Thursday, August 21, 2025

நகுலன்: தன்னைத் தானே எழுதிக் கலைக்கும் எழுத்து - நகுலன் பிறந்தநாள் பகிர்வு


ஆசை

நவீன தமிழ் இலக்கிய உலகம் எத்தனையோ சிறந்த எழுத்தாளர்களைக் கண்டிருந்தாலும் சிலருக்கே கல்ட் (cult) அந்தஸ்து கிடைக்கிறது. இந்த அந்தஸ்து அவர்களின் படைப்புலகுக்குள் நுழைவதற்கே தடையாகவும் ஆகிவிடக்கூடியது. அப்படிப்பட்ட கல்ட் அந்தஸ்தைப் பெற்ற சிலருள் நகுலனும் ஒருவர். நவீன கவிதைக்குள் நகுலனின் இடம் உறுதியானதொன்று என்றாலும் அந்த இடத்தை எப்படி வரையறுப்பதென்பது எப்போதும் சிக்கலாகவே இருக்கிறது. சிதறுண்ட 20-ம் நூற்றாண்டு நவீன மனம் என்று சில சமயம் நகுலன் (அவரது நாவல்கள், சிறுகதைகளையும் உள்ளடக்கி) வரையறுக்கப்பட்டாலும் அவரிடம் மரபின் தொடர்ச்சியும் இருக்கிறது. அந்த மரபும் எப்படிப்பட்டதென்றால் காலம்காலமாக மரபுக்குள்ளிருந்து கலகம் விளைவித்த போக்கைப் பின்தொடர்வதாக இருக்கிறது. சில விஷயங்களில் நகுலன் சித்தர் மரபுக்கு அருகில் இருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது. சில இடங்களில் இருத்தலியல் கவிஞராகவும் தென்படுகிறார். 

Tuesday, August 19, 2025

காந்தியும் 60 நாய்களும்!


ஆசை

‘திரு. காந்தி அவர்களே, நாங்கள் கேள்விப்பட்டது உண்மையா? திரு. அம்பாலால் சொன்னதற்கு ‘வேறென்ன செய்துவிட முடியும்?’ என்று தாங்கள் பதில் கூறியது உண்மைதானா? எந்தவொரு உயிரையும் எடுப்பதற்கு இந்து மதம் அனுமதிக்காததோடு, அதைப் பாவம் என்று கருதும்போது வெறிநாய்களைக் கொல்வது சரிதான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’ என்று அகமதாபாத் மனிதநேய சங்கத்திலிருந்து காந்திக்குக் காட்டமாக ஒரு கடிதம் வந்திருந்தது. படித்துவிட்டுத் தன் உதவியாளரைப் பார்த்து மெலிதாகப் புன்னகை புரிந்தார் காந்தி.

1926-ன் முற்பகுதி அது. தீவிர அரசியலிலிருந்து ஒரு ஆண்டு காலம் ஓய்வு எடுத்துக்கொள்ளப்போவதாக காந்தி அறிவித்திருந்தார். ஒரு வகையில் அது அமைதி ஆண்டு. அந்த ஆண்டில்தான் வாரந்தோறும் ஒரு நாளை அமைதி நாளாக அனுசரிக்கும் வழக்கத்தை காந்தி தொடங்கினார். அடுத்த 23 ஆண்டுகள் இந்த வழக்கத்தை அவர் கைவிடவே இல்லை. அந்த நாட்களில் அவர் மக்களைச் சந்திக்காமல் இருப்பதில்லை. அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்வார். அவருடைய பதில் அவசியமான இடங்களில் ஒரு தாளில் எழுதித் தருவார். அதிக அளவில் பயணம் செய்தது, நிறைய இடங்களில் பேசியது போன்றவற்றால் அதீதக் களைப்படைந்த காந்தி, சிறு இளைப்பாறுதலாகக் கண்டுபிடித்த உத்தி இந்த அமைதி தினம். அதுவே அவருக்கு மிகுந்த புத்துணர்ச்சியைக் கொடுப்பதாக மாறியது.

Wednesday, August 13, 2025

பா.வெங்கடேசனை நீங்கள் ஏன் படித்தாக வேண்டும்?


