Friday, April 14, 2017

நான் ஏன் புத்தரை நோக்கிப் போகிறேன்?



டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

மதம்மாறுவதற்கு நாக்பூரைத் தேர்ந்தெடுத்த காரணம் என்ன? ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் இருப்பதாலா?” என்று நிறைய பேர் என்னைக் கேட்கிறார்கள். இந்த நகரத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு உண்மையான காரணம் அதுவல்ல. ஆரியர்களை எதிர்த்துப் போராடிய நாகர்களின் பூமி இது என்று புராணங்கள் கூறுகின்றன. ஆரியர்களிடமிருந்து ஒரே ஒரு நாகர் மட்டும் தப்பிக்க அகஸ்திய முனிவர் உதவி செய்தாராம். நாமெல்லாம் அந்த மனிதரின் வழித்தோன்றல்கள்தான். அந்த நாகர்கள் பெரும் துயரத்தை அனுபவித்தார்கள். துயரத்திலிருந்து தங்களை மீட்க ஒரு மாமனிதனைத் தேடினார்கள். பகவான் புத்தருக்குள் அந்த மாமனிதனைக் கண்டுகொண்டார்கள். நாமும் நாகர்கள் போலத்தான். ஆகவே, நாகர்களின் பூமியாகிய இந்த இடத்தை நான் தேர்ந்தெடுத்தேனே தவிர யாரையும் கோபப்படுத்துவதற்காக அல்ல. ஆர்.எஸ்.எஸ்-பற்றியெல்லாம் சற்றும் நான் யோசித்துப் பார்க்கவில்லை.

கவுரவம்தான் முக்கியம், சுயலாபங்கள் அல்ல!
 நேற்று ஒரு பிராமணப் பையன் என்னிடம் வந்து, “நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உங்கள் மக்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் உதறிவிட்டுச் செல்கிறீர்களே?” என்று கேட்டான். நான் அவனிடம் சொன்னேன், “நீ மஹராக (அம்பேத்கர் பிறந்த குலம்) மாறி நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் நாங்கள் விட்டுச்செல்லும் இடைவெளியை நிரப்பிக்கொள்!... அந்த இடங்களுக்காக பிராமணர்களிடமிருந்தும் பிறரிடமிருந்தும் எவ்வளவு மனுக்கள் வருகிறதென்று பார்ப்போம்!...”
நாங்கள் ஏதாவது இழப்பைச் சந்தித்தால் நீங்கள் ஏன் கண்ணீர் விடுகிறீர்கள்?” என்பதுதான் அவர்களுக்கு என்னுடைய கேள்வி. உண்மையில், கவுரவம்தான் மனிதகுலத்துக்கு இன்றியமையாதது, பொருள் சார்ந்த லாபங்கள் அப்படிப்பட்டவையல்ல. நல்ல இயல்புகளைக் கொண்ட ஒரு பெண்ணுக்குத் தெரியும் பாலியல் தொழிலில் லாபம் கிடைக்குமென்று. ஆனால், அவர் அப்படிச் செய்வாரா? தாழ்த்தப்பட்ட என்னுடைய சகோதரிகளுக்குச் சாதாரண சப்பாத்தி-சட்னிகூட கிடைப்பதில்லை. ஆனாலும், அவர்கள் கண்ணியத்துடன் வாழ்கிறார்கள். நாங்கள் எங்கள் கவுரவத்துக்காகப் போராடுகிறோம். மனிதகுலத்தைப் பூரண நிலையை நோக்கி வழிநடத்தத் தயாராகிக்கொண்டிருக்கிறோம். தேவைப்பட்டால், இதற்காக நாங்கள் எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம்.

புத்த மதம் ஏன்?
புத்த மதத்தை நீங்கள் தழுவியதற்குக் காரணம் என்ன?” என்று ஒருவரும் என்னைக் கேட்காதது ஆச்சரியமாக இருக்கிறது. எல்லா மதங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு இந்த மதத்தை மட்டும் ஏன் ஏற்றுக்கொண்டேன்? இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவு 1955-ல் எங்களால் யோலா நகரில் எடுக்கப்பட்டது. “நான் இந்துவாகப் பிறந்திருந்தாலும் இறக்கும்போது ஒரு இந்துவாக இறக்க மாட்டேன்என்று நான் முன்பு சபதம் எடுத்திருந்தேன். நேற்று அதை நான் நிறைவேற்றிவிட்டேன். நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்; மிகவும் பரவசமாக இருக்கிறேன்! நரகத்தை விட்டு வெளியேறிவிட்டேன்- இதுதான் இப்போது எனக்கு ஏற்படும் எண்ணம். குருட்டுத்தனமாக என்னைப்  பின்பற்றும் தொண்டர்கள் தேவையில்லை. புத்த மதத்தைப் பற்றிய முழு உணர்வுடன் வந்திருப்பவர்கள் மட்டுமே முழுமனதுடன் இந்த மதத்தைத் தழுவிக்கொள்ள வேண்டும்.

