Wednesday, August 19, 2015

அணைக்குத் தடை போடுமா பறவை?


நேஹா சின்ஹா

(‘தி இந்து’ நாளிதழின் உயிர்மூச்சு இணைப்பிதழில் 15.08.2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை. சுருக்கமாகத் தமிழில்: ஆசை)

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் இந்தியாவின் அதானி தொழிற்குழுமம் நிலக்கரி தோண்டியெடுப்பதற்கு சுற்றுச்சூழல் தடையில்லா அனுமதியை வழங்குவதற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்று மறுத்திருக்கிறது. அதற்கான காரணத்தை நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது: இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அந்தப் பகுதியில் உள்ள அரிய வகை அரணை இனம் ஒன்றுக்கும் பாம்பு இனம் ஒன்றுக்கும் ஆபத்து ஏற்படக்கூடும்.
கூச்ச சுபாவமுள்ள, சரசரவென்று ஊர்ந்துசெல்லக்கூடிய உயிரினம் ஒன்றினால் பெரிய திட்டப்பணி ஒன்றைத் தடுத்து நிறுத்த முடியும் என்பது நம்பவே முடியாத ஒரு விஷயமாகப் பலருக்கும் தோன்றலாம்; குறிப்பாக, விரைவான தொழில் வளர்ச்சியில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அப்படித் தோன்றலாம். ஆனால், ஒரு நாடு தனது உயிரினங்கள் மீது அக்கறை காட்டுவது அவசியம் என்ற செய்தியை அந்த நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது. உயிரினங்களின் அழகு, தோற்றம், சிறப்புத்தன்மை போன்றவற்றைக் காட்டிலும் உயிரினங்கள் உயிர்த்திருக்க வேண்டியதன் அவசியத்துக்குத்தான் ஆஸ்திரேலிய நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.

Monday, August 17, 2015

யானைகளிடமும் அகிம்சை வழிதான் சரிப்படும்!-ஆராய்ச்சியாளர் ஆனந்தகுமார் நேர்காணல்




ஆசை

(இந்த நேர்காணலின் மூன்றில் ஒரு பங்கு ‘தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 08-08-2015 அன்று வெளியானது)

வால்பாறையில் ‘என்.சி.எஃப்’ என்ற இயற்கைப் பாதுகாப்பு அமைப்புக்காகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஆனந்தகுமாருக்கு, ‘பசுமை ஆஸ்கர்’ என்றழைக்கப்படும் ‘வைட்லி விருது’ சமீபத்தில் வழங்கப்பட்டது. யானை-மனிதர் எதிர்கொள்ளல் தொடர்பான அவரது கடந்த காலப் பணிகளுக்காகவும் எதிர்காலப் பணிகளுக்காகவும் சேர்த்து இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. வால்பாறையில் ஆனந்தகுமாருடன் உரையாடியதிலிருந்து…




பசுமை ஆஸ்கர் என்று அழைக்கப்படும் ‘வைட்லி விருது’ சமீபத்தில் உங்களுக்கு வழங்கப்பட்டது அல்லவா. இந்த விருதுக்காக எப்படி உங்களை அடையாளம் கண்டார்கள்?



‘வைட்லி விருது’ கடந்த 20 வருடங்களாகக் கொடுக்கப்பட்டுவருகிறது. இந்த விருது என்பது அவர்களாகவே அடையாளம் கண்டு வழங்குவதில்லை. ஆண்டுதோறும் இந்த விருதுக்கான விண்ணப்பம் வழங்கப்படும். இயற்கை பாதுகாப்பில் ஈடுபட்டுவருபவர்கள் இதற்கென்று விண்ணப்பிக்கலாம். இயற்கை பாதுகாப்பில் புதிதாக நுழைபவர்களுக்கு இது வழங்கப்படுவதில்லை. ஏற்கெனவே குறிப்பிட்ட அளவில் செயல்பட்டு, ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள் மேலும் தங்கள் பணியை விரிவுபடுத்திக்கொள்ள உதவும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. ஆகவே, இது விருது மட்டுமல்ல, ஒரு வகை நிதிநல்கை (ஃபெல்லோஷிப்) என்றும் சொல்லலாம். வழக்கமாக, கடந்த காலச் செயல்பாடுகளுக்குத்தான் விருதுகள் வழங்கப்படும். எதிர்காலச் செயல்பாடுகளுக்கும் சேர்த்து வழங்கப்படும் விருது இது.


வெறுமனே விண்ணப்பத்தைப் பார்த்துவிட்டு இது வழங்கப்படுவதில்லை. சரியான சான்றுகள், மதிப்பு வாய்ந்த அறிவியலாளர்களின் ஒப்புகை போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். நான்கு அடுக்கு மதிப்பாய்வுகள் செய்யப்பட்டு, அறிவியலாளர்கள் குழுவால் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் முடிவுகள் எடுக்கப்படும். உலகெங்கிலுமிருந்து 200 விண்ணப்பங்கள் இந்த விருதுக்காகப் பெறப்பட்டன. அதில் முப்பது பேரை பரிசீலனைப் பட்டியலுக்காகத் தேர்ந்தெடுத்து லண்டனுக்கு நேர்காணலுக்கு வரச்செய்தார்கள். அந்த 30 பேரிலிருந்து 8 பேரை விருதுக்காகத் தேர்ந்தெடுத்தார்கள். இந்த எட்டுப் பேரில் ஒருவர் ஏற்கெனவே ‘வைட்லி விருது’ பெற்றவர். ஏற்கெனவே ‘வைட்லி விருது’ பெற்றவர்களுக்கு இப்படிச் சிறப்பு விருதுகள் வழங்கப்படும்.