தமிழின் மகத்தான படைப்பாளிகளுள் ஒருவரான பா.வெங்கடேசன் இன்று தன் 63-வது வயதை நிறைவு செய்கிறார். இந்தக் கட்டுரை அவரது 60-வது பிறந்தநாளில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியானது. அதனை இப்போது மீள்பகிர்வு செய்கிறேன். கடந்த 8 ஆண்டுகளாக அவருடைய புனைவுப் படைப்புகள் முழுவதையும் பல தடவை படித்தவன் என்ற முறையில் அவற்றைப் பற்றி ஒரு சுருக்கமான பார்வையை இத்தருணத்தில் முன்வைக்க விரும்புகிறேன். இந்தக் கட்டுரை பிரதானமாக, பா.வெங்கடேசனைப் படித்திராத வாசகர்களையும் அவரைப் படிக்க முயன்று இயலாமலோ பிடிக்காமலோ விலகிச் சென்ற வாசகர்களையுமே இலக்காகக் கொள்கிறது.

பா.வெங்கடேசனை நான் படிக்க வேண்டிய அவசியம் என்ன? இப்படி ஒருவர் கேட்கலாம். தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் தன் வாழ்வின் மிக முக்கியமானவையாகக் கருதும் ஒருவர் எப்படி சங்க இலக்கியமும் சிலப்பதிகாரமும் வள்ளுவரும் ஆண்டாளும் கம்பரும் பாரதியும் புதுமைப்பித்தனும் படித்தாக வேண்டுமோ அப்படியே பா.வெங்கடேசனையும் படித்தாக வேண்டும் என்று நான் உளமார நம்புகிறேன்.

Thursday, August 7, 2025

கலைஞர் இறுதி ஊர்வலத்தின் இலக்கியப் பதிவு!

ஓவியம்: ஜோ.விஜயகுமார்
அண்ணாவின் இறுதி ஊர்வலத்தை நேரில் கண்டவர் அப்பா. கலைஞரின் இறுதி ஊர்வலத்தை நேரில் கண்டவன் பிள்ளை. இரண்டு ஊர்வலங்களும் எனது ’மாயக் குடமுருட்டி’ (2025, எதிர் வெளியீடு) நெடுங்காவியத்தில் நெகிழ்ச்சியான ஆவணமாகியிருக்கின்றன. கலைஞர் இறுதி ஊர்வலத்தின்போது கலந்துகொண்ட ஒரு பிராமண இளைஞரைப் பற்றியும் இதில் பதிவாகியிருக்கிறது. அந்த இளைஞர் இந்தக் கவிதையைப் படித்துவிட்டு என்னிடம் நெகிழ்ந்துபோய்ப் பேசினார். கலைஞருக்கு ஒரு அஞ்சலி இக்கவிதை!