துரதிர்ஷ்டத்தின் ஆயிரம் ஆண்டுகள்
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நம் நிலைமை மாறாது என்ற சூழல்தான் இந்த நாட்டில் தற்போது காணப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்துவைப்பதற்கு சாத்தியமே கிடையாது. இந்து மதத்தில் இருந்துகொண்டு நம்மால் எதையும் செய்ய முடியவில்லை. மனுஸ்மிருதி சொல்லும் நான்கு வர்ணங்கள் மனித குல முன்னேற்றத்துக்குப் பெரும் ஆபத்து விளைவிப்பவை. சூத்திரர்கள் இழிவான வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்று மனுஸ்மிருதி சொல்கிறது. அவர்களுக்குக் கல்வி எதற்காக? பிராமணர்களெல்லாம் கல்வி கற்க வேண்டும்; சத்திரியர்கள் போரிட வேண்டும்; வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும்; சூத்திரர்கள் தொண்டூழியம் புரிய வேண்டும்நுட்பமான இந்த ஏற்பாட்டை யாரால்தான் குலைக்க முடியும்? பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய சாதியினருக்கு இதில் பலன்கள் உண்டு. ஆனால், சூத்திரர்களுக்கு? இந்த அடுக்கில் கீழ்நிலையில் உள்ள சாதியினர் ஊக்கம் கொள்ள ஏதும் இருக்கிறதா? இந்து மதத்தில் சமத்துவத்துக்கு இடமேயில்லை. இந்த மதத்தின் பெயரால் எங்களை அழித்தவர்கள் அதே மதத்தால் அழிந்துபோவார்கள்.

ஒரு பிராமணப் பெண் குழந்தை பெறுகிறாள் என்று வைத்துக்கொள்வோம்; அப்போதிருந்தே அவள் தனது குழந்தைக்காக, வரும்காலத்தில் காலியாகக் கூடிய நீதிபதியின் பணியிடத்தைக் கனவுகாண்பாள். ஆனால், நமது துப்புரவுப் பணியாளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி குழந்தை பெறுகிறாள் என்றால், ஒரு துப்புரவுப் பணியைத்தான் தனது குழந்தைக்காகக் கனவுகாண முடியும். இப்படிப்பட்ட விசித்திரமான அமைப்பைத்தான் இந்து மதம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அமைப்பில் இருந்துகொண்டு எந்த முன்னேற்றத்தை அடைய முடியும்? முன்னேற்றம் என்பதை புத்த மதத்தின் மூலமாகத்தான் அடைய முடியும்.

கடலில் கலந்த பின்
புத்த பிட்சுகளில் 75 சதவீதத்தினர் பிராமணச் சமூகத்திலிருந்து வந்தவர்கள்; 25 சதவீதத்தினர் மட்டுமே சூத்திர இனத்தையும் பிற இனத்தையும் சேர்ந்தவர்கள். ஆனால், புத்த பகவான் சொல்கிறார், “பிட்சுகளே, நீங்களெல்லாம் வெவ்வேறு நாடுகளிலிருந்தும் வெவ்வேறு சாதிகளிலிருந்தும் வந்திருக்கிறீர்கள். நதிகளெல்லாம் அவரவர் நாடுகளில் தனித்தனியாக ஓடுகின்றன. ஆனால், கடலில் கலந்த பிறகு அவற்றை நாம் வேறுபடுத்திப் பார்க்கவே முடியாது. நீங்களெல்லாம் இரண்டறக் கலந்துவிட்டிருக்கிறீர்கள். புத்த மத பிட்சுகளெல்லாம் கடலைப் போன்றவர்கள். இந்தச் சங்கத்தில் எல்லோரும் சமமே. கடலில் கலந்த பிறகு கங்கையையும் மகாநதியையும் பிரித்தறிய முடியாது. அதே போன்றுதான் இந்த புத்த சங்கத்தில் வந்து கலப்பதன்மூலம் உங்கள் சாதி மறைகிறது, அனைவரும் சரிநிகர் சமானமாகிறீர்கள்.” சமத்துவத்தைப் பற்றி ஒரே ஒரு மாமனிதர் மட்டுமே பேசியிருக்கிறார். அந்த மாமனிதர்தான் புத்தர்.

               (அக்டோபர் 14, 1956-ல் நாக்பூரில் லட்சக் கணக்கான மக்களுடன் அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவினார். அதற்கு மறுநாள் அவர் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.) தமிழில்: ஆசை

நன்றி: ‘இந்து தமிழ்’

2 comments:

  1. சரியான நாளில் உரிய பதிவு. நன்றி.

    ReplyDelete
  2. தமிழ் இந்து நாளேட்டில் தோழர் ஆசை அவர்கள் மொழி பெயர்ப்பு கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது....மகிழ்ச்சி

    ReplyDelete