இயற்கை பாதுகாப்பு என்ற உலகத்தில் எப்படி நுழைந்தீர்கள்?

ரக்‌ஷா பந்தன்: கீழ்ப்படிதலின் சின்னமா?


டி.எம். கிருஷ்ணா

('தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் 16-08-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை. தமிழில்: ஆசை)

உணர்வுரீதியில் இந்த தேசத்தை ஒரு இந்து தேசமாக நமது அரசு நகர்த்திச் சென்றுகொண்டிருக்கிறது என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. உதிரிக் குழுக்கள் என்று சொல்லப்படுபவர்கள் காதைத் துளைக்கும் விதத்தில் கூச்சலை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதை நாம் தவிர்த்துவிட்டாலும் அரசின் உறுதியான நகர்வுகளைப் பார்க்கும்போது இந்த நோக்கம் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. தேசிய அளவிலான ஆராய்ச்சி, கல்வி, கலாச்சார நிறுவனங்கள் போன்றவற்றுக்குச் செய்யப்படும் நியமனங்கள், யோகாவை முன்னிறுத்திய மாபெரும் கொண்டாட்டம், வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் சம்ஸ்கிருதத்துக்கான இணைச் செயலர் என்ற பதவியை உருவாக்கிய அபத்தம் எல்லாம் இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.
யோகாவும் சம்ஸ்கிருதமும் கலாச்சார அடையாளங்கள்தானே தவிர மதரீதியான கருத்தாக்கங்கள் அல்ல என்று வாதிடலாம்; அப்படி வாதிட்டால் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடச் செய்யலாம். ஆனால், இந்த இந்தியத் தன்மையின் தொன்மையான அடையாளங்களை மையப்படுத்தி நடந்துகொண்டிருக்கும் விவாதங்கள், திணிப்புகள், தேச வெறி போன்றவையெல்லாம் இந்தியா குறித்தல்ல, நிச்சயமாக ‘இந்து இந்தியா’ குறித்துதான் என்பதைக் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு நமக்குக் கண் தெரியாமலில்லை.

Monday, August 10, 2015

புத்ர: சாபத்தில் பிறந்த கவிதை


ஆசை

(லா.ச. ராமாம்ருதத்தின் ‘புத்ர’ நாவல் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவுகூரும் வகையில் ’தி இந்து’ நாளிதழில் 09-08-2015 அன்று வெளியான கட்டுரை)

தத்துவ நிலை, கவித்துவ நிலை ஆகியவை ஒருபுறம். அன்றாட வாழ்க்கைப்பாடு, அதன் சிறுசிறு தருணங்கள் இன்னொரு புறம். முதல் வகையில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் அதே தளத்தில் நின்று எழுதிக்கொண்டிருப்பார்கள். அன்றாட வாழ்க்கை சார்ந்த சித்தரிப்புகள் அந்தத் தளத்தில் விரிவாக இடம்பெறாது. அப்படியே இடம்பெற்றாலும் தத்துவச் சாயை பூசப்பட்டு, கவித்துவப் பிரயோகங்களுடன் இருக்கும். இதற்கு தமிழில் சிறந்த எடுத்துக்காட்டு மௌனி. கட்டை வண்டி, நாய்க்குரைப்பு, திறந்து கிடக்கும் வீடு, மழைக்கு ஒதுங்குதல் எல்லாம் அவருக்கு வேறு ஏதோ சொல்வன. இதற்கு நேரெதிர் அன்றாடச் சித்தரிப்புக் கலைஞர் அசோகமித்திரன். ஆனால், இந்த இரண்டு வகைக்கும் நடுவே நிற்பவர் லா.ச.ராமாமிர்தம். அன்றாட வாழ்க்கையின் ஓட்டமும் ஆன்மிக, தத்துவ, கவித்துவ வீச்சும் ஒன்றுக்கொன்று குறையாமல் பின்னிக்கொண்டு ஓடும். தத்துவத்துக்காகவும் கவித்துவத்துக்காகவும் அன்றாட வாழ்க்கையை இவர் ஒரு சாக்காகப் பயன்படுத்திக்கொள்வதில்லை. இப்படி அருகருகே இரண்டும் இருப்பதால் நமக்கு ரசக்குறைவோ அசௌகரியமோ ஏற்படுவதில்லை. மாறாக, வியப்புதான் தோன்றும். ஏனெனில் அன்றாடத்தை உச்சாடனம் செய்து செய்து தத்துவமாகவும் கவிதையாகவும் ஆக்குபவர் அவர்.