***
கோஷமிட்ட தீ
**
முன்னவர்
இறுதி ஊர்வலத்தில்
தான் கண்டதையெல்லாம்
கதைகதையாய்ச் சொன்னாரே அப்பா
ரயில்கூரையில் பயணித்ததையும்
பாலம் தட்டிப் பலபேர் மடிந்ததையும்
சென்னையே சேர்ந்து நகர்ந்ததையும்
மேலேறியவர்களின் பாரம் தாங்காமல்
மரக்கிளைகள் முறிந்து விழுந்ததையும்
உலகத்திலேயே இப்படியோர்
இறுதி ஊர்வலம்
வரலாறு கண்டதில்லை என்பதையும்
சொல்லிச்சொல்லி மாய்வாரே அப்பா
பின்னவர் இறுதி ஊர்வலத்தைக்
காண விடாத உடலுக்குள்
முடங்கிக்கிடந்த அப்பாவுக்காக
நான் போனேனே ஐயா
ஆ ஆ அது இறுதி ஊர்வலமா
கல்யாண ஊர்வலம் ஐயா
ஊர்தி கடக்கும் இடமெல்லாம்
நின்று நின்று
ஆயிரமாயிரம் தற்படங்கள்
ஆயிரமாயிரம் நாடகங்கள்
தலைவனுக்காகக் குத்தாட்டங்கள்
முன்னவர் காலம்
ஓங்கி உயர்ந்தெழுந்த
அழுகையின் காலமென்றால்
பின்னவர் காலமோ
அழுகைக்கு விடைகொடுத்த
ஆர்த்தெழும் காலம்
அப்பாவுக்காகத்தான்
வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன் ஐயா
ஆனாலும் அப்படி ஆகிவிட்டது
உடன்வந்திருந்த அய்யர் பையன்
ஊர்தி அருகே கடக்கும் தருணம்
அப்படி ஒரு குரலில் ஓலமிட்டான்
‘முத்தமிழறிஞர்
சமத்துவ நாயகர்…’
ஊர்தி மேலே ஒரு உருவம் மட்டும்
மௌனி கதையின் யாளியாய்
தன் விஸ்வரூபத்தால்
அந்த கோஷத்தை ஆசிர்வதித்ததை
நான் மட்டும் கண்டேன்
சற்றுப் பொறுங்கள் ஐயா
இன்னும் அந்த நொடி முடியவில்லை
இன்னொரு பாதி இல்லாமல்
இழுத்துக்கொண்டே போகுமல்லவா
கோஷமும் நொடியும்
நானே எதிர்பார்க்கவில்லை
பீறிட்டெழுந்தது ஒரு சொல்
என் அடிவயிற்றிலிருந்து
மூடிய வாயென்ன செய்யும்
அப்போது
‘வாழ்க’
அதையும் ஏற்றுக்கொண்டு
அமைதியானது யாளி
பூர்த்தியானது நொடியும் கோஷமும்
அமைதியிழந்தேன் நான்
ஆயிரம் ஆயிரம் நூல்கள்
எனக்குச் சொல்லித்தந்தது இதுதானா
நான் படித்த இலக்கியம்
எனக்குச் சொல்லித்தந்தது இதுதானா
ஒரு கவிஞன்
‘வாழ்க வாழ்க’ கோஷமிடலாமா
என்னை இனி நான்
எப்படி ஏறெடுத்துப் பார்ப்பேன் ஐயா
அடேய் தம்பி
ஏன்டா இந்தப் புலம்பல்
கோஷம் என்ன கெட்ட வார்த்தையா
அறிவு கோஷம் போடாது தம்பி
வயிறு கோஷம் போடும்
அப்படியே இருந்தாலும்
அங்கே இருந்தவன் கண்டவன் கேட்டவன்
மட்டுமே நீ
‘வாழ்க’வென்று கோஷமிட்டது
நீயில்லையடா
உன்னை ஓங்கியடித்து
உட்காரவைத்து
மாக்கடியென்று எகிறி குதித்த
உன் ஒப்பன்காரன்டா
உன் ஒப்பன்காரன்டா
ஏனென்றால்
அவன் வயிற்றுக் கவலை
ஓய்ந்த இடத்தில்தான்டா தம்பி
உன் அறிவுக் கவலை
தொடங்கியது
புலம்பலை விட்டுவிட்டு
இன்னொரு மடக்கை எடுத்துக் குடி
***

Wednesday, August 6, 2025

ஹிரோஷிமா, நாகசாகி: ஒரு பேரழிவின் கதை! - 80-ஆம் ஆண்டு மறுபகிர்வு



ஆசை 

மனித குல வரலாற்றில், மனிதர்களின் படைப்பு சக்தியும் அழிவு சக்தியும் ஒருசேர புதிய உச்சத்தைத் தொட்ட நாள் ஆகஸ்ட் 6, 1945. சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொடும் சம்பவம் அது. அதன் விளைவுகள் உலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்திருக்கின்றன.  

இரண்டாம் உலகப் போர் தனது முடிவை நெருங்கிக்கொண்டிருந்த தருணம் அது. ஜப்பான் போரில் ஈடுபட்டிருக்கக் கூடாது என்று எண்ணிய சாதாரண குடிமக்களில் ஒருவர் சுடோமு யமகுச்சி. இன்றைக்கு உயிரோடிருந்தால் அவருக்கு 104 வயது இருக்கும். 1945-ல் அவருக்கு 29 வயது. அவரது குடும்பமும் அவர் வேலை பார்த்த நிறுவனமும் ஜப்பானின் நாகசாகி நகரத்தில்தான் இருந்தன. ஆனால், 1945-ல் மூன்று மாத காலம் அலுவல் நிமித்தமாக ஹிரோஷிமாவில் தங்கியிருந்தார். 

ரத்த சாட்சியம் 

ஆகஸ்ட் 6 அன்று காலையில் ஹிரோஷிமாவை விட்டுப் புறப்படுவதற்காக ரயில் நிலையத்துக்குத் தனது சகாக்களுடன் சென்றவர் தனது அடையாள அட்டையை மறந்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்திருக்கிறது. அதை எடுப்பதற்காகத் திரும்பிவந்தபோதுதான் வானை அண்ணாந்து பார்த்திருக்கிறார். ஒரு விமானமும் இரண்டு பாராசூட்டுகளும் தென்பட்டிருக்கின்றன. சற்று நேரத்தில் வானத்தில் பெரிதாக ஏதோ ஒன்று அதுவரை யமகுச்சி கண்டிராத பிரகாசத்துடன் வெடித்திருக்கிறது. யமகுச்சி தூக்கிவீசப்பட்டார். எங்கு பார்த்தாலும் தீ. எங்கெங்கும் மரண ஓலம். அவரது செவிப்பறை, கண்கள் போன்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டது; உடலில் கதிரியக்கத்தால் காயம் ஏற்பட்டது.  

