ரசிகத் தற்குறியாக இருக்கும்.

தன் தொண்டர்களைத் தயார்ப்படுத்தவும் அரசியமயப்படுத்தவும் எம்.ஜி.ஆர். திரைப்படங்களைப் பயன்படுத்திக்கொண்டார். அதற்குக் குறிப்பிட்ட காலம் எடுத்துக்கொண்டார். ஆனால், விஜய் தன் பிம்பத்தைக் கட்டமைக்க, வெறியர்கள் கூட்டத்தை உருவாக்க மட்டுமே திரைப்படங்களைப் பயன்படுத்திக்கொண்டார். அவரும் அரசியலுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளவில்லை. அவருடைய தொண்டர்களையும் அவர் தயார்ப்படுத்தவில்லை. அதன் விளைவுதான் கரூர் மரணங்கள். இந்தத் துயரம் இதற்கு முன்பே வேறு விஜய் பேரணிகளிலோ மாநாடுகளிலோ ஏற்பட்டிருக்கலாம். வெடிக்கக் காத்திருந்த அணுகுண்டு போல் இப்போது வெடித்துவிட்டது. இனி  முன்பைப் போல அரசியல் செய்ய முடியாது என்பதை ராஜா வீட்டுக் கன்றுக்குட்டியான விஜய் உணர்ந்திருப்பார்.

 - ஆசை

Monday, September 22, 2025

காந்தியின் ஆடை அரசியல் - காந்தி அரையாடைக்கு மாறிய நாளின் சிறப்புப் பகிர்வு



(இன்று காந்தி அரையாடைக்கு மாறிய 104-ஆம் ஆண்டு)

ஆடை என்பது பெரும்பாலானோருக்கு உடலை மறைப்பதற்கும், குளிர், வெப்பம் போன்றவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்கும், தங்களை மேலும் அழகாகக் காட்டிக்கொள்வதற்குமான விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால், ஆடையையே தங்கள் அடையாளமாக, தங்கள் அரசியலாக, தங்கள் போராட்டமாக மாற்றியவர்கள் வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். ஏழை எளியோர் இடுப்பில் அரையாடையுடன் இருக்கத் தனக்கு மட்டும் பாதத்திலிருந்து தலைப்பாகை வரை ஏன் இத்தனை ஆடம்பரம் என்று அரையாடைக்கு மாறியது காந்தியின் ஆடை அரசியல் என்றால் கௌரவமான ஆடை அணிய அனுமதிக்கப்படாத சமூகத்தைச் சேர்ந்த அம்பேத்கர் கோட்டும் சூட்டும் அணிந்தது ஒடுக்கப்பட்டோருக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கான ஆடை அரசியல். பெரியாரின் கறுப்புச் சட்டை சனாதனத்துக்கு எதிரான ஆடை அரசியல். ஆண்டைகளுக்கு முன்னால் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டிருந்த நிலையை மாற்றி எல்லோரும் தோளில் துண்டு போட்டுக்கொள்ளலாம் என்ற துணிவைத் தந்தது திராவிட இயக்கத்தின் ஆடை அரசியல். அதேபோல் சிவப்புத் துண்டு உழைக்கும் வர்க்கத்தின் ஆடை அரசியல்.

பொது வாழ்க்கையில் மிகவும் எளிமையாக இருப்பவர்களை மக்கள் தம்மில் ஒருவராக அடையாளம் காண்பது வழக்கம். காந்தியில் ஆரம்பித்து காமராஜர், அண்ணா, கக்கன் இன்று நல்லக்கண்ணு வரை பலரும் அதில் அடங்குவார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சாதாரண இருசக்கர வாகனங்களில் செல்வது பத்திரிகைச் செய்தியாகும் அளவுக்கு எளிமைக்கும் அரசியலுக்கும் தூரம் என்றாகிவிட்ட காலம் இது. இந்த உளவியலை எல்லோருக்கும் முன்பு நன்கு புரிந்துகொண்டவர் காந்தி. அன்றாட வாழ்க்கையில் தான் பார்த்த ஏழ்மையுடன் இயல்பாகவே சமண மதப் பற்றின் காரணமாக ஏற்பட்ட துறவு மனப்பான்மையும் காந்தியைத் தன் ஆடை விஷயத்திலும் ஒரு துறவி போன்ற முடிவை எடுக்கச் செய்தது. காந்தியை எதிர்த்துக்கொண்டிருந்த, எதிர்த்துக்கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் பலரிடமும் காந்தி ஆடை, வாழ்க்கை முறை போன்ற விஷயத்தில் பெரும் தாக்கத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படுத்தியிருக்கிறார் (காந்தியை விரும்பிய/ விரும்பும் கம்யூனிஸ்ட்டுகளிடமும்தான்). அவரைப் போல அரையாடைக்கு மாறவில்லை என்றாலும் எளிமையான ஆடையுடன்தான் கணிசமான மூத்த கம்யூனிஸ்ட்டுகள் காணப்படுவார்கள்.

