Wednesday, August 10, 2016

ஷர்மிளா: அன்றாட வாழ்க்கையின் கொண்டாட்டம்!


ஷிவ் விஸ்வநாதன்

(இரோம் ஷர்மிளா தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் எனது மொழிபெயர்ப்பில் 10-0802016 அன்று வெளியான கட்டுரை)

மகான்கள், சத்தியாகிரகிகள் போன்றோரின் நற்செயல்களைக் காலப்போக்கில் உறையச்செய்து, அவர்களைச் சிலையாக்கி ஒரு பீடத்தில் வைப்பதுதான் நமது வழக்கம். உறைபடிவத்தில் படிந்ததைப் போன்ற ஒரு தன்மையை அவர்களின் நற்செயல்கள் பெற்றுவிடுகின்றன. உயிருள்ள ஒரு ஜீவனாக இருப்பதற்குப் பதிலாக மகான்களும் திருவுருக்களும் விளம்பரப் பதாகையாகவும் அற்புதக் காட்சியாகவும் அல்லது திரும்பத் திரும்பக் காட்டப்படும் மேற்கோளாகவும் ஆகிவிடுகிறார்கள். நாட்காட்டியில் இடம்பெறும் புகைப்படத் தொகுப்புகளாகவோ, அசையாமல் நிற்கும் சிலையாகவோ ஆகிவிடுகின்றன புனிதத்தன்மையும் வீரச்செயலும். நற்பண்பு என்பது காலத்தின் வார்ப்பெழுத்துகளாகிவிடுகின்றன.
தொடர்ந்து படைப்பூக்கத்துடன் செயல்பட்டு, மேற்கண்டதுபோல் உறைந்துவிடாமல் இருப்பதற்குப் போராடியவர்கள் இரண்டு பேரை நாம் உதாரணம் காட்ட முடியும். ஒருவர் காந்தி. அவரைப் பொறுத்தவரை ஒவ்வொரு உண்ணாவிரதப் போராட்டமும், ஒவ்வொரு எதிர்ப்புச் செயலும் சுயவிமர்சனத்தை உள்ளடக்கியதே. வன்முறைகள் தலைதூக்குவதாக உணர்ந்தால் காந்தி பெரும்பாலும் தனது சத்தியாகிரகச் செயல்பாட்டை நிறுத்திக்கொள்வார். தனது எதிர்ப்புச் செயல்பாடுகள் அவர் நினைத்த விதத்தில் செயல்படவில்லை என்றால் தனது பிரம்மச்சரிய வாழ்க்கையையே அவர் ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்வார்.

Monday, August 1, 2016

மக்களிடம்தான் சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டும்! - மகேந்திரன் நேர்காணல்




ஆசை

(‘தி இந்துநாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான இயக்குநர் மகேந்திரன் நேர்காணலின் முழு வடிவம் இது. இந்த நேர்காணலின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அச்சில் வெளியாகியிருக்கிறது. முழுமையான, விரிவான நேர்காணல் எனது வலைப்பதிவில் பிரத்யேகமாக இங்கே...)
 
நாற்பது ஆண்டுகள் ஆகப்போகின்றன மகேந்திரனின்முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்இரண்டு படங்களும் வெளியாகி. ஆனாலும், சலிக்கவே சலிக்காமல் தமிழ்த் திரையுலகமும் ரசிகர்களும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் இன்னமும். கடந்த ஜூலை 25 அன்று தனது 77-வது வயதைப் பூர்த்திசெய்தார் மகேந்திரன். இன்னமும் ஓர் இளம் இயக்குநருக்கு உள்ள அதே துடிப்போடு பேசுகிறார்...


இன்று புதிதாக வரும் இயக்குநர்களும் உங்களை ஆதர்சமாகக்கொண்டிருக்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எனக்கு எல்லாமே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. நான் வேண்டுமென்றே எந்த உத்தியையும் பின்பற்றி அந்தப் படத்தை எடுக்கவில்லை. எனக்குத் தெரிந்த சினிமாவை நான் எடுத்தேன். ஆனால், மக்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் நிறைய எழுதுகிறார்கள் அதைப் பற்றி. அதற்கு என்ன காரணம் என்பதை உங்களைப் போன்ற பத்திரிகைகாரர்கள்தான் ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

எனக்குப் பள்ளி நாட்களிலேயே தமிழ்த் திரைப்படங்கள் மீது ஒரு ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது. மேடை நாடகங்கள் போலவும் வானொலி நாடகங்கள் போலவும் தமிழ்த் திரைப்படங்கள் இருப்பதாக நான் உணர்ந்தேன். சினிமா ஒரு காட்சி ஊடகமாக இருக்க வேண்டும். காட்சிகளால் நகர வேண்டும் என்று நினைத்தேன். எனக்குத் தமிழ்த் திரைப்படங்கள் மீது என்னென்ன ஒவ்வாமைகளெல்லாம் இருந்தனவோ அதையெல்லாம் நீக்கிவிட்டு எடுத்த படம்தான்உதிரிப்பூக்கள்’.