குண்டுவெடித்த இடத்திலிருந்து 3 மைல் தூரத்தில் இருந்ததால் யமகுச்சி உயிருக்கு உடனடியாக ஆபத்து ஏற்படவில்லை. பேரழிவுக்கு நடுவே அவருக்குப் புகலிடம் கிடைத்தது. அன்று இரவு அங்கே தங்கிவிட்டு மறுநாள் நாகசாகிக்கு சென்றார் யமகுச்சி. உடலில் காயம் இருந்தாலும் ஆகஸ்ட் 9 அன்று பணிக்குத் திரும்பினார். அன்றைக்கு நாகசாகியில் குண்டு வீசப்பட்டது. இந்தக் குண்டுவெடிப்பிலும் யமகுச்சி உயிர் தப்பினார். அவருக்கு இருந்த அதிர்ஷ்டம் ஏனைய 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு இல்லை. அதன் பிறகு நெடிய காலம் ஹிரோஷிமா, நாகசாகியின் வாழும் நினைவாக இருந்த யமகுச்சி 2010-ல் தனது 93 வயதில் காலமானார். அவரை இரட்டை குண்டுவெடிப்புகளிலும் தப்பிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசு அங்கீகரித்திருந்தது. ஒரு கொடூர வரலாற்றுக்கு ரத்த சாட்சியமாக இருந்த அந்த மனிதர் வாழ்நாள் நெடுக அணு ஆயுதங்களின் கொடுமையையும் பேரபாயத்தையும் பேசிக்கொண்டேயிருந்தார்.  

முன் வரலாறு 
1939-ல் உலகப் போர் இன்னும் தொடங்கியிருக்கவில்லை. ஆனால், ஜெர்மனியின் செயல்பாடுகளெல்லாம் உலக அமைதியை அச்சுறுத்திக்கொண்டிருந்த காலம் அது. இதற்கு முன்னதாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு அணுவுக்குள் எவ்வளவு சக்தி இருக்கும் என்பதை ஐன்ஸ்டைனின் கோட்பாடு விளக்கியிருந்தது; இயற்பியலாளர் லியோ ஸில்லார்ட் அணுக்கரு சங்கிலித் தொடர் நிகழ்வை 1933-ல் கண்டுபிடித்திருந்தார். 1930-களின் இறுதியில் அணுகுண்டைத் தயாரிக்கும் முயற்சியில் ஜெர்மனி ஈடுபட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகி உலகையே அச்சுறுத்தின. இதைத் தொடர்ந்து இந்தத் திசையில் ஜெர்மனியை முந்துவது அவசியம் என்று கருதி ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனும் லியோ ஸில்லார்டும் அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டுக்குக் கடிதம் எழுதினார்கள். அதுதான் அணுகுண்டு திட்டத்துக்குத் தொடக்கப்புள்ளி.  

முன்னேற்பாடுகள் எல்லாம் முடிந்து அமெரிக்காவின் மன்ஹாட்டன் மாவட்டத்தில் 1942-ல் அணுகுண்டு தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற ஆரம்பித்தன. அதனால், இதற்கு ‘மன்ஹாட்டன் திட்டம்’ என்ற பெயர் வந்து சேர்ந்தது. 1945-ல் அமெரிக்கா வெற்றிகரமாக அணுகுண்டைத் தயாரித்தும்விட்டது. தயாரித்த அணுகுண்டை 1945 ஜூலை 16 அன்று நியூ மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு பாலைவனப் பிரதேசத்தில் பரிசோதித்தார்கள்.  

இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளில் பிரதானமாக இருந்த ஜெர்மனி சரணடைந்ததால் அந்தப் போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தாலும் ஆசியப் பகுதியில் ஜப்பான் எளிதில் அடிபணிவதாக இல்லை. அணுகுண்டுப் பரிசோதனை நிகழ்த்தப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் ஜெர்மனியின் போட்ஸ்டாம் நகரில் அமெரிக்க அதிபர் ட்ரூமேன், ரஷ்யாவின் ஸ்டாலின், பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் ஆகிய மூவரும் சந்தித்து ஜப்பான் சரணடைவதற்கான இறுதி எச்சரிக்கையை விடுத்தார்கள். ஜப்பானோ வேறு வழிகளில் ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுகொண்டிருந்தது. எது எப்படியிருந்தாலும் ஜப்பான் தோல்வியின் விளிம்பில்தான் நின்றுகொண்டிருந்தது. ஏற்கெனவே ஜப்பானின் 60 நகரங்களில் அமெரிக்கா சாதாரண வெடிகுண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறித்திருந்தது. இந்த நிலையில்தான் ஜப்பான் மீது அணுகுண்டை வீசுவது என்று முடிவெடுத்தது அமெரிக்கா.  

ஆகஸ்ட் 6 அன்று காலையில் பசிபிக் கடலில் உள்ள டினியன் தீவிலிருந்து ‘பி-29 சூப்பர்ஃபோர்ட்ரெஸ்’ விமானம் புறப்பட்டது. பால் டிபெட்ஸ் ஓட்டிச்சென்ற அந்த விமானம் சுமந்திருந்த அணுகுண்டின் பெயர், குட்டிப் பையன் (லிட்டில் பாய்). 4,400 கிலோ எடை கொண்ட அதன் உள்ளே 64 கிலோ மட்டுமே செறிவூட்டப்பட்ட ‘யுரேனியம்-235’ இருந்தது. சரியாக 8.15 மணிக்கு ஹிரோஷிமாவுக்கு மேலே 31,060 அடி உயரத்தில் பறந்தபோது அணுகுண்டு விடுவிக்கப்பட்டது. கீழ்நோக்கிப் பயணித்து 45 நொடிகள் கழித்து, தரையிலிருந்து 1,950 அடிகள் இருக்கும்போது அது வெடித்தது. அணுகுண்டைப் போட்டுவிட்டு வெகு வேகமாக அந்த இடத்தைவிட்டுச் சென்ற அந்த விமானம் குண்டுவெடித்த இடத்திலிருந்து சுமார் 11 மைல் தொலைவில் பறந்தபோது குண்டுவெடிப்பின் அதிர்வுகள் அதையும் உலுக்கின.  

மானுட அவலத்தின் பேயாட்டம் 

அதன் பின்பு நடந்தது முன்னுதாரணமில்லாத ஒரு பேரழிவு. இந்தக் குண்டுவெடிப்பின் சக்தி 2 கோடி கிலோ டி.என்.டி. வெடிபொருளுக்கு இணையானது என்றார்கள். குண்டுவீச்சின் தாக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். 13 சதுர கி.மீ. தூரத்துக்கு நகரம் அழிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 70% கட்டிடங்கள் சேதமடைந்திருந்தன. தூரத்திலிருந்து பார்க்கும்போது ஹிரோஷிமாவுக்கு மேலே சிவப்பும் கறுப்புமாக ராட்சகக் காளான் ஒன்று முளைத்திருந்ததைப் போல தெரிந்ததாகச் சொன்னார்கள். குண்டுவெடித்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கறுப்பாக அமில மழை பெய்தது. இறந்துகொண்டிருந்தவர்களின் மரண ஓலமும், தங்கள் குடும்பத்தினரைத் தேடி அலைந்தவர்களின் ஓலமுமாக ஓசைகளின் நகரமானது ஹிரோஷிமா. கை, கால், தலையில்லாத குழந்தைகளை அவற்றின் அன்னையர் தூக்கிக்கொண்டு திரிந்தனர். என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் பலரும் தங்கள் உயிரையும் குடும்பத்தினரையும் பறிகொடுத்துவிட்டிருந்தார்கள். 

ஹிரோஷிமாவின் மீது குண்டு வீசப்பட்டும் ஜப்பான் அடிபணியவில்லை. மூன்று நாட்கள் கழித்து கொக்குரா என்ற நகரத்தின் மீது குண்டுவீசத் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், கொக்குராவில் மேகமூட்டமாக இருந்ததால், அடுத்து நாகசாகி தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் மீது அணுகுண்டு வீசப்பட்டது. இங்கு வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் குண்டு மனிதர் (ஃபேட் மேன்). இதன் எடை 4,670 கிலோ. இதன் உள்ளே 6.4 கிலோ புளுட்டோனியம் இருந்தது. ‘குட்டிப் பைய’னைவிட இது திறன் மிகுந்தது என்று கூறப்படுகிறது. 2.3 கோடி கிலோ டி.என்.டி. வெடிபொருட்களின் திறனுக்கு இணையானது அது என்று சொன்னார்கள். எது எப்படியிருந்தாலும் நாசத்தை வைத்துதான் போர் வியாபாரிகள் எல்லாவற்றையும் அளவிடுவார்கள். நாகசாகியின் மீது வீசிய குண்டும் ஹிரோஷிமாவுக்கு இணையான விளைவுகளை உண்டாக்கியது. எங்கெங்கும் மானுட அவலத்தின் பேயாட்டம். காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளும் மருத்துவர்களும் செவிலியர்களும்கூட மிஞ்சவில்லை. 

