(எனது முதல் கவிதைத் தொகுப்பான ‘சித்து’ 2006-இல் க்ரியா வெளியீடாக வெளியானது. அதிலிருந்து ஒரு கவிதை.)
**
கிழவன்
**
எப்போதும் என்னைப் பின்தொடர்கிறான்
நான் செல்லும் பேருந்தில்
அவனும் வருகிறான்
நான் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு
அருகிலேயே நிற்கிறான்
என்னை வெறித்தவாறே
அவனை உட்காரவைப்பதுதான்
நியாயம் என்றாலும்
எனக்கு விருப்பமில்லை
இடம் கேட்டுவிடுவான் என்று
வெளியில் ஓடும் சுவரொட்டிகள்
எதையும் பார்க்காமல்
எல்லாவற்றையும் பார்க்கிறேன்
எனக்குத் தெரியும்
அவனொன்றும் அவ்வளவு
பொறுமைசாலி அல்லவென்று
நான் எழும் தருணமும்
அவன் உட்காரும் தருணமும்
எப்படி
காண முடியாதவாறு
ஒன்றாகப்போகிறது என்பதை
நினைத்துப்பார்க்கிறேன் எப்போதும்
மிரட்சியுடன்
-ஆசை