காந்தியின் ஆடையானது அவரது உடலிலிருந்து வேறுபட்டதல்ல. தன் வாழ்க்கையைப் போல தன் உடலையும் ஒரு செய்தியாக காந்தி உலகத்தாருக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் காட்டியதில் அவரது ஆடைக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. ஆடை விஷயத்தில் காந்தி அடித்தது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள். நான் உங்களில் ஒருவன் என்ற செய்தியை மக்களுக்கு உணர்த்தி அதன் மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் பின்னால் மக்களைத் திரளச் செய்தது ஒன்று. இன்னொன்று, கதரை மக்களிடம் பிரபலப்படுத்தி ஒரே நேரத்தில் பொருளாதாரரீதியில் இந்திய மக்களைத் தற்சார்பு கொண்டவர்களாக ஆக்கி பிரிட்டிஷ்காரர்களின் சுரண்டல் பொருளாதாரத்தைத் தடுமாறச் செய்தது. காந்தியின் ஆடை அரசியல் காரணமாக இங்கிலாந்தில் உள்ள ஆலைகள் பலவும் மூடப்பட்டன. அதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். 1931-ல் வட்டமேஜை மாநாட்டுக்காக இங்கிலாந்து சென்ற காந்தி அங்குள்ள ஆலைத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் வேலை இழப்புக்குத் தான் காரணமாக இருந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்தியாவின் தரப்பு நியாயத்தை அவர்களிடம் எடுத்துக்கூறி அவர்களுக்குப் புரியவைத்தார். எதிரியின் நாட்டு மக்கள் வேலை இழந்தால் நமக்கென்ன என்று எண்ணாமல் தங்களை நாடி வந்த காந்தியை அவர்கள் அன்புடன் உபசரித்துச் சிரித்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

எதிலும் தீவிரத்துடன் செயல்பட்ட காந்தியைப் பின்பற்றுவது மிகவும் அரிது. ஆனாலும், அவரது செயல்பாடுகள் அவரைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கைமுறையில் குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தின. காந்தியின் தொண்டர்களாகவும் அன்பர்களாகவும் இருந்த நேரு, படேல் உள்ளிட்ட பலரும் எளிமையான கதர் ஆடைகளுக்கு மாறினார்கள். அவர்களைப் பின்பற்றிப் பெரும்பாலான இந்தியர்களும் கதர் ஆடைகளுக்கு மாறினார்கள். ஆடையில் சுதேசியம், எளிமையான ஆடை அணிதல் என்ற ஒரு மனிதரின் முடிவுகள் எப்படி ஒரு தேசத்தின் தலையெழுத்தை மாற்றி ஒரு ஏகாதிபத்தியத்தை அசைத்துப்போட்டன என்ற வரலாற்றை நாம் அறிவோம்.

காந்தியிடம் எப்போதும் ஒரு சுயவதை இருந்தது. எல்லா மாற்றங்களுக்கும் பரிசோதனைக் களனாக, இலக்காகத் தன் உடலையும் மனதையுமே ஆக்கினார். புதுப்புதுப் பரிசோதனைகளில் அவற்றைப் புடம்போட்டார். ஒரு பரிசோதனை முடிந்தவுடன் தான் இலக்கை அடைந்துவிட்டதாக அவர் நின்றுவிடுவதில்லை. மேலும் புதுப் புதுப் பரிசோதனைகளை அவர் கண்டடைந்துகொண்டே இருந்தார். அவற்றில் அவர் பெறும் வெற்றியோ தோல்வியோ நாட்டின் மீது ஏதாவது ஒரு விதத்தில் தாக்கம் செலுத்தியது. ஆடை குறித்து அவர் எடுத்த முடிவும் அப்படிப்பட்டதொரு பரிசோதனைதான். 1921-ல் எடுத்த முடிவின்படி அவர் 1948-ல் படுகொலை செய்யப்படும் தருணம்வரை அவர் இம்மியளவும் பிசகாமல் நடந்துகொண்டார். அவரின் மிகவும் வெற்றிகரமான பரிசோதனைகளுள் ஒன்று அவரது ஆடை அரசியல்.