நான்கு நாட்களுக்குள் இரண்டு அணுகுண்டு வீச்சு. ஜப்பான் நடுங்கிப்போனது. சில நாட்களில் ஜப்பான் மீது போர் தொடுக்கப்போவதாக ரஷ்யா அறிவித்ததும் வேறு வழியின்றி ஜப்பான் சரணடைந்தது. அணுகுண்டு வீசினாலும் வீசாவிட்டாலும் எப்படியும் ஜப்பான் இறுதியில் தோல்வியடைந்திருக்கும் என்று கருதுவோரும் உண்டு. ரஷ்யாவுக்குத் தன் பலத்தை நிரூபிப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் இந்தக் குண்டுவீச்சுகள் என்போரும் உண்டு. இரண்டாவது உலகப் போரை முடித்துவைத்தது அணுகுண்டு வீச்சுதான் என்று ஒரு வாதம் சொல்லப்பட்டாலும் அதுதான் பனிப்போரைத் தொடங்கியும் வைத்தது என்ற உண்மையை நாம் காண வேண்டும். 

ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களிலும் குண்டுவீச்சின்போது உடனடியாக இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சமாக இருந்தாலும், அடுத்து வந்த சில வாரங்கள், மாதங்கள் என்று அந்த ஆண்டின் முடிவுக்குள் மேலும் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர். கதிர்வீச்சின் காரணமாகப் பல்வேறு வகையிலான புற்றுநோய்களால் பின்னாளிலும் ஏராளமானோர் இறந்தனர். கணக்கற்ற குழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறந்து ஹிரோஷிமா, நாகசாகியின் வாழும் சாட்சிகளாக உலவுகின்றனர். அதற்குப் பிறகு, கடந்த 75 ஆண்டுகாலமாக எந்த நாடும் மற்றொரு நாட்டின் மீது அணுகுண்டு வீசவில்லை என்றாலும் ஏராளமான அணுஆயுதங்களைப் பல நாடுகளும் வைத்திருக்கின்றன. ஆகவே, எப்போதும் எரிமலையின் வாய் மீது உட்கார்ந்திருப்பது போன்றதுதான் நம் வாழ்க்கை. ஒரு கிறுக்குத்தனமான ஆட்சியாளரோ அல்லது ஸ்டேன்லி கூப்ரிக்கின் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்லவ்…’ படத்தில் வருவதுபோல் ஒரு ராணுவ ஜெனரலோ திடீரென்று ஒரு கணத்தில் ஒரு பொத்தானை அழுத்தினால் இந்த உலகம் முடிவுக்கு வரும் அபாயத்தில்தான் நாம் ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  

முதல் அணுகுண்டைத் தயாரித்த அறிவியலாளர்கள் ‘அழிவுநாள் கடிகாரம்’ (டூம்ஸ்டே கிளாக்) என்ற கோட்பாட்டை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் அழிவுநாளுக்கு, அதாவது கடிகாரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு, இன்னும் இரண்டு நிமிடங்களே உள்ளன. நள்ளிரவு 12 மணியை நோக்கிய முதல் உந்தலை ஹிரோஷிமா அளித்ததென்றால் தொடர்ந்த போர்கள், அணுஆயுதப் பெருக்கம், இயற்கைப் பேரழிவுகள் போன்றவை மேலும் கடிகாரத்தின் முட்களை வேகமாக நகர்த்தின, நகர்த்திக்கொண்டிருக்கின்றன. ஹிரோஷிமா, நாகசாகியின் மீது குண்டுவீசப்பட்ட 75-ம் ஆண்டும் கரோனா பெருந்தொற்று உலகத்தையே முடக்கிப்போட்டிருக்கிறது. அது ‘அழிவுநாள்’ கடிகாரத்தையும் முடக்கிப்போடுமானால் மனித குலத்துக்கே பெரும் விடிவாக அமையும். 

-(ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அணுகுண்டு வீசப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான கட்டுரை)