Friday, February 10, 2017

தேராக் கூகை



அண்ணா சதுக்கத்திலிருந்து
அந்த இருட்டில்
என்னோடு இணையாகப்
பறக்கிறது ஒரு கூகை
அதுதான் பறக்கிறது
நான் இல்லை

இருட்டைக் கலைக்கும்
நீள் சிறகுகளின் வெண்மை
முன்செல் பைக்கின்
பின்அமர் பெண்ணின்
கண்சென்று தீண்ட
பார்க்கிறாள் பக்கவாட்டில்

அவளைப் போலத் தெரியாமையில் பார்க்க
வாய்க்கவில்லை எனக்கு

மெரினாவின் சிறு மரங்கள்
தவிர்த்துப் போய்
உட்கார்ந்துகொண்டது கூகை
கண்ணகி தலைமேல்

கூகை பார்க்க
சற்று நிற்கிறேன்

அந்த இருளில் கண்ணகியைப் பார்க்க
யாருக்கும் பயமாகத்தான் இருக்கும்

‘தேரா மன்னா’ என்று எக்கணமும்
சொல்லிவிடுவாளோ என்று
உண்மையில் அச்சம் தோன்றியது

தேரா மன்னனோ
கண்ணகியின் தலைமேல் உட்கார்ந்திருந்தான்

ஒரே திசை நோக்கி நீண்டிருந்தன
கண்ணகியின் கையும்
தேரா மன்னனின் பிட்டமும்
    

No comments:

Post a Comment