ஆடை விஷயத்தில் காந்தி எடுத்த முடிவின் காரணமாக அவரது மார்பு திறந்தே இருந்தது. எல்லோரையும் அரவணைக்கும் மார்பு அது. எல்லோர் அன்புக்கும் இலக்கான மார்பு அது. கூடவே, தீய சித்தாந்தத்தின் பிரதிநிதி ஒருவனின் 3 தோட்டாக்களுக்கும் இலக்கானது. அந்தத் தோட்டாக்களை வெற்று மார்பில் தான் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அதன் மூலம் தன் மரணமும் ஒரு செய்தியாக ஆக வேண்டும் என்பதற்காகவும்தானோ அதற்கும் 27 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி இந்த முடிவு எடுத்தார்?

      - ஆசை,  நன்றி: ‘இந்து தமிழ் திசை’

Sunday, September 21, 2025

மாயக்குடமுருட்டி - அப்பாவின் பிறந்தநாள் பகிர்வு

காலம்சென்ற எங்கள் அப்பாவு தேசிகாமணிக்கு இன்று 83-வது பிறந்தநாள். அப்பாவைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நான் எழுதிய ‘மாயக்குடமுருட்டி’ (எதிர் வெளியீடு, 2025) காவியத்தின் முதல் படலத்தை இத்துடன் பகிர்ந்துகொள்கிறேன்.

**
மாயக் குடமுருட்டி
“ஒருத்தனை மூவுலகொடு தேவர்க்கும்
அருத்தனை அடியேன் மனத்துள்ளமர்
கருத்தனைக் கடுவாய்ப் புனலாடிய
திருத்தனைப் புத்தூர் சென்றுகண்டுய்ந்தேனே.”
-திருநாவுக்கரசர்
1. தனியுருட்டி
சிறுவனாய்க் குளிக்கப் போன
அப்பாவை
இழுத்துச் சுருட்டி
உருட்டிக்கொண்டு போனதாம்
குடமுருட்டி
மலங்கழித்துக் கொண்டிருந்த
யாரோ
மாக்கடியென்று குதித்து
முடி பற்றிக்
கரையிழுத்துப் போட்டாராம்
அன்று
இன்னொரு குடமுருட்டி
ஓட ஆரம்பித்தது

2. மலத்தின் பாதை
அந்த யாரோ
அந்த யாரோ
இந்தக் கரையிலா
அந்தக் கரையிலா
எழுபது
ஆண்டுகள்
கழிந்திருக்கும்
எனினும்
உயிர் பற்றி
இன்னும்
இழுக்கிறது
அவர் கை
நெடுங்காலம் கடந்தும்
நடுங்கலையே தருகிறது
அப்பற்றல்
கரைக்கும்
நீருக்கும் இடையில்
உயிர்க்கோட்டினை இழுக்கும்
இடைவிடாத பதற்றம்
அது
என் உயிர்
என்பது ஒன்றுமில்லை
யாரோ ஒருவரின்
மலங்கழிக்கும் உந்துதல்தான்
அவ்வுந்துதலின்
கரைகளில்
பயணிக்கிறேன்
பயணிக்கிறேன்
பயணித்து வந்த இடம்
தன் பாதி வழியில்
குடமுருட்டி
பெயரிழக்குமிடம்
இனி குடமுருட்டி
இல்லை
சோழசூடாமணியாய்
புதாறாய்க் கிளைத்து
அவள் தன் உருட்டை
இழக்கிறாள்
நான் இருக்கிறேன்
குடமுருட்டியே
உன் பெயர் நீள
பாய்வு நீள

3. தண்ணீரும் காவிரியே
காவிரியின் நற்பேறு
காவிரிக்கு மட்டும்தான்
அவள் பிள்ளைகளுக்கல்ல
காவிரி கடைசி வரைக்கும்
காவிரிதான்
அவள் கரையெல்லாம்
காவிரிதான்
ஊற்றெல்லாம்
காவிரிதான்
தொட்டித் தண்ணீரும்
காவிரிதான்
தண்ணீரெல்லாம்
காவிரிதான்
பாதி வழியில்
மறையும் குழந்தைகள்
முக்கால் வழியில் கரையும்
குழந்தைகள்
இருவர் ஒருவராய்
மாறும் குழந்தைகள்
உண்டு உனக்கு
நீயோ
அத்தனை பிள்ளைகள்
பெற்றுப் போட்டும்
இளைக்காமல் சளைக்காமல்
யவ்வன நடை
நடந்தாய்
வாழி காவிரி
காவிரியின் நற்பேறு
காவிரிக்கு மட்டும்தான்
அவள் பிள்ளைகளுக்கல்ல

