Tuesday, August 15, 2023

தொப்புள்கொடி

 


ஏற்றுவதற்காகச்
சிந்தப்பட்ட
எவ்வளவோ குருதியும்
கண்ணீரும்
வியர்வையும்
இரண்டு கைகளாய்
உருத்திரண்டு
ஏற்றப்பட்ட
கொடி

எல்லா கண்ணீரையும்
காயங்களை
ஆற்றவே
அது அசைந்தாடி
காற்று வீச வேண்டுமென
ஏற்றிய கொடி

அண்ணாந்து பார்க்கும்
எல்லா விழிகளுக்கும்
வானத்தையே வாழ்வாகத்
தரும் கொடி

அது அசைக்கும்
காற்று
அதன் கீழுள்ள
எல்லா உயிர்களையும்
ஒரு தளையின்றி
அந்த வானில் பறக்க விடும்
கொடி

தாயின் மணிக்கொடி
சுதந்திர வாழ்வின்
தொப்புள் கொடி

கண்களைக் கட்டிப்போட்டு
ஏற்றினாலும்
உயிர் உணரும் கொடி
உயிர் மூச்சு தரும் கொடி
உயிர் மேல் ஏற்றிய கொடி

அது உயிர்மேல் 
அசைந்தாடிப் பறக்கட்டும் என்றும்
உயிருள்ள கைகள் மட்டுமே
ஏற்றட்டும் என்றும்
     -ஆசை

No comments:

Post a Comment