4. இடைவு
குடமுருட்டி
மலையில் தொடங்கவில்லை
கடலில் முடியவில்லை
இடையில் இருப்பவள் மட்டுமே
நீ
இடைவின் புதைகுழியிலிருந்து
பூப்பறிக்கிறது
ஒரு கை
பூப்பூவாய்ப்
பூக்கிறது

5. சுழிவு
உன் தூரத்துச் சகோதரி
பாமணியாற்றங் கரையில்தான்
என் வீடு
உன் பெயரும்
உன்னைப் பற்றிய
கதைகளும்
அப்பாவின்
வாயிலிருந்து
அடிக்கடி உருளும்
நீரள்ள வரும்
பெண்களின் குடங்களை
உருட்டிக்கொண்டு
போய்விடுவாயாமே
நீ சுழித்தோடும் பரப்பே
குடம் பல மூழ்கிச்
சுழன்றோடுவது
போல் இருக்குமாமே
பிணங்களின் பிட்டம் மட்டும்
வெளித்தெரிய
குடம் கவிழ்த்தாற்போல்
சுற்றிச் செல்லுமாமே
என் அப்பாவையும்
குடமென்று
நினைத்தாயோ
நீரை நிரப்பியிருப்பாய்
அதற்குள்
வாழ்வை நிரப்பியொரு கை
இழுத்துப் போட்டதென்று
உனக்கு
இன்னும் வருத்தமா
இதோ நான் நிற்கிறேன்
இழுத்து நிரப்பிக்கொள்
என்னை
எப்படி நீ
குடமாக்குவாய் என்று
பார்க்க வேண்டும் நான்

6. தைலதாரை
குறையாக் குடத்துக்கும்
நிறையாக் குடத்துக்கும்
தீரா துவந்தம்
துவந்தத்தின் மேல்
பாலம் கட்டி
பாலத்தின் நடுவிலிருந்து
இரு புறமும்
ஒரே சமயம்
உருள்கிறது
உடையாக் குடம்
வாழ்வின் தளும்பலோசை

7. ‘கெர்ப்பப்பை’
‘என்ன கண்ணு பாக்குற
அது அம்மா
கும்பிட்டுக்கோ
‘பொறப்பெடுத்த எத்தனையோ பேர
மறுபடியும் தன் வயித்து சிசுவாக்கிக்க
ஆசைப்படுற
அம்மா
‘அதோட ஒவ்வொரு சுழலும்
அதோட கெர்ப்பப்பை
மொட்டு மொட்டாப்
பூத்து வரும்
புள்ளை கிடைச்சா
வாரிச் சுருட்டிக்கும்
‘அவளோட கெர்ப்பப்பை வாசம்
இருக்குற
குழந்தைங்கதான்
அவளைப் பாக்க
வருவாங்க
அதான் நீ வந்திருக்கே
‘கும்பிட்டுக்கோ ஐயா
ராசவடுவு’

8. மூழ்குவேனென்று நினைத்தாயோ
நீ யார் பாட்டி
உன் பெயர் என்ன
மாயக் குடமுருட்டியா
கரைக்கே வந்துவிட்டாயா
கைப்பிடித்துக்
கூட்டிச்சென்றிடுவாயா
வேண்டாம் பாட்டி
உன் கைக்கும்
அன்று முடி பிடித்த கைக்கும்
இடையே நான்
ஓடிக்கொண்டிருக்கிறேன்
எனக்கே வாய்த்த
சிறு நிரந்தரத்தில்
நானும்
சோழசூடாமணியாய்
புதாறாய்
என் பாதி வழியில்
பெயரிழக்கும் தருணம் வரை
ஓடிக்கொண்டிருந்துவிட்டுப்
போகிறேன்
குடமுருட்டியில்
மூழ்க அல்ல
குடமுருட்டி
ஆக வந்தவன் நான்
அப்படியே ஆகட்டும்
என் வாழ்வு

9. சவாரி
வெளிப்படுத்தாமல்
அமுக்கி வைத்த சுழிப்புகள்
எத்தனையோ
என்னிடம்
கையளித்துச் சென்றுவிட்டார்
அப்பா
அவற்றுள்
ஒன்றிரண்டாவது
குமிழியிட்டுப் பின்
குழந்தைகளுக்கு
விட்டுச்செல்வேன்
குடமுருட்டிச் சவாரி
அவர்களுக்கானது
எங்களைச் சிறைவைக்க நினைத்த
கருப்பைகளைக் குதிரையாக்கித்
தட்டிப் புழுதி பறக்க
ஓட்டிச்செல்வார்கள்
அவர்கள்

10. பாமணியாறு
அன்று ஆற்றங்கரையில்
வீடிருந்த காலம் தொட்டு
இன்று கடற்கரையில் வீடிருக்கும்
காலம் வரை
நீச்சலறியாக் குழந்தை நான்
இது தூரத்துக்
குடமுருட்டியின்
இழுப்பன்றி வேறென்ன
பத்து முறை மூழ்கியும்
ஒவ்வொரு முறையும்
வந்துவிடுகிறது
ஒரு கை
பாமணியாறு நீயல்ல
அதற்குக் குடங்களை உருட்டிப்
பழக்கமில்லை
அடித்து ஆழத்தில் முக்கும்
இல்லையேல்
விலக்கிக் கரைமேல்
போடும்
இந்த
இரண்டுக்கும் நடுவே
ஒரு கதவு திறந்து
ஒரு பாதை தெரிய
ஒவ்வொரு முறையும்
கேட்டிருக்கிறேன்
உன் தீனமான குரலை
அதற்குள்
இழுத்துக் கரையில் போடப்பட்டு
அரைமயக்கத்தில் கிடந்தாலும்
நான் வியந்துகொண்டிருந்தது
எல்லா ஆறுக்குள்ளிருந்தும்
எல்லா நீருக்குள்ளிருந்தும்
நீளும் உன் பாதை பற்றித்தான்

11. குறுநண்டுச் சிரிப்பு
குடமுருட்டி
மேலும் மேலும்
நீச்சலின்மையைக் கற்றுக்கொடுக்க
உன் தூரத்துச் சூழ்ச்சியை இன்றுவரை
உணர்கிறேன்
வங்கக் கடல் அழைக்கிறது
கால்பிடித்து இழுக்கிறது
அலைவிலகி நீர்வடிய
தரைப்பரப்பில்
குடம்குடமாய் நீர்மொட்டுகள்
உனைக் காட்டி
வெடித்து மறையும்
மொட்டிருந்த தரையெல்லாம்
குறுநண்டுகள்
குப்பென்று பூத்து
வெளியோடும்

12. ஆகாசம்
குடம்
குடமுருட்டி
குடா
குடாகாசம்
ஆகாசம்
மாபெரும் குடமுருட்டி
கூத்தாடிக் கூத்தாடி
ஆகாசம்
போட்டுடைப்பேன்டி
-ஆசை

Thursday, September 18, 2025

என் பிறந்தநாளில் புதிய புத்தக அறிவிப்பு!



இன்றுடன் எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான ’கொண்டலாத்தி’ வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அது முழுக்க முழுக்கப் பறவைகள் பற்றிய கவிதைகள் அடங்கிய முதல் நவீனக் கவிதை தொகுப்பாகும். இன்று அதே நாளில் ஒரு புதிய புத்தகத்தைப் பற்றிய அறிவிப்பையும் அதன் அட்டைப் படத்தையும் வெளியிடுகிறேன். சுற்றுச்சூழல் தொடர்பான எனது கட்டுரைகளின் தொகுப்பு ‘அந்தத் தவிட்டுக்குருவி இறந்துகொண்டிருந்தது’ என்ற தலைப்பில் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த நூலை வெளியிடுபவர் ‘உயிர்’ பதிப்பகத்தின் தோழர் சண்முகாநந்தம். நண்பர்கள் இந்த நூலுக்குப் பெரும் வரவேற்பு கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இத்துடன் நூலின் அட்டைப் படத்தை அறிமுகப்படுத்துகிறேன். அட்டை வடிவமைப்பு: கோபு ராசுவேல்

Thursday, September 11, 2025

பாரதீ: எம் கவிஞன் நீ! - பாரதி நினைவுநாள் கட்டுரை



ஆசை

‘மேன்மேலும் புதியகாற்று எம்முள் வந்து/ மேன்மேலும் புதியஉயிர் விளைத்தல் கண்டீர்’ என்று எழுதித் தமிழ் மொழி மீதும் தமிழ் சமூகத்தின் மீதும் புதிய காற்றைப் படச் செய்தவர் பாரதி. வடிவத்தால் மரபுக் கவிஞராகவும் உள்ளடக்கத்தால் நவீனக் கவிஞராகவும் பாரதி காட்சியளிக்கிறார். மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இனம், மொழி, நாடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகள், பிற நாட்டின் விடுதலைப் போராட்டங்கள், பிற நாட்டுத் தமிழர்களின் இன்னல்கள், வானியல் நிகழ்வுகள், இயற்கைச் சீற்றங்கள் போன்ற பல கருப்பொருள்கள் பாரதியிடம்தான் தமிழ்க் கவிதை வரலாற்றில் முதன்முதலில் எட்டிப்பார